திங்கள், 23 நவம்பர், 2009

இந்த மான் உன்தன் சொந்த மான்

வன விலங்குகளிலேயே மிக அழகானது மான். அது துள்ளி ஓடுவதும் விளையாடுவதும் காணக் கண்கொள்ளாக் காட்சி. இதானால் தானோ என்னவோ இராமாயண காவியத்தில் ராமனை சீதையிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்த மாரீசன் ஒரு மானிம் உருவம் கொண்டு சீதையின் கண்ணில் படும்படியாக அங்குமிங்கும் ஓடியாடி அவளைக் கவர்ந்து, தன்னைப் பிடித்துத் தர ராமனை வற்புறுத்தும்படித் தூண்டினான்.
அழகில் மட்டுமன்றி காதல் இன்பத்தை அனுபவிப்பதிலும் மான் பிற விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது.

மஹாபாரத காவியத்தில் பாண்டு மஹாராஜா காட்டில் வேட்டையாடுகையில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் உறவு கொள்ளும் நிலையில் சற்றும் சிந்தியாமல் ஆண் மானின் மேல் அம்பெய்துவிட்டான். உண்மையில் அந்த மான்கள் ஒரு ரிஷியும் அவரது பத்தினியுமாவர். உலகிலேயே காதலின்பத்தை அதிகம் பெறும் ஜீவன் எது எனத் தனது பத்தினி கேட்டதற்கு முனிவர் மான் என்று பதில் கூறவும், அவ்வாறாயின் மானின் வடிவம் கொண்டு இருவரும் புணர வேண்டும் என்று அவள் ஆசைப்படவே, முனிவர் தன் தவ வலிமையால் இருவரும் மான் உருவம் அடையச் செய்ய, அந்நிலையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாண்டுவின் அம்புக்கிரையாகிய முனிவர் மரணிக்கும் தருவாயில் பாண்டுவை நோக்கி, "நீசனே, மிருகங்கள் காதல் உறவு கொள்ளும் நிலையில் நீ சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மேல் அம்பு எய்தாய். நீ உன் மனைவியுடன் இணைந்தால் அக்கணமே மரணமடைவாய்" என்று சபித்து விட்டார். இதனால் மனம் வாடிய மன்னன் ஆட்சியைத் தனது அண்ணன் திருதராஷ்டிரனிடம் ஒப்படைத்து மனைவியருடன் வனவாசம் மேற்கொண்டான். இடையில் ஒரு நாள் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இளைய மனைவி மாத்ரியுடன் உறவு கொண்டதால் முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.

அது சரி, கவிஞர்கள் பெண்களை மான்களுக்கு ஒப்பிடுவது எதனாலோ? அவர்களது அழகு கண்டோ, அல்லது அவர்கள் தரும் சுகம் கருதியோ? மான் என்றால் புலிகளுக்கு வேட்டையல்லவோ? அவ்வாறாகில் ஆண்கள் புலிகளோ?

எந்த மானை எந்தப் புலி வேட்டையாடினாலும் இந்த மானை நீ வேட்டையாடத் தேவையில்லை, ஏனெனில் இது உன்தன் சொந்த மான்.

இந்த மான் உன்தன் சொந்த மான்

திரைப்படம்: கரகாட்டக் காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியோர்: இளையராஜா, சித்ரா

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் என்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக