செவ்வாய், 25 மே, 2010

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தன்று தாயின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் அமைந்த ஒரு பாடலைத் தினம் ஒரு பாடலில் தருமாறு வேண்டினார். எனது தற்போதைய பணிச் சுமையாலும் தினமும் வெயில் படுத்தும் பாடு மிகவும் அதிகமானதாலும் தினம் ஒரு பாடல் தினமும் தர இயலுவதில்லை. கூடிய விரைவில் தினமும் வழங்குவேன். தாயின் பெருமையை எண்ணிப்பார்க்க அன்னையர் தினம் ஒன்று போதாது. தாயின் நினைவு சதா சர்வ காலமும் தொடர்ந்து நம் உயிரில் ஒன்றி விளங்குவது அவசியம். இல்லாவிடில் உலகில் நாம் அடையும் துன்பங்களிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.

உலகில் அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட முதல் தெய்வம் தாய். தாயின் அணைப்பில் வளர்ந்த நாம் ஒவ்வொருவரும் இன்றும் என்றும் நாம் படும் துன்பங்களிலிருந்து விடுபடவும் ஆறுதல் பெறவும் நாடுவது பெரும்பாலும் தாயையே ஆகும். ஏதோ காரணத்தால் வலி உண்டாகையில் நம்மையறியாமல் நம் வாய் உதிர்க்கும் சொல் பெரும்பாலும் "அம்மா" என்பதேயாகும். சிலர் "அப்பா" என்றோ "ஆ, ஐயய்யோ" என்றோ சொல்வது சாத்தியமானாலும் அம்மா எனும் சொல்லே அனேகமாக அருமருந்தாக விளங்குகின்றது. நம் ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலும் பிற யாரைக் காட்டிலும் அதிகம் பெருமையடைபவள் தாயாவாள்.

இதனாலேயே திருவள்ளுவர்,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தாய் இவ்வுலகை விட்டு மறைந்து பூத உடலை விட்டுப் புகழுடம்பு எய்துகையில் ஒவ்வொருவரும் படும் துயரத்துக்கு அளவே இல்லை. அநாதை எனும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் அத்தாய் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் நாளன்று தான் புரியும். அதன் பின்னர் அம்மா எனும் சொல் வாயில் தன்னையறியாமல் பல தருணங்களில் வெளிவருகையில் அந்த அம்மா என்பவள் இவ்வுலகில் தற்போது இல்லையெனும் உண்மையும் மனதில் தைத்து அவள் நினைவில் வாடும் மனம்.

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

திரைப்படம்: தாயின் மடியில்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை

மண்ணில் இந்தக் காதலின்றி

நமஸ்தே வாயோ: த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி;
த்வமேவ பிரத்யக்ஷம் வதிஷ்யாமி

என்று காற்றுத்தேவனைத் துதி செய்கிறார் மஹாகவி பாரதியார். நாம் புலன்களால் உணரக்கூடிய கடவுள் காற்றேயாகும். காற்றிலுள்ள ஆக்சிஜன் என அறியப்படும் பிராணவாயு இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் பிராணவாயு நாம் உண்ணும் உணவை உடலெங்கிலுமுள்ள பல கோடி செல்களில் எரியவைத்து சக்தியை உண்டாக்கி நம்மை இயங்க வைக்கிறது. காற்று இன்றி மழையில்லை, நீரில்லை, நெருப்பில்லை. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் ஒன்றாய் இணைவதாலேயே நீர் உண்டாகின்றது. நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அது பிராணவாயுவாகவும், ஹைட்ரஜனாகவும் பிரிகிறது. இரண்டையும் சேர்த்து எரித்தால் மீண்டும் நீர் உண்டாகின்றது.

உலகைச் சுற்றி ஒரு போர்வையாக விளங்கும் ஓசோன் எனும் அடர் பிராணவாயு சூரியனின் புற ஊதாக் கதிர்களினின்றும் அளவிடற்கரிய வெப்பத் தாக்குதலினின்றும் பூமியைக் காக்கிறது. வீடுகள், உணவு விடுதிகள், ஆலைகள் முதலிய இடங்களிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைச் சுத்தம் செய்து அவற்றால் விளையும் சேதத்தைத் தடுக்க பிராணவாயு உதவுகிறது. இதனாலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீருடன் காற்றைக் கலந்து சுத்திகரிப்பு செய்கின்றனர்.

தவ முனிவர்கள் அளவிடற்கரிய ஆற்றலைப் பெற்று விளங்கியதன் காரணம் அவர்கள் தவத்துடன் பிராணாயாமம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் கட்டுப்படுத்தி அதிகப்படியான பிராணவாயுவை சுவாசித்து வாழ்ந்ததே ஆகும். பிராணாயாமம் செய்யத் தெரியாதவர்களும் பெரும்பாலும் சுவாசிக்கையில் ஆழ்ந்து சுவாசித்துப் பழகினால் உடலிலும் உள்ளத்திலும் சக்தி பெருகி நோயற்ற வாழ்வு வாழ ஏதுவாகும்.

பாடகர்களுக்கு இத்தகைய ஆழ்ந்த சுவாசப் பயிற்சி அவர்கள் பாடுகையிலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் இயற்கையாகவே நீண்ட ஆயுளைப் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய பாடகர்களுள் மூச்சினை அதிக நேரம் அடக்கிப் பாடி அதில் சாதனை புரிந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். அவர் பாடிய இப்பாடலை வேறு யாராலும் அதே லயத்துடன் பாட இயலாதென்பது பிரசித்தம்.

மண்ணில் இந்தக் காதலின்றி

திரைப்படம்: கேளடி கண்மணி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1990

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி?
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?