புதன், 20 ஜூலை, 2011

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

இப்பரந்த உலகில் மனிதன் தன் ஐம்புலன்களால் உணரக்கூடியவை மிகவும் சொற்பமே. பகுத்தறிவால் அறியக் கூடியவையும் மிகவும் சொற்பமே. இத்தகைய சொற்ப உணர்வு சக்தியையும் சொற்ப அறிவையும் கொண்டு அவன் எல்லையே இல்லாத உலகின் தன்மையையும் அவ்வுலகினைப் படைத்து, தீய சக்திகளை அழித்து நல்லன யாவையும் காத்து ரக்ஷிப்பதாகக் கருதும் கடவுளின் தன்மையையும் வரையறுக்க முயல்வது வேடிக்கையே. இத்தகைய அறிவுக் குறைபாட்டுடன் பல தேசங்களில் உள்ள பலரும் தம் சிற்றறிவுக்கேற்ப இறைவனைப் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு தத்துவங்களால்மும் வரையறுத்து இறை குறித்த தமது கோட்பாடே பிறரது கோட்பாடுகளை விடச் சிறந்ததெனவும். தான் இறைவன் என்று கருதும் சக்தியே இறைவன் எனவும் பிறரது கருத்தில் விளங்கும் இறைசக்திகளெல்லாம் தீய சக்திகள் எனவும் பிரச்சாரம் செய்வது அறியாமை.

ஒருவருக்கு நல்லன செய்யும் சக்திகள் யாவும் இறை சக்திகளெனவும் தீமை செய்பவை யாவும் தீய சக்திகள் எனவும் கருதுகையில் இக்கருத்து இடத்தைப் பொறுத்தும் இனத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. உதாரணமாக வனத்தில் வாழும் புலிகளுள் ஒன்று மான் ஒன்றை வேட்டையாடிக் கொல்கையில் அம்மானினத்துக்கு அப்புலி தீய சக்தியாகத் தென்படுகிறது. ஆனால் அதே புலி தான் வேட்டையாடிய மானின் இறைச்சியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிற புலிகளுடன் பகிர்ந்து உண்கையில் பிற புலிகளின் பார்வையில் அது தெய்வமாக விளங்குகிறது. இது போலவே ஒரு நாட்டை ஆளும் மன்னவன் அந்நாட்டு மக்களுக்கு இறைவனுகொப்பாக விளங்குகையில் அவன் பிற நாடுகளின் மேல் படையெடுத்துத் தன் ஆட்சியை விரிவுபடுத்தும் செயலால் உயிரிழந்தவர்களின் கண்களுக்கு யமனாகத் தோற்றமளிக்கிறார். பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவன் அக்கும்பலில் உள்ள யாவருக்கு இறைவனாகவும் கொள்ளையிடப்பட்ட மக்களுக்குக் கொடுமைக்காரனாகவும் தோன்றுகிறான்.

இறைத் தத்துவத்தை அருணகிரிநாதர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

எனும் பாடலின் வாயிலாக இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருளென உரைக்கிறார்.

அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்ற பாடலில் வாயிலாகத் திருமூலர் அன்பே இறைவன் என விளக்குகிறார்.

அன்பு தான் இன்ப ஊற்று,
அன்பு தான் உலக ஜோதி,
அன்பு தான் உலக மகாசக்தி

என புத்தபகவான் கூறுகிறார்.

இறைபக்திக்குச் சமமாக நாட்டுப் பற்றையும் கருதிப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்த சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் குடியரசு தினமான இன்று நம் நாட்டில் நிகழும் பல சம்பவங்களையும் அறிகையில் தேசபக்தி என்பது வெறும் ஏட்டில் எழுதி மறந்து விட்ட வாசகம் தானோ எனும் ஐயம் எழுகிறது. தேசியக் கொடிகளை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மையை சிறிதும் நாடாதவர்களாக விளங்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும் இந்நாளில் நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாவது, இனியாகிலும் நாட்டுக்கு நன்மை செய்து உண்மையாய் உழைக்கக்கூடிய தலைவர்களை அறிவால் அறிந்து தேர்வதேயாகும்.

இத்தகைய கருத்துக்களை மேலும் விரிவாக்கி இறை தத்துவத்தை சமுதாயத்தின் பல தரப்பினரும் சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் உணர்ந்தேற்றுக் கொள்ளும் விதமாய் நம் கவிஞர் தருவதாவது:

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

இன்றைய உலக வாழ்வில் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் முதலான பகட்டுகளை அடைவதற்கெனவே மனிதரில் பெரும்பாலோர் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலுத்துகின்றனர். அதற்கேற்றாற் போலவே ஆரம்பப் பாடசாலை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமுலிலிருக்கும் பாடத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது மாணவர்களை வெறும் பொருளீட்டும் இயந்திரங்களாக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் விதமாகவே அமைந்து பொது அறிவிலும் வாழ்வுக்கு இன்றியமையாத பிற கலைகள், சமூக நலன், தனிமனித ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்த வலியுறுத்தாத நிலையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய குறைபாடுள்ள கல்வியால் போட்டி மனப்பான்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் தன்மை குறைந்து சுயநல நோக்கம் வளர்கிறது. இந்நிலையில் வாழ்வில் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் தாங்கும் சக்தியற்று நம்மில் பலர் அமைதியிழந்து வாழ்வை சிறப்புடன் இன்பமாக வாழ இய்லாமல் போகிறது. பண்டைக் காலத்தில் கல்விக்கூடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் தகுதிகளை வளர்ப்பதுடன் ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாய நலனில் அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்கும் விதமாக அமைந்திருந்தன. அத்துடன் இறையுணர்வை வளர்க்கும் விதமாகவும் கல்வி அமைந்திருந்தது. அதனால் உலக வாழ்வில் நம்மை மீறி ஏற்படும் துன்பங்களைத் தாங்கி வாழ்வை வெற்றிகரமாக வாழ பக்தி எனும் சாதனத்தை மக்கள் உபயோகிக்கும் விதமாகவே ஆலயங்கள் பல உருவாக்கப்பட்டன.

பக்தி ஒன்றே முக்தி பெறும் வழியாகும். முக்தி என்பதாவது நம் மனதைக் கெடுத்துத் துன்பம் விளைவிக்கும் பாப சிந்தனைகளான காமம், குரோதாம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் ஆகியவை நீங்கி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் நிலையே ஆகும்.

பக்தியினாலே – இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும் - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;

காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.

ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

என்று மஹாகவி பாரதியார் போற்றிய பக்தியின் மகிமையை உணர்ந்து

வையகத்துக்கில்லை மனமே யுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லாலழியுந்துயர்

எனும் பொன்மொழிகளை மனதிற் பதித்து வாழ்க்கையில் எத்தகைய பணிகளில் நாம் மூழ்கியிருந்தாலும், எத்தனை துன்பங்கள் எதிர்வந்த போதிலும், துன்பங்களே இல்லாமல் பெரும்பாலும் இன்பத்திலேயே திளைத்து வாழ்ந்திருந்தாலும் எல்லா நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் மனதுக்கிசைந்த இறைவன் நாமத்தை உச்சரித்து மனதை வளப்படுத்திக் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ

பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்

நடந்து வந்த பாதையிலே

ஆதியில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்த மனிதர்கள் நாளடைவில் ஒன்று சேர்ந்து சமூகங்களாக வாழத் துவங்கிய காலம்தொட்டு நாடுகளும் அரசுகளும் உருவாயின. அரசாட்சியில் மனித உரிமை குறித்த பல சட்டதிட்டங்களும் ஏற்படுத்தப் பட்டன. இத்தகைய சட்டத்தை இயற்றுவோரின் மனப்பான்மையைப் பொறுத்து அவை சமூகத்தின் பல மட்டங்களில் வாழும் மனிதர்களைப் பாதித்து வருகின்றன. சமுதாயத்தின் ஒரு பகுதியினர் தமக்கு ஒரு குறிப்பிட்ட சட்டத்தினால் நன்மை விளையுமெனக் கருதுகையில் அதே சட்டத்தினால் தமக்கு ஏதும் நன்மை விளையாது தீமையே விளையுமென வேறொரு பகுதியினர் கருதுவது இயற்கையே. இவ்வேறுபாட்டைக் களைந்து அனைத்து சட்டதிட்டங்களும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஒரு மனதாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்க்கும் சட்டங்கள் பொதுநலத்தைப் பேணுவதில்லை. செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் வழிவகுக்கின்றன.இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமுதாய நிலைமையை மாற்றியமைக்கப் பாடுபடுவோர் பலரிருக்கையில் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்போர் பலரும் இருக்கின்றனர். இதுவே உலக இயல்பு. இருப்பினும் இத்தகைய மாறுபட்ட கருத்துள்ள மக்களைத் தக்க விதத்தில் அறிவுறுத்தி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து நல்லாட்சி நடைபெறும் நாடுகள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நம் நாடு உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தையும் விடப் பல விதங்களில் மேம்பட்ட இயற்கை வளமும், மனித வளமும் கொண்டதாக விளங்குவதுடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழும் பண்பாட்டைக் கொண்டதாக விளங்குவதாலேயே உலகிலுள்ளோர் அனைவரும் பாராட்டும் வகையில் தொன்றுதொட்டுத் திகழ்கிறது. நமது நாட்டுக்கு அயல்நாடுகளில் அவப்பெயர் உண்டாவதற்குப் பெரும்பாலும் நம் நாட்டில் நடைபெறும் முறைகேடான ஆட்சி அமைப்புகளும் முடக்கப்பட்ட பாரபட்சமான சட்டதிட்டங்களுமே ஆகும்.

மக்கள் யாவரும் இந்த உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது. தீமை செய்வோர் நல்லவர்களாக நாடகமாடி நாட்டை ஏமாற்றித் தம் சுயநலத்தையே பேணிப் பெருவாழ்வு வாழும் இருண்ட காலம் மலையேறி விட்டது. பல ஆண்டுகளாக மக்கள் அறியாமல் மறைக்கப்பட்ட உண்மைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. எனவே நாட்டு மக்கள் யாவரும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டப் பாடுபடுதல் நலம்.

நடந்து வந்த பாதையிலே

திரைப்படம்: ஆசை அலைகள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வந்தது வரட்டும் போடாவென்று வாடும் மனிதர் ஒரு வழியில் அவர்
வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை