திங்கள், 18 ஜனவரி, 2016

வாழ்வது என்றும் உண்மையே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 12, 2014
வெற்றி என்பது யாது என்பதை நம்மில் பெரும்பாலோர் அறியோம். அதனாலேயே பல சமயங்களில் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் தவிக்கிறோம். நாம் கற்ற கல்வி பெரும்பாலும் பொருளீட்ட வழி வகுக்கும் கல்வியாகவே இருப்பதால் ஏற்பட்ட குறைபாடு இது. வாழ்க்கை என்பது என்ன என்று நாம் அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. இத்தகைய அறியாமையே நம் மனதில் உறுதியற்ற நிலையை உருவாக்கி சந்தேகக் கண் கொண்டே அனைத்தையும் பார்க்கும் மனோபாவம் வளர்கின்றது. மனிதனின் மனதில் வளரும் பாப சிந்தனைகளுள் மிகக் கொடியது சந்தேகம் ஆகும். சந்தேகத்தினால் உறவுகள் முறிகின்றன. நண்பர்கள் பிரிகின்றனர். கணவன் மனைவியிடையே தாம்பத்யம் சுவையாக இல்லாமல் வேண்டா வெறுப்பாகவே வாழும் நிலை ஏற்படுகிறது. பெற்ற பிள்ளைகளைப் பெற்றோர் நம்புவதில்லை. அதனாலேயே தாம் சேர்த்து வைத்த பொருளில் பெரும் பகுதியை ஏமாற்றிப் பிழைக்கும் நிதி நிறுவனங்கள் போன்ற இடங்களில் மூலதனம் செய்து ஏமாறுகின்றனர். பிள்ளைகள் எங்கே தங்களை வயதான காலத்தில் உரிய மருத்துவ உதவிகள் தராது கொன்று விடுவார்களோ என அஞ்சி வீட்டை விட்டு அநாதைகளாய்த் தெருவில் வசிக்கும் பெற்றோர்களைப் பற்றி செய்தித் தாள்களில் வாசித்திருக்கிறேன்.

நாட்டை ஆள நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் நேர்மையானவர்களா, சொன்ன சொல் தவறாதவர்களா, மக்கள் நலனை முக்கியமானதாகக் கருதுபவர்களா என்று ஆராயத் தவறுகிறோம். ஏனெனில் நம் மனதில் உண்மை இல்லாததால் பிறரைப் பற்றிய உண்மையை அறிய நம்மால் இயல்வதில்லை. பொய் சொல்லி மக்களை ஏமாற்றிப் பதவியைக் கைப்பற்றும் மனிதர்கள் விரைவில் உண்மை வெளியாகி மக்களால் மதிக்கப்படாத இழிநிலையை அடைவதை நாம் தினமும் கண்ணால் காண்கிறோம், காதால் கேட்கிறோம். இருப்பினும் தொடர்ந்து அத்தகைய பொய்யர்களையே தொடர்ந்து ஆட்சியில் அமர்த்துகிறோம். அவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைப் பார்த்து மகிழ்கிறோம். நம் வீட்டில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்துப் போய் அப்பணத்தில் நாம் வசிக்கும் தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்ய ஒரு திருடன் துணிவானாகில் அக்கடையில் நாம் வியாபாரம் செய்வோமா? 

ஆனால் நாட்டைக் கொள்ளையடித்து சுருட்டிய பணத்தில் தொலைக்காட்சிகள் நடத்துவதை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை? நம் வீட்டில் பணமிருந்தால் போதும், நம் வீட்டிலுள்ளோர் நலமாக இருந்தால் போதும், நாடு எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன எனும் குறுகிய மனப்போக்கே இதற்குக் காரணம்.

உலக சரித்திரத்தையும் ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்தையும், பல தலைவர்கள் சரித்திரத்தையும் படிக்கையில் நாம்ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது பொய் நிலைக்காது. என்றாவது ஒரு நாள் பொய்யர்களின் சுயரூபம் வெளிப்பட்டே தீரும். ஆனால் உண்மை என்றும் நிலைக்கும். என்றும் உண்மை ஒன்றே பேசும் உத்தம குணமுள்ள தலைவர்களை மக்கள் தெய்வங்களாகப் போற்றித் தம் மனதில் நிலைநிறுத்தித் தொழுகின்றனர். ஊழல் செய்யும் மனிதர்களும் அத்தகைய தலைவர்களைத் தவறாது போற்றி வணங்கி, அவர்களது சிலைகளை அமைத்து அச்சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்து நற்பெயர் தேடி அதன் மூலம் மக்களை ஏய்க்க முயல்கின்றனர். 

ஆனால் இத்தகைய வேஷம் ஒரு நாள் வெளிப்படும். உண்மை ஒரு நாள் வெளியாகும். அன்றே இந்த உலகம் சுபிட்சமடையும். அது வரையில் துன்பங்களே பெருகும். இன்பம் எட்டாக் கனியாகவே இருக்கும்.

உண்மையான வெற்றியாவது பிறரது மனதில் இடம் பிடிப்பதேயாகும். அதற்கு ஓரே வழி உண்மை! உண்மையே பேசும் ஒருவனை அவனது நண்பர்கள் மிகவும் நேசிப்பது உறுதி. உண்மை ஒருவனிடம் இருக்குமெனில் அவனது பிற எத்தகைய குறைபாடுகளும் நீங்கிவிடும். உண்மை என்றும் வெற்றி பெறும். அரிச்சந்திரன் கதையும் மஹாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறும் இதற்கு உதாரணங்கள் ஆகும். உண்மை பேசும் குணமுள்ள உறுதியான மனம் படைத்த யாரும் எக்காலத்தும் எக்காரணம் கொண்டும் பொய்யுரைக்க மாட்டார் என்பதை உண்மை பேசும் குணமுள்ளோர் உணர்வார். உண்மையே பெரிதென மதிப்பவர் உயிரே போனாலும் உண்மையைக் கைவிடார். பொய் பேசித் திரிவோர் ஒரு நாளும் உண்மையை உணரார். உண்மை பேசி, நன்மையையே செய்யும் ஒருவர் விதிவசத்தால் பெருந்துன்பமுற நேரிடுகையில் அவருக்கு தெய்வாதீனமாக, உற்றார், உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி முன் பின் 
தெரியாதவர்களிடமிருந்தும் உதவிகள் தானாக வந்து சேரும். 

நிரந்தரமான புகழுக்குரிய வெற்றி பெற வேண்டுமெனில் உண்மை பேசுவதும், உண்மையாய் நடப்பதும் அவசியம். வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே! தாழ்வது முடிவில் தீமையே! இது சத்தியம்! உண்மைக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கலாகாது. நாம் உண்மையாளராக இருப்பின் நல்லோர் யாரும் நம்மால் பாதிப்படைய மாட்டார்கள். மாறாக அனைவரும் நன்மையையே அடைவார்கள். அதனால் நம் மீது பிறர் வைக்கும் அன்பு நாளுக்கு நாள் உயரும். நாம் இறந்த 
பின்னரும் நம்மை அன்புடன் நினைவு கூர்ந்து நம் வாழ்க்கை முறையைப் பின்பற்றி யாவர்க்கும் நன்மை உண்டாகப் பாடுபடுவார்கள். 

எல்லோரும் இன்புற்றிருக்க ஒரே வழி உண்மையே!




திரைப்படம்: ராஜா மலையசிம்மன்
இயற்றியவர்: அ. மருதகாசி
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்
ஆண்டு: 1959

ஆஹஹாஹா ஆஹஹாஹா ஆஹஹஹா ஆஹாஹாஹா ஓஹொஹோஹோஹோ

வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!
வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே!

வெற்றியின் பாதை தெரியுதடா! வீணர்கள் கோட்டை சரியுதடா!
வெற்றியின் பாதை தெரியுதடா! வீணர்கள் கோட்டை சரியுதடா!
எட்டுத் திசையும் கொண்டாடவே எகிரிப் பாய்ந்தே முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே!

தீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது
தீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது
பாதையே நீயும் கூடாது பார்த்திடலாமோ முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்பது உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!

முன்னேறடா முன்னேறடா!