புதன், 3 பிப்ரவரி, 2016

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் உலக விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்கிறது. அவ்வாறு கற்று ஒவ்வொரு விஷயமும் குழந்தையின் அறிவுக்குப் புலனாகுகையில் அது மகிழ்ச்சி கொள்வதுடன் தான் ஒருவிஷயத்தைக் கண்டுபிடித்து விட்டதாகப் பெருமையும் கொள்கிறது. இதுவே ஆணவத்தின் அறிகுறி, அது தற்பெருமை வடிவத்திலே உருவாகி குழந்தை உடலாலும் மனதாலும் வளர்ச்சியடைகையிலே உடன் வளர்கிறாது.  இது ஒரு மயக்கமேயாகும். அறிவு மழுங்கி ஒரு மாயா உலகிலே மனிதன் சஞ்சரிக்கிறான். அம்மயக்கத்தில் ஏதோஒரு இனம் புரியாத இன்பம் கிடைப்பதால் அவ்வின்பத்தை நுகரும் வேட்கையில் தன்னிலை மறக்கிறான். இவ்வாறு ஆணவம் வளர்கையில் மனிதன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணிக்கொண்டு பிறரை மதியாமல் தன் சுயநலம் பேணுவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அல்லல்படுகிறான். அத்தகைய லட்சியங்கள் நிறைவேறத் தடைகள் உருவாகும் போது கோபமுற்று அழிப் பாதையில் செல்லத் தலைப்படுகிறான்.

அறிவு மழுங்கி அழிவுப்பாதையில் பயணிக்கும் மனிதன் தன் மன நிம்மதியை இழக்கிறான். அதனால் ஏற்கெனவே இருக்கும் இவ்வுலக இன்பங்களை சற்றேனும் அனுபவிக்க முடியாமல் துக்கமுற்று வருந்தித் தீய செயல்களையே திரும்பத் திரும்பச் செய்து ஒரு மன நோயாளியாய் மாறிவிடுகிறான். துரதிருஷ்டவசமாக அத்தகைய மன நோயாளிகள் நாட்டை ஆளும் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது, காரணம் மனிதர்களின் சுயநலம், காசு பணத்துக்காகவும், இலவச அரிசி, வேட்டி, சேலைகளுக்காகவும், சாதி மத உணர்வின் காரணமாகவும் மேலும் பல்வேறு அற்பக் காரணங்களுக்காகவும் தம்மை ஆள வருவோர் நல்லோராக இருக்க வேண்டும் எனும் அறிவை அறவே இழந்து தகுதியற்றவர்களை ஆட்சி பீடத்தில் அமர வைப்பதாலேயே இத்தகைய இழிநிலை உண்டானது.

மனிதன் இவ்வாறு ஆணவம் பெருகி அறிவிழக்கும் நிலையைத் தவிர்க்கவே பக்தி மார்க்கத்தை உலகெங்கிலும் முன்னோர்கள் அமைத்து நீதி நெறிகளையும் மனிதனது குறை நிறைகளையும் விளக்கி வந்தனர். அத்தகைய பக்தி மார்க்கத்தில் மனிதர்களில் மனம் செல்ல ஏதுவாகப் பல்விதமான புராண இதிகாசக் கதைகள் காலப்போக்கில் உருவாயின. அத்தகைய கதைகள் அவற்றை நூலாகத் தொகுத்து வழங்கிய புலமை மிக்க ஆன்றோர்களின் கைவண்ணத்தில் காவியங்களாக உருவாயின. 

அக்காவியங்களின் சொற்றிறம், பொருட்திறம் அவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கற்பனைச் சம்பவங்களை உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகவே யாரும் நம்புவதற்கேற்ற வகையில் மிகவும் உயர்வான நீதிகளுடனும் கவிநயத்துடனும் கருத்தாழம் மிக்கதாக அழகுடனும் விளங்கியதால் இடையில் சுயநலம் கொண்ட ஆஷாடபூதிகள் சிலர் அச்சம்பவங்கள் உண்மையாக நிகழ்ந்தன என்றும், தங்களது மதத்தில் படைக்கப்பட்ட புராணங்களே சிறந்தவை என்றும் ஏனைய பிற மதங்களில் படைக்கப்பட்டவை பொய்கள் எனவும் பிரச்சாரம் செய்ய ஏதுவானது.

இத்தகைய ஆஷாடபூதிகளே இன்று நாடாள்கின்றனர். யோகம் என்றால் என்ன என்றே தெரியாத இவர்கள் உலகுக்கே யோகக் கலையைக் கற்றுத் தருபவர்கள் போல் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் பிற மதத்தினரை இழிவுபடுத்தும் செயல்களை இப்பிரச்சாரங்களின் வாயிலாக மேற்கொள்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்பவே பல்வேறு மதங்கள் உருவாகிப் பல நாட்டு மக்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இம்மதத்தின் கொள்கைகளை ஆதியில் உருவாக்கிய ஆன்றோர் அவற்றை மனிதர்களை நல்வழிப் படுத்தும் உயர்ந்த நோக்கத்துடனேயே உருவாக்கினர். இடையில் அக்கருத்துக்களைச் சில சுயநலவாதிகள் திரித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வண்ணம் மாற்றி அமைத்தார்கள். அத்தகைய மாற்றங்களினால் ஏற்றுக்கொள்ள இயலாத பலவிதக் கட்டுக்கதைகளையும் திணித்து மனிதர்களைச் சாதி மத ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இத்தகைய சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்ட பகுத்தறிவுவாதிகள் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈவெரா பெரியாரும் அவரது தொண்டர்களும் மதம் சார்ந்த பொய்ப் பிரச்சாரத்தை மக்களுக்கு விளக்கி அவர்கள் அறியாமையில் மூழ்கி வருந்தி அடிமைத் தளையில் உழல்வதிலிருந்து தடுத்து அவர்கள் சுயநம்பிக்கையோடு தம் உழைப்பால் உயர வழிகாட்டினர். அவர்களுள் சுயநலம் கொண்ட சிலர் அப்பெரியாரது மெய்யன்பர்கள் போல் நடித்துப் பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் சுரண்டிச் சொத்து சேர்த்து இன்று தமிழ்நாடே ஒருசுடுகாட்டுக்கொப்பாகச் சீரழிந்து கிடக்கும் நிலைமையெய்த ஏதுவாயினர். சாராயமும், சாக்கடை நாற்றமும், ஆற்று மணல் கொள்ளையும் ஆள்வோர் அராஜகமும் மக்களைப் பாடாய்ப் படுத்தி வாட்டி வதைக்கின்றன இன்று. இத்தகைய போலிகள் அடையாளம் காணப்பட்டு அழித்தொழிக்கப் படுவதொன்றே இன்றைய தேவை தமிழ்நாட்டுக்கு. இவர்கள் தமிழை செம்மொழியாக்கியதாக மார்தட்டிக் கொண்டு தமிழர்கள் இலங்கையிலும் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளிலும் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் தங்களது குடும்பத்தாரும் கூட்டாளிகளும் பதவிகள் பெறுவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவிய மத்திய அரசின் சதிக்குத் துணை போய் துரோகம் செய்து வருகின்றனர். அத்தகைய துரோகிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். 

இவர்கள் திராவிடர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டு தமிழர்களை அடிமைப்படுத்தி வந்த நிலை மாறும் வகையில் தற்போது பெரும் விழிப்புணர்வு நம் தமிழ் மக்களிடையே பரவி வருகின்றது. திராவிடர்கள் என்றால் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எனும் நான்கு மாநிலத்தவரும் அடக்கமாகும். இது வரை திராவிடர்கள் எனும் பெயரில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள் பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு. தமிழர்கள் செத்து மடிந்தால் இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இத்தகைய கொடியோர்களின் பிடியிலிருந்து தமிழகம் மீள வேண்டுமாயின் தமிழ் மக்களைத் தமிழர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் நிலை உருவாக வேண்டும்.

முக்கியமாக நம் தமிழ் மக்கள் திருப்பதிக்கும் சபரி மலைக்கும் பெரும்பாலும் சென்று வழிபடும் வகையில் விளம்பரங்களும் கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வரும் நிலையை மாற்றி நம் தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கத்தை மேற்கொள்ளும் வகை செய்தல் மிகவும் அவசியம். அவ்வழியில் தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானைத் தம் முப்பாட்டன் என அங்கீகரிக்கும் புரட்சிமிக்க மாற்றம் பெரியாரின் தொண்டர்களில் விழிப்புணர்வு எய்திய பலரிடையே உருவாகியுள்ளது. பக்தி மனிதனை மேம்படுத்த வேண்டுமேயல்லாது சாதி மத ரீதியில் பிரிக்கக் கூடாது. அவ்வகையில் தேவர்களின் தலைவனாக விளங்கும் முருகன் தீண்டத் தகாதவர்கள் என்று அற்ப மனிதர்களால் கருதி ஒதுக்கி வைக்கப்பட்ட குறவர் சமுதாயத்தில் பிறந்த வள்ளியையும் மணந்து தேவேந்திர குமாரியான தெய்வானையுடன் சரிசமமாகக் கருதி வணக்கத் தக்க பெரிய இடத்தைக் கொடுத்தமை மிகவும் சிறப்புக்குரியது. சாதி மத பேதம் நீங்க முருகனின் கதைகள் பெரிதும் உதவுவதால் முருகன் வழிபாடு மிகவும் சிறந்ததே.

கலியுகத்தில் முருகனே தெய்வம்.முருகனைப் பாடினால் முக்தியடையலாம். முக்தி என்பது எல்லா வித அச்சங்களும், கவலைகளும், ஐயங்களும் நீங்கித் தெளிந்த நல்லறிவு பெற்ற நிலையேயாகுமேயல்லாது வேறில்லை. 

அறிவில் உயர்வோம்! அன்பால் இணைவோம்! நல்வாழ்வு கண்போம்! தமிழ்நாட்டை மீட்போம்! அத்தகைய சீரிய பணியில் நமக்குச் சக்தி தர சக்தி குமாரன் முருகவேளைப் பணிவோம்!


பாரம்பரியப் பாடல்
பாடியோர்: : பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
இசை:டி.ஏ. கல்யாணம்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்
மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன் 
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா 
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை 
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை 
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள் 
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர் 
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன் 
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள் 
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா