திங்கள், 21 அக்டோபர், 2013

இன்னொருவர் வேதனை

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த வெள்ளையர்களை விரட்டவென்றே செந்தமிழ்க் கவிதைகளைப் பாடி பாரத தேசத்தவர்க்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி. அவர்களைக் குறித்து எழுதிய இரு பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அவற்றுள் முதலாவது கவிதை வெள்ளைக்கார கலெக்டர் வின்ச் துரை கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையைக் கண்டு மிரட்டுவதாக அமைகிறது. இரண்டாவது பாடல் வ.வு.சி. அதற்களித்த பதிலாக அமைகிறது.

வெள்ளைக்கார வின்ச் துரை கூற்று:

நாட்டிலெங்கும் சுவதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்;
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன்

கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய் எமைத் தூஷித்தாய்
ஓட்டம் நாங்களெடுக்க வென்றே கப்பல
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்.

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்பட்டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய் வீரம் பேசினாய்.

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய் ஆசை ஊட்டினாய்.

தொண்டொன்றே தொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள
காட்டினாய் சோர்வை ஓட்டினாய்.

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ நீங்கள் உய்யவோ?

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் குத்திக் கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் பழி கொள்ளுவேன்.

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி:

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ மானமோ?

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இது
நீதமோ? - பிடி வாதமோ?

பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் செற்றமோ?

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம் - நன்கு தேர்ந்திட்டோ ம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவுறோம்; - சித்தம் கலைவுறோம்.

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?

இப்பாடல்களில் உள்ள கருத்துக்கள் இன்றும் நம் நாட்டுக்குப் பொருந்தும் நிலையிலேயே நாடு உள்ளது. பேருக்கு சுதந்திரம் வந்தாலும் உண்மை சுதந்திரம் வரவில்லை. இன்று நம் நாடு இருக்கும் நிலைமை ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இருந்ததை விடவும் மிகவும் கேவலமாக உள்ளது. இதற்குக் காரனம் சுயநல அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கம் நமது நாட்டை மீண்டும் அந்நியருக்கே விற்று வருவதே ஆகும். ஒவ்வொன்றாக நாட்டின் பெரும் தொழில்கள் யாவும் அந்நியர் வசம் போய்க்கொண்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் சில்லரை வணிகத்தை விலை பேசச் செய்த சதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பினால் தள்ளிப் போடப் பட்டுள்ளது ஆனால் சமயம் பார்த்து அதை நிறைவேற்றும் கபட எண்ணம் இன்றைய இந்திய அரசிடம் உள்ளது. இந்நிலையில் தற்போது சர்க்கரை ஆலைத் தொழிலை அந்நியருக்குத் திறந்துவிட சதி நடந்து வருகின்றது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் நகரத்தில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 26 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அந்நிறுவனத்தின் தலைவரான ஆண்டர்சன் என்பவரை சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தாமல் திருட்டுத்தனாக அன்றைய மாநில முதல்வர் அர்ஜுன் சிங் டெல்லியில் அப்போது ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசுடன் சேர்ந்து சதி செய்து அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பி விட்ட பின்னர். அவ்விபத்தில் இறந்தவர்களுக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இன்றுவரையிலும் தொடர்ந்து வறுமையிலும் நோய்களாலும் துயருறும் மக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் படவில்லை. இடையே விஷவாயு விபத்தில் பாதிக்கப் பட்ட பலர் தம்மையறியாமலேயே ஒருசில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய மருந்துகளை உருவாக்கக் கையாளும் மருத்துவ சோதனைகளில் பன்றிகளைப் போலப் பயன்படுத்தப் பட்டுள்ளனர்.

இது நாள் வரை விபத்தால் பாதிக்கப் பட்ட ஊரின் பல பகுதிகள் சீரமைக்கப் படாமல் விஷவாயுவின் தாக்கம் காரணமாக சிதிலமுற்ற நிலையிலேயே தொடர்ந்து இருக்கின்றன. யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து இதன் பின்னர் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டவ் கெமிகல்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம் சட்டப்படி விபத்தினால் பாதிக்கப் பட்ட நிலப்பரப்பை சீராக்க வேண்டும் அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவற்றில் ஏதொன்றையும் அந்நிறுவனம் இதுவரை செய்யாதிருக்கும் நிலையில் இவ்வாண்டு லண்டன் மாநகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை வழங்குவோராக உள்ளதற்கு இந்தியா மற்றும் லண்டன் மாநகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்திய அரசும் இங்கிலாந்து அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கடிதங்களை எழுதிவிட்டுத் தம் கடமை முடிந்தது எனக் கைவிரித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தியில் நிறுத்தியுள்ளனர்.

மக்கள் படும் துயர் கண்டு சிறிதும் இரங்காமல் தம் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தும் கொடியவர்கள் இருக்கும் வரை நம் நாட்டில் மக்கள் நலமாய் வாழ முடியாது. இவ்வீணர்கள் பிறர் துன்பத்திலே இன்பம் காணும் இரக்கமற்ற அரக்கர்களே ஆவர்.

இவர்களது கொடுமைகளை அகற்ற இன்னும் ஒரு சுதந்திரப் போரை மக்கள் நடத்தியாக வேண்டும்.


திரைப்படம்; ஆசை முகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன்

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார் 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

உருண்டோடும் நாளில்

இளம் வயதில் யாவருக்கும் இருக்கும் நோக்கம் இவ்வுலக வாழ்வில் தாம் தேடத்தக்க பொருள் குறித்தும் வசதியாக வாழ்வது குறித்துமே பெரும்பாலும் அமைவது இயல்பு. வளர்ந்து பெரியவர்களாகி, புத்திரப்பேறு அடைந்து அப்புத்திரர்களை வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்குத் தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் பலர் தம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணி மீதமிருக்கும் வாழ்நாட்களை வீணாக்கி ஓய்வெடுத்து மகிழ்வதொன்றையே குறிக்கோளாகக் கொள்கின்றனர். இவர்களது வாழ்வின் நோக்கங்கள் யாவும் இவ்வுலக வாழ்க்கையுடன் முடிந்து போகின்றன. தான் யார் என்பதையோ, தாம் பிறந்த நோக்கம் என்ன என்பதையோ இவர்கள் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. சுயநல இருள் சூழ்ந்த இவர்களது வாழ்க்கை யாருக்கும் எவ்விதப் பயனையும் தருவதில்லை. இவ்வுலகுக்கு இத்தகையோர் பாரமாகவே விளங்குகின்றனர்.

இதற்கு மாறாகச் சிலர் தம் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் சமுதாயத்தில் உள்ள பிறரைப் பற்றியும் அக்கரை கொண்டு சேவை புரியும் நோக்கம் கொண்டு மீதமுள்ள தமது வாழ்நாட்களைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பொதுநல நோக்கர்கள் பிறரிலும் மேலான நிலையை எய்திப் புகழ் பெறுகின்றனர். அவர்களது வாழ்க்கை ஒளிமயமாக அமைகிறது. அவ்வொளியில் இவ்வுலகம் பயன் பெறுகிறது.

இவ்விரு பாதைகளில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் யாரென்பது நமக்கும் இவ்வுலகுக்கும் தெரியலாகும். மரணத்தை நோக்கிய மனித வாழ்வில் தாம் இருந்த சுவடே தெரியாமல் இந்த உலகிலிருந்து மறைந்து காணாமல் போவது சரியா? அல்லது உலகம் போற்றும் பொதுநலப் பாதையில் வாழ்வை அமைத்துக்கொண்டு இறந்த பின்னும் தனது பெயர் இவ்வுலகிலுள்ளோர் பலராலும் என்றும் எண்ணிப் போற்றத்தக்கதாக விளங்கும் வண்ணம் வாழ்வது சரியா?

இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வது நம் ஒவ்வொருவரின் விருப்பமே ஆகும். காலம் பொன்னானது. அதை எவ்வாறு செலவிடுவது என்பதை நாமே நிர்ணயிக்கிறோம். நமது நிர்ணயம் வாழ்வை ஒளிபொருந்தியதாக அமைப்பதும் இருள் சூழ்ந்ததாக அமைப்பதும் நம் விருப்பமே. The ball is in our court!

உருண்டோடும் நாளில்

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்:பி. சுசீலா
ஆண்டு: 1961

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
இது போதுமா இன்னும் வேண்டுமா? ஒய் ஒய் ஒய்

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

திரும்பாத போதும் விருந்தாக மேவும்
திரும்பாத போதும் விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா விஷம் வேண்டுமா? ஹஹஹஹ

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

ஒரு பெண்புறா

உறவுகளே உலக வாழ்வில் உயிர்களை இணைக்கும் பாலம். உறவுகளே பிறவியெனும் பெருங்கடலைக் கடக்க உதவும் தோணி, ஏனெனில் உறவுகளிலே உறைகிறான் இறைவன். நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஒருவரோடொருவர் உறவு கொண்டுள்ளோம், அத்துடன் அண்ட சராசரத்தின் ஒவ்வொரு அணுவினோடும் நாம் யாவரும் உறவுகொண்டுள்ளோம். உலகை உயிர்கள் நேசிப்பதாலேயே வாழ்க்கை இந்த உலகில் நிலைபெற்றிருக்கிறது. கருவினுள்ளே உருவாகும் உயிர் உருவம் கொண்டு வளர்ந்து கருவுறுவதால் இவ்வுலகில் ஒவ்வொரு உயிரின் பரம்பரையும் தொடர்கிறது. உறவின் அடிப்படையே அன்பு. பரஸ்பர அன்பு நிலைபெற்று வளர்வதால் உறவு வலுப்படுகிறது. உலக வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் பலனாக சில சமயம் உறவுகளுக்குள்ளே பிணக்கு ஏற்படுவது இயல்பே. அப்பிணக்குத் தீர உரிய முயற்சிகளை ஆரம்ப நிலையிலே மேற்கொள்கையில் பிணக்கு வளராமல் தடுக்கப்பட்டு உறவு முறியாமல் காக்கப்படுகிறது.  உறவினர்களோ நண்பர்களோஒருவரோடொருவர் எக்காரணம் கொண்டும் பிணங்குகையில் அதன் காரணம் யாதென சிந்தித்து பரஸ்பரம் விட்டுக்கொடுத்து உறவு தொடர்ந்திடுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டால் பிணக்கு தீர்க்கப்படும்.

பிணக்கு உரிய காலத்தில் தீர்க்கப் படாமல் ஒருவரோடொருவர் போட்டி போட்டு இருவரில் யார் பெரியவர் என்று நிரூபிக்கும் வகையில் தொடர்கையில் அது பெரும் பகையாக உருவெடுக்கிறது. அத்தகைய பகை நம்மை மட்டுமின்றி நம் வம்சத்தவரையும் பாதிக்கக்கூடும் என்பதை நாம் உணர்வோமினில் யாரிடமும் பகைமை பாராட்டுவதை விடுத்து நல்லுறவை வளர்க்கும் விதமாக நாம் நடந்து கொள்வோம். நமக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதைப்பெரிது படுத்தாது சமரசப் பாதையில் செல்வோமெனில் சமாதானம் நிலைபெறுகிறது.

எதிர்பாராத விதமாக உறவுகளிடையே பகைமை மூண்டாலும் அத்தகைய பகை நம் வாரிசுகளை பாதிக்காத வகையில் நம் செயல்பாடு இருத்தல் நலம். நமது பகையை நம் பிள்ளைகளின் மேல் சுமத்துதல் நியாயமன்று. ஒருவரோடொருவர் மிகுந்த அன்புகொண்டு விளங்கிய இரு நண்பர்களுக்கிடையே சில சுயநலவாதிகளால் பகை ஏற்பட்டு, போட்டியாக வளர்ந்த நிலையில் அவ்விருவரில் ஒருவரது மகள் இன்னொருவரது மகனை நேசிக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனை அறிந்து அப்பெண்ணின் தந்தை தன் மகளைக் கண்டிக்கிறான். மகள் தந்தை சொல்வதை ஏற்காமல் தன் காதலை வலியுறுத்துகிறாள். தன் மகளை மிகவும் பிரியத்துடன் வளர்த்து வரும் தந்தை கோபம் கொண்டு முதன்முறையாக அவளைக் கைநீட்டி அடித்துவிடுகிறான். தன்னிடம் அடி வாங்கிய பெண் மனம் குமுறி அழுவதைக் கண்டு அவனது மனம் பொறுக்கவில்லை.

தன் மனதில் எழும் பெரும் துயரை அத்தந்தை வெளியிடுவதாக அமைந்த இப்பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குஷ்புவுடனும் சரத் பாபுவுடனும் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெறுகிறது.

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட

திரைப்படம்: அண்ணாமலை
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் 
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்தக் காலமே
மெத்தை விரித்தும் சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலம்
என் தேவனே தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா?
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தக் கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி

ஆண் பிள்ளையோ சாகும் வரை 
பெண் பிள்ளையோ போகும் வரை
விழியிரண்டும் காயும் வரை
அழுது விட்டேன் ஆன வரை

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

இது நாட்டைக் காக்கும் கை

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் 
பண்ணி மலைகளென வீதி குவிப்போம் 
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார் 
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் 

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் 
ஒயுதல்செய் யோம் தலை சாயுதல் செய்யோம் 
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். 

குடைகள்செய் வோம் உழு படைகள் செய்வோம் 
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் 
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் 
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் 

என்று இந்திய நாட்டில் பல்தொழில் பெருகி வளர வேண்டிக் கனவு கண்ட பாரதி அக்கனவினை நனவாக்க வல்ல தொழிலளர்களை வாழ்த்தி,

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் நுமக்கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே! 

மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனை செய்குவீரே!
உண்ணக் காய்கனி தந்திடுவீரே!
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடுவீரே!
இழையை நாற்றுநல் லாடை செய்வீரே!
விண்ணினின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 

என்றும் பாடினார். 

நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்து தன் குடும்ப நலனையும் இரண்டாம் பட்சமாகக் கருதிய அம்மஹாகவி பாரத நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுமுன்னரே இவ்வுலகை விட்டுச் சென்றதாலோ என்னவோ நம் நாடு சுதந்திரம் பெற்றதாகப் பொய்யானதொரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை மயக்கத்தில் வீழ்த்திய பின் சிறிது சிறிதாக நமது நாட்டை அந்நியருக்கே விற்று வருகின்றனர். இன்று நம் நாட்டை ஆள்வோர். நம் நாட்டினர் முதலீடு செய்து நடத்திப் பயன் பெற வேண்டிய தொழில்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. விளைவு! இன்று நம் நாட்டிலேயே அந்நிய நாட்டவர் தொழிலதிபர்களாகவும் அவர்களின் கீழே கைகட்டி நின்று சேவை செய்யும் தொழிலாளிகளாக நம் நாட்டு மக்களும் செயல்புரியும் இழிநிலை வந்துற்றது. 

அவ்வாறு அந்நிய முதலாளிகளிடம் பணி செய்து நம்மவர்கள் ஈட்டும் ஊதியத்திலும் பெரும் பகுதியைப் பல விதமான வரிகளின் மூலமும் விலைவாசி ஏற்றத்தின் மூலமும். நாட்டு மக்களுக்கு இலவசமாகக் கிடைத்து வந்த கல்வி, மருத்துவம் முதலானவற்றை விலைபொருட்களாக்கி அவற்றின் விலைவாசியையும் விஷம் போல் நாளுக்கு நாள் ஏற்றியும் வழிப்பறி செய்து பறிப்பது போல் பிடுங்கிக் கொள்கின்றனர். இன்று நாட்டை ஆள்வோர். மேலும் ஆட்சி முறைகேடாக நடைபெறுவதால் தொழில்களும் நசிந்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வழக்குகள் நடந்து வரும் நிலையால் பல்வேறு தொழில்கள் இன்று முடங்கிப் போயுள்ளன. அந்நிய நாட்டவரும் நம் நாட்டில் மூலதனம் செய்ய இன்று முன்வருவது குறைந்துள்ளதால் வெகு விரைவில் நமது தேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருக வாய்ப்புள்ளது. 

நம்மை ஆட்சி செய்யத் தகுதியுள்ளவர்களாக நாம் நம்பிய நபர்கள் அவ்வாறில்லாமல் தம் சுயநலம் ஒன்றே பேணுபவர்களாக இருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இரவோடிரவாக நம் நாட்டு மக்களின் கையில் எஞ்சியிருந்த சில்லரை வணிகத்தையும் அந்நியருக்கு விற்றுவிடப் பெரும் முயற்சி செய்து வருகின்றனர் இந்த சதிகாரர்கள். இத்தகைய சதிகாரர்கள் கையிலிருந்து நாட்டின் ஆட்சி மீட்கப்பெற்று நல்லாட்சி செய்யத் தகுதி பெற்று விளங்குவோரிடம் வழங்கப் பட வேண்டும். தொழில்கள் நாட்டில் மேன்மையடைந்து மக்கள் உண்மை சுதந்திரம் பெற வேண்டுமெனில் சமுதாயத்தில் குற்றங்கள் குறைய வேண்டும். உழைத்து முன்னேற உரிய வழிகளை மக்களுக்கு ஆட்சியிலுள்ளோர் ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கு வரி வசூல் முறையாக நடைபெற்று, கருப்புப் பணம் குறைந்து, அரசியல் மற்றும் சமூகக் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் பெற்று, அவர்கள் கொள்ளையிட்ட பெரும் பொருள் திரும்பப் பெறப்பட்டு நாட்டு மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இவற்றையெல்லாம் நிறிவேற்றினாலொழிய நம் நாட்டில் தொழில்கள் முன்னேறவோ தொழிலாளர் நலன் பெறவோ இயலாது.

அனைத்திற்கும் மேலாக நாட்டு மக்கள் யாவரும் உழைப்பின் உயர்வை உணர்ந்து உழைப்பால் உயர முற்பட வேண்டும். "தன் கையே தனக்குதவி" எனும் மூத்தோர் சொல்லை மனதிற்கொண்டு செயல்படவேண்டும். கறை படியாத கைகளையுடையோர் நாட்டை ஆளத் தேர்வு செய்ய வேண்டும். உழைக்கும் கைகள் உயர்வு பெற வேண்டும்.


திரைப்படம்: இன்று போல் என்றும் வாழ்க
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1977

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை
இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல
அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல
நேர்மை காக்கும் கை நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை இது
ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும் சீர் மிகுந்த கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல
வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல
ஈகை காட்டும் கை மக்கள் சேவையாற்றும் கை முள்
காட்டை சாய்த்து தோட்டம் போட்டுப் பேரெடுக்கும் கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல
உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல
மானம் காக்கும் கை அன்ன தானம் செய்யும் கை
சம நீதி ஓங்க பேதம் நீங்க ஆள வந்த கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை

ஆடாத மனமும் உண்டோ?

நாம் இவ்வுலகில் இருக்கும் வரை மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமெனில் எதற்கும் கவலைப் படாதிருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நமது என்று தனியே ஏதுமில்லை. இவ்வுலகம் முழுமையும் நமதே என்ற பரந்த எண்ணத்துடன் இவ்வுலகையும் உலக மாந்தரையும் பிற உயிரினங்களையும் நேசித்து ஒழுகுதல் நம் உள்ளத்தில் என்றும் மகிழ்ச்சி நிலவ வழிகோலும். உலகமென்கையில் அதில் தீமைகளும் இருக்கும் அனேக நன்மைகளும் இருக்கும். நன்மைகளை நாடிச் சென்றடைதல் வேண்டும். தீமைகளை விலக்க வேண்டும். ஆனால் எதற்கும் அஞ்சுவதும் கவலை கொள்வதும் ஆன்மாவை வருத்தும்.

வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

எனும் மஹாகவி பாரதியின் வழிகாட்டுதலைக் கடைபிடித்து வாழ்வில் நமது சக்திக்கு ஏற்றவாறு முயற்சி செய்து நன்மை தரும் விஷயங்களை நாட வேண்டும். ஆசைகளை அழிக்க வேண்டுமென்று முற்றுமுணர்ந்த ஞானிகள் போல் தம்மைக் காட்டிக்கொள்வோர் கூறும் பொய்த் தத்துவத்தைப் புறக்கணித்து ஆசைகளே இந்த உலகில் வாழ நமக்குறுதுணையாக விளங்கும் ஆதாரங்கள் என்பதை உணர்ந்து நியாயமான வகையில் நாம் பயன்பெற ஏற்ற, நம் சக்தியைக் கொண்டு நிறைவேற்றத் தக்க ஆசைகளை மனதில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இனிய கானங்களைக் கேட்டும் பாடியும் மகிழ்வதும், நண்பர்களுடன் ஒன்று கலந்து களிப்பதும், நம் மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணையை நாடியடைந்து, காதல் கொள்வதும், மனம் விரும்பும் துணைவரை மணம் செய்து கொண்டு இல்லற இன்பம் துய்ப்பதும், நற்புத்திரப் பேறடைவதும். நம் பிள்ளைகளுக்காக நமது வாழ்வை அர்ப்பணிப்பதும் ஆசைகளேயன்றோ?

ஒருவனுக்கு அழகில் சிறந்தவளும், நாட்டியத்தில் தேர்ந்தவளும், அன்பொடு பழகுபவளுமான ஒரு பெண் காதலியாகக் கிடைத்தால் அவன் அடையும் இன்பத்துக்கு அளவேயில்லை. அவனும் அவளுக்கேற்றவாறு தானும் இசையிலும் நடனத்திலும் பயிற்சி பெற்றிருப்பின். அவ்வின்பம் இரட்டிப்பாகுமன்றோ? அத்தகைய மனம் கவர்ந்த காதலி நடனமாட அவளது நாட்டியத்திற்குத் தானே இசை பாடும் வாய்ப்புஒருவனுக்கு அமையுமானால் அவளது நடனம் கண்டு அவனது மனம் ஆனந்தக் கூத்தாடுமன்றோ? 

ஆடாத மனமும் உண்டோ?

திரைப்படம்: மன்னாதி மன்னன்
இயற்றியவர்: ஏ. ம்ருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1960

ஆடாத மனமும் உண்டோ? நடை
யலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ? நடை
யலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ? 

நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப்பாதையில் வீர
நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப்பாதையில் வீர
நடை போடும் திருமேனி தரும் போதையில்

ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ?

வாடாத மலர் போலுன் விழி பார்வையில் கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்
வாடாத மலர் போலுன் விழி பார்வையில் கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்
ஈடேதுமில்லாத கலைச் சேவையில் தனி
இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஈடேதுமில்லாத கலைச் சேவையில் தனி
இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்

ஆடாத மனமும் உண்டோ? 

இதழ் கொஞ்சும் கனியமுதை விஞ்சும் 
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
இதழ் கொஞ்சும் கனியமுதை விஞ்சும் 
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம் 
அதனசைவில் பொங்கும் நயம் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம் 
அதனசைவில் பொங்கும் நயம் காணவே
முல்லைப் பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
முல்லைப் பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உன்தன் அருகில் வந்து நின்றேன்
இன்பமென்னும் பொருளை இங்கு கண்டேன்
தன்னை மறந்து உள்ளம் கனிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே தரும்
திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே
தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே தரும்
திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே

ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ?