ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

நிலவோடு வான்முகில் விளையாடுதே

தினம் ஒரு பாடல்: ஜூன் 23, 2014

இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ஓருயிர் அனுபவிக்கும் சுகங்கள், துயர்கள் அனைத்தும் பிற உயிர்களுடன் சேர்ந்தே அனுபவிப்பது சாத்தியமாகும். புலன்களுக்கப்பால் அப்புலன்களை இயக்கக்கூடிய மனம் சார்ந்த இன்ப துன்பங்களையும் பிற உயிர்களுடன் கலந்து கூடியே அனுபவிக்கலாகும். தனக்காக மட்டும் எவரும் வாழ்தல் சாத்தியமன்று. அனைவரும் வெறுத்தொதுக்கத்தக்க குற்றவாளிகளுக்கும் பிரியமானவர்கள் உலகத்தில் 
இருந்தே தீருவர். இது உலக நியதி.

இந்நியதிப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலும் நிலைபெறுகிறது.ஒருவரது துணையை மற்றவர் மனம் நாடுகின்றது. தன் துணைவர் அருகில் இல்லாத நேரங்களில் மனம் மிகவும் அல்லல் படுகின்றது, படுத்துகின்றது. இயற்கையில் இவ்வுலகின் ஒப்பற்ற அழகுக்கு சிகரம் வைத்தாற் போன்று விளங்கும் வெண்ணிலாவுடன் விண்ணிற் பரவிப் பரந்து, பிரிந்தொன்று சேர்ந்து பல விதமாய்த் தோற்றமளிக்கும் மேகம் விளையாடுகின்ற விளையாட்டு கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிதாகத் தோன்றுகின்றது. நிலாவை சில காலம் மறைத்தும், சில காலம் வெளியே காண்பித்தும் என அம்மேகம் விளையாடும் கண்ணாமூச்சி ஒருவரைத் தன் காதல் துணையின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதில் வியப்பேதுமில்லையன்றோ?


திரைப்படம்: ராஜ ராஜன்
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி. கோமளா

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
 புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

 மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா?
மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா? 

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
 இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம் - ஓ 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதன், 24 செப்டம்பர், 2014

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி

தினம் ஒரு பாடல் ஜூலை 10, 2014

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் தான் என்று பிறந்தானோ அன்றிலிருந்து தான் இறந்து இவ்வுலகை விட்டு மறையும் வரை மிகவும் அதிகப்படியாக நினைப்பதும் பேசுவதும் கனவு காண்பதும் தன்னைப் பற்றித்தான். பிறர் துன்பமுற்ற போதும் அதைப் பொருட்படுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து பொருளீட்டி, பெரும் பட்டங்களும் பதவிகளும் பெற்று, பிறரால் பாராட்டப்பட்டு ஒரு செயற்கையான மிதப்பிலேயே என்றும் வாழ ஆசைப்படுகின்றான். இந்நிலையை நன்குணர்ந்த சிலர் கூட்டுச்சேர்ந்து நல்லவர் போல் நடித்து இத்தகைய ஒவ்வொரு மனிதனையும் தீர ஏமாற்றுகிறார்கள், ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர், இனியும் ஏமாற்றிக் கொண்டே 
இருப்பர். இத்தகைய மனிதனும் ஏமாந்து கொண்டேயிருப்பான் ஏனெனில் அவனுக்கு ஏமாறாமல் இருக்க என்றும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவன் முயற்சிக்க மாட்டான்.

ஒரு சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க க்யூ வரிசையில் பலர் நிற்கையில் அனைவரையும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி முதல் டிக்கெட் வாங்குவதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏகப் பெருமை. அளவிலடங்காத மகிழ்ச்சி தான் க்யூ வரிசையில் நின்ற அனைவரையும் முந்தியதில். க்யூ வரிசையில் நிற்பவர் ஒவ்வொருவரும் இவ்வாறு முண்டியடித்து முன்னேறுவோரைக் கண்டு வெறுத்தாலும் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய பயப் படுகின்றனர். பிறரை ஏமாற்றித் தான் மட்டும் நலமடையும் குறுகிய மனப்பான்மை கொண்ட மனிதர்களே இந்த உலகில் மெஜாரிட்டி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இடையில் எவனேனும் நல்ல குணமுள்ள ஒரு மனிதன் தென்படுவானேயாகில் அவன் மேல் என்ன பழி சுமத்தலாம், அதன் மூலம் தான் என்ன இலாபம் அடையலாம் என எப்பொழுதும் கணக்குப் போட்டு, பிறர் தலையிலே மிளகாய் அரைத்து வாழும் குள்ளநரிகள் மனிதர்களுள் ஏராளம், ஏராளம். அவர்களை எளிதில் அடையாளம் காண இயலாது. அதனால் சிற்றறிவு படைத்த மாந்தர்கள் என்றும் எவரையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.

தீமையே செய்து பழக்கப்பட்டோருக்கு நன்மை செய்வது இயலாது. இரண்டு நாட்கள் முன்னர் என் மகளுடன் என் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பேக்கரிக்கு வழக்கம் போல் 'வாக்கிங்' போகையில் வழியிலே ஒரு சிறு பூனைக்குட்டி சாலையோரத்தில் ஒரு சிறு வீட்டின் அருகிலிருக்கும் சந்தில் நின்று "மியாவ்" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். சில ஆண்டுகள் முன்னர் எனக்குப் பிள்ளைகள் பிறக்காதிருந்த காலத்தில் நான் பல பூனைக் குட்டிகளை வீட்டில் வளர்த்ததுண்டு. இந்தப் பூனைக்குட்டியைக் கண்டதும் அருகில் சென்று தடவிக் கொடுத்தேன். அதுவும் என் கையில் உரசிக் கொண்டே மியாவ், மியாவ் என்று குரல் எழுப்பியது. அது பசிக்குரல் என்பது எனக்குத் தெரிந்தது. எனவே அப்பூனைக் குட்டியை பேக்கரிக்குத் தூக்கிச் சென்று உண்ண ஏதேனும் வாங்கித் தரலாம் என எண்ணி அதைத் தூக்கியபடி நடக்கத் துவங்கினேன். ஆனால் அப்பூனைக் குட்டி என்னுடன் வர மறுத்து முரண்டு செய்யவே அதனைக் கிழே இறக்கி விட்டேன். அப்போது சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய கருப்பு நாய் அப்பூனையைத் துரத்தியது. நல்ல வேளை! பூனை நாயிடம் அகப்படாமல் தப்பிப் பிழைத்து ஒளிந்து கொண்டது. 

பேக்கரிக்குச் சென்று திரும்புகையில் பூனைக்கு ஒரு பிஸ்கட் வாங்கி வந்து போட்டேன். அது பிஸ்கட்டை தின்ன மறுத்ததுடன் என் கால்களுக்கிடையே வந்து என் கால்களில் உரசிக் கொண்டு மீண்டும் பசிக்குரல் எழுப்பியது. திரும்பி வரும் வழியில் ஒரு சிறு ஹோட்டல் இருந்தது. அங்கே அதற்கு சிறிது பால் வாங்கித் தரலாம் என்று எண்ணி அதைத் தூக்கிக் கொண்டு நடக்க முற்பட்டேன். இரண்டடி எடுத்து வைப்பதற்குள் இறக்கி விடச்சொல்லி முரண்டு பிடித்தது. இருப்பினும் இறக்கி விட்டவுடன் மீண்டும் என் கால்களைச் சுற்றி உராய்ந்தது. இரண்டடி இரண்டடியாக அதனை அந்த ஹோட்டல் வரை இட்டுச் சென்றேன். ஹோட்டலில் பால் தீர்ந்து விட்டிருந்தது. 

ஏதேனும் இட்டிலித் துண்டுகள் இருந்தால் ஒரு சிறு இலையில் வைத்து பூனைக்குக் கொடுக்கும் படி அங்கிருந்த சிப்பந்தியிடம் வேண்ட அவரும் இட்டிலித்துண்டுகளை அதன் முன் வைக்க அது புசித்தது.

பூனையைக் காப்பாற்றிய மகிழ்வுடன் அன்றிரவு உறங்கி எழுந்து மறு நாள் காலை அது எப்படியிருக்கிறது எனப் பார்க்க அந்த ஹோட்டலுக்குப் பொடி நடையாக நடந்து சென்று விசாரிக்கையில் பூனை எங்கோ சென்று விட்டது எனக்கூறிய ஹோட்டல் முதலாளி (பெண்மணி) "இங்கே ஏன் பூனையைக் கொண்டுவந்து விட்டீர்கள்? இங்கு வருவோர் நாங்கள் பூனை வளர்ப்பதாக நினக்கின்றனர். வியாபாரம் கெடுகிறது." என்றாளே பார்ப்போம். அந்த ஹோட்டல் ஒரு அசைவ ஹோட்டல். மிருகங்களைக் கொன்று சமைத்து விற்றுப் பொருள் சேர்த்து சேர்த்து மனிதத் தன்மையே மறைந்து விட்டது கண்டு மிகவும் வருந்தினேன்.

இத்தகைய ஏமாற்றங்கள் காதலில் மிகவும் அதிகம். இக்காலத்தில் பெண்கள் ஏமாற்றுவதாக ஆண்கள் புலம்பித் தவிக்கின்றனர். முற்காலத்தில் (1955 - அப்போது எனக்கு 2 வயது) ஆண்கள் ஏமாற்றுவதாகப் பெண்கள் புலம்பித் தவித்தனர். தான் விரும்பிக் காதலித்த ஒருவன் திருடன் என எண்ணிய ஒரு பெண் தன் ஏமாற்றத்தை நினைத்து வருந்திப் பாடும் ஒரு பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.



திரைப்படம்: கோமதியின் காதலன்
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1955

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன் - நான்
கண்ணிருந்தும் குருடானேன்

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன் - நான்
கண்ணிருந்தும் குருடானேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன் - என்
காதலிலும் தோல்வி கண்டேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன் - என்
காதலிலும் தோல்வி கண்டேன்

எண்ணத்திலே இடி வீழ்ந்ததே
ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
எண்ணத்திலே இடி வீழ்ந்ததே
இதயத்திலே இருள் சூழ்ந்ததே
ஆஆஆ ஆஅஆஆஆ ஆஆஆ ஆ
கண்ணியமில்லாக் கள்வனின் நேசம்
பெண்மைக்கே இழிவானதே

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன் - நான்
கண்ணிருந்தும் குருடானேன்

உண்மைக்கே திரை மூடினேன்
ஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்
ஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆ
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்
நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம்
வெம்பவே வினை தேடினேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன் - நான்
கள்வனெனும் பழி கொண்டேன்

திங்கள், 22 செப்டம்பர், 2014

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?

தினம் ஒரு பாடல்: ஜூலை 7, 2014

உலகில் நாம் ஒவ்வொருவரும் வாழ விரும்புவதற்கு ஓரே காரணம் உறவுகள். தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, மாமன், அத்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை முதலான உறவுகளுடன் ஒருவரின் சிறுவயதில் துவங்கும் வாழ்க்கை அவ்வுறவுகளுடனும் அவ்வுறவுகளின் குழந்தைகளுடனும் வளர்கிறது. இடையில் ஏதேனும் ஒரு சமயம் ஒருவருக்குத் திருமணம் நடக்கையில் கணவன், மனைவி உறவு ஒரு புது இன்ப உறவாக வருகிறது. 

சுகமான அந்த இல்லற இன்பம் பிள்ளைகள் பிறந்ததும் சொர்க்கலோகமாக மாறுகிறது. அதுவரை தனக்காகவும் தன் வாழ்க்கைத் துணைவருக்காகவும் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் பிள்ளைகளுக்காக என மலர்கையில் அந்த இன்பம் பன்மடங்காகப் பெருகிக் குதூகலத்தில் உள்ளமும் உயிரும் அனைத்து உணர்வுகளும் திளைக்கின்றன.

இடையில் தாய், தந்தை மற்றும் பிற மூத்த உறவினர்கள் ஒவ்வொருவராக உயிர் நீத்து இவ்வுலகை விட்டுப் போகும் படலம் தொடங்கித் தொடர்கையில் வாழ்க்கையின் நிலையாமை ஓரளவு புரிகிறது. 

பின்னர் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அவர்கள் இல்லற வாழ்வை அனுபவிப்பதைக் கண்டு மகிழ்வதுமாகத் தொடரும் வாழ்க்கை பேரன், பேத்தி பாக்கியம் கிடைத்ததும் ஒரு உச்ச கட்டத்தைத் தொடுகிறது. 

உச்ச கட்டத்தின் அடுத்த பகுதி வீழ்ச்சியேயன்றோ? அவ்வியற்கை நியதிப்படி ஒருவரின் வாழ்க்கைத் துணை இந்த உலகை விட்டுப் பிரிகையில் அத்துயர் அதுவரை அனுபவித்த துயர்கள் அனைத்தையும் மிஞ்சுமளவு பெருந்துயராகத் தென்படுகிறது. வாழ்க்கைத் துணையின் மறைவுக்குப் பின்னர் ஒருவரது நினைவு முழுதும் அதன் பிறகு அத்துணையுடன் வாழ்ந்த நாட்களையும் நிகழ்ச்சிகளிலும் எண்ணிப்பார்த்து மகிழ்ந்தும் சோகத்தில் மூழ்கியும் இருக்கும் நிலையிலேயே இறப்பு வரை கழிகிறது. வாழ்வின் பெரும்பகுதியில் தன் செயல்களுக்கு ஊக்கமளித்து உடன் இருந்து இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வாழ்விற்கு ஒருஅர்த்தத்தைத் தந்த உன்னத 
உறவல்லவா? அவ்வுறவின் பிரிவு ஒருவரை நிலைகுலையச் செய்து விடுகிறது. இவ்வுண்மை எனது மூத்தோர் படும் அனுபவங்களைக் கேட்டுணர்ந்து சொல்கிறேன். 

அத்தகைய பிரிவுத் துயரைப் பேரன் பேத்திகள் ஓரளவு குறைக்கின்றன என்பதால் வாழ்வும் ஓடுகிறது. பிரிவுத் துயர் என்பது மூத்த வயதினரை மட்டுமின்றி இளம் காதலர்களையும் பல சந்தர்ப்பங்களில் படுத்துகின்றது. காதல் வயப்பட்ட ஒரு இளம்பெண்ணின் அத்தகைய பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் ஒருஇனிய பாடல் இதோ:


திரைப்படம்: நீங்காத நினைவு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி.மஹாதேவன்
பாடியவர்: பி.சுசீலா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா? ஆஆஆ
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆஆஆஆ ஆ

சனி, 20 செப்டம்பர், 2014

கலங்காதிரு மனமே

தினம் ஒரு பாடல், ஜூன் 27, 2014

நான் கவிஞனில்லை; எனினும் ஒரு நல்ல ரசிகன். கண்ணனுக்கும் ரசிகன் அவன் தாசனுக்கும் ரசிகன் சிறு வயது முதலே எனக்குத் துணை பாடல்களே. 'தனிமையிலே இனிமை காண்பவனே யோகி' என்றான் கண்ணன் 

தன் கீதையில். 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' என்று கேள்வி கேட்டான் கண்ணதாசன். 

என்னால் முடியும் எனப் பதிலுரைக்கிறேன் கண்ணதாசனுக்கு. தனிமையில் இருந்து கொண்டு மனம் எனும் மாயக் கணிணியின் நினைவுப் பதிவுகளிருந்து கண்ணதாசன் எனும் காவியத்தின் வரிகளை அசைபோட்டால் தனிமையில் இனிமை தானே வரும் அன்று. 

இன்று மனக் கணிணியுடன் நிஜக் கணிணியும் துணையிருக்கையில் அவன் பாடல்களையும் ஏனைய தமிழ்க் கவிஞர் பெருமக்களின் பாடல்களையும் இணையதளம் வாயிலாகவும் கணிணியின் நினைவுப் பெட்டகத்தில் பதிவு செய்து கொண்டும் கேட்டு மகிழும் வாய்ப்பு பன் மடங்காய்ப் பெருகி நிலைபெற்றிருக்கையில் தனிமையில் ஏன் இனிமை காண முடியாது? 

இன்றும் நான் இனிமை காண்கிறேன் தனிமையில், இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திக்கொண்டு!

'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் 
வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின் 
ஊன் பற்றி நின்ற உயர் திரு மந்திரம் 
தான் பற்றப் பற்றத் தலைப் படும் தானே' 

எனும் திருமந்திரப் பாடலில் காணும் அறிவுரைப்படி யான் பெற்ற இசையென்னும் இன்ப வெள்ளத்தை இந்த வையகம் முழுமையும் பெற வைக்கும் பேரவாவினால் தமிழை சிறிதும் கற்றறியாத நான் எழுதிவரும் 'தினம் ஒரு பாடல்' தொடர் கடிதங்களுடன் நான் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடலின் வரிகளுடன் பாடலின் ஒலி ஒளிப் பதிவுகளுக்கான இணைப்புகளையும் இணையத் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து மகிழும் ஆனந்தம் இசை கேட்கும் ஆனந்தத்தையும் விட மிகப் பெரிது என்பதை உணர்கிறேன்.

இதில் பேரானந்தம் தரும் அனுபவங்கள் என்னவெனில் என் போன்றே இப்பாடல்களைக் கேட்டு மகிழும் பல தமிழ் அன்பர்கள் தம் மனதாரத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதுவே. 

ஒரு முறை கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்ணதாசன் பாடல்களுடன் நான் எழுதுவது குறித்து எனக்குப் பாராட்டுத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் செய்திருந்தார். வசிஷ்டர் வாயால் 'பிரம்ம ரிஷி' எனும் பெரும் பெயர் பெற்ற மாமுனிவன் விஸ்வாமித்திரனும் அடைந்திராத மகிழ்ச்சியை நான் அன்று அடைந்தேன். 

நேற்று எனக்கு 'காவிரி மைந்தன்' எனும் கண்ணதாசனின் சீடர் ஒருவர் 'தினம் ஒரு பாடல்' மிக அருமையாக உள்ளதாகத் தெரிவித்து என்னுடன் தொடர்பு கொண்டார். 

கவிஞர் கண்ணதாசனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது இணையதளம் தமிழ் நதி  

அதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் குறித்த ஒரு சிறு மடலைக் கண்டேன். கண்ணதாசனைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும் நான் அறிந்தது சொற்பமே. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றையறிய இணையத் தமிழ் ஊடகங்கள் மிகவும் உதவிபுரிகின்றன.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.

அம்முதல் பாடலாவது:


திரைப்படம்: கன்னியின் காதலி
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: கே.வி. ஜானகி

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே - உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
ஒரு தினமே 
கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே
கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது?
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது? உனக்கு 
ஆகாததேது? 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள்
ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள்
அருஜ்ஜுனன் வலைதனில் 
அருஜ்ஜுனன் வலைதனில் வீழ்ந்தனள் சரியாய் 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும்
பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும்
பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும்
பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் 

அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள்
அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே - உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
ஒரு தினமே 

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அன்னையின் அருளே வா வா வா!

தினம் ஒரு பாடல்: ஜூலை 2, 2014

"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் 
வானின் றமையா தொழுக்கு"

உலகில் உயிர்கள் வாழ நீர் அடிப்படைத் தேவையாகும். உயிர்கள் வாழ்வதாலேயே பூமியை உலகம் என்கிறோம். உயிர்கள் அழிந்து பட்டால் அதுவும் ஏதேனும் ஒரு வெற்றுக் கிரகமாக ஆகிவிடும். அத்தகைய அபாயத்தையே நோக்கி மனிதகுலம் அறிந்தே முன்னேறுகிறது. இங்கே கற்றவரும் கல்வியறிவில்லாத மூடர்களும் ஓரே மன நிலையில் செயல்படுகின்றனர். காரணம் சுயநலம். 

எப்பாடு பட்டாகிலும் ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும். கேளிக்கைகள் பல வேண்டும். மாலை நேரமானால் மனம் மயங்கிக் களியாட்டம் போட மது வேண்டும். தான் மட்டும் நிறையத் தங்க நகைகள் அணிய வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். காரில் பயணிக்க வேண்டும். ஆகாய விமானத்தில் உலகம் முழுதும் சுற்ற வேண்டும். மூன்று வேளைக்கு நான்கு வேளை வயிறாற வகை வகையாய் உண்ண வேண்டும். விதவிதமாக உயர் ரக ஆடைகள் அணிந்து மகிழ வேண்டும். மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருக்க வேண்டும். பிறர் தம் முன்னர் கை கட்டி வாய் பொத்தி நின்று மரியாதை செலுத்த வேண்டும். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ வேண்டும். உலகிலேயே முதல் செல்வந்தனாகத் திகழ வேண்டும் என்பன போன்ற நப்பாசையின் காரணமாக மனிதன் பித்தம் பிடித்தவனைப் போல் செயல்பட்டு இந்த பூமியின் இயற்கை வளங்களை வாரியிறைத்து விற்றுப் பணம் எனும் வெற்றுக் காகிதத்தை பதிலுக்குப் பெற்று அடுக்கும் விபரீத விளையாட்டில் இறங்கி விட்டான்.

ஆதி காலம் முதல் இந்தக் கணம் வரையிலும் நிகழ்ந்த மானிட சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்தோமெனில் நாம் நம் அறியாமையை நன்கு உணரலாம். எத்துணை கோடி பணமிருந்தாலும் அதில் கோடியில் ஒருபங்கினையும் நாம் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னரே உயிர் துறந்து காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மறைந்து போகிறோம். மீதமிருக்கும் அற்பப் பணம் நம் மக்களையும் அவர்கள் பெறும் சந்ததியினரையும் தீய வழியில் தள்ளுகிறது. அதனால் நம் சந்ததியினர் பாவங்கள் பல செய்து, அதனால் பகை மூண்டு மாண்டு போகின்றனர். நம் சந்ததியே பூண்டோடு அழிந்து போகின்றது. இதற்குச் சான்று சரித்திர ஏடுகளில் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணிறந்த மன்னர்களும், செல்வந்தர்களும் தொன்று தொட்டு இந்த உலகின் பல நாடுகளில் வாழ்ந்ததற்கான சான்றுகளை நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம். 

அத்தகையோரின் வாரிசுகள் எத்துணை பேர் இன்று நம்மிடையே உயிரோடு வாழ்கின்றனர் என்று நாம் எண்ணிப் பார்த்தோமானால் மிகவும் சொற்பமானோரின் வாரிசுகளே உளர் என்பதை நாம் அறியலாகும். அத்துடன் அந்த வாரிசுகள் மிகவும் சாதாரண மனிதர்களாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகவும் ஏழைகளாகவும் அடையாளமே தெரிந்து கொள்ள முடியாத நிலையில் திகழ்பவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். 

நான் ஒரு சுயநலவாதியாக வாழ்ந்து மடிந்தால் அதன் பிறகு என்னைப்பற்றி என் மனைவி மக்களுமே எண்ணிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். இவ்வுலகம் உய்யவும் உலக மக்கள் துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழவும் நான் எதுவுமே செய்யாது மடிந்தேனாகில் இவ்வுலகம் என்னைப் பற்றி ஒரு நாளும் எண்ணாது. ஆனால் பயனுள்ள ஏதேனும் ஒரு செயலை நான் செய்து அதனால் இவ்வுலகமும் வருங்கால சந்ததியினரும் பயனடைவார்களே ஆயின் நான் இறந்த பின்னரும் என் பெயர் பல காலம் விளங்கும். அத்தகைய பயனுள்ள வாழ்க்கை வாழப் பண பலமோ சிறப்பான சமூக அந்தஸ்தோ தேவை என்பதில்லை. சாதாரண மனிதன் ஒவ்வொருவரும் இவ்வுலக 
நலன் கருதி அதற்காக சிறிதளவேனும் சேவை செய்ய இயலும். விளை நிலங்களையும் மலைவளங்களையும் பல பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் தங்கள் சுயநலத்துக்காக அழித்து அவற்றில் விளையும் மரங்களையும் பயிர்களையும் அழித்து அவ்விடங்களில் தொழிற்சாலைகளுக்காகவும் இருப்பிடங்களுக்காகவும் கல், மணல், சிமென்டு, இரும்பு என இவ்வாறான பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டுவதையும், இரும்பு, அலுமினியம், நிலக்கரி, சந்தன மரங்கள் போன்ற அரிய மரங்கள் முதலியவற்றுக்காக வன வளங்களை அழிப்பதையும் நிறுத்தப் போராடுவது. நம்மாலியன்ற அளவு மரங்களை நட்டு வளர்ப்பதுவும். காய் கறிகள் முதலானவற்றை நம் வீடுகளிலும் இதர இடங்களிலும் வளர்த்தலும் நாமெல்லோரும் பல குழுமங்களாக சேர்ந்து செய்யலாம். 

உயிர் வாழ் இன்றியமையாத தண்ணீரைத் தொடர்ந்து தருவதாலேயே நதிகளை மக்கள் தாயாக வழிபடுகின்றனர். தமிழர்களின் நதிகளுள் தலையாயது காவிரி நதி. ஆடி மாதம் மழை பெய்ய, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில் பல விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அவற்றுள் காவிரியைப் போற்றி வணக்கும் விழாவே "ஆடிப் பெருக்கு".


திரைப்படம்: ஆடிப் பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1962

அன்னையின் அருளே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 
ஆடிப் பெருக்கே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 

பொன்னிப் புனலே வா வா வா! 
பொங்கும் பாலே வா வா வா! 

அன்னையின் அருளே வா வா வா! 

குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா! 

திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருமால் தனக்கே மாலையாகி 
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே! 

அன்னையின் அருளே வா வா வா! 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
முத்துத் தாண்டவர் பாடலிலே 
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வளநாடாக்கும் தாயே நீ 
வாழிய வாழிய பல்லாண்டு! 

வியாழன், 18 செப்டம்பர், 2014

நிலவோடு வான்முகில் விளையாடுதே

தினம் ஒரு பாடல்: ஜூன் 23, 2014

இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ஓருயிர் அனுபவிக்கும் சுகங்கள், துயர்கள் அனைத்தும் பிற உயிர்களுடன் சேர்ந்தே அனுபவிப்பது சாத்தியமாகும். புலன்களுக்கப்பால் அப்புலன்களை இயக்கக்கூடிய மனம் சார்ந்த இன்ப துன்பங்களையும் பிற உயிர்களுடன் கலந்து கூடியே அனுபவிக்கலாகும். தனக்காக மட்டும் எவரும் வாழ்தல் சாத்தியமன்று. அனைவரும் வெறுத்தொதுக்கத்தக்க குற்றவாளிகளுக்கும் பிரியமானவர்கள் உலகத்தில் 
இருந்தே தீருவர். இது உலக நியதி.

இந்நியதிப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலும் நிலைபெறுகிறது.ஒருவரது துணையை மற்றவர் மனம் நாடுகின்றது. தன் துணைவர் அருகில் இல்லாத நேரங்களில் மனம் மிகவும் அல்லல் படுகின்றது, படுத்துகின்றது. இயற்கையில் இவ்வுலகின் ஒப்பற்ற அழகுக்கு சிகரம் வைத்தாற் போன்று விளங்கும் வெண்ணிலாவுடன் விண்ணிற் பரவிப் பரந்து, பிரிந்தொன்று சேர்ந்து பல விதமாய்த் தோற்றமளிக்கும் மேகம் விளையாடுகின்ற விளையாட்டு கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிதாகத் தோன்றுகின்றது. நிலாவை சில காலம் மறைத்தும், சில காலம் வெளியே காண்பித்தும் என அம்மேகம் விளையாடும் கண்ணாமூச்சி ஒருவரைத் தன் காதல் துணையின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதில் வியப்பேதுமில்லையன்றோ?


திரைப்படம்: ராஜ ராஜன்
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி. கோமளா

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
 புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

 மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா?
மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா? 

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
 இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம் - ஓ 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

போனால் போகட்டும் போடா

தினம் ஒரு பாடல் - ஜூன் 11, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் என்பது அடங்கியிருத்தல். ஐம்புலன்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்தித் தன்னை அடக்கி வாழ்தல், தன் தாய் தந்தையருக்கு அடங்கி அவருக்குப் பணிவிடைகள் செய்து பணிந்து வாழ்தல், வித்தையைக் கற்றுத் தரும் குருவுக்கு மரியாதை செய்து அவர் சொற்படி நடந்து அவர் மாணவன் எனும் பெயர் விளங்க வாழ்தல், தம்மிலும் வலிமையுள்ளோருடன் பலம் தெரியாமல் மோதலில் இறங்காமல் அடங்கியிருத்தல். தம் நண்பரோடும், உற்றார், உறவினர் மற்றும் சமுதாயத்துடன் அடங்கியிருத்தல் என்று பல விதமாகப் பொருள் தரும் என்றாலும் அவற்றுள் கடைபிடிக்கத் தக்கவை எவை, தகாதவை எவையென அறிவினால் அறிந்து அதன்படி நடத்தலே சிறந்தது. 

நம் கண்முன்னர் வேறொருவருக்கு எவரேனும் தீங்கிழைத்தால் அதனைக் கண்டும் காணாமல் போவதால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதும் தர்மத்தின் மீதும் பயமில்லாமல் மென்மேலும் பெரிய குற்றங்களைத் துணிந்து செய்து சமுதாயத்துக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கின்றனர். அத்தகைய குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க உதவுவதும் பாதிக்கப்படுவோருக்குத் துணை நிற்பதும் நம் ஒவ்வொருவரது கடமைகளாகும். அதனை மஹாகவி பாரதி தன் பாப்பாப் பாடலில்,

பாதகம் செய்பவரைக் கண்டால் சற்றும்
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!

என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது போல் நம் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டியது மோட்சம் எனும் உயர்ந்த நிலையேயல்லாது பெரும் செல்வமும் சுகபோகமும் அல்ல. இவ்வுலகில் நாம் தேடியுழைத்து ஈட்டும் பொருட்கள் யாவும் அழியும் தன்மை உடையன. நாமும் அழியும் தன்மையுடையவர்களே. எனவே பொன்னும், பொருளும், பெண்ணும் பிற சுகமும் தேடுவதை விடுத்து ஞானம் பெற முயல்வதே மானிடப் பிறவியெடுத்ததன் முதற்கடமை. அல்ல, எனக்கு ஞானம் வேண்டாம், இவ்வுலக சுகமே முக்கியம் என்போர் மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படுவதுறுதி.

அடக்கத்துடன் வாழ்ந்து வரும் ஞானியர் பலர் நம்மிடையே இருக்கையிலும் அவர்களை நாம் அடையாளம் காண முடியாமல் அஞ்ஞான இருள் மறைக்கிறது. ஞானியரை அடையாளம் காண நமக்கும் ஞானம் சிறிது வேண்டும். அத்தகைய ஞான மார்க்கத்தை விடுத்து ஒருவர் அடங்கிப் போகிறார் என்பதால் அவர் அறிவில் குறைந்தவர் என எண்ணி அவரை ஒடுக்கி நம் சக்தியை வெளிப்படுத்த எண்ணுவது மடமையிலும் மடமையே.

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டாம் மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.

ஞானம் என்பதும் முக்தியென்பதும் மனிதப் பிறவியில் ஒருவர் எய்தக்கூடிய பெரும் பேறுகள் ஆகும். அந்தப் பேறுகளைப் பெற உலக நன்மைக்காக உழைத்து வாழ வேண்டும். லட்சியத்தைக் கைவிடாமல் எந்த நஷ்டம் வந்தாலும் அதனால் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து பிறருக்காக சேவை செய்து வாழ வேண்டும். அப்படி சமுதாய நன்மைக்காகவே வாழும் ஒரு மருத்துவர் தன்னுடன் பணி செய்யும் செவிலியைத் திருமணம் செய்து கொள்கிறார். இடையில் மனைவிக்கு உடல்நலம் குன்றி அவள் படுத்த படுக்கையாகிறாள். அதனால் மருத்துவர் தன்னை நம்பியிருக்கும் பிற நோயாளிகளைக் கவனியாமல் தன் மனைவி மேல் மட்டுமே கவனம் செலுத்தவும் 
அவர் மனைவி தான் உடனிருக்கும் வரை தன் கணவன் தன் கடமையை சரிவர் நிறைவேற்ற மாட்டார் என்று எண்ணி அவரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். போகுமுன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுப் போகிறாள். அக்கடிதத்தைப் படித்த மருத்துவர் சோகத்துடன் பாடுவதாக அமைந்த ஒரு தத்துவப்பாடல் இதோ:



திரைப்படம்: பாலும் பழமும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எம்.எஸ். விஸ்வநாதன்

ஓஹொஹோ ஓஹோ ஹோ ஹொஹொஹோஓஓஓ

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஓஹோஹோ ஹோஓஓஓ 
ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓ 
ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகமாடும் கலைஞனடா.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓஓஹோஓ