செவ்வாய், 22 அக்டோபர், 2013

சீதாராம் சீதாராம்

இம்மாயா உலகிலே நாமனைவருமே பொய்யான வாழ்வே வாழ்கிறோம். சிலர் வாழ்நாள் முழுவதும் பொருள் சேர்ப்பதிலும் அவ்வாறு சேர்த்த பொருள் தரும் சுகங்களை அனுபவித்து மகிழ்வதிலும் செலவழித்து உலக நலன் கருதாமல் காணாமல் போகின்றனர். வேறு சிலர் உலக நலன் கருதியே பாடுபட்டு, தம் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்து, தம்மையும் தம் குடும்பத்தையும் காக்கத் தவறி இறுதியில் வருந்துகின்றனர். இன்னும் சிலர் உலகே மாயம் வாழ்வே மாயம் என்று கொண்டு தம்மைப் பெரும் ஞானியராக எண்ணி இவ்வுலக வாழ்வில் கிடைக்கும் பயன்களை அனுபவியாமல் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு மடிகின்றனர். இவர்கள் யாவரும் ஒரு விதத்தில் தம் மனதும் அறிவும் சரியென்று உணர்வதையே சரியெனக் கொண்டு வாழ்வதனால் ஏதேனும் ஒருவகையில் மனநிறைவு காணக்கூடும்.
 
மற்றொரு சாரார் பிறரை ஏமாற்றி வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்களுள் பலர், குறிப்பாக நம் அரசியல்வாதிகள் தாமும் தம் கட்சியும் மட்டுமே மக்கள் சேவையைப் பிரதானக் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் பிறர் யாவரும் மோசடிப் பேர்வழிகள் என்றும் மேடைகள் தோறும் முழங்குவர். தமது பிரசங்கத்தைக் கேட்க வரும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவர். தீர விசாரித்தால் இவர்கள் மேடையமைக்கவும், இலவசங்கள் வழங்கவும் செலவழிக்கும் பணத்தை இவர்கள் உழைத்து சம்பாதிக்கவில்லை, ஊழல்செய்து மக்களை ஏமாற்றி அவர்கள் வயிற்றில அடித்து சம்பாதித்தனர் என்பது தெரியவரும். ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவெனில்  நம் மக்களில் பெரும்பாலோர் உண்மையை நம்புவதில்லை. அதனால் திரும்பத் திரும்பப் பொய்யர்கள் கூற்றையே நம்பி ஏமாறுகின்றனர்.
 
வேறு சிலர் தம்மை முற்றும் துறந்த முனிவர்கள் போல் உரு மாற்றிக் கொண்டு மக்களுக்கு ஞான மார்க்கத்தைக் காட்டுவதாகக் கூறி அவர்களிடமிருந்து பொருள் பெற்றுத் தாம் செல்வந்தர்களாக வாழ்வதுடன் திரை மறைவில் சம்சாரிகளுக்கும் கிட்டாத சுகபோகத்தை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய போலிச் சாமியார்களது சுயரூபம் தெரிந்த பின்னரும் இவர்கள் பின்னால் சென்று ஞானம் தேடும் மக்களில் பெரு்ம்பாலோர் இவர்கள் உண்மையில் நல்லவர்கள், வீணாகப் பழிசுமத்தப் படுகிறார்கள் என நம்பி திரும்பவும் இவர்கள் பின்னால் தொடர்ந்து செல்வது பெரிய வேடிக்கை.
  
 
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
பாடியவர்: சாரங்கபாணி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
Year: 1955 - ஆண்டு: 1955
 
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்உள்ளே விகாரம் வெளியிலே பாரம்
உலகமெல்லாம் வீண் டம்பாச்சாரம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
தன்னலமில்லாத தலைவரென்பாராம்
தலையிலே மிளகாய் அரைச்சிடுவாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
உண்டியும் நிதியும் சேர்த்திடுவாராம்
கிண்டி ரேசிலே விட்டிடுவாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
பாண்டித்யம் பெற்ற சிங்கமென்பாராம்
பழைய ஒண்ணாங்கிளாஸ் படிச்சிருப்பாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
காரியம் சாதிக்கக் காக்கா பிடிப்பாராம்
காரியம் முடிஞ்சா டேக்கா கொடுப்பாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம்
கலிகாலம் வெறும் கிரகசாரம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் ஜெய சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்

நீதியே நீயும் இருக்கின்றாயா?

நாடே கெட்டு விட்டது. எங்கும் எதிலும் ஊழல், லஞ்சம் இன்றி ஒரு வேலையும் நடப்பதில்லை. எவரேனும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிடக் காவல் நிலையம் சென்றால் அவர் மீதே பல குற்றசசாட்டுகள் சுமத்தப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்படுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட எவரும் காவல் துறையை அணுக அஞ்சுகின்றனர். இத்தகைய நிலை தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமுதாயத்தில் நம்பிக்கை இழந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் துவங்குகின்றனர். இதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பலர் ஒன்றிணைந்து தீவிரவாத இயக்கங்களை உருவாக்குகின்றனர். நாளடைவில் இவ்வியக்கங்கள் நம் நாட்டின் மேல் பகை பாராட்டும் அந்நிய நாடுகளிலிருந்து தூண்டப்படும் பயங்கரவாதத்துக்கு் துணை போகின்றன. இத்தகைய தீவிரவாதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே மறைந்து வாழ்ந்துகொண்டு அருகிலிருக்கும் ஊர்களில் உள்ள அப்பாவி மக்களை இன்னலுக்குள்ளாக்குவதும், இவர்களிடம் ஏமாந்து மாட்டிக்கொள்ளும் காவல்துறையினர், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முதலானவர்களைப் பணயக் கைதிகளாக வைத்துத் தங்கள் மேல் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதும் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டு சிறையிலிருக்கும் தங்கள் குழுவினரை விடுவிப்பதும் இந்தியாவின் பல மாநிலங்களில் அன்றாடம் நடைபெறுவது மிகவும் கவலையளிக்கிறது.

இது வரையில் அரசியல்வாதிகள் யாரும் இத்தகைய தீவிரவாதிகள் கையில் சிக்காமல் தப்பி வந்துள்ளனர். ஆனால் இன்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தீவிரவாதிகள் கையில் பணயக் கைதியாக சிக்கியுள்ளார். இந்நிலை தொடருமாயின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்படுவது உறுதி. நாட்டில் அரசியல் விரைவில் முன்னேறும் எனும் நம்பிக்கையில் இதுகாறும் பொறுமைகாத்து வந்த பொது மக்கள் சமுதாய நலனுக்காகப் போராடுவதையே தம் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு பாடுபடும் அன்னா ஹசாரே போன்ற தலைவர்கள் தொடங்கி நடத்திவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம் நாட்டில் வலுவான மக்கள் குறை தீர்க்கும் சட்டங்களும் அவற்றை அமல்படுத்தத் தக்க அமைப்பையும் உருவாக்கக் கோரி வருகின்றனர். இருந்த போதிலும் முறையான வலுவான சட்டங்களை இயற்றவும் மத்திய புலனாய்வுத் துறையை சுதந்திரமாக்கவும் அரசியல்வாதிகள் முன்வராமல் அநீதியான நடைமுறைகளே தொடர்ந்து நிலவும் வகையில் பலவிதமான ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதுடன் மக்களூக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றனர்.

நீதி நிலைபெறுமா? குற்றவாளிகள் அரசாளும் நிலை மாறுமா? மக்கள் நல்வாழ்வு வாழ வழி பிறக்குமா? இவை போன்ற விடை தெரியாத கேள்விகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலவுகையில் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகள் மேலும் மேலும் அரசியல்வாதிகளின் முறைகேடுகளையும் பொதுமக்கள் பலர் படும் தீராத துன்பங்களையும் மட்டுமே பெரும்பாலும் வெளியிடும் சூழ்நிலையில் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியும், மின்தடையும், தொழில்கள் முடங்கும் நிலையும் இருப்பதால் இன்று நாட்டில் எங்கும் யாரும் அமைதியாக வாழ முடியவில்லை.

குற்றமற்ற அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் பதவிகளில் இருந்துகொண்டு அநீதிகள் புரிந்து வருவதும் நிரந்தர வாழ்க்கை நிலையாகிவிடுமோ எனும் அச்ச உணர்வு மக்கள் மனங்களில் எழுவதை யாரும் மறுக்க இயலாது. இது போன்ற சூழ்நிலை தற்காலத்தில் மட்டுமே நிலவுகிறதா? முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் யாவரும் நீதி தவறாது ஆண்டார்களா? மக்கள் யாவருக்கும் சம நீதி கிடைத்ததா? இவை போன்ற கேள்விகளுக்கு சரித்திரத்தில் விடைகாணலாம்.

உப்புத் தின்னவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அது போல் அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கும் அரசியல்வாதிகள் மனிதர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களிலிருந்து தப்பித்தாலும் நம் எல்லோரையும் படைத்தும் காத்தும் அழித்தும் உலகை நடத்தும் தெய்வத்தின் தீர்ப்பிலிருந்து என்றும் தப்பிக்க முடியாது. இதற்கு சரித்திரம் சான்று கூறுகிறது.


திரைப்படம்: பூம்புகார்
இயற்றியவர்: மாயவநாதன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
Year: - ஆண்டு: 1964 

நீதியே நீயும் இருக்கின்றாயா? இல்லை
நீயும் அந்தக் கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
அன்று கொல்லும் அரசின் ஆணை சென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
காலடித் தாமரை நோவது மறந்து காதலனோடு நடந்தாளே அந்தக்
காலனும் தொடர்ந்து நடந்ததையறிந்து கற்புக்கரசி துடித்தாளே
அடையாச் சொதவாய் இமையா விழியாய் ஆயிர யுகங்கள் பொறுத்தாளே இன்று
விளையா நிலத்தின் விதையாய்ப் போன வேதனையறிந்து துடித்தாளே
அன்று கொல்லும் அரசின் ஆணை சென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
வெயிலே இல்லாத காலத்திற் கிடைக்கின்ற வேதாற் பயனென்ன கெஞ்சி
வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி வந்தென்ன போயென்ன?
உயிரே போன பின் உடலென்னும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன?
செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன?
செய்தவன் கதியென்ன? இதை செய்தவன் கதியென்ன? 

ஏச்சுப் பிழைக்கும்

இவ்வுலக வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு முறை மட்டுமே. அதுவும் சொற்ப காலமே. இள வயதில் தமக்கு 100 ஆண்டுகள் ஆயுள் எனவும் அது மிகவும் நீண்ட காலம் எனவும் எண்ணி அந்த வயதில் தாம் செய்யத்தக்க கடமைகளை முறையாகச் செய்யாமல் பொழுது போக்கிவிட்டுப் பிற்காலத்தில் வருந்துவோர் பலருளர். அது மட்டுமன்றி நம்மிற் பலர் நம்மைக் காட்டிலும் பொருளாதாரத்தில் சிறந்து நாம் அடையாத வசதிகளுடன் வாழ்வதைக் கண்டு அவர்கள் மேல் பொறாமை கொள்வதுடன் நாமும் அவர்களைப் போல அல்லாது அவர்களைக் காட்டிலும் வசதி படைத்தவராக வேண்டுமெனும் பேராசையால் நேர்மையைக் கைவிட்டுக் குறுக்கு வழியில் செல்கின்றனர். இவ்வாறு குறுக்கு வழியில் செல்வந்தராகும் மனிதர்கள் என்றும் ஒரு குற்ற உணர்வுடனும், எங்கே மாட்டிக்கொள்வோமோ எனும் அச்ச உணர்வுடனும் வாழ நேரிடுவதால் வாழ்வை அவர்களால் முழு மகிழ்ச்சியோடு வாழ முடிவதில்லை. 

அதிகமாக உண்டவன் அஜீரணத்தால் அவதியுறுவது போல அளவுக்கு மீறிய செல்வத்தைச் சேர்த்தவன் மன அமைதியின்றி அல்லலுற நேரிடுகிறது.அத்தகைய செல்வத்தை அவன் நேர் வழியில் உழைத்துச் சேர்த்த போதிலும், எங்கே தன் பொருளை எவரேனும் களவாடுவரோ எனும் அச்சம் அவன் மனதில் நிலைபெறலாகும். அளவோடு பொருள் சேர்த்து அனைவரோடும் பகிர்ந்து உண்ணும் மனப் பக்குவம் உள்ளவன் வாழ்வில் பிறர் அனைவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியோடும் ஈடுபாட்டோடும் வாழ முடிகிறது. இதன் காரணம் அவனது மனதில் கவலை என்றும் வருவதில்லை. எந்த ஒரு இழப்பையும் அவன் மனம் ஏற்றுக்கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் தன்மை அவனிடம் இயல்பாக நிலைபெறுவதால அவன் மகிழ்சியாக வாழ்கிறான்.. 

இந்த உலக வாழ்வு அநித்தியம் எனும் உண்மையை உணர்ந்தோர் அழியும் பொருட்கள் மீது பற்றை அகற்றி அழியாப் பொருளான எங்கும் நிறைந்த பரம்பொருளை எண்ணி லேசான மனதுடன் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்கின்றனர். இத்தகைய ஞானிகள் இவ்வுலகிலேயே ஸ்வர்க்கத்தைக் கண்டு நித்திய சுகத்தை என்றும் அனுபவிக்கின்றனர். இதற்கு மாறாக சுயநல நோக்குடன் திருட்டும் புரட்டும் செய்து பலரது வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொண்டு வெறும் பகட்டான போலி வாழ்வை மேற்கொள்பவன் என்றும் எதிலும் திருப்த்தியடையா மன நிலையுடனே வாழ்ந்து மனக்குறையுடனே மடிகிறான். இத்தகையவர்க்கு இவ்வுலகமே நரகமாகிறது.

ஏச்சுப் பிழைக்கும்

திரைப்படம்: மதுரை வீரன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி
ஆண்டு: 1956

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
நல்லா நெனச்சுப் பாருங்க நல்லா நெனச்சுப் பாருங்க

தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் 
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்
தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் 
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க 

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் ஆஆஆஆஆ ஏஏஏஏஏ
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

சிரிப்பவர் சிலபேர்

இன்று இந்தியாவிலேயே மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் தமிழகம் என்று ஒரு பத்திரிகைச் செய்தி வெளிவந்துள்ளதெனக் கூறப்படுகிறது. இதை விடப் பெரிய கேலிக்கூத்து ஒன்றும் இருக்க முடியாது. தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு அமுலுக்கு வந்து மாநிலத்தின் பல தொழிற்சாலைகள் மின்சாரத் தட்டுபாட்டால் மூடப்படும் நிலைமை உருவாகி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் அபாயம் வந்துள்ளது. தானே புயலால் உருக்குலைந்து வாடும் கடலூர்ப் பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் வரலாறு காணாத வகையில் தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு மாநிலமெங்கும் அவரது உருவப் படங்கள் சுவரொட்டிகளிலும் வேறு பல இடங்களிலும் பெரும்பொருட் செலவில் அமைக்கப் பட்டு அவற்றிற்குக் காவல் துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தாம் பதவிக்கு வந்தால் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கப் போவதாக உறுதியளித்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்த பின்னர் மக்களுக்கு அளித்த வாக்கை முதல்வர் மறந்து விட்டார். தற்போதைய மின்வெட்டு மிகவும் கடுமையான விளைவுகளை தமிழ் நாட்டில் ஏற்படுத்தப் போகிறதென்பதில் சற்றும் ஐயமில்லை. இலவசமாக அரிசி கொடுத்து விட்டால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா? மக்கள் உழைத்து வாழ வழியின்றிச் செய்து அவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கு சமமன்றோ இது? மின் உற்பத்தியைத் தனியார் மயமாக்கிவிட்டதால் மாநில அரசுகள் அனல் மின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளிப்பதில்லை என்று மின்துறை அதிகாரிகள் சிலர் சொல்கிறார்கள். தனியாரிடமிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரத்திற்கு 5000 கோடி ரூபாய்களுக்கு மேல் பாக்கி வைத்திருப்பதால் அவர்கள் மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்கள். மக்களின் இக்கட்டான இச் சூழ்நிலையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கூடன்குளம் அணு மின் நிலையத்தை எவ்வாறாகிலும் துவக்கிவிடலாம் என்று தமிழக காங்கிரசார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடன்குளம் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீரக் கூடியதா என்ன?

மாநிலத்தில் இருக்கும் அனல் மின் நிலைய்ங்கள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. இலவச மின்சாரம் என்ற பெயரில் மின்சாரம் பெருமளவில் திருடப்படுகிறது. மின்சார வாரியம் மின் கட்டணங்களை முறையாக வசூலிப்பதும் இல்லை. மாநிலமே இருளில் மூழ்கியிருக்கையில் முதல்வர் ஸ்ரீரங்கத்து மக்களுக்கு மிக்சி, கிரைண்டர் பிச்சை போடும் விழா நடத்துகிறார். தமிழக அமைச்சர் பெருமக்கள் பலர் சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக முகாமிட்டுள்ளனராம். இவர்களில் ஒரு சிலராவது தானே புயலால் பாதிக்கப் பட்ட இடங்களுக்குச் சென்றார்களா?

உண்மையான மக்களாட்சி மலர்ந்து நாட்டில் மக்கள் குறைகளை முழுமனதுடன் தீர்க்க முயலும் தலைவர்கள் ஆட்சியில் அமரும் காலம் என்று வ்ருமோ அன்றே நாட்டில் மக்களின் ஏழ்மை நீங்க வழி பிறக்கும். அதுவரை ஒரு சிலர் பெரும்பொருள் சேர்த்துப் பலர் பட்டினியால் வாடும் நிலையே நிலவும். இன்று நம் நாடு இருக்கும் சூழ்நிலையை ஆராய்கையில் மிகவும் அச்சமாக உள்ளது. இன்னமும் மக்கள் முறைகேடான ஆட்சியினால் தம்மை நெருங்கிவரும் பெரும் ஆபத்தை உணராமல் இருக்கின்றனரோ என்று ஐயமாகவும் உள்ளது. நாட்டில் பெரும்பாலோர் பல்வேறு வகையிலும் துன்பமுற்று அழுகையில்ஒரு சிலர் மட்டும் சிரித்து மகிழ்கின்றனர். இந்த நிலை என்று மாறுமோ?

சிரிப்பவர் சிலபேர்

திரைப்படம்: சபாஷ் மாப்பிள்ளை
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1961

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா?
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

புரியாது புரியாது

கதைகளிலும், நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெரும்பாலோர் அதிகம் விரும்புவது மர்மங்கள் நிறைந்த படைப்புகளே. கதையின் அடுத்தடுத்த கட்டங்களும் முடிவும் என்னவாக இருக்குமென்று எளிதில் யூகிக்க இயலாத வகையில் புனையப் பட்ட கதைகள் பிற கதைகளைக் காட்டிலும் அதிக சுவாரஸ்யமளிக்கும் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பலவித சொல்லொணாத துயரும் துன்பமும் அடைந்து அவற்றிலிருந்து மீள்வார்களா மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் கருத்தை ஈர்க்கும் விதமாக இத்தகைய கதைகள் அமைகையில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அது போலவே நம் வாழ்விலும் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதும் நமது துன்பங்கள் நீங்கி இன்பம் விளையுமா என்பதும் கேள்விக்குறியாக விளங்கிடும் போதிலும் மனதில் உற்சாகம் ஏற்படும் விதத்தில் நாம் பல செயல்களில் தினம் ஈடுபட்டு வாழ்க்கையில் பெரும் துன்பங்களுக்கிடையிலும் தொடர்ந்து வாழ்வில் கிடைக்கும் இன்பங்களையும் அனுபவித்து நல்ல காலம் வரும் எனும் எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

முற்காலத்தில் நடந்ததையும் எதிர் காலத்தில் நடக்கக் கூடியதையும் முற்றிலும் உணர்ந்தவர்களாக நாம் கருதும் ஞானியர் வாழ்வை நாம் அனுபவிப்பது போல அவ்வளவு சுவாரஸ்யத்துடன் அனுபவிப்பார்களா என்பது கேள்விக் குறியே. காரணம் அவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் கிடையாது ஏமாற்றங்களும் கிடையாது. சாமான்யர்களான நாம் பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்கையில் நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகையில் மன மகிழ்ச்சி கொள்கிறோம், நிறைவேறாமல் போகையில் கவலை கொள்கிறோம். நம்மில் சிலர் ஏமாற்றத்தைத் தாங்காமல் அழுவதும் உண்டு. எவ்வாறாகிலும் அத்தகைய மன வருத்தமும் அழுகையும் கூட நமக்குப் பெரும் இன்பத்தைத் தருபவையே. அழுவதிலே இன்பம் கண்டேன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.

இருப்பினும் துன்பமும் தொல்லையும் எல்லை மீறுகையில் வாழ்வில் இன்பம் காண்பதரிது. இத்தகைய துன்பங்களையும் தொல்லைகளையும் ஒரு எல்லைக்குள் வைத்திருக்க நாம் செய்ய வேண்டியது யாதெனில் நமது ஆசைகளையும் உடைமைகளையும் கட்டுக்குள் வைப்பதே ஆகும். ரயிலிலோ, பெருந்துகளிலோ, ஆகாய விமானத்திலோ பயணம் மேற்கொள்ளும் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு தன்னுடன் எடுத்துச் செல்லும் பிற பொருட்களைக் குறைத்துக் கொள்கிறாரோ அவ்வளவுக்கு அவரது பயணம் இன்பகரமாக அமைவது போலவே வாழ்க்கை இன்பகரமாக இருக்க நமது தேவைகளையும் சுமைகளையும் குறைத்துக் கொள்வதே ஏற்ற வழியாகும். 

நம்மிடம் நம் தேவைக்கு மிஞ்சிப் பொருளிருக்குமாயின் அதனை ஏழை எளியோருக்கு தானம் செய்வதும், சமுதாய நன்மைக்குப் பயன்படுத்துவதும் நமது வாழ்வை மேலும் இன்பகரமாக ஆக்க்குவதுடன் நம்மை இந்த உலகிலுள்ளோர் மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் எண்ணிப் போற்றும் நிலையும் உருவாகும். சேவை செய்யாது உலகில் பிறந்து வாழ்ந்து மடிவது மானிடப் பிறவியைப் பயனற்றதாகச் செய்யும். நம அறிவு சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்கையில் ஞானமாக மிளிர்ந்து பக்தியாக வளர்கிறது. அவ்வளர்ச்சி நம் பிறவியைப் பயனுள்ளதாக்கி பிறவியில்லாப் பெருவாழ்வடைய வழிவகுக்கும். பிறருக்குதவ நம்மிடம் அளவுக்கு மிஞ்சிய பொருள் இருக்க வேண்டுமென்பது அவசியமல்ல. நமது தேவைக்கென வைத்திருக்கும் பொருளையும் நம்மைக் காட்டிலும் அதிகத் துன்பத்துக்காளானோருக்காக ஈவது பெருமை சேர்ப்பதாகும். 



திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?
முடிவேது முடிவேது முடிந்த பின் உலகம் நமக்கேது
முடிந்ததை நினைத்தால் பயனேது?

ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
திருமணமாகி ஒரு மனமாகும்
பெண்மனம் தாய்மையை தினம் தேடும்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது

பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
வளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்
ஒரு பிடி சாம்பலில் முடிவானார்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
முடிந்ததை நினைத்தால் பயனேது