திங்கள், 4 ஜனவரி, 2016

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

தினம் ஒரு பாடல் - ஆகஸ்டு 15, 2014

ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது. அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம். 

இளம் வயதில் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியில் மனதைச் செலுத்தித் தேராமல் போவோரும் போதிய அளவு மதிப்பெண்களைப் பெறாதவரும் அதன் பின்னர் வேலை கிடைக்காமலும் தம் வயதையொத்த நண்பர்களை விடக் குறைவான ஊதியத்திற்கு இரண்டாம் தர, மூன்றாம் தர நிறுவனங்களில் வேலை செய்ய நேர்ந்தும் அல்லல் பட்டு வாழ்வில் முன்னேற இயலாமல் கீழ்நிலையிலேயே கிடந்து வாடுவர். 

தன் மனதிற்குப் பிடித்த ஒருவர் மேல் காதல் கொண்டவர் உரிய காலத்திற்குள் தன் காதலைத் தன் மனதிற்குப் பிடித்தவரிடம் தெரிவிக்காமல் போனால் அவரது காதல் தோல்வியில் முடிவதும் நிச்சயம். இதற்கெல்லாம் காரணம் அவரது மனம் அவரது 
கட்டுப்பாட்டில் இல்லாதிருத்தலே ஆகும்.

"மந்திரம் கால் மதி முக்கால்" என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருளாவது எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற மந்திரம் அதாவது மனதின் திறம் கால் பங்கும் மதி அதாவது அறிவு முக்கால் பங்கும் காரணமாகின்றன என்பதேயாம். 

யோகம் பயிலுகையில் முதலில் உடற்பயிற்சியும், அதன் பின்னர் சுவாசப் பயிற்சியும் செய்வித்து இறுதியில் மனப் பயிற்சியைக் கற்பிக்கிறார் ஒரு யோகா ஆசிரியர். உடல் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் மனதைப் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க மிகவும் அவசியமாகின்றன. மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மனப் பயிற்சி செய்கையில் மனதில் திறன் கூடுகிறது. கட்டுப்படா மனத்தைப் பயிற்சி செய்விக்க இயலாது. 

ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்கவென்று பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கப் படும் நேரத்தைத் தவற விட்டாலோ, கல்வி பயிலுகையில் ஆசிரியர் சொல்லித் தருவதை கவனியாமல் இருந்தாலோ அவன் கல்வியில் திறமை பெற இயலாது. அது போலவே யோகம் பயிலும் மாணவனும் மனதை முதலில் கட்டுப்படுத்தத் தவறிடின் யோகம் கைகூடாது. அனைத்திற்கும் மேலாக மனம் ஐம்புலன்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு இன்பநாட்டம் அதிகரிக்கையில் ஒருவர் எவ்விதப் பாபச் செயலையும் செய்யத் தயங்காத தன்மையை அடைவர். 

அது அவரை மனித நிலையிலிருந்து தாழ்த்தி மிருக நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும். ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள் யாவற்றையும் பிய்த்தெரிந்து தனக்கே உணவில்லாமல் ஆக்கி அழிவுப் பாதையில் செல்கிறதோ அதே போல் மனமும் ஒரு கட்டுப்பாடற்ற மனிதனை அழித்து விடுவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சமுதாயத்தையும் அழித்து விடும் அபாயகரமான தன்மையடைகிறது. 

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் பசியும் பஞ்சமும், நோயும், ஏமாற்றும், கொலைகளும் கொள்ளைகளும், பெண்களைக் கொடுமைப் படுத்தும் கொடூரமும், பச்சிளம் குழந்தைகளைக் கற்பழித்துக் கொல்லும் படுபாதகங்களும் தொடர்ந்து நடைபெற்று சமுதாயம் அமைதியற்று விளங்கக் காரணம் மக்களின் மனங்கள் கட்டுப்பாடற்றுத் தவறான வழியில் ஆசைவயப்பட்டுச் செயல்படுவதனாலேயே ஆகும். மக்கள் என்றால் நாட்டின் குடிகளாக விளங்கும் பொதுமக்களும் ஆட்சிப் 
பொறுப்பில் இருக்கும் அதிகார வர்க்க மக்களும் சேர்த்தே கொள்ள வேண்டும்.



திரைப்படம்: மனம் ஒரு குரங்கு
இயற்றியவர்: வீ. சீதாராமன்
இசை: டி.பி. ராமச்சந்திரன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

தினம் ஒரு பாடல் - ஆகஸ்ட் 12, 2014
ஒரு ஆசிரியன் அல்லது ஆசிரியை தன் மாணாக்கர்களுக்கு வெறும் பள்ளிப் பாடத்தை மட்டும் போதித்தால் அது அவர்களது வாழ்க்கையை வளமாக்கப் போதாது. உடன் நல்லொழுக்கத்தையும், மனோதைரியத்தையும் போதிக்க வேண்டியது மிகவும் அவசியம். எவ்வளவு கல்வி பயின்று மிகவும் திறமைசாலிகளாக மாணவர்கள் வளர்ந்த போதிலும் தீமைகளை எதிர்த்துப் போராடும் துணிவு இல்லாவிடில் அவர்களது திறமை அனைத்தும் விழலுக்கிரைத்த நீரே போலாகும். தைரியம் பல வகைப்படும். உடல் வலிமையினால் வளரும் தைரியம் பல வீர விளையாட்டுக்கள், இராணுவம், மலையேறுதல், தீய சக்திகளை எதிர்த்து நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்தல் போன்ற செயல்களில் திறமை பெறப் பெரிதும் உதவியாக இருக்கும். 

மனோ பலத்தால் வளரும் தைரியம் எந்த ஒரு இடர் வந்த போதும், நோயினால் தாக்குண்ட போதும் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்ளத் தகுந்த துணிச்சலைத் தரும். நேர்மையினால் வளரும் தைரியம் பிறர் துன்பம் களைய நற்காரியங்களில் ஈடுபட்டு அநீதி இழைப்போரைத் தட்டிக்கேட்கும் பேராற்றலைத் தரும். அறிவினால் வரும் தைரியம் வியாபாரம், நிர்வாகம் உட்படப் பல துறைகளில் திறமை காட்டி வாழ்வில் மேன்மையடையவும், பொருளாதார ரீதியிலும் சமயோசித ரீதியிலும் பிறருக்குதவி செய்வதற்கும் பயன்படும்.

எத்துணை உடல் வலிமை இருப்பினும் மனோ தைரியமும் அறிவுடன் நேர்மையும் இல்லாவிடில் செய்யும் எந்த செயலும் முழுமை பெறாது, நன்மை பயக்காது. எனவே சிறு வயது முதலே ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிக் கல்வியுடன் சேர்த்து தைரியத்தையும், மனோ பலத்தையும், அறிவையும் வளர்க்கும் வாழ்க்கைக் கல்வியையும் அளிப்பதோடு போதிய உடற்பயிற்சி தந்து உடல் வலிமை பெறவும் உதவ வேண்டும். சில ஆண்டுகள் முன்பு (சுமார் 1980) வரை நம் நாட்டில் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்குப் போதிய இடம் இருந்தது. அத்துடன் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சமூக சேவை செய்யும் நோக்கத்துடன் பல தனவந்தர்களால் நடத்தப்பட்டன. 

அத்தகைய தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கம் பொருளுதவி செய்ததுடன் ஆசிரியர்களின் ஊதியத்தையும் வழங்கி வந்தது. ஆசிரியர்கள் திறமையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பதைக் கல்வி நிறுவனங்களும் அரசும் உறுதி செய்து வந்தன. 

அதன் பின்னர் அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் சரியாகப் பராமரிக்கப்படாமல் கல்வி தனியாருக்கு விற்கப்பட்டு வியாபார ரீதியில் அமையப் பெற்றதனால் முறையான கல்வி வழங்குவதற்கு மாறாக மாணவர்களின் பெற்றோர் தம் வருவாயில் பெரும் பகுதியை அவர்களது கல்விக்கெனச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அது மட்டுமின்றிப் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லாத நிலை ஏற்பட்டது. ஒருசிறு வீட்டிலும் ஒரு பள்ளி அல்லது கல்லூரி நடத்த அனுமதி வழங்கப் பட்டது. இதனால் பல விபத்துகள் நேர்ந்து எண்ணிறந்த குழந்தைகள் மாண்டு போன பின்னரும் கல்வி கவனிக்கப்படாமலே இருக்கிறது. இந்நிலை மாறும் வரை ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாது எனும் நிலையிலேயே கல்வி இருக்கும். தீமைகள் நாட்டில் மிகும். 

நல்லோர் துயர்க்குள்ளாவர். இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டும் ஏன் என்று கேட்க யாருக்கும் துணிவில்லாத துர் நிலையே தொடரும்.

இன்றைய பாடலில் ஒரு ஆசிரியை தன் குழந்தைப் பருவ மாணவனுக்கு தைரியமூட்ட ஒரு இனிமையான பாடலைப் பாடி அறிவு புகட்டுகிறாள். அக்குழந்தைச் சிறுவனும் ஆசிரியையின் பாடலை நன்கு மனதில் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க பதிலை புத்திக் கூர்மையுடன் சொல்கிறான்.



திரைப்படம்: கைதி கண்ணாயிரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, மாஸ்டர் ஸ்ரீதர்
ஆண்டு: 1959

ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் 

ஆஆஆ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும்புகழ் சேர்த்திடடா

பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்றப் புகழ் பெறுவேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரனாவேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்

கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிவிடு

வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ

பேசும் யாழே பெண் மானே

தினம் ஒரு பாடல், ஆகஸ்டு 8, 2014

குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்று குழல், யாழ் ஆகிய இன்னிசைக் கருவிகளின் இசை தன் குழந்தையின் மழலைக்கீடாகது என்று ஒரு படி குறைத்துச் சொன்னார் வள்ளுவர்.

மலரும் வான் நிலவும் சிந்தும் 
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும்
ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

என்று குழல், யாழ் ஆகியவற்றின் இசை இறைவனின் குரலின் பிம்பங்களே என உயர்த்திச் சொன்னான் கவி கண்ணதாசன்.

கலைஞர் கருணாநிதி யாழை ஒரு பெண்ணாக வர்ணித்து அவளது காதலன் அகமகிழ்ந்து அவளிடம் பாடுவதாக அமைத்து சிதம்பரம் ஜெயராமன் அவர்களது இசையில் ஏ.எம். ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடும் இப்ப்பாடல்எளிமையாக இருப்பினும் இனிமையாகவே உள்ளது. காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்தும் இப்பாடல்எம்.ஜி.ஆர். அவர்களும் அவரகளது துணைவியார் வி.என்.. ஜானகியும் இணைந்து பாடுவதாக 1953ஆம் ஆண்டு வெளிவந்த "நாம்" எனும் திரைப் படத்தில் இடம் பெறுகிறது.

யாழ் எப்படியிருக்கும்? அழகிய ஒரு மரச்சட்டம், அதில் சில கம்பிகள் மேலிருந்து கீழாக வரிசையில் இழுத்துக் கட்டியிருக்கும். இசைப்பவர் யாழின் ஒரு சட்டத்தை இடக்கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு சட்டத்தைத் தன் மார்பில் அணைத்து, வலக்கையால் கம்பிகளை இசைக்குத் தக்கபடி மீட்டுவர். "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" எனும் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். யாழ் மீட்டிப் பாடுவதாக அமைந்துள்ளது. 

பெண்ணை அணைக்கும் ஒரு காதலனுக்கு அவள் யாழைப் போல இனிய குரலையுடைய இசைக்கருவியாகத் தோன்றுவதில் வியப்பில்லை.! 

யாழிசை போல என் தமிழிசையைக் கேட்டு ரசிக்கும் தமிழ் நண்பர்கள் அனைவரது வாழ்வும் இனிமையானதாக அமைவதாக! இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அவரவர் இதயம் கவர்ந்த காதலர் அமைவதாக! இல்லறம் சிறக்க இன்பவாழ்வு வாழ்க என இளைஞர்கள் யாவரையும் என் உளமாற ஆசீர்வதிக்கிறேன்!


திரைப்படம்: நாம்
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: C.S. ஜெயராமன்
பாடியோர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி
ஆண்டு: 1953

ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

பேசும் யாழே பெண் மானே
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீதானே 
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
வானே தன்னை மறந்து 
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?

எழிலே தமிழ்க் காவியமே 
எழுதாத ஓவியமே 
எழிலே தமிழ்க் காவியமே 
எழுதாத ஓவியமே 

இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசிவீசி 
இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசிவீசி 

பேசும் யாழே பெண்மானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

யாழே நான் என்றால் நாதம் 
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே 
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே 
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே

காதல் வாழ்வே கனிரசமே
காதல் வாழ்வே கனிரசமே
மாதர் மறவர் உல்லாசமே 
காதல் வாழ்வே கனிரசமே