திங்கள், 30 நவம்பர், 2009

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
............
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
.............
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

எனும் மஹாகவி பாரதியாரின் பாடல் வரிகளில் கண்ட நெறியைப் பின்பற்றி நம்மிற்பலர் தாம் ஈட்டிய செல்வம் மற்றும் தமது நேரத்திலும் உழைப்பிலும் பெரும்பகுதியை சமுதாய நன்மைக்காகவே செலவிட்டு, சமூகத்தொண்டு செய்வது ஒன்றே தமது வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மனித உயிர்காக்கும் நல்ல நோக்கத்துடன் இரத்த தானம், கண் தானம், உடலுறுப்புகள் தானம் முதலான இயக்கங்களை ஏற்படுத்தித் தன்னுடன் பிற நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் பலரையும் ஒன்று சேர்ததுப் பாடுபடுகின்றனர்.

இத்தகைய தொண்டு செய்வோரைத் தலைவணங்கிப் போற்றுவோம். அதே சமயம் இத்தகைய அன்பர்கள் தமது நலத்தைத் தியாகம் செய்து பாமர மக்கள் நல்வாழ்வுக்கெனத் தொகுத்து அளிக்கும் தானங்களைப் பெற வேண்டிய சூழ்நிலையிலுள்ள மனிதர்களுக்கு, அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சை கிடைக்கப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆள்வோர் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கி, அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க ஆவன செய்யாது, தமது சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து செயல்படும் போக்கேயாகு்ம்.

இத்தகைய போக்கு மாறி அரசுகள் உண்மையிலேயே மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களால் நடத்தப் படும் சூழ்நிலை உருவாவது மிகவும் அவசியம். அத்தகைய நல்லாட்சி நாட்டில் நிலவுகையில் மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தொண்டு மென்மேலும் சிறந்து மனிதகுலம் மிகவும் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை.


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்


திரைப்படம்: கருப்புப் பணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்