செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

செந்தமிழ் நாடு செழித்திடவே

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

என மஹாகவி பாரதியார் வாழ்த்திய நம் செந்தமிழ் நாடு இன்று என்ன நிலையிலிருக்கிறது என எண்ணிப் பார்க்கையில் என் மனம் மிகவும் வேதனையுறுகிறது. காரணம் செந்தமிழ் நாடு செழிப்பாக விளங்கிய காலமொன்று இருந்தது அதனைப் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்கையில். கல்வி பட்டப் படிப்பு வரை முற்றிலும் இலவசமாக்கினார் காமராஜர். அதன் பின் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மேற்படிப்பு படிப்போருக்கு மாதா மாதம் உதவித்தொகையாக மிகவும் கணிசமான தொகை வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இருக்கவில்லை. அரசாங்கம் அநாவசியச் செலவுகள் செய்யவில்லை. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. விவசாயிகள் செழிப்பாக இருந்தனர். உணவுப் பொருட்கள் அனைவருக்கும் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன.

சிறு தொழில்கள் சிறப்புற நடந்தன. வறுமை அறவே இருக்கவில்லை. இந்தியனாய் இரு, இந்தியப் பொருட்களை வாங்கு என அந்நாளில் மஹாத்மா காந்தி வகுத்த கொள்கை கடைபிடிக்கப் பட்டது. வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிட்டியது. அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதி அடிப்படையில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்த காலம் அது. பேராசை இல்லாத நேர்மையான வணிகம் நடந்தது.

ஆற்று மணற்கொள்ளை அறவே இல்லை. சாராயம் இல்லை, சச்சரவுகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. அரசாங்கம் தன் கடமையைத் தவறாமல் செய்தது. அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் கடமை தவறாமல் மக்களுக்கு சேவை செய்தனர். ஆசிரியர்கள் மிகவும் அக்கரையாகப் பள்ளிகளில் கல்வி போதித்தார்கள். பெரும்பாலான கல்விக் கூடங்கள் தனியார் நடத்திய போதிலும் அரசு அவற்றுக்கு உதவியது. ஆசிரியர்களின் மாத சம்பளம் மற்றும் பராமரிப்புக்கென அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் கணிசமான தொகையை உதவியாக வழங்கியது.

ரேஷன் கடைகள் இருக்கவில்லை. அனைத்துப் பொருட்களும் வெளிச் சந்தையிலேயே நியாய விலையில் கிடைத்தன.  அரசு மருத்துவ மனைகள் மிகவும் சிறப்பாக இயங்கியதுடன் சகலருக்கும் இலவச மருத்துவ உதவியுடன் சத்தான உணவும் தினம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. என் இளைய சகோதரியை என் தாயார் 1963ஆம் வருடம் அரசு மருத்துவமனையிலேயே அன்று பெற்றெடுத்தார். தெருக்கள் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டன. வியாதிகள் அதிகம் இருக்கவில்லை. எனக்குச் சிறு காயங்கள் விளையாடுகையில் பட்டபோது சிறுவனான நானே அரசு மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றது இன்றும் என் மனதில் நீங்காமல் நிழலாடுகிறது.

1964ஆம் வருடம் நாம் 6ஆம் வகுப்பு பயில்கையில் எனது பள்ளிக் கட்டணம் ஆண்டு முழுவதற்குமாக ரூ 5/- அன்றுஒரு இட்டிலி விலை 3 நயா பைசாக்கள். அரிசி விலை 1 கிலோ 50 நயா பைசாக்கள். பொதுக் குழாய்களில் தண்ணீர் தவறாமல் வந்தது. ஊர் மக்கள் யாவரும் அதிலிருந்தே குடிதண்ணீர் பெற்றுச் சென்றனர். பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 50 நயா பைசாக்கள். அன்று அம்பாசடர் கார் விலை ரூ 20,000/- இன்று ஒரு மொபெட் கூட வாங்க முடியாது அவ்விலையில்.

இத்தகைய விலைவாசி உயர்வுக்குக் காரணம் ஊழல். ரூ 1 விலையுள்ள பொருட்கள் அரசாங்கத்தால் ரூ 100, ரூ 1000 என அதிக விலைக்கு மக்கள் பணத்தில் வாங்கப் படுகின்றன. செய்யாத வேலைகளை செய்ததாக எழுதி செலவுக்கான பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற அரசியல்வாதிகளும். தெருவில் நடக்கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது, காரணம் அடைப்பெடுக்கப்படாத சாக்கடைகள், அள்ளப்படாத குப்பை மேடுகள். சுகாதாரத்துக்கென அரசு ஒதுக்கும் பணம் முழுவதும் வெகு சிலரால் கபளீகரம் செய்யப்பட்டு. வீட்டின் முன்னுள்ள குப்பையை அள்ள வேண்டுமெனில் அதற்கு ஒவ்வொரு வீட்டாரும் தனியே லஞ்சம் தர வேண்டியுள்ளது.  பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்க்க ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணமாகவும் கட்டாய நன்கொடையாகவும் பள்ளிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. உடல் நிலை சரியில்லாமல் ஒருவர் மருத்துவமனையில் ஒரு நாள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறவே அவர் ஆயுள் முழுவதும் சேர்த்து வைத்த சேமிப்புத் தொகை செலவழிந்து விடுவதோடு மேலும் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை பூதாகரமாக மிரட்டுகிறது.

சிறு குறுந்தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு நாட்டின் தொழில்கள் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளது தடையில்லா மின்சார வசதிகளுடன் ஆனால் நம் மக்கள் அன்றாடம் மின்வெட்டால் மிகவும் அவதியுறுகின்றனர். குடிநீர் மாசுபட்டு பாட்டில்களில் கொள்ளை லாபத்துக்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கொகோகோலா, பெப்சி முதலிய குளிர் பான வகைகள் தயார் செய்யும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பெருமளவில் உறிஞ்சி சுற்று வட்டாரத்தில் விளைநிலங்கள் பாழ்படக் காரணமாவதுடன் நாட்டு மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் விஷப் பொருட்களைப் பானத்தில் கலந்து விற்பனை செய்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆலைக் கழிவு நீர் ஆற்றில் தாராளமாகக் கலக்க அனுமதிக்கின்றனர் லஞ்சம் வாங்கிக் கொண்டு.

அரசுத் துறை நிறுவனங்களில் லங்க ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒரு ரேஷன் கார்டு வாங்க வேண்டுமானாலும் அதற்குக் கையூட்டாகப் பெருந்தொகை தர வேண்டியுள்ளது. காவல் துறை மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் மக்களைச் சுரண்டி வன்முறை அரசியல் செய்யும் ஆட்சியாளர்களது ஏவல் துறையாகவே செயல்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி ஆண்டுகள் பலவான போதும் நீதி கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். சமுதாய சீர்கேடுகளையும் அரசுத் துறையின் அலட்சியப் போக்கையும் குறித்து யாரிடம் புகார் அளித்தும் பயனில்லா நிலை நிலவுகிறது.

இந்நிலை மாறி நம் செந்தமிழ் நாடு சுபிட்சம் பெற வேண்டும். அதற்கு என்ன செய்வதென்றே நமக்குத் தெரியவில்லை. காரணம் மக்களிடையே ஒற்றுமை இல்லை. சாதி மத ரீதியிலும் ஏழை, பணக்காரன் என்ற பேதத்தாலும் மக்கள் பிளவுபட்டு வலுவிழந்த நிலையில் உள்ளனர். அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் அநீதிகளை எதிர்த்துப் போராடினால் மட்டுமே தமிழ்நாடு பழைய சிறப்பை மீண்டும் அடைய வாய்ப்புள்ளது. இல்லையேல் அழிவு உறுதியே.


திரைப்படம்: மஸ் மாலினி
இசை: சலூரி ராஜேஸ்வர ராவ், பாரூர் எஸ். அனந்தராமன்
பாடியவர்: டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1947

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

தேனொடுபாலும் பெருக்கெடுத்தோடி
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி 
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
காதல் மணாளனை கருதியே நாடி
காதல் மணாளனை கருதியே நாடி
களித்துக் கூடியே பாடி ஆடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே