ஞாயிறு, 29 நவம்பர், 2009

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

உலகில் உயிர் வாழ்க்கையையே வியாபாரமாக்கிய மனிதர்களின் கொடுஞ்செயலால் இன்று பொருளாதார ஏற்றத் தாழ்வு உலகெங்கிலும் பெருமளவில் நிலைபெற்றுள்ளது. மனிதரில் ஒரு சாரார் தேவைக்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்து ஆடம்பர வாழ்க்கை நடத்துவதும், மற்றொரு சாரார் தினமும் வயிற்றுப் பசிக்கு உணவிடவே, "திண்டாடித் திண்ணைக் காலைப் பிடிக்கும் நிலையில்" திணறுவதும் அன்றாடம் நிகழும் பரிதாபகரமான நிலை உலகில் நிலவுகிறது. இருப்பினும் செல்வச் செழிப்போடு வாழ்பவர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனரா? வறுமையில் வாடுவோர் அனைவரும் மகிழ்ச்சி இன்றித் தவிக்கின்றனரா? எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

பெரும் செல்வந்தர்களில் பலர் தம் மனதுக்குப் பிடிக்காத சூழ்நிலையில் தங்கள் துன்பங்களை வெளியிடவும் முடியாத சங்கடமான மனநிலையில் வாழவேண்டிய கட்டாயத்தில் தவிப்பதும், கையில் சல்லிக்காசும் இல்லாமல் தவிப்பவர் பலர் அன்றாடம் கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்து, நிம்மதியாகத் தூங்கி, வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிப்பதும் நம் கண்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம்.

எத்தனைக் கோடிப் பணமிருந்தாலும் நிம்மதியை விலைககு வாங்க முடியுமா?


சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா


திரைப்படம்: முத்து மண்டபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்

சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா

இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆஆஆஆ

சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ