செவ்வாய், 26 ஜூலை, 2011

அப்பன் வீட்டு சொத்தைப் போல

6 ஏப்ரல் 2011

சொல்லுவது யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எனும் குறள் வழியே தன் வாழ்நாள் உள்ளளவும் உண்மை ஒன்றையே பேசி என்றும் தான் பிறருக்கும் கூறும் அறிவுரைகள் யாவற்றையும் முதற்கண் தான் கடைபிடித்து தன் வாழ்க்கையே பிறரது வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர் அண்ணல் காந்தியடிகள். சுமார் எண்ணூறு ஆண்டுகள் முகலாயர்கள் முகலாயர்களது ஆட்சியின் கீழும் அதன் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலும் இருந்த நம் நாட்டை அரும்பாடு பட்டுத் தம் இன்னுயிரையும் தியாகம் செய்து பல தன்னலமற்ற தேசபக்தர்கள் அண்ணல் காந்தியின் தலைமையில் மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது பாடுபட்டு விடுதலை பெறச் செய்த பின்னர் ஆட்சியை ஏற்று நடத்திவரும் இந்திய அரசியல்வாதிகள் ஆரும்பாடு பட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தினின்றும் விடுதலை பெற்ற நமது நாட்டை வெறும் அறுபது ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்கர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு விற்று மீண்டும் இந்தியாவை அடிமை நாடாக ஆக்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று கேள்வி எழுப்பிய மஹாகவி பாரதியார் அக்கேள்விக்கும் ஆம் எனும் பதில் கிடைத்ததினாலேயே இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் நாள் வரை உயிருடன் இல்லாமல் உயிர்நீத்தாரோ?

இத்தகைய இழிநிலைக்குக் காரணம் தேர்தல்கள் வருகையில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்ற உடன் வழங்கிய வாக்குறுதிகளைக் குப்பையில் போட்டுத் தம் சுயநலம் பேணும் அரசியல்வாதிகளே ஆவர்.

"படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்" என்று ஒரு எடக்கான பழமொழி உண்டு. தான் பிறருக்குக் கூறும் அறிவுரைகளைத் தானே கடைபிடியாத போலி வாழ்க்கை வாழும் புல்லர்கள் குறித்தே இப்பழமொழி அன்று முதல் இன்று வரையிலும் வழங்கி வருகிறது.

இதற்கு அடையாளமாவது தான் ஒரு தன்மானத் தமிழர் என்றும், நெஞ்சுக்கு நீதியை நிலைநிறுத்தியவர் என்றும் தமிழ்மொழியை உலக அளவில் தூக்கி நிறுத்தியவர் எனவும் பெருமை பீற்றிக் கொள்ளும் ஒருவர் திருக்குறளுக்கு எழுதி வைத்த விளக்கமும், அவர் வாழ்ந்த வாழ்க்கையும், நாட்டை ஆண்ட முறையுமே ஆகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

திரு மு.வரதராசனார் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

திரு மு.கருணாநிதி உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

திரு.பரிமேலழகர் உரை

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மத்திய அரசிலும் நடைபெறும் ஆட்சியின் அழகு அனைவரும் அறிவர். இந்த நாடு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவது உலகின் முதல் பொய்யாகும். ஏனெனில் இங்கே மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி நடக்கவில்லை. மக்களைப் பலவழிகளிலும் ஏமாற்றியும் மிரட்டியும் ஆசை காட்டித் தவறான வழிகளில் திசைதிருப்பியும் ஆட்சி பீடங்களில் அமரும் பிரதிநிதிகள் தங்களது குடும்பத்தாருக்காகவும் கூட்டாளிகளுக்காகவும் நடத்தும் கொள்ளை ஒன்றே இன்று நடைபெறுகிறது.

இந்நிலை நீடிக்க இன்னமும் அனுமதித்தால் நாடு ஒட்டுமொத்தமாக அந்நியருக்கு அடிமைப்பட்டு மக்கள் யாவரும் பட்டினிச் சாவை சந்திக்க நேரலாம் எனும் அபாயகரமான நிலை எய்திய இந்நாளில் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் பல் தேசபக்தர்கள் ஒன்று கூடி நம் நாட்டின் சுதந்திரத்தையும் நாட்டு மக்களையும் எவ்வாறாகிலும் காக்க வேண்டும் எனும் நோக்கில் ஒரு புதிய சுதந்திர யுத்தத்தை அண்ணல் காந்தி காட்டிய அஹிம்சை வழியில் துவந்தியுள்ளனர்.

இது குறித்த செய்தியாவது:

நேற்று வரை:

ஊழலுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை டுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக 90 வயதான காந்தியவாதிகள் எச்சரித்துள்ளனர்.

மகாத்மா காந்தியுடன் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்ற 93 வயதான ஷாம்பு தத்தா, முராரிலால் குப்தா (90), குமாரி தேவி (84), கோவிந்த் நாராயண் சேத் (78), கே.பி.சாஹூ (79) ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஷாம்பு தத்தா குறிப்பிடுகையில், "முன்பு வெள்ளையனை எதிர்த்து போராடினோம்; இப்போது ஊழல்வாதிகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்கள் உட்பட யார் தவறு செய்தாலும் தண்டிக்க வழி செய்யும் லோக்பால் கமிஷனை அமைக்க வேண்டும்.

முறைகேடாக சொத்து சேர்த்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. இந்த நாட்டுக்காக நாம் எதையும் செய்யவில்லை என்ற எண்ணத்தோடு நாங்கள் தூங்க விரும்பவில்லை. எனவே தான், சாலையில் இறங்கி போராட முடிவு செய்துள்ளோம். இம்மாத இறுதிக்குள் பிரதமர் மன்மோகன் சிங், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

குமாரி தேவி என்ற சுதந்திர போராட்ட வீராங்கனை குறிப்பிடுகையில், "நம் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் போதிய உணவில்லாமல் வாழும் நிலை உள்ளது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், ஊழல் மூலம் வளம் கொழித்து வருகின்றனர். சிரமப்பட்டு பெற்ற குழந்தை வளர்ந்த பின், தவறான பாதைக்கு செல்லும் போது பார்த்துக் கொண்டு தாய் சும்மா இருப்பாளா? அதேபோல தான், தற்போது நெறி தவறும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்' என்றார்.

புதுடெல்லியில் இன்று

சமூக ஆர்வலரான அனா ஹசாரே டெல்லியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிற ஹசாரே ஊழலை ஒடுக்கும் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றக் கோரி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொய்யான வாக்குறிதிகளை அள்ளிவீசி இலவசங்களை அளித்து ஆட்சியைப் பிடிக்கும் யாரும் இனிமேல் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறி சுயநலம் பேண இயலாத நிலையை நாட்டில் உருவாக்குவது நம் அனைவரது இன்றைய இன்றியமையாத கடமையாகும்.

இன்றைய அரசியல்வாதியின் நடத்தையை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

அப்பன் வீட்டு சொத்தைப் போல

திரைப்பட்ம்: தேசிய கீதம்
இயற்றியவர்: பழனி பாரதி
இசை: இளையராஜா
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே
துப்புக்கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுறியே
எக்குத் தப்பா கேள்வி கேட்க ஆளில்லேன்னு நெனைக்கிறியே
ரோடு போட ஒதுக்கி வச்சத வீட்டுக்குன்னு பதுக்குறியே
நாட்டு நெலை மறந்து ஒங்க பாட்டுக்குத்தான் அலையுறியே

நாய் படுற பாடு நம்ம நாடு படுது பாரு
ஓட்டுப் போட்டது ஊரு உங்களைத் தூக்கிப் போடுவதாரு?

ஐதர் அலி காலத்துலே போட்ட ரோடு மாறல்லையே
எத்தனையோ கட்டி வந்தும் எங்க கொறை தீரல்லையே
குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியல்லையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேக்க வழியில்லையே

குத்தங்குறை சொல்ல வந்தா ஏழையத்தான் தான் ஏசுறியே
மத்தபடி மந்திரி வந்தா தாரெடுத்து ஊத்திறியே
தூக்கிப் போடுது ரோடு அதை மாத்திப் போடுவதாரு
கர்ர்ப்பிணி பொண்ணுக பட்ட துன்பக் கணக்கெத் தீக்குது ரோடு

யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு

நகாவலி நாட்டிலே

வசதி படைத்தவர்களெல்லோரும் வரி ஏய்ப்பு செய்து வளமாக வாழ்ந்து வருகையில் அல்லும் பகலும் அயராது உழைத்து அரை வயிற்றுக் கஞ்சிக்கென சிறிதளவு வருவாய் ஈட்டும் அப்பாவி மக்களின் மேல் வரிச்சுமை மேலும் மேலும் அதிகமாகி அல்லலுறும் நிலை இன்று நம் நாட்டில் நிலவுகிறது. பல ஆண்டுகளாக சட்டரீதியான எந்த ஒரு தொழிலையும் செய்யாது, சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலுடனும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல சந்தர்ப்பங்களில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தீவிரவாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து கோடானு கோடிக் கணக்கில் நம் நாட்டில் பணத்தைச் சேர்த்து அந்நிய நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் சமூக விரோதி ஒருவன் நேற்றுவரை சுதந்திரமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் வராமல் திரிந்து வந்தான். இன்று நம் நாட்டில் சொற்ப அளவில் நீதியும் அவ்வப்போது செயல்படும் எனும் சிறு அடையாளமாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் அந்த சமூகவிரோதி மத்திய புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்படுகிறான்.

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்காக நாட்டு மக்களது வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களில் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கைகளில் முக்காலே மூணு வீசம் பெரும் பணக்காரர்களுக்குக் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட நிலையில் இருக்கும் சொற்ப இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற வேண்டி கால் கடுக்க வரிசையில் நின்றிருக்கும் பொதுமக்களுக்குப் போலீசாரைக் கொண்டு தடியடிகளே வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்குரிய நுழைவுச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப் படுகின்றன. இவ்வாறு கள்ளச் சந்தையில் நுழைவுச் சீட்டுகளைப் பெற்று விளையாட்டை வேடிக்கை பார்க்க வரும் பெரிய மனிதர்களுடன் ஒன்று சேர்ந்து இந்திய பாகிஸ்தானியப் பிரதமர்களும் விளையாட்டை வேடிக்கை பார்க்கப் போகின்றனர். என்னே ஜனநாயகம்?

இத்தகைய அநீதி கண்முன்னர் தங்களுக்கு இழைக்கப்பட்டும் நம் நாட்டு மக்களுக்கு அதீதமான தேசப்பற்று. அதன் அடையாளமாக நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. மஹாத்மாவும் காணாத ஒரு உயர்ந்த தேசபக்தி அல்லவா இது! தாங்கள் அன்றாடம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தைப் பல விதங்களில் வரிகளை விதித்தும் விலைவாசிகளை உயர்த்தியும் கள்ளப் பண கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிப்பதைப் பற்றி அக்கரை கொள்ளாமல் கிரிக்கெட் மோகத்தில் உழல்கின்றனர் இந்தியத் திருநாட்டின் உத்தம புத்திரர்கள்,

இந்தியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டு அதனை முறைகேடாக சீனாவுக்கு விற்றதுடன் தொடர்ந்து இந்தியாவுக்கெதிராகப் பல வழிகளிலும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதை விட இவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது பெரிதாகப் போய் விட்டது.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாமல் மக்கள் மேல் மின்வெட்டு தொட்ரந்து திணிக்கப்படுகையில், நோய்வாய்ப்பட்ட சமயம் தங்கள் வாழ்நாளில் சேமித்த தொகையனைத்தையும் செலவிட்டுப் பற்றாமையால் அக்கம் பக்கத்திலும் பல்வேறு நண்பர்கள் மூலமாகவும் கடனாகவும் பிச்சையாகவும் சேர்த்த பணத்தைக் கொண்டு சிகிச்சை பெற அரசு மருத்துவ மனைகள் எதுவும் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவ மனைகளை நாடி, பெரும் பொருட் செலவில் நோய் தீர வழிதேடிச் செல்லும் மக்களின் மேல் புதிதாக ஒரு வரியை இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாகப் பீற்றிக்கொள்ளும் இந்திய தேசியக் காங்கிரஸ் நடத்தும் மத்திய அரசு நூதனமான முறையில் கண்டறிந்து விதித்தது.

அதாவது காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் (ஏர் கண்டிஷனர்கள்) உபயோகப் படும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோர், சிகிச்சைக்காக செலுத்தும் கட்டணத்தில் 5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டுமென்று சொல்லும் இந்தச் சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் வாயிலாக விதிக்கப் பட்டது. காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் இன்றி எந்த ஒரு மருத்துவ மனையிலும் அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்ய இயலாது எனும் அனைவரும் அறிந்த உண்மையைப் பல அனுபவம் மிக்க மருத்துவர்களும் பொது நல அமைப்புகளும் செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து எடுத்துச் சொன்ன பின்னரே நம் நாட்டின் நிதியமைச்சருக்கு இந்த சிறு உண்மை விளங்கி அந்த அக்கிரம வரி பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. இவரெல்லாம் நிதியமைச்சராக இருப்பதை விட எங்காவது வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் ஒரு சேட்டு கடையில் கணக்கெழுதப் போகலாம்.

தற்சமயம் மத்தியிலும் நம் மாநிலத்திலும் நடைபெறுவது ஆட்சி என்று சொல்வதை விட கருப்புப் பணத்தின் பலத்தாலும் சமுதாய விரோதிகளின் செயல்பாடுகளாலும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவி அரியணையை அபகரித்துக் கொண்ட கொள்ளைக் கும்பலின் கோரத் தாண்டவம் என்று சொல்வது சாலப் பொருந்தும். இந்த நாடு அடையும் சீர்கேடுகளைக் காண்கையில் ஒரு வரலாற்றுக் கதையில் சொல்லப்பட்ட அரசாங்கத்தில் பெண்கள் அதிகாரம் செலுத்தும் நகாவலி நாட்டை விடவும் மோசமாக இருப்பது போல் தோன்றுகிறது.

நகாவலி நாட்டிலே

திரைப்படம்: குலேபகாவலி
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நகாவலி நாட்டிலே ஏ..ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.ஏ
பகாவலி ஆட்சியிலே ஏ...ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.
நியாயமாய் வாழவும் வழியுமில்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கனிவாகப் பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி இங்கு
தடுக்கி விழுந்த வரி குனிந்து நிமிர்ந்தவரி
இட்டிவரி சட்னி வரி பட்னி வரி இதுபோல்
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
ஆதரவில்லாத இல்லாத ஏழை மக்களும்
அடிமையாகினார் சூழ்ச்சியிலே
பொருத்தமே இல்லாத புதுப்புது வரிகளை
போடுவதெல்லாம் ஏதும் நியாயமில்லே
எதுத்துக் கேட்கவும் நாதியில்லே அவங்க
என்ன செய்தாலும் கேள்வியில்லே இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கு
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

வாழப் பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
இந்த நாட்டு வரி

சீர்மேவு குருபதம்

ஆதிகாலந்தொட்டே மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒருவர் தலைமை வகித்து அக்கூட்டத்தினர் அனைவரையும் வழிநடத்திச் செல்வது மரபாக இருந்தது. நாகரீகமடையாத நிலையில் தலைவனாயிருக்க ஒருவரது வலிமை ஒன்றே அடிப்படையாக இருந்த நிலை நாகரீகம் வளர வளர மாறி ஒரு தலைவன் வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் அறிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதியில் காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த மனிதர்கள் அதன் பின்னர் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியால் காடுகளில் ஒரு பகுதியை அழித்து நாடுகளை உருவாக்கி சமுதாயங்களாக மிருகங்களிடமிருந்து விலகி வாழத் தலைப்பட்டனர். ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக அமைக்கப்பெற்று அவனுக்குப் பின்னர் அவனது தலைமுறையினர் பாரம்பரிய முறையில் அரசர்களாக விளங்கும் வகையில் மனித சமுதாயம் வளர்ந்த நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் வீரத்தில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுப் போட்டிகளும் அறிவாளிகளைத் தேர்வு செய்யத் தர்க்கம் முதலிய பல்வித அறிவுப் போட்டிகளும் நடைபெறுவது நடைமுறை ஆனது.

அறிவுப் போட்டிகளில் பங்குபெறுவோரது சமுதாய நோக்கும் தனிமனிதக் கடமைகளும் குறித்த விழிப்புணர்வும் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய அறிவுப் போட்டிகளில் அரச குடும்பத்தினர் மட்டுமின்றி மத, சமூகநல அமைப்புகளில் முனைந்து ஈடுபட்டவர்களும், புலவர்களும் பங்கு பெற்றனர் என்பது பல புராண, இதிகாச சரித்திரக் கதைகள் மற்றும் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒற்றுமை உணர்வுடன் வாழ்வதும், உண்மையே பேசி, மூத்தோரை மதித்து, சக மனிதர் அனைவரிடமும் விலங்குகள் உட்பட ஏனைய பிற உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தி எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமான வாழ்வை மேற்கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும் தலையாய கடமையாக அன்று முதல் இன்று வரையிலும் கருதப்பட்டு வருகிறது.

வரலாற்றில் சொல்லப்பட்ட இத்தகைய அறிவுப்போட்டிகளும் அவற்றின் மூலம் விளங்கும் பலவித செய்திகளும் மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இத்தகைய அறிவுப் போட்டிகள் பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அமைக்கப்பெற்று அதன் மூலம் அவற்றைக் காணும் ரசிகர்களது அறிவையும் பண்பையும் வளர்க்கப் பயன்பட்டு வருகின்றன.

அத்தகைய அறிவுப் போட்டி ஒன்று புரட்சித் தலைகர் எம்ஜிஆர் அவர்களும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பங்குபெற்று நடித்த காட்சி ஒன்றில் அவ்விருவரும் தம் கேள்விகளையும் பதில்களையும் இனிய இசையுடன் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியாக சக்கரவர்த்தித் திருமகள் எனும் திரைப்படத்தில் படமாக்கப் பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் தன் சொந்தக் குரலில் பாட, எம்ஜிஆர் அவர்களுக்கு சீர்காழி கோவிந்த ராஜன் குரல் கொடுக்க மிகவும் கருத்தாழம் மிக்கதாகவும் எத்துணை முறைகள் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டும் விதத்திலும் இப்பாடல் அமைந்துள்ளது.

சீர்மேவு குருபதம்

திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
இயற்றியவர்: கிளௌன் சுந்தரம்
இடை: ஜி. ராமநாதன்
பாடியோர்: என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்

சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
தீரப் பிரதாபன் நானே

சங்கத்துப் புலவர் பல தங்கத்தோழா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார் இந்த
சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டு தாரார் நேரர்

ஈரெழுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்

யானையைப் பிடித்து
யானையைப் பிடித்து ஓரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா உம
தாரம்பக் கவி சொல்லுதே புலவா வீட்டுப்
பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்னப்
புறப்பட்ட கதை போலே அல்லவா தற்
புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா

ஆங்.. அப்புறம் ஓஹோ.. சர்தான்
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு
மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

ஹாய் கேள்விக்குப் பதிலக் கொண்டா டேப்பே
ஒடைச்செறிவேன் ரெண்டா ஒன்னே
ஜெயிச்சுக் காட்டுவேன் முண்டா அப்புறம்
பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

பதில்.. சொல்றேன்

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்

சொல்லிட்டான்! இரு

கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே? இப்போ
வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே

ஹஹங் ஹங் சர்தான் ம்

அன்ன சத்திரம் இருப்பதெதனாலே பல
திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே எப்படி? ஹங் ஹங்

பரதேசியாய்த் திரிவதெதனாலெ?
ஹங் அவன் பத்து வீட்டு ஆங் ஆஆங் சரி வேணாம்
அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்கே கவனி

காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சத்திலே

சொல்லிப் புட்டியே!

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
புகையும் நெருப்பும் இல்லாம அது எப்படி எரியும்?
நாஞ்சொல்லட்டுமா? சொல்லு
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

சர்தான் சர்தான் சர்தான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கத்தி இல்லே கோடாலி இல்லே
ஈட்டி ம்ஹ்ம் ஆங் கடப்பாரை இல்லே
அதுவும் இல்லையா? அப்புறம்.. பயங்கரமான ஆயுதம்
அக்கினி திராவகமோ? அது ஆயுதம் இல்லையே
சரி தெரியமாட்டேங்குதே அட நீயே சொல்லப்பா

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது ஆஹாஹா!
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது

நீங்க நல்லாயிருக்கோணும்

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தமிழ்த் திரையுலக நாயகர்களுள் முதலிடத்தைப் பெற்று, அதன் பின்னர் தன் வாழ்நாள் உள்ளளவும் அந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தான் ஈட்டிய பொருளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஏழை எளிய மக்களின் சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு மக்களின் மேல் மிகுந்த அக்கரை கொண்டு விளங்கியமையால் அவருக்கு "மக்கள் திலகம்" எனும் பட்டத்தை வழங்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன்.

வறியார்க்கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து

எனும் குறளின் வழி நின்று தன் வாழ்நாள் உள்ளளவும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்கிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். இவரது கருணை உள்ளம் கண்டு வியந்து திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு இட்ட பெயர் "பொன்மனச் செம்மல்" என்பதாகும்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1967ஆம் ஆண்டுவரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிரப் பிற கட்சிகள் 1967 வரையிலும் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து இருந்து வந்தன. வெற்றி எளிதில் கிடைத்து வந்த மமதையால் காங்கிரசார் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தத் தவறியதால் விலைவாசி உயர்வு மற்றும் சாலை வசதிகள் போன்ற பொதுப் பணிகள் நடைபெறாமை முதலிய குறைபாடுகள் மலிந்து வந்தன.

அந்த நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் சுதந்திரா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையில் இந்திய அரசியலில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஃபார்வார்டு பிளாக், சுதந்திரா கட்சி ஆகிய எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணியமைத்து 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியடைந்தனர். அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக மிகக்குறுகிய காலமே பதவிவகித்த பின்னர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார். அதன் பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி கட்சியிலும் ஆட்சியிலும் முறையான கணக்கு வழக்கு வைக்கத் தவறியதால் அவரிடம் கணக்குக் கேட்டார் எம்.ஜி.ஆர். இதனால் எம்ஜியார் உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினின்றும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் இருந்தவரையிலும் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை.

அறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று அனைவராலும் புகழப்பெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.முதலிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் பொருளாதார நிலையில் நலிந்த மக்களுக்குப் பேருதவி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிற அமைச்சர்கள் அனைவரும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்றும் நடக்கும்படியான ஒரு கட்டுப்பாடு இருந்ததால் குறிப்பிடத்தக்க பெரும் ஊழல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

இன்று தமிழகம் உள்ள நிலைமை நான் சொல்லாமலே அனைவரும் அறிவர். வேலியே பயிரை மேய்வது போல் மக்களைக் காப்பதாக மார்தட்டிப் பேசியே மக்களைச் சுரண்டி வாழும் மந்திரிகளும். காமராஜர் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளும் இலவசமாக இருந்த கல்வித்துறையைத் தனியாருக்கு விற்று அதன் பின்னர் கல்விக் கட்டணம் லட்சக்கணக்கில் உயர்ந்த நிலையில் தங்கள் பெயரிலும் தங்கள் பினாமி பெயரிலும் பொறியியற் கல்லூரிகளும் மருத்துவக்கல்லூரிகளும் ஏற்படுத்தி மக்களை மொட்டையடித்துப் பெரும் பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளும் தமிழகத்தையும் நம் பாரத நாட்டையும் ஆளும் இழிநிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் அன்று நடத்திய நல்லாட்சியை மீண்டும் தருவதாக அவரது வழித் தோன்றல்கள் வாக்குறிதி தருகின்றனர். எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் இதன் முன்னர் பலமுறை இந்த வழித் தோன்றல்கள் ஆட்சியில் இருந்தபோதிலும் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆயினும் இவர்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகள் இன்று ஆட்சியிலுள்ளோர் அடிக்கும் பகல் கொள்ளைக்கு முன்னர் ஒரு தூசளவேயாகும். நம் துரதிருஷ்டவசமாக இந்தியத் திருநாட்டின் சட்டதிட்டங்கள் முறையாக வகுக்கப்படாமல் நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வந்து தேர்தல்களில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்து நிலவுவதால் தற்பொழுது உள்ள அரசியல்வாதிகளில் யாரும் மிகவும் நேர்மையாளர் என்று சொல்ல இயலாது.

இருப்பினும் இருப்பவர்களில் குறைவான தீமையைத் தருபவர்களையே மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லை. எம்ஜிஆர் அவர்களை மனதில் நிறுத்தி அவரது வழித்தோன்றல்கள் இனியாகிலும் எம்ஜிஆர் அவர்களது வழியில் உண்மையாக நின்று மக்களுக்காக உழைக்க வேண்டுமென வேண்டி நம் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுவோம். தேர்தலில் தவறாது வாக்களிப்போம். தீயவர்களை அகற்றி நல்லவர்களை நாற்காலிகலில் அமர்த்துவோம். அவ்வாறு நல்லவர்கள் எனக் கருதி நாம் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்துபவர்கள் தவறு செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை தருவோம்.

நீங்க நல்லாயிருக்கோணும்

திரைப்படம்: இதயக்கனி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி
ஆண்டு: 1975

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற