புதன், 23 அக்டோபர், 2013

வில்லேந்தும் வீரரெல்லாம்

சூதாட்டமே எதற்கும் தீர்வு என்றாகிவிட்ட இன்றைய உலகில் கேடுகளுக்குப் பஞ்சமில்லை. ஜாதி மத பேதங்களையும், கருப்புப் பணத்தையும், அடியாட்கள் கூட்டத்தையும், சாராயத்தையும், இலவசங்களையும் பகடைக்காய்களாக உபயோகித்துப் பதவி வேட்டையாடுகின்றனர் அரசியல் வாதிகள். சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், வக்கீல்களின் வாதத்தையும், வாய்தாக்களையும், ஜாமீன்களையும், சாட்சிகளைக் கலைப்பதையும் பகடைக் காய்களாக உபயோகித்து நீதித்துறையை ஏமாற்றித் தங்கள் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர் சமூக விரோதிகள். இத்தகைய சூதாட்டத்தில் எந்த ஒருபிரச்சினைக்கும் தீர்வு காண பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கேற்ற பகடைக் காய்களாக உள்ளவை உண்ணா விரதம், சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு, பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் போன்றவையே. சமூகநீதி மறுக்கப்படுவதால் விளையும் அசம்பாவித்ங்கள் இவையாகும்.

இவை போன்ற முறைகேடான வழிகள் அவ்வப்போது தீர்வாக விளங்கினாலும் அவற்றின் பின் விளைவுகள் உரிய காலத்தில் கிடைத்தே தீரும் என்பது இயற்கை நியதி. "சூதும் வாதும் வேதனை செய்யும்" எனும் சான்றோர் வாக்கு பொய்த்ததில்லை.

முற்காலத்தில் அரசியலில் "பகடை" எனும் சூதாட்டம் பல சமயங்களில் அரசர்களிடையே நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் மஹாபாரதக் கதையிலும் நளன் சரித்திரத்திலும் உள்ளன. சூதாட்டத்தினால் நளனும், பாண்டவர்களும் அனுபவித்த மாபெரும் துன்பங்கள் மக்களுக்கு வழி காட்டும் என்பதற்காகவே பலராலும் பல சமயங்களிலும் எடுத்துரைக்கப் படுகின்றன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படமான "குலேபகாவலி" படத்தில் அவர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுவார்கள். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக்க வழி செய்வார். 

சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குனர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் ஸ்வாரஸ்யமான விதத்தில் இப்பாடல் காட்சிகளில் தொகுக்கப்பட்டுள்ளன.

வில்லேந்தும் வீரரெல்லாம்

இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பி. லீலா, திருச்சி லோகநாதன்

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே வீண்
அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே இந்த
ஜெகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளராதே இந்த
ஜெகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளராதே 
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
பன்னிரண்டு போட வேணும் பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும் பலித்தாலே ஜெயம் காணும்
ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு
சூராதி சூரனென்று சோம்பேறியாய்த் திரிந்தால் 
கட்டிடச்சொல்லு மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு

மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்
மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது

என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
என்ன வேணும் துரையே இஷ்டம் போலக் கேளினியே

அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு
அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு
எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு என்
எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு

வீணான ஆசையாலே வீழ்ச்சி பெற்ற மன்னவா
தானென்ற கர்வங்கொண்டு தலைவணங்கும் மன்னவா
தானென்ற கர்வங்கொண்டு தலைவணங்கும் மன்னவா

நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா
நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா நீ
நெல்லுகுத்தியாகணும் 
நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
கொள்ளவிச்சுப் போடனும்
நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
கொள்ளவிச்சுப் போடனும்

ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
தேரிஹி சலீங்கி நஹி ஹட்டு
ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
தேரிஹி சலீங்கி நஹி ஹட்டு
மைஃபில் மே சதுரங்கேல்னே ஆயா ஹூம்மை ஆயா
மைஃபில் மே சதுரங்கேல்னே ஆயா ஹூம்மை ஆயா
ஐசா ஹைதோ பைசா ஹைக்யா சதுரங்கேலோ ஆவோ ப்யாரீஹி
அரே வா வா வா
ஐசா ஹைதோ பைசா ஹைக்யா சதுரங்கேலோ ஆவோ ப்யாரீஹி 
ஓஹோஹோ ப்யாரி ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
ஆவோ ஆவோ மேரே ப்யாரே ஆவோ

பந்தமுள்ள சுந்தராங்கி பகட களிக்கான் வந்நு ஞான்
பகட களிக்கான் வந்நு
சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்தமாக்கான் போகுன்னு
சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்தமாக்கான் போகுன்னு

நாடு விட்டு நாடு வந்நு நசிச்சுப் போகாதே ராஜா
நாடு விட்டு நாடு வந்நு நசிச்சுப் போகாதே ராஜா
நஞ்ஞு போலுள்ள பகட களியில் நாட்டம் கொள்ளாதே ராஜா
நஞ்ஞு போலுள்ள பகட களியில் நாட்டம் கொள்ளாதே ராஜா
நாட்டம் கொள்ளாதே

நருநிதலபுல ஸ்ருஷ்டி நரசுதொடுண்டனா பணியேனியுண்டு சர்வேஸ்வருனகு 
தலநிஜும்பருகனி சர்வாகுடகு நீவு கானி சர்வங்குண ப்ரதுகுமையா

கொஞ்சும் மொழி மைந்தர்களே

நெடுநாட்களாக மழையின்றி வரண்ட சூழ்நிலை நிலவுவதாலும் வெயில் மிகவும் கடுமையாக வாட்டியதாலும் தொடர்ந்து கணிணி அருகில் அமர்ந்து பணி செய்ய இயலாத நிலையில் தடைப்பட்டிருந்த தினம் ஒரு பாடல் பதிவு ஒரு நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் தொடர்கிறது. 

மனிதர்களாகிய நாம் எவ்வளவு தான் முயன்றாலும் சில செயல்களை நம் விருப்பத்தின் படியே நிறைவேற்ற இயலாத சூழ்நிலைக் கைதிகளாக இவ்வுலகில் திகழ்கிறோம் எனும் அப்பழுக்கற்ற உண்மை இதிலிருந்து தெரிகிறது. வாழ்வது எதுவரை என்பதும் வாழ்நளில் சாதிப்பது யாது என்பதும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமபாவத்துடன் அனுபவித்து என்றும் மகிழ்ச்சியாக இருப்பது நம் கையிலேயே உள்ளது. வாழ்க்கையில் நமக்குத் தானாகக் கிட்டும் இன்பங்களை மனதார அனுபவித்து மகிழ வேண்டும். அம்மகிழ்ச்சியில் கடந்த காலத்தின் துன்ப நினைவுகளையும் எதிர்காலத்தை எதிர்கொள்வது குறித்த அச்சத்தையும் வெல்ல வேண்டும். அப்பொழுது நம்முள் எத்தகைய துயரங்களையும் தாங்கும் வலிமை வளரும்.

இயற்கை நம்மையும் படைத்து நாம் அருந்தி மகிழ அமுதொத்த நீரும், காய், கனி, கிழங்கும் தானியங்களும் தந்து அவற்றை விளைவிக்கும் ஆற்றலையும் அளித்து இன்பமாய் வாழ வழி செய்திருக்க நம்மில் பலர் இயற்கை வளங்களைத் தாமும் அனுபவியாது பிறரும் அனுபவிக்க விடாது வெறும் காகிதத்தாலான பணத்தை சேர்ப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் வீணாக்குகின்றனர். சாயுற பக்கமே சாயுற செம்மரி ஆடுகள் போல் இத்தகைய மாந்தர்களின் பகட்டைக் கண்டு அவர்கள் தம்மை விட அதிகமான இன்பங்களை அனுபவிப்பதாக எண்ணி நம்மில் பலர் தாங்களும் அவர்களைப் பின்பற்றி அழிவுப் பாதையில் செல்வது மடமை.

இவ்வுலகம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இங்கே அனைவருக்கும் அனைத்தும் உள. அவற்றை அறியாமல் எச்சிலைக்கு சண்டையிடும் தெரு நாய்கள் போல் மனிதர்கள் பொன் பொருளுக்காகத் தம்முள் வேற்றுமையை வளர்த்துக் கொண்டு சண்டையிடுவது தகாது.

உலகில் எத்தனையோ இன்பங்கள் கொட்டிக் கிடந்தாலும் அனைத்திற்கும் மேலாக அளவிடற்கரிய இன்பம் தருவது உறவுகளே. அவற்றிலும் குறிப்பாகப் பிள்ளைச் செல்வங்களே. பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறக்க, பேரப் பிள்ளைகளைப் பெற்று, தாத்தா பாட்டியாகும் அதிர்ஷ்டசாலி மக்கள் பிறர் யாவரைக் காட்டிலும் மிகவும் அதிகமான இன்பம் அடைவர் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவ்வாறு இறையருளால் வந்து வாய்க்கும் பிள்ளைச் செல்வங்களுக்கு இன்பமாய் வாழ வழி காட்டுவது நம் கடமை. 

அவர்கள் ஒருவரோடொருவர் அன்பு செலுத்தவும், என்றும் ஒற்றுமையுடன் இருக்கவும் உலகிலுள்ள ஜீவர்கள் யாவரையும் நேசித்து, பரோபகார சிந்தனையுடன் வாழ நாம் வழி காட்ட வேண்டும்.


திரைப்படம்: என் வீடு
இயற்றியவர்: 
இசை: வி. நாகைய்யா, ஏ. ராமராவ்
பாடியோர். டி.ஏ. மோதி, எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1953

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே
கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

ஜில்லெனவே மெல்ல மெல்ல வந்துலாவும் தென்றல் தன்னை
ஜில்லெனவே மெல்ல மெல்ல வந்துலாவும் தென்றல் தன்னைப் பாடுவீரே

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
பூங்காவாம் உன்தன் மனம் உள்ளன்பே தெய்வமனம்
இவ்வுண்மை நீ மறவேல்

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

பூலோகம் தனில் இங்கே சொர்க்கலோகம் அடைவாயே
புண்ணியத்தில் மானிடப் பிறப்படைந்த தென்குவையே
நெறி தவறி நீ வீழ்ந்தால்
நெறி தவறி நீ வீழ்ந்தால் பாழடைந்த துர்வாழ்வாய்
கை தவறிய கண்ணாடி
கை தவறிய கண்ணாடித் தூள் போலாம் பயனிலை வாடேல்
கொடிய பாதை நடவாதே மனதில் மகிழ்ச்சி கிடையாதே
இருள் சூழ்ந்திடும் வாழ்வு
அன்பிலார்க்கு இன்பம் இல்லை இவ்வுண்மை நீ மறவேல்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு

உலகில் மாந்தர்க்கும் ஏனைய பிற உயிரினங்கள் அனைத்திற்கும் வாழ்வில் மிகவும் இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்கும் செல்வம் பிள்ளைச் செல்வமே என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும். எனினும் மனித குலம் பிற உயிரினங்களனைத்தையும் விட மேம்பட்டதாக விளங்குவதால் அவர்கள் பெறும் மக்கள் பேருக்குப் பிள்ளைகளாக இராமல் அறிவுடையவர்களாகவும் அன்பும் கருணையும் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

எனும் வள்ளுவர் வாய்மொழி இதனை உறுதி செய்கின்றது.

மிருகண்டு எனும் முனிவரும் அவரது பத்தினியும் நீண்ட காலம் புத்திரப் பேறு கிட்டாமையல் இறைவனை மனமுருகி வேண்டினர். இறைவரும் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய அறிவிற் குறைந்த புத்திரன் வேண்டுமா அல்லது 16 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய அறிவிலும் பக்தியிலும் சிறந்து விளங்கும் புத்திரன் வேண்டுமா எனக்கேட்க அவர்கள் அறிவிற் சிறந்த பக்திமானாக விளங்கும் புத்திரனே வேண்டுமெனக் கேட்டு அதன் படியே மார்க்கண்டேயனை மகனாகப் பெற்றதாகவும், பின்னர் மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது நிறைந்த நிலையில் அவனது உயிரைக் கொண்டுபோக யமன் வந்ததாகவும், யமன் பாசக்கயிற்றை அவன் மீது வீசுகையில் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகத் தழுவி இறைவனை வேண்டவும் இறைவன் யமனைக் காலால் எட்டி உதைத்துப் பின் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதினனாக வாழ வரமருளியதாகவும் புராணம் கூறுகிறது. 

இதன் காரணமாகவே வள்ளலார் 

அருமருந்தொரு தனி மருந்து 
அம்பலத்தில் கண்டேனே

காலனைக் காலால் உதைத்த மருந்து
காமனைக் கண்ணால் எரித்த மருந்து
---------------------
மாணிக்கவாசகர் கண்ட மருந்து 

என்றொரு பாடலிக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலை என் தந்தையார் பல முறை சிவபூஜை செய்கையில் பாடக் கேட்டிருந்தும் மனனம் ஆகவில்லை. தற்போது அவர் இவ்வுலகில் இல்லை. இப்பாடல்இணையத்திலும் கிடைக்கவில்லை. தெரிந்தவர் யாரேனும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

"இல்லறமல்லது நல்லறமன்று" என்று ஔவையார் மொழிந்த நீதி தொன்றுதொட்டு நம் பாரத தேசத்தில் மக்கள் கடைபிடித்து வருவதாகும். முற்றும் துறந்த முனிவர்களும் இல்லறத்திலிருந்து கொண்டே தவத்தில் ஈடுபட்டதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நாத்திகர்களின் ஆதிக்கம் மேலோங்கியதால் முற்றும் துறந்த முனிவர்கள் திருமணம் செய்துகொள்வது தவறு என்பதான ஒருகோட்பாடு நடைமுறைக்கு வந்து அதன்படிப் பலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே துறவறம் மேற்கொண்டு வாழ்வதும் நிகழ்ந்தது. இத்தகைய துறவிகளில் பலர் தம்மை ஊராரின் கண்களுக்குத் துறவி போல் காண்பித்துக் கொண்டு திரை மறைவில் இல்லறவாசிகளுக்கும் கிட்டாத அளவில் சிற்றின்பங்களில் திளைத்து வாழ்வதும் பல சமயங்களில் அறியப்பட்ட செய்தியாகும்.

இத்தகைய துறவி எனும் போர்வையில் திரியும் ஆஷாடபூதிகளின் பின்னே செல்லாமல் மனிதர்கள் யாவரும் இல்லறத்தை நல்லறமாக்கி, அறிவுசான்ற புத்திரர்களைப் பெற்று அவர்கள் இவ்வுலகைக் காக்கும் கடமையை மேற்கொள்ளும் படி அவர்களை ஆளாக்கி உலகில் யாவரும் இன்பமாய் வாழ வழிகோலுவதே சிறப்பு. நாட்டில் எங்கும் லஞ்சமும் ஊழலும் பெருகி மனித நேயம் சிதைந்து போனதால் துன்புறும் கோடானு கோடி மக்களைக் காப்பாற்ற நாம் இளைய சமுதாயத்தையே நம்ப வேண்டும். அவர்களை அத்தகைய பணிக்குத் தயார் செய்ய வேண்டும்.



படம் : பிள்ளைக்கனியமுது
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
குரல் : சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
இசை : கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும் - நாம்
செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும் - நாம்
செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
நம் கனவும் நினைவாகி  நலம் தர வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

சீதாராம் சீதாராம்

இம்மாயா உலகிலே நாமனைவருமே பொய்யான வாழ்வே வாழ்கிறோம். சிலர் வாழ்நாள் முழுவதும் பொருள் சேர்ப்பதிலும் அவ்வாறு சேர்த்த பொருள் தரும் சுகங்களை அனுபவித்து மகிழ்வதிலும் செலவழித்து உலக நலன் கருதாமல் காணாமல் போகின்றனர். வேறு சிலர் உலக நலன் கருதியே பாடுபட்டு, தம் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்து, தம்மையும் தம் குடும்பத்தையும் காக்கத் தவறி இறுதியில் வருந்துகின்றனர். இன்னும் சிலர் உலகே மாயம் வாழ்வே மாயம் என்று கொண்டு தம்மைப் பெரும் ஞானியராக எண்ணி இவ்வுலக வாழ்வில் கிடைக்கும் பயன்களை அனுபவியாமல் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு மடிகின்றனர். இவர்கள் யாவரும் ஒரு விதத்தில் தம் மனதும் அறிவும் சரியென்று உணர்வதையே சரியெனக் கொண்டு வாழ்வதனால் ஏதேனும் ஒருவகையில் மனநிறைவு காணக்கூடும்.
 
மற்றொரு சாரார் பிறரை ஏமாற்றி வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்களுள் பலர், குறிப்பாக நம் அரசியல்வாதிகள் தாமும் தம் கட்சியும் மட்டுமே மக்கள் சேவையைப் பிரதானக் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் பிறர் யாவரும் மோசடிப் பேர்வழிகள் என்றும் மேடைகள் தோறும் முழங்குவர். தமது பிரசங்கத்தைக் கேட்க வரும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவர். தீர விசாரித்தால் இவர்கள் மேடையமைக்கவும், இலவசங்கள் வழங்கவும் செலவழிக்கும் பணத்தை இவர்கள் உழைத்து சம்பாதிக்கவில்லை, ஊழல்செய்து மக்களை ஏமாற்றி அவர்கள் வயிற்றில அடித்து சம்பாதித்தனர் என்பது தெரியவரும். ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவெனில்  நம் மக்களில் பெரும்பாலோர் உண்மையை நம்புவதில்லை. அதனால் திரும்பத் திரும்பப் பொய்யர்கள் கூற்றையே நம்பி ஏமாறுகின்றனர்.
 
வேறு சிலர் தம்மை முற்றும் துறந்த முனிவர்கள் போல் உரு மாற்றிக் கொண்டு மக்களுக்கு ஞான மார்க்கத்தைக் காட்டுவதாகக் கூறி அவர்களிடமிருந்து பொருள் பெற்றுத் தாம் செல்வந்தர்களாக வாழ்வதுடன் திரை மறைவில் சம்சாரிகளுக்கும் கிட்டாத சுகபோகத்தை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய போலிச் சாமியார்களது சுயரூபம் தெரிந்த பின்னரும் இவர்கள் பின்னால் சென்று ஞானம் தேடும் மக்களில் பெரு்ம்பாலோர் இவர்கள் உண்மையில் நல்லவர்கள், வீணாகப் பழிசுமத்தப் படுகிறார்கள் என நம்பி திரும்பவும் இவர்கள் பின்னால் தொடர்ந்து செல்வது பெரிய வேடிக்கை.
  
 
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
பாடியவர்: சாரங்கபாணி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
Year: 1955 - ஆண்டு: 1955
 
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்உள்ளே விகாரம் வெளியிலே பாரம்
உலகமெல்லாம் வீண் டம்பாச்சாரம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
தன்னலமில்லாத தலைவரென்பாராம்
தலையிலே மிளகாய் அரைச்சிடுவாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
உண்டியும் நிதியும் சேர்த்திடுவாராம்
கிண்டி ரேசிலே விட்டிடுவாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
பாண்டித்யம் பெற்ற சிங்கமென்பாராம்
பழைய ஒண்ணாங்கிளாஸ் படிச்சிருப்பாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
காரியம் சாதிக்கக் காக்கா பிடிப்பாராம்
காரியம் முடிஞ்சா டேக்கா கொடுப்பாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம்
கலிகாலம் வெறும் கிரகசாரம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் ஜெய சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்

நீதியே நீயும் இருக்கின்றாயா?

நாடே கெட்டு விட்டது. எங்கும் எதிலும் ஊழல், லஞ்சம் இன்றி ஒரு வேலையும் நடப்பதில்லை. எவரேனும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிடக் காவல் நிலையம் சென்றால் அவர் மீதே பல குற்றசசாட்டுகள் சுமத்தப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்படுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட எவரும் காவல் துறையை அணுக அஞ்சுகின்றனர். இத்தகைய நிலை தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமுதாயத்தில் நம்பிக்கை இழந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் துவங்குகின்றனர். இதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பலர் ஒன்றிணைந்து தீவிரவாத இயக்கங்களை உருவாக்குகின்றனர். நாளடைவில் இவ்வியக்கங்கள் நம் நாட்டின் மேல் பகை பாராட்டும் அந்நிய நாடுகளிலிருந்து தூண்டப்படும் பயங்கரவாதத்துக்கு் துணை போகின்றன. இத்தகைய தீவிரவாதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே மறைந்து வாழ்ந்துகொண்டு அருகிலிருக்கும் ஊர்களில் உள்ள அப்பாவி மக்களை இன்னலுக்குள்ளாக்குவதும், இவர்களிடம் ஏமாந்து மாட்டிக்கொள்ளும் காவல்துறையினர், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முதலானவர்களைப் பணயக் கைதிகளாக வைத்துத் தங்கள் மேல் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதும் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டு சிறையிலிருக்கும் தங்கள் குழுவினரை விடுவிப்பதும் இந்தியாவின் பல மாநிலங்களில் அன்றாடம் நடைபெறுவது மிகவும் கவலையளிக்கிறது.

இது வரையில் அரசியல்வாதிகள் யாரும் இத்தகைய தீவிரவாதிகள் கையில் சிக்காமல் தப்பி வந்துள்ளனர். ஆனால் இன்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தீவிரவாதிகள் கையில் பணயக் கைதியாக சிக்கியுள்ளார். இந்நிலை தொடருமாயின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்படுவது உறுதி. நாட்டில் அரசியல் விரைவில் முன்னேறும் எனும் நம்பிக்கையில் இதுகாறும் பொறுமைகாத்து வந்த பொது மக்கள் சமுதாய நலனுக்காகப் போராடுவதையே தம் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு பாடுபடும் அன்னா ஹசாரே போன்ற தலைவர்கள் தொடங்கி நடத்திவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம் நாட்டில் வலுவான மக்கள் குறை தீர்க்கும் சட்டங்களும் அவற்றை அமல்படுத்தத் தக்க அமைப்பையும் உருவாக்கக் கோரி வருகின்றனர். இருந்த போதிலும் முறையான வலுவான சட்டங்களை இயற்றவும் மத்திய புலனாய்வுத் துறையை சுதந்திரமாக்கவும் அரசியல்வாதிகள் முன்வராமல் அநீதியான நடைமுறைகளே தொடர்ந்து நிலவும் வகையில் பலவிதமான ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதுடன் மக்களூக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றனர்.

நீதி நிலைபெறுமா? குற்றவாளிகள் அரசாளும் நிலை மாறுமா? மக்கள் நல்வாழ்வு வாழ வழி பிறக்குமா? இவை போன்ற விடை தெரியாத கேள்விகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலவுகையில் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகள் மேலும் மேலும் அரசியல்வாதிகளின் முறைகேடுகளையும் பொதுமக்கள் பலர் படும் தீராத துன்பங்களையும் மட்டுமே பெரும்பாலும் வெளியிடும் சூழ்நிலையில் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியும், மின்தடையும், தொழில்கள் முடங்கும் நிலையும் இருப்பதால் இன்று நாட்டில் எங்கும் யாரும் அமைதியாக வாழ முடியவில்லை.

குற்றமற்ற அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் பதவிகளில் இருந்துகொண்டு அநீதிகள் புரிந்து வருவதும் நிரந்தர வாழ்க்கை நிலையாகிவிடுமோ எனும் அச்ச உணர்வு மக்கள் மனங்களில் எழுவதை யாரும் மறுக்க இயலாது. இது போன்ற சூழ்நிலை தற்காலத்தில் மட்டுமே நிலவுகிறதா? முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் யாவரும் நீதி தவறாது ஆண்டார்களா? மக்கள் யாவருக்கும் சம நீதி கிடைத்ததா? இவை போன்ற கேள்விகளுக்கு சரித்திரத்தில் விடைகாணலாம்.

உப்புத் தின்னவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அது போல் அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கும் அரசியல்வாதிகள் மனிதர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களிலிருந்து தப்பித்தாலும் நம் எல்லோரையும் படைத்தும் காத்தும் அழித்தும் உலகை நடத்தும் தெய்வத்தின் தீர்ப்பிலிருந்து என்றும் தப்பிக்க முடியாது. இதற்கு சரித்திரம் சான்று கூறுகிறது.


திரைப்படம்: பூம்புகார்
இயற்றியவர்: மாயவநாதன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
Year: - ஆண்டு: 1964 

நீதியே நீயும் இருக்கின்றாயா? இல்லை
நீயும் அந்தக் கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
அன்று கொல்லும் அரசின் ஆணை சென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
காலடித் தாமரை நோவது மறந்து காதலனோடு நடந்தாளே அந்தக்
காலனும் தொடர்ந்து நடந்ததையறிந்து கற்புக்கரசி துடித்தாளே
அடையாச் சொதவாய் இமையா விழியாய் ஆயிர யுகங்கள் பொறுத்தாளே இன்று
விளையா நிலத்தின் விதையாய்ப் போன வேதனையறிந்து துடித்தாளே
அன்று கொல்லும் அரசின் ஆணை சென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
வெயிலே இல்லாத காலத்திற் கிடைக்கின்ற வேதாற் பயனென்ன கெஞ்சி
வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி வந்தென்ன போயென்ன?
உயிரே போன பின் உடலென்னும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன?
செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன?
செய்தவன் கதியென்ன? இதை செய்தவன் கதியென்ன? 

ஏச்சுப் பிழைக்கும்

இவ்வுலக வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு முறை மட்டுமே. அதுவும் சொற்ப காலமே. இள வயதில் தமக்கு 100 ஆண்டுகள் ஆயுள் எனவும் அது மிகவும் நீண்ட காலம் எனவும் எண்ணி அந்த வயதில் தாம் செய்யத்தக்க கடமைகளை முறையாகச் செய்யாமல் பொழுது போக்கிவிட்டுப் பிற்காலத்தில் வருந்துவோர் பலருளர். அது மட்டுமன்றி நம்மிற் பலர் நம்மைக் காட்டிலும் பொருளாதாரத்தில் சிறந்து நாம் அடையாத வசதிகளுடன் வாழ்வதைக் கண்டு அவர்கள் மேல் பொறாமை கொள்வதுடன் நாமும் அவர்களைப் போல அல்லாது அவர்களைக் காட்டிலும் வசதி படைத்தவராக வேண்டுமெனும் பேராசையால் நேர்மையைக் கைவிட்டுக் குறுக்கு வழியில் செல்கின்றனர். இவ்வாறு குறுக்கு வழியில் செல்வந்தராகும் மனிதர்கள் என்றும் ஒரு குற்ற உணர்வுடனும், எங்கே மாட்டிக்கொள்வோமோ எனும் அச்ச உணர்வுடனும் வாழ நேரிடுவதால் வாழ்வை அவர்களால் முழு மகிழ்ச்சியோடு வாழ முடிவதில்லை. 

அதிகமாக உண்டவன் அஜீரணத்தால் அவதியுறுவது போல அளவுக்கு மீறிய செல்வத்தைச் சேர்த்தவன் மன அமைதியின்றி அல்லலுற நேரிடுகிறது.அத்தகைய செல்வத்தை அவன் நேர் வழியில் உழைத்துச் சேர்த்த போதிலும், எங்கே தன் பொருளை எவரேனும் களவாடுவரோ எனும் அச்சம் அவன் மனதில் நிலைபெறலாகும். அளவோடு பொருள் சேர்த்து அனைவரோடும் பகிர்ந்து உண்ணும் மனப் பக்குவம் உள்ளவன் வாழ்வில் பிறர் அனைவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியோடும் ஈடுபாட்டோடும் வாழ முடிகிறது. இதன் காரணம் அவனது மனதில் கவலை என்றும் வருவதில்லை. எந்த ஒரு இழப்பையும் அவன் மனம் ஏற்றுக்கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் தன்மை அவனிடம் இயல்பாக நிலைபெறுவதால அவன் மகிழ்சியாக வாழ்கிறான்.. 

இந்த உலக வாழ்வு அநித்தியம் எனும் உண்மையை உணர்ந்தோர் அழியும் பொருட்கள் மீது பற்றை அகற்றி அழியாப் பொருளான எங்கும் நிறைந்த பரம்பொருளை எண்ணி லேசான மனதுடன் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்கின்றனர். இத்தகைய ஞானிகள் இவ்வுலகிலேயே ஸ்வர்க்கத்தைக் கண்டு நித்திய சுகத்தை என்றும் அனுபவிக்கின்றனர். இதற்கு மாறாக சுயநல நோக்குடன் திருட்டும் புரட்டும் செய்து பலரது வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொண்டு வெறும் பகட்டான போலி வாழ்வை மேற்கொள்பவன் என்றும் எதிலும் திருப்த்தியடையா மன நிலையுடனே வாழ்ந்து மனக்குறையுடனே மடிகிறான். இத்தகையவர்க்கு இவ்வுலகமே நரகமாகிறது.

ஏச்சுப் பிழைக்கும்

திரைப்படம்: மதுரை வீரன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி
ஆண்டு: 1956

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
நல்லா நெனச்சுப் பாருங்க நல்லா நெனச்சுப் பாருங்க

தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் 
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்
தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் 
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க 

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் ஆஆஆஆஆ ஏஏஏஏஏ
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

சிரிப்பவர் சிலபேர்

இன்று இந்தியாவிலேயே மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் தமிழகம் என்று ஒரு பத்திரிகைச் செய்தி வெளிவந்துள்ளதெனக் கூறப்படுகிறது. இதை விடப் பெரிய கேலிக்கூத்து ஒன்றும் இருக்க முடியாது. தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு அமுலுக்கு வந்து மாநிலத்தின் பல தொழிற்சாலைகள் மின்சாரத் தட்டுபாட்டால் மூடப்படும் நிலைமை உருவாகி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் அபாயம் வந்துள்ளது. தானே புயலால் உருக்குலைந்து வாடும் கடலூர்ப் பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் வரலாறு காணாத வகையில் தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு மாநிலமெங்கும் அவரது உருவப் படங்கள் சுவரொட்டிகளிலும் வேறு பல இடங்களிலும் பெரும்பொருட் செலவில் அமைக்கப் பட்டு அவற்றிற்குக் காவல் துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தாம் பதவிக்கு வந்தால் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கப் போவதாக உறுதியளித்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்த பின்னர் மக்களுக்கு அளித்த வாக்கை முதல்வர் மறந்து விட்டார். தற்போதைய மின்வெட்டு மிகவும் கடுமையான விளைவுகளை தமிழ் நாட்டில் ஏற்படுத்தப் போகிறதென்பதில் சற்றும் ஐயமில்லை. இலவசமாக அரிசி கொடுத்து விட்டால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா? மக்கள் உழைத்து வாழ வழியின்றிச் செய்து அவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கு சமமன்றோ இது? மின் உற்பத்தியைத் தனியார் மயமாக்கிவிட்டதால் மாநில அரசுகள் அனல் மின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளிப்பதில்லை என்று மின்துறை அதிகாரிகள் சிலர் சொல்கிறார்கள். தனியாரிடமிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரத்திற்கு 5000 கோடி ரூபாய்களுக்கு மேல் பாக்கி வைத்திருப்பதால் அவர்கள் மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்கள். மக்களின் இக்கட்டான இச் சூழ்நிலையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கூடன்குளம் அணு மின் நிலையத்தை எவ்வாறாகிலும் துவக்கிவிடலாம் என்று தமிழக காங்கிரசார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடன்குளம் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீரக் கூடியதா என்ன?

மாநிலத்தில் இருக்கும் அனல் மின் நிலைய்ங்கள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. இலவச மின்சாரம் என்ற பெயரில் மின்சாரம் பெருமளவில் திருடப்படுகிறது. மின்சார வாரியம் மின் கட்டணங்களை முறையாக வசூலிப்பதும் இல்லை. மாநிலமே இருளில் மூழ்கியிருக்கையில் முதல்வர் ஸ்ரீரங்கத்து மக்களுக்கு மிக்சி, கிரைண்டர் பிச்சை போடும் விழா நடத்துகிறார். தமிழக அமைச்சர் பெருமக்கள் பலர் சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக முகாமிட்டுள்ளனராம். இவர்களில் ஒரு சிலராவது தானே புயலால் பாதிக்கப் பட்ட இடங்களுக்குச் சென்றார்களா?

உண்மையான மக்களாட்சி மலர்ந்து நாட்டில் மக்கள் குறைகளை முழுமனதுடன் தீர்க்க முயலும் தலைவர்கள் ஆட்சியில் அமரும் காலம் என்று வ்ருமோ அன்றே நாட்டில் மக்களின் ஏழ்மை நீங்க வழி பிறக்கும். அதுவரை ஒரு சிலர் பெரும்பொருள் சேர்த்துப் பலர் பட்டினியால் வாடும் நிலையே நிலவும். இன்று நம் நாடு இருக்கும் சூழ்நிலையை ஆராய்கையில் மிகவும் அச்சமாக உள்ளது. இன்னமும் மக்கள் முறைகேடான ஆட்சியினால் தம்மை நெருங்கிவரும் பெரும் ஆபத்தை உணராமல் இருக்கின்றனரோ என்று ஐயமாகவும் உள்ளது. நாட்டில் பெரும்பாலோர் பல்வேறு வகையிலும் துன்பமுற்று அழுகையில்ஒரு சிலர் மட்டும் சிரித்து மகிழ்கின்றனர். இந்த நிலை என்று மாறுமோ?

சிரிப்பவர் சிலபேர்

திரைப்படம்: சபாஷ் மாப்பிள்ளை
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1961

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா?
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

புரியாது புரியாது

கதைகளிலும், நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெரும்பாலோர் அதிகம் விரும்புவது மர்மங்கள் நிறைந்த படைப்புகளே. கதையின் அடுத்தடுத்த கட்டங்களும் முடிவும் என்னவாக இருக்குமென்று எளிதில் யூகிக்க இயலாத வகையில் புனையப் பட்ட கதைகள் பிற கதைகளைக் காட்டிலும் அதிக சுவாரஸ்யமளிக்கும் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பலவித சொல்லொணாத துயரும் துன்பமும் அடைந்து அவற்றிலிருந்து மீள்வார்களா மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் கருத்தை ஈர்க்கும் விதமாக இத்தகைய கதைகள் அமைகையில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அது போலவே நம் வாழ்விலும் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதும் நமது துன்பங்கள் நீங்கி இன்பம் விளையுமா என்பதும் கேள்விக்குறியாக விளங்கிடும் போதிலும் மனதில் உற்சாகம் ஏற்படும் விதத்தில் நாம் பல செயல்களில் தினம் ஈடுபட்டு வாழ்க்கையில் பெரும் துன்பங்களுக்கிடையிலும் தொடர்ந்து வாழ்வில் கிடைக்கும் இன்பங்களையும் அனுபவித்து நல்ல காலம் வரும் எனும் எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

முற்காலத்தில் நடந்ததையும் எதிர் காலத்தில் நடக்கக் கூடியதையும் முற்றிலும் உணர்ந்தவர்களாக நாம் கருதும் ஞானியர் வாழ்வை நாம் அனுபவிப்பது போல அவ்வளவு சுவாரஸ்யத்துடன் அனுபவிப்பார்களா என்பது கேள்விக் குறியே. காரணம் அவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் கிடையாது ஏமாற்றங்களும் கிடையாது. சாமான்யர்களான நாம் பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்கையில் நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகையில் மன மகிழ்ச்சி கொள்கிறோம், நிறைவேறாமல் போகையில் கவலை கொள்கிறோம். நம்மில் சிலர் ஏமாற்றத்தைத் தாங்காமல் அழுவதும் உண்டு. எவ்வாறாகிலும் அத்தகைய மன வருத்தமும் அழுகையும் கூட நமக்குப் பெரும் இன்பத்தைத் தருபவையே. அழுவதிலே இன்பம் கண்டேன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.

இருப்பினும் துன்பமும் தொல்லையும் எல்லை மீறுகையில் வாழ்வில் இன்பம் காண்பதரிது. இத்தகைய துன்பங்களையும் தொல்லைகளையும் ஒரு எல்லைக்குள் வைத்திருக்க நாம் செய்ய வேண்டியது யாதெனில் நமது ஆசைகளையும் உடைமைகளையும் கட்டுக்குள் வைப்பதே ஆகும். ரயிலிலோ, பெருந்துகளிலோ, ஆகாய விமானத்திலோ பயணம் மேற்கொள்ளும் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு தன்னுடன் எடுத்துச் செல்லும் பிற பொருட்களைக் குறைத்துக் கொள்கிறாரோ அவ்வளவுக்கு அவரது பயணம் இன்பகரமாக அமைவது போலவே வாழ்க்கை இன்பகரமாக இருக்க நமது தேவைகளையும் சுமைகளையும் குறைத்துக் கொள்வதே ஏற்ற வழியாகும். 

நம்மிடம் நம் தேவைக்கு மிஞ்சிப் பொருளிருக்குமாயின் அதனை ஏழை எளியோருக்கு தானம் செய்வதும், சமுதாய நன்மைக்குப் பயன்படுத்துவதும் நமது வாழ்வை மேலும் இன்பகரமாக ஆக்க்குவதுடன் நம்மை இந்த உலகிலுள்ளோர் மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் எண்ணிப் போற்றும் நிலையும் உருவாகும். சேவை செய்யாது உலகில் பிறந்து வாழ்ந்து மடிவது மானிடப் பிறவியைப் பயனற்றதாகச் செய்யும். நம அறிவு சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்கையில் ஞானமாக மிளிர்ந்து பக்தியாக வளர்கிறது. அவ்வளர்ச்சி நம் பிறவியைப் பயனுள்ளதாக்கி பிறவியில்லாப் பெருவாழ்வடைய வழிவகுக்கும். பிறருக்குதவ நம்மிடம் அளவுக்கு மிஞ்சிய பொருள் இருக்க வேண்டுமென்பது அவசியமல்ல. நமது தேவைக்கென வைத்திருக்கும் பொருளையும் நம்மைக் காட்டிலும் அதிகத் துன்பத்துக்காளானோருக்காக ஈவது பெருமை சேர்ப்பதாகும். 



திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?
முடிவேது முடிவேது முடிந்த பின் உலகம் நமக்கேது
முடிந்ததை நினைத்தால் பயனேது?

ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
திருமணமாகி ஒரு மனமாகும்
பெண்மனம் தாய்மையை தினம் தேடும்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது

பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
வளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்
ஒரு பிடி சாம்பலில் முடிவானார்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
முடிந்ததை நினைத்தால் பயனேது

திங்கள், 21 அக்டோபர், 2013

இன்னொருவர் வேதனை

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த வெள்ளையர்களை விரட்டவென்றே செந்தமிழ்க் கவிதைகளைப் பாடி பாரத தேசத்தவர்க்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி. அவர்களைக் குறித்து எழுதிய இரு பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அவற்றுள் முதலாவது கவிதை வெள்ளைக்கார கலெக்டர் வின்ச் துரை கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையைக் கண்டு மிரட்டுவதாக அமைகிறது. இரண்டாவது பாடல் வ.வு.சி. அதற்களித்த பதிலாக அமைகிறது.

வெள்ளைக்கார வின்ச் துரை கூற்று:

நாட்டிலெங்கும் சுவதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்;
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன்

கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய் எமைத் தூஷித்தாய்
ஓட்டம் நாங்களெடுக்க வென்றே கப்பல
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்.

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்பட்டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய் வீரம் பேசினாய்.

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய் ஆசை ஊட்டினாய்.

தொண்டொன்றே தொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள
காட்டினாய் சோர்வை ஓட்டினாய்.

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ நீங்கள் உய்யவோ?

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் குத்திக் கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் பழி கொள்ளுவேன்.

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி:

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ மானமோ?

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இது
நீதமோ? - பிடி வாதமோ?

பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் செற்றமோ?

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம் - நன்கு தேர்ந்திட்டோ ம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவுறோம்; - சித்தம் கலைவுறோம்.

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?

இப்பாடல்களில் உள்ள கருத்துக்கள் இன்றும் நம் நாட்டுக்குப் பொருந்தும் நிலையிலேயே நாடு உள்ளது. பேருக்கு சுதந்திரம் வந்தாலும் உண்மை சுதந்திரம் வரவில்லை. இன்று நம் நாடு இருக்கும் நிலைமை ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இருந்ததை விடவும் மிகவும் கேவலமாக உள்ளது. இதற்குக் காரனம் சுயநல அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கம் நமது நாட்டை மீண்டும் அந்நியருக்கே விற்று வருவதே ஆகும். ஒவ்வொன்றாக நாட்டின் பெரும் தொழில்கள் யாவும் அந்நியர் வசம் போய்க்கொண்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் சில்லரை வணிகத்தை விலை பேசச் செய்த சதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பினால் தள்ளிப் போடப் பட்டுள்ளது ஆனால் சமயம் பார்த்து அதை நிறைவேற்றும் கபட எண்ணம் இன்றைய இந்திய அரசிடம் உள்ளது. இந்நிலையில் தற்போது சர்க்கரை ஆலைத் தொழிலை அந்நியருக்குத் திறந்துவிட சதி நடந்து வருகின்றது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் நகரத்தில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 26 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அந்நிறுவனத்தின் தலைவரான ஆண்டர்சன் என்பவரை சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தாமல் திருட்டுத்தனாக அன்றைய மாநில முதல்வர் அர்ஜுன் சிங் டெல்லியில் அப்போது ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசுடன் சேர்ந்து சதி செய்து அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பி விட்ட பின்னர். அவ்விபத்தில் இறந்தவர்களுக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இன்றுவரையிலும் தொடர்ந்து வறுமையிலும் நோய்களாலும் துயருறும் மக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் படவில்லை. இடையே விஷவாயு விபத்தில் பாதிக்கப் பட்ட பலர் தம்மையறியாமலேயே ஒருசில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய மருந்துகளை உருவாக்கக் கையாளும் மருத்துவ சோதனைகளில் பன்றிகளைப் போலப் பயன்படுத்தப் பட்டுள்ளனர்.

இது நாள் வரை விபத்தால் பாதிக்கப் பட்ட ஊரின் பல பகுதிகள் சீரமைக்கப் படாமல் விஷவாயுவின் தாக்கம் காரணமாக சிதிலமுற்ற நிலையிலேயே தொடர்ந்து இருக்கின்றன. யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து இதன் பின்னர் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டவ் கெமிகல்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம் சட்டப்படி விபத்தினால் பாதிக்கப் பட்ட நிலப்பரப்பை சீராக்க வேண்டும் அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவற்றில் ஏதொன்றையும் அந்நிறுவனம் இதுவரை செய்யாதிருக்கும் நிலையில் இவ்வாண்டு லண்டன் மாநகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை வழங்குவோராக உள்ளதற்கு இந்தியா மற்றும் லண்டன் மாநகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்திய அரசும் இங்கிலாந்து அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கடிதங்களை எழுதிவிட்டுத் தம் கடமை முடிந்தது எனக் கைவிரித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தியில் நிறுத்தியுள்ளனர்.

மக்கள் படும் துயர் கண்டு சிறிதும் இரங்காமல் தம் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தும் கொடியவர்கள் இருக்கும் வரை நம் நாட்டில் மக்கள் நலமாய் வாழ முடியாது. இவ்வீணர்கள் பிறர் துன்பத்திலே இன்பம் காணும் இரக்கமற்ற அரக்கர்களே ஆவர்.

இவர்களது கொடுமைகளை அகற்ற இன்னும் ஒரு சுதந்திரப் போரை மக்கள் நடத்தியாக வேண்டும்.


திரைப்படம்; ஆசை முகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன்

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார் 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

உருண்டோடும் நாளில்

இளம் வயதில் யாவருக்கும் இருக்கும் நோக்கம் இவ்வுலக வாழ்வில் தாம் தேடத்தக்க பொருள் குறித்தும் வசதியாக வாழ்வது குறித்துமே பெரும்பாலும் அமைவது இயல்பு. வளர்ந்து பெரியவர்களாகி, புத்திரப்பேறு அடைந்து அப்புத்திரர்களை வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்குத் தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் பலர் தம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணி மீதமிருக்கும் வாழ்நாட்களை வீணாக்கி ஓய்வெடுத்து மகிழ்வதொன்றையே குறிக்கோளாகக் கொள்கின்றனர். இவர்களது வாழ்வின் நோக்கங்கள் யாவும் இவ்வுலக வாழ்க்கையுடன் முடிந்து போகின்றன. தான் யார் என்பதையோ, தாம் பிறந்த நோக்கம் என்ன என்பதையோ இவர்கள் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. சுயநல இருள் சூழ்ந்த இவர்களது வாழ்க்கை யாருக்கும் எவ்விதப் பயனையும் தருவதில்லை. இவ்வுலகுக்கு இத்தகையோர் பாரமாகவே விளங்குகின்றனர்.

இதற்கு மாறாகச் சிலர் தம் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் சமுதாயத்தில் உள்ள பிறரைப் பற்றியும் அக்கரை கொண்டு சேவை புரியும் நோக்கம் கொண்டு மீதமுள்ள தமது வாழ்நாட்களைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பொதுநல நோக்கர்கள் பிறரிலும் மேலான நிலையை எய்திப் புகழ் பெறுகின்றனர். அவர்களது வாழ்க்கை ஒளிமயமாக அமைகிறது. அவ்வொளியில் இவ்வுலகம் பயன் பெறுகிறது.

இவ்விரு பாதைகளில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் யாரென்பது நமக்கும் இவ்வுலகுக்கும் தெரியலாகும். மரணத்தை நோக்கிய மனித வாழ்வில் தாம் இருந்த சுவடே தெரியாமல் இந்த உலகிலிருந்து மறைந்து காணாமல் போவது சரியா? அல்லது உலகம் போற்றும் பொதுநலப் பாதையில் வாழ்வை அமைத்துக்கொண்டு இறந்த பின்னும் தனது பெயர் இவ்வுலகிலுள்ளோர் பலராலும் என்றும் எண்ணிப் போற்றத்தக்கதாக விளங்கும் வண்ணம் வாழ்வது சரியா?

இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வது நம் ஒவ்வொருவரின் விருப்பமே ஆகும். காலம் பொன்னானது. அதை எவ்வாறு செலவிடுவது என்பதை நாமே நிர்ணயிக்கிறோம். நமது நிர்ணயம் வாழ்வை ஒளிபொருந்தியதாக அமைப்பதும் இருள் சூழ்ந்ததாக அமைப்பதும் நம் விருப்பமே. The ball is in our court!

உருண்டோடும் நாளில்

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்:பி. சுசீலா
ஆண்டு: 1961

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
இது போதுமா இன்னும் வேண்டுமா? ஒய் ஒய் ஒய்

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

திரும்பாத போதும் விருந்தாக மேவும்
திரும்பாத போதும் விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா விஷம் வேண்டுமா? ஹஹஹஹ

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

ஒரு பெண்புறா

உறவுகளே உலக வாழ்வில் உயிர்களை இணைக்கும் பாலம். உறவுகளே பிறவியெனும் பெருங்கடலைக் கடக்க உதவும் தோணி, ஏனெனில் உறவுகளிலே உறைகிறான் இறைவன். நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஒருவரோடொருவர் உறவு கொண்டுள்ளோம், அத்துடன் அண்ட சராசரத்தின் ஒவ்வொரு அணுவினோடும் நாம் யாவரும் உறவுகொண்டுள்ளோம். உலகை உயிர்கள் நேசிப்பதாலேயே வாழ்க்கை இந்த உலகில் நிலைபெற்றிருக்கிறது. கருவினுள்ளே உருவாகும் உயிர் உருவம் கொண்டு வளர்ந்து கருவுறுவதால் இவ்வுலகில் ஒவ்வொரு உயிரின் பரம்பரையும் தொடர்கிறது. உறவின் அடிப்படையே அன்பு. பரஸ்பர அன்பு நிலைபெற்று வளர்வதால் உறவு வலுப்படுகிறது. உலக வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் பலனாக சில சமயம் உறவுகளுக்குள்ளே பிணக்கு ஏற்படுவது இயல்பே. அப்பிணக்குத் தீர உரிய முயற்சிகளை ஆரம்ப நிலையிலே மேற்கொள்கையில் பிணக்கு வளராமல் தடுக்கப்பட்டு உறவு முறியாமல் காக்கப்படுகிறது.  உறவினர்களோ நண்பர்களோஒருவரோடொருவர் எக்காரணம் கொண்டும் பிணங்குகையில் அதன் காரணம் யாதென சிந்தித்து பரஸ்பரம் விட்டுக்கொடுத்து உறவு தொடர்ந்திடுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டால் பிணக்கு தீர்க்கப்படும்.

பிணக்கு உரிய காலத்தில் தீர்க்கப் படாமல் ஒருவரோடொருவர் போட்டி போட்டு இருவரில் யார் பெரியவர் என்று நிரூபிக்கும் வகையில் தொடர்கையில் அது பெரும் பகையாக உருவெடுக்கிறது. அத்தகைய பகை நம்மை மட்டுமின்றி நம் வம்சத்தவரையும் பாதிக்கக்கூடும் என்பதை நாம் உணர்வோமினில் யாரிடமும் பகைமை பாராட்டுவதை விடுத்து நல்லுறவை வளர்க்கும் விதமாக நாம் நடந்து கொள்வோம். நமக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதைப்பெரிது படுத்தாது சமரசப் பாதையில் செல்வோமெனில் சமாதானம் நிலைபெறுகிறது.

எதிர்பாராத விதமாக உறவுகளிடையே பகைமை மூண்டாலும் அத்தகைய பகை நம் வாரிசுகளை பாதிக்காத வகையில் நம் செயல்பாடு இருத்தல் நலம். நமது பகையை நம் பிள்ளைகளின் மேல் சுமத்துதல் நியாயமன்று. ஒருவரோடொருவர் மிகுந்த அன்புகொண்டு விளங்கிய இரு நண்பர்களுக்கிடையே சில சுயநலவாதிகளால் பகை ஏற்பட்டு, போட்டியாக வளர்ந்த நிலையில் அவ்விருவரில் ஒருவரது மகள் இன்னொருவரது மகனை நேசிக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனை அறிந்து அப்பெண்ணின் தந்தை தன் மகளைக் கண்டிக்கிறான். மகள் தந்தை சொல்வதை ஏற்காமல் தன் காதலை வலியுறுத்துகிறாள். தன் மகளை மிகவும் பிரியத்துடன் வளர்த்து வரும் தந்தை கோபம் கொண்டு முதன்முறையாக அவளைக் கைநீட்டி அடித்துவிடுகிறான். தன்னிடம் அடி வாங்கிய பெண் மனம் குமுறி அழுவதைக் கண்டு அவனது மனம் பொறுக்கவில்லை.

தன் மனதில் எழும் பெரும் துயரை அத்தந்தை வெளியிடுவதாக அமைந்த இப்பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குஷ்புவுடனும் சரத் பாபுவுடனும் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெறுகிறது.

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட

திரைப்படம்: அண்ணாமலை
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் 
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்தக் காலமே
மெத்தை விரித்தும் சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலம்
என் தேவனே தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா?
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தக் கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி

ஆண் பிள்ளையோ சாகும் வரை 
பெண் பிள்ளையோ போகும் வரை
விழியிரண்டும் காயும் வரை
அழுது விட்டேன் ஆன வரை

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

இது நாட்டைக் காக்கும் கை

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் 
பண்ணி மலைகளென வீதி குவிப்போம் 
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார் 
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் 

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் 
ஒயுதல்செய் யோம் தலை சாயுதல் செய்யோம் 
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். 

குடைகள்செய் வோம் உழு படைகள் செய்வோம் 
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் 
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் 
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் 

என்று இந்திய நாட்டில் பல்தொழில் பெருகி வளர வேண்டிக் கனவு கண்ட பாரதி அக்கனவினை நனவாக்க வல்ல தொழிலளர்களை வாழ்த்தி,

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் நுமக்கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே! 

மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனை செய்குவீரே!
உண்ணக் காய்கனி தந்திடுவீரே!
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடுவீரே!
இழையை நாற்றுநல் லாடை செய்வீரே!
விண்ணினின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 

என்றும் பாடினார். 

நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்து தன் குடும்ப நலனையும் இரண்டாம் பட்சமாகக் கருதிய அம்மஹாகவி பாரத நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுமுன்னரே இவ்வுலகை விட்டுச் சென்றதாலோ என்னவோ நம் நாடு சுதந்திரம் பெற்றதாகப் பொய்யானதொரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை மயக்கத்தில் வீழ்த்திய பின் சிறிது சிறிதாக நமது நாட்டை அந்நியருக்கே விற்று வருகின்றனர். இன்று நம் நாட்டை ஆள்வோர். நம் நாட்டினர் முதலீடு செய்து நடத்திப் பயன் பெற வேண்டிய தொழில்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. விளைவு! இன்று நம் நாட்டிலேயே அந்நிய நாட்டவர் தொழிலதிபர்களாகவும் அவர்களின் கீழே கைகட்டி நின்று சேவை செய்யும் தொழிலாளிகளாக நம் நாட்டு மக்களும் செயல்புரியும் இழிநிலை வந்துற்றது. 

அவ்வாறு அந்நிய முதலாளிகளிடம் பணி செய்து நம்மவர்கள் ஈட்டும் ஊதியத்திலும் பெரும் பகுதியைப் பல விதமான வரிகளின் மூலமும் விலைவாசி ஏற்றத்தின் மூலமும். நாட்டு மக்களுக்கு இலவசமாகக் கிடைத்து வந்த கல்வி, மருத்துவம் முதலானவற்றை விலைபொருட்களாக்கி அவற்றின் விலைவாசியையும் விஷம் போல் நாளுக்கு நாள் ஏற்றியும் வழிப்பறி செய்து பறிப்பது போல் பிடுங்கிக் கொள்கின்றனர். இன்று நாட்டை ஆள்வோர். மேலும் ஆட்சி முறைகேடாக நடைபெறுவதால் தொழில்களும் நசிந்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வழக்குகள் நடந்து வரும் நிலையால் பல்வேறு தொழில்கள் இன்று முடங்கிப் போயுள்ளன. அந்நிய நாட்டவரும் நம் நாட்டில் மூலதனம் செய்ய இன்று முன்வருவது குறைந்துள்ளதால் வெகு விரைவில் நமது தேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருக வாய்ப்புள்ளது. 

நம்மை ஆட்சி செய்யத் தகுதியுள்ளவர்களாக நாம் நம்பிய நபர்கள் அவ்வாறில்லாமல் தம் சுயநலம் ஒன்றே பேணுபவர்களாக இருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இரவோடிரவாக நம் நாட்டு மக்களின் கையில் எஞ்சியிருந்த சில்லரை வணிகத்தையும் அந்நியருக்கு விற்றுவிடப் பெரும் முயற்சி செய்து வருகின்றனர் இந்த சதிகாரர்கள். இத்தகைய சதிகாரர்கள் கையிலிருந்து நாட்டின் ஆட்சி மீட்கப்பெற்று நல்லாட்சி செய்யத் தகுதி பெற்று விளங்குவோரிடம் வழங்கப் பட வேண்டும். தொழில்கள் நாட்டில் மேன்மையடைந்து மக்கள் உண்மை சுதந்திரம் பெற வேண்டுமெனில் சமுதாயத்தில் குற்றங்கள் குறைய வேண்டும். உழைத்து முன்னேற உரிய வழிகளை மக்களுக்கு ஆட்சியிலுள்ளோர் ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கு வரி வசூல் முறையாக நடைபெற்று, கருப்புப் பணம் குறைந்து, அரசியல் மற்றும் சமூகக் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் பெற்று, அவர்கள் கொள்ளையிட்ட பெரும் பொருள் திரும்பப் பெறப்பட்டு நாட்டு மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இவற்றையெல்லாம் நிறிவேற்றினாலொழிய நம் நாட்டில் தொழில்கள் முன்னேறவோ தொழிலாளர் நலன் பெறவோ இயலாது.

அனைத்திற்கும் மேலாக நாட்டு மக்கள் யாவரும் உழைப்பின் உயர்வை உணர்ந்து உழைப்பால் உயர முற்பட வேண்டும். "தன் கையே தனக்குதவி" எனும் மூத்தோர் சொல்லை மனதிற்கொண்டு செயல்படவேண்டும். கறை படியாத கைகளையுடையோர் நாட்டை ஆளத் தேர்வு செய்ய வேண்டும். உழைக்கும் கைகள் உயர்வு பெற வேண்டும்.


திரைப்படம்: இன்று போல் என்றும் வாழ்க
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1977

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை
இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல
அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல
நேர்மை காக்கும் கை நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை இது
ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும் சீர் மிகுந்த கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல
வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல
ஈகை காட்டும் கை மக்கள் சேவையாற்றும் கை முள்
காட்டை சாய்த்து தோட்டம் போட்டுப் பேரெடுக்கும் கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல
உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல
மானம் காக்கும் கை அன்ன தானம் செய்யும் கை
சம நீதி ஓங்க பேதம் நீங்க ஆள வந்த கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை