செவ்வாய், 22 நவம்பர், 2011

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் வாழ்வில் என்றும் இன்பத்தையே நாடுகின்றன. துன்பத்தை எதிர்கொள்ளத் தயங்குகின்றன. ஆனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி இயல்பாக வருவதால் மனமுடைந்து இயற்கையில் கிடைக்கும் இன்பத்தையும் எதிர் வரும் துன்பத்தை எண்ணி அஞ்சுவதாலும், நிகழ்ந்த துன்பத்தை எண்ணி வருந்துவதாலும் முழுமையாக அனுபவிக்க இயலாமல் போகின்றது. வாழ்வில் நமக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு நாம் நம்மைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வதே இவ்வாறான குழப்பத்தைத் தவிர்க்கும் வழி ஆகும்.

தினமும் உழைத்தால் மட்டுமே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற இயலும் எனும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் வாழும் நம் நாட்டில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயிலும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி காண்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்குக் காரணம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து பிறர் துன்பத்தைத் தனதாகக் கருதி ஒற்றுமையுணர்வுடன் வாழ்வதே ஆகும். அதே சமயம் அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் மக்கள் தங்களது தேவைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும்பாலானோர் கடனாளிகளாகவே வாழ்கின்றனர்.

இத்தகைய போக்கினால் இன்று அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் இத்தகைய நெருக்கடி இல்லை. இதற்குக் காரணம் தங்களது திறமையான ஆட்சியே என்று இந்தியாவின் நிதியமைச்சர் பெருமை பீற்றிக் கொள்கிறார். இதை விடப் பெரிய மோசடி இருக்க முடியாது. நம் நாட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சுரண்டி மக்களுக்கு இலவசமாகக் கிடைத்த கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வியாபாரமாக்கியும் பல விதமான புதிய வரிகளை விதித்தும் மக்கள் ஈட்டும் வருவாயில் கணிசமான தொகையை வரியாக வசூலித்து வருவதாலேயே நம் நாட்டின் பொருளாதாரம் ஏனைய நாடுகளை விடவும் மேம்பட்டதாகத் தோற்றமளிக்கிறது. இது வெறும் தோற்றமே. உண்மை நிலையை தினமும் ஆராய்ந்து பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை கவனத்தில் கொண்டால் அறியலாகும்.

இத்தகைய மோசடிகளிலிருந்து அவதிப்படும் மக்களைக் காத்து வருபவர்கள் பெரும்பாலும் மக்களிடையே உள்ள பல நல்லவர்கள் ஆவர். இத்தகைய நல்லோர் தாம் ஈட்டும் பொருளில் தமது தேவைக்கு அதிகமாக உள்ளதைப் பொதுநலத்துக்கு செலவு செய்து எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்து வருவதாலேயே நம் நாடு எத்தகைய இக்கட்டிலும் சிக்காமல் தப்பித்துப் பிழைத்திருக்கிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கொப்ப, பல ஆண்டுகளாக நல்லவர்கள் போல் நடித்து மக்களைச் சுரண்டி வாழ்ந்திருந்த பலரது முகமூடிகள் கழன்று அவர்கள் செய்த குற்றங்கள் யாவும் வெளிவந்த வண்ணம் இருக்கும் இன்றைய சூழ்நிலையால் விரைவில் நமது நாட்டில் மோசடிப்பேர்வழிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு என்றும் உண்மையாய் உழைக்கும் நல்ல மனம் படைத்த திறமைசாலிகள் ஆட்சிப் பொறுப்பேற்கும் காலம் விரைவில் வரும் எனும் நம்பிக்கை மனதில் எழுகிறது.

இனி என்றும் துன்பமில்லை, சோகமில்லை.நாம் பெரும் இன்ப நிலையெய்தும் காலம் வெகு தூரமில்லை.

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை எங்கள்
வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக் குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக் குரல்

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

சிந்தித்தால் சிரிப்பு வரும்

நீதியும் குறித்து நாம் ஒவ்வொருவரும் பேசாத நாளில்லை. நாட்டிலும் உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் மோசடிகள் குறித்தும் பிற குற்றங்கள் குறித்தும் வாய் கிழியப் பேசும் நாம் நம்மளவில் உண்மையில் நேர்மையாக வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டோமேயானால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. பிறரிடம் தாராள மனப்பான்மையையும் உண்மையையும் நேர்மையையும் எதிர்பாக்கையில் நாம் அதே போன்ற நற்குணங்களுடன் விளங்க எவ்வித முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய கணிணியை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதுகுறித்துப் பெருமிதத்துடன் நமது நண்பர்களிடத்திலும் பிறரிடத்திலும் பேசும் நாம் மேலும் ஒர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அக்கணிணி இயங்கத் தேவையான மென்பொருளை வாங்கத் தயங்குகிறோம். அந்த ஐந்தாயிரம் ரூபாயை மிச்சப்படுத்த நமக்கு அந்தக் கணிணியை விற்பவர் தரும் திருட்டுத் தனமான மென்பொருளை நிறுவுகிறோம். இதன் காரணமாக கணிணியில் பல செயல்பாடுகள் முறையாக இயங்காமல் நாளடைவில் கணிணியில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு அந்தக் கோளாறுகளை சீர்படுத்த கணிணியை நமக்கு விற்றவரது சேவையையே பெரும்பாலும் அணுகுகிறோம். அவர் நமது நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம்மிடம் மேலும் அதிகத் தொகையைத் திரும்பத் திரும்பப் பெறுகிறார்.ஆரம்பத்திலேயே தரமான ஒரிஜினல் மென்பொருளை கணிணியில் நிறுவினால் கணிணி முறையாக என்றும் இயங்குவதோடு இது போன்ற கோளாறுகளால் வீண் செலவும் தவிர்க்கப் படுகிறது.

உழைப்பின் உயர்வு குறித்து மிகவும் சிறப்பாகப் பேசும் நாம் உழைத்து வாழ்கிறோமா? உழைக்காமல் வரும் இலவசங்களை நாடி ஓடுகிறோமா? இலவசங்களுக்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கிறோமா? எனும் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டோமானால் நம்மில் பலர் நம்மைக் குறித்தே வெட்கத்துடன் எண்ணி தலைகுனிய வேண்டிவரும். உண்மையும் நேர்மையும் உள்ளன்பும் கனிவும் நிரம்பிய உத்தம மனிதர் ஒருவர் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பின் அவரை யாரும் போற்றிப் புகழ்வதில்லை. பாவம், அவன் ஒரு பரதேசி, பிச்சைக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் அவரைப்பற்றி இழிவாகப் பேச நம்மில் பலர் என்றும் தயங்குவதில்லை.

நேர்மையாக உழைத்து பொதுமக்களுக்கு உண்மையான சேவைபுரியும் எண்ணத்துடன் ஒருவர் தேர்தலில் பெரும் பொருட்செலவு செய்யாமல் எளிமையாகப் போட்டியிட்டால் அவரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக யார் அதிகக் கூட்டம் சேர்த்துத் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்களோ அவர்களையே தேர்ந்தெடுக்கிறோம். அவரது தகுதிகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நமக்கு ஏதேனும் துன்பம் வருகையில் பிறரது உதவியைத் தவறாமல் நாடும் நாம் நம் கண் முன்னே பிறர் துன்பப்படுகையில் முன்வந்து உதவிபுரியத் தயங்குகிறோம். அவ்வாறு வேறு ஒருவருக்கு உதவுவதால் நம் பணிகள் தடைப்பட்டு நம் வாழ்வு பாதிக்கப்படுவதையே பெரிதும் எண்ணிக் கவலை கொள்கிறோம்.

உண்மையில் நாம் பிறரது நன்மையை எண்ணிப் பிறருக்காக ஏதேனும் ஒருவகையில் உழைத்தும் உதவியும் வாழ்வோமாகில் நமக்கு ஏதேனும் துன்பம் நேர்கையில் நாம் யாரையும் அணுகாமலேயே நமக்கு ஓடிவந்து உதவி புரியப் பலர் வருவர். இது இயற்கை நியதி. பிறருக்கு நாம் நன்மை செய்கையில் நமக்குப் பிறரும் நன்மையே செய்வர். பிறர்க்குத் தீங்கிழைப்பின் நமக்குப் பிறரிடமிருந்து பெரும்பாலும் தீமையே விளையும். மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இத்தகைய நல்லறிவே ஆகும்.

நம்மையும் சேர்த்து சமுதாயத்தில் பெரும்பாலோர் இந்த எளிய உண்மையை உணராது போலியாக வாழ்வதைப் பற்றி சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை வரும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும்

திரைப்படம்: செங்கமலத் தீவு
இயற்றியவர்: திருச்சி தியாகராஜன் Trichy Thyagarajan
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா மென்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

நாளை நமதே நாளை நமதே

மனிதரில் நான்கு வகையுண்டு. முதலாவது வகையைச் சேர்ந்தவர் தன்னையே தியாகம் செய்தாகிலும் பிறர் நலம் பேணுபவர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று புகழப்பெற்ற சீதக்காதி முதலிய வள்ளல்கள் இவ்வகையில் அடங்குவர். இரண்டாம் வகை தானும் நன்கு வாழ்ந்து பிறரும் நலமாய் வாழப் பாடுபடுபவர். நம்முடன் அன்றும் இன்றும் என்றும் சமுதாயத்தில் ஒன்று கூடி வாழ்ந்து வரும் பெரும்பான்மையினர் இத்தகைய மனிதர்களாகவே விளங்குகின்றனர். மூன்றாம் வகையினர் பிறரது துன்பம் துடைக்க எவ்வித முயற்சியும் செய்யாது தன்னுடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் வாழும் சுயநலவாதிகள். அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டாதவர். நான்காம் வகையினர் பிறரைக் கெடுத்து அதில் சுயலாபம் தேடுபவர். அடுத்தவர் அழிவிலேயே தன் வாழ்வு இருப்பதாகக் கருதும் பேதைகள். பிறரது துன்பத்திலே இன்பம் காணும் துக்ககரமான மனம் படைத்தவர்கள். ஐந்தாம் வகை தானும் அழிந்து பிறரையும் அழிப்பவர். குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம் என்பது போல் தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் அழிவுப் பாதையில் தள்ளுபவர். அறிவு முற்றிலும் மங்கிப் பைத்தியம் பிடித்த நிலையில் வாழ்வோர். தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் இதில் அடங்குவர். இவர்களால் இவர்களுக்காகிலும் பிறருக்காகிலும் என்றும் எவ்வித நன்மையும் விளைய வாய்ப்பில்லை.

சமுதாயத்தில் பெரும்பான்மையோர் சுயநலமின்றித் தன்னைப் போல் பிறரை எண்ணி தானும் நலமாக வாழ்ந்து பிறரையும் நல்வாழ்வு வாழவைக்க உதவுவோராக இருக்கையில் ஏன் நாட்டில் சமூகநீதி காக்கப்படாமல் ஏழைகள் ஏழைகளாகவே இருந்து பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் நிலை நாட்டில் நிலவுகிறது? என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பே. இதன் காரணம் நல்லவர்களான இவர்கள் ஒன்று கூடி ஒத்த கருத்துடன் பணிபுரியாமையால் தீமையைக் கண்டு ஏற்படும் அச்சத்தாலும் பல்வேறு சூழ்நிலைகளால் பிறரிடம் எழும் ஐயத்தாலும் இவர்களுள் ஒரு சாரார் செயலற்றுக் கிடக்கின்றனர். மீதமுள்ளவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க சிலரே அச்சம், ஐயம் ஏதும் இன்றி நன்மை விளையப் பாடுபடுகின்றனர். அத்துடன் முதல் வகையினரது முயற்சிக்கு ஒத்துழைத்து சமுதாய நலம் காக்கத் தொடர்ந்து உழைக்கின்றனர். அதேசமயம் சுயநலம் கொண்ட மூன்றாவது வகையினரும், பிறரைக் கெடுத்துத் தன் லாபத்தைப் பெருக்கும் நான்காம் வகையினரும் பல்வேறு வகைகளில் கூட்டுச் சேர்ந்து ஏனைய மக்களைச் சுரண்டி வாழ்வதில் எளிதில் வெற்றி காண்கின்றனர்.

இத்தகைய நிலைமை கண்டு முதல் இரண்டு வகைகளைச் சேர்ந்த சாமான்ய மக்களில் ஓரு சாரார் மனம் நொந்து சமுதாயத்திற்கு என்றும் கெடுதலே தொடர்ந்து விளையும் போலும். நீதி, நேர்மை, உண்மை, அஹிம்சை எனக் கூறப்படுவன யாவும் பொருளற்ற வெறும் வார்த்தைகள் போலும் என மதி மயங்கிச் சோர்ந்து போய் தீயவர்களின் அடக்குமுறைக்கு என்றும் அடிபணிந்தே வாழத் தலைபடுகின்றனர். இயற்கையின் ரகசியம் ஒன்றை நாம் யாரும் அறிந்துகொள்ள உண்மையில் முயலாது நம் அறிவை சரிவரப் பயன்படுத்தாமல் ஒரு இயந்திரம் போல் வாழ்வதே இத்தகைய மனமயக்கத்தை விளைவிக்கிறது. அந்த ரகசியமாவது, தீய குணம் படைத்த சுயநலவாதிகள் எவ்வளவு ஒற்றுமையுடன் செயல்பட்டுப் பிறரை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதில் வெற்றி கண்டபோதிலும் என்றாவது ஒரு நாள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலரும் பல சிறு சிறு குழுமங்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் பிணங்கிய நிலையில் பரஸ்பரம் நம்பிக்கையற்ற மனோநிலையில் முழுமனதான ஒத்துழைப்பின்றி செயல்புரியத் தலைபடுகின்றனர். அந்த சமயத்தில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து தங்களது குற்றங்கள் அனைத்தையும் தாங்களாகவே அனைவரும் அறியும் வண்ணம் பறைசாற்றி விடுகின்றனர்.

இதுவே சத்தியத்தின் மஹிமை. தன் ஆயுட்காலம் முழுவதும் உத்தமன் போல் நடித்து மக்களை ஏமாற்றி வந்த ஒரு கபட நாடக சூத்திரதாரியும் வேடம் கலைந்து தடுமாறும் நிலை காண்கிறோம். தன்னைப் பற்றிய உண்மை இவ்வாறு வெளியான பின்னர் அதற்கு மேல் இவர்கள் போன்ற தீயவர்களும் அவனது குற்றங்களில் பங்குபெற்று செயல்பட்ட மற்றவர்களும் வேஷம் கலைந்த பின்னர் மீண்டும் நல்லவர் வேஷம் போட எவ்வளவு முயன்றாலும் ம்டியாது. சாயம் வெளுத்தது வெளுத்தது தான். இவ்வாறு தீயவர்களுக்குள் ஒற்றுமை குன்றி அவர்கள் பலஹீனர்களாக இருக்கும் சமயத்தை முதல் இரண்டு வகையினரான நல்லோர் பெருமக்கள் நன்கு பயன்படுத்தி ஒரு பெரும் போராட்டத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்திட வெற்றி நிச்சயம். இது சரித்திரம் கண்ட உண்மை.

பாரதத் தாயின் புதல்வர்கள் நாம் எனும் ஒரே எண்ணத்தைக் கைக்கொண்டு அத்தாயின் செல்வங்களைத் தங்கள் சுயநலம் கருதிச் சூறையிட்டு வரும் சூது வாது நிரம்பிய சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து நம் தாய் மண்ணைக் காக்கப் போராடுவோம். எல்லா வளங்களும் நாட்டில் இருந்த போதிலும் அபரிமிதமான தானியங்கள் குவிந்து கிடந்த போதிலும் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சைக்கும் உரிய வழியின்ற அநாதைகள் போல் தவித்து அல்லலுறும் நம் சகோதர சகோதரிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் யாவும் இன்றும் என்றும் தொடர்ந்து கிடைக்கவும். தீயோரை அழித்து நல்லோர் என்றென்றும் தொடர்ந்து ஆளும் நிலை நாட்டில் ஏற்பட்டு நிலைத்திருக்கவும் ஒன்று பட்டுப் போராடுவோம். வெற்றி பெறுவோம். நாளை என்றும் நமதே!

நாளை நமதே நாளை நமதே

திரைப்படம்: நாளை நமதே
இயற்றியவர்: Muthulingam கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

அன்பு மலர்களே! நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே