செவ்வாய், 22 நவம்பர், 2011

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் வாழ்வில் என்றும் இன்பத்தையே நாடுகின்றன. துன்பத்தை எதிர்கொள்ளத் தயங்குகின்றன. ஆனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி இயல்பாக வருவதால் மனமுடைந்து இயற்கையில் கிடைக்கும் இன்பத்தையும் எதிர் வரும் துன்பத்தை எண்ணி அஞ்சுவதாலும், நிகழ்ந்த துன்பத்தை எண்ணி வருந்துவதாலும் முழுமையாக அனுபவிக்க இயலாமல் போகின்றது. வாழ்வில் நமக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு நாம் நம்மைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வதே இவ்வாறான குழப்பத்தைத் தவிர்க்கும் வழி ஆகும்.

தினமும் உழைத்தால் மட்டுமே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற இயலும் எனும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் வாழும் நம் நாட்டில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயிலும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி காண்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்குக் காரணம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து பிறர் துன்பத்தைத் தனதாகக் கருதி ஒற்றுமையுணர்வுடன் வாழ்வதே ஆகும். அதே சமயம் அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் மக்கள் தங்களது தேவைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும்பாலானோர் கடனாளிகளாகவே வாழ்கின்றனர்.

இத்தகைய போக்கினால் இன்று அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் இத்தகைய நெருக்கடி இல்லை. இதற்குக் காரணம் தங்களது திறமையான ஆட்சியே என்று இந்தியாவின் நிதியமைச்சர் பெருமை பீற்றிக் கொள்கிறார். இதை விடப் பெரிய மோசடி இருக்க முடியாது. நம் நாட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சுரண்டி மக்களுக்கு இலவசமாகக் கிடைத்த கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வியாபாரமாக்கியும் பல விதமான புதிய வரிகளை விதித்தும் மக்கள் ஈட்டும் வருவாயில் கணிசமான தொகையை வரியாக வசூலித்து வருவதாலேயே நம் நாட்டின் பொருளாதாரம் ஏனைய நாடுகளை விடவும் மேம்பட்டதாகத் தோற்றமளிக்கிறது. இது வெறும் தோற்றமே. உண்மை நிலையை தினமும் ஆராய்ந்து பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை கவனத்தில் கொண்டால் அறியலாகும்.

இத்தகைய மோசடிகளிலிருந்து அவதிப்படும் மக்களைக் காத்து வருபவர்கள் பெரும்பாலும் மக்களிடையே உள்ள பல நல்லவர்கள் ஆவர். இத்தகைய நல்லோர் தாம் ஈட்டும் பொருளில் தமது தேவைக்கு அதிகமாக உள்ளதைப் பொதுநலத்துக்கு செலவு செய்து எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்து வருவதாலேயே நம் நாடு எத்தகைய இக்கட்டிலும் சிக்காமல் தப்பித்துப் பிழைத்திருக்கிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கொப்ப, பல ஆண்டுகளாக நல்லவர்கள் போல் நடித்து மக்களைச் சுரண்டி வாழ்ந்திருந்த பலரது முகமூடிகள் கழன்று அவர்கள் செய்த குற்றங்கள் யாவும் வெளிவந்த வண்ணம் இருக்கும் இன்றைய சூழ்நிலையால் விரைவில் நமது நாட்டில் மோசடிப்பேர்வழிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு என்றும் உண்மையாய் உழைக்கும் நல்ல மனம் படைத்த திறமைசாலிகள் ஆட்சிப் பொறுப்பேற்கும் காலம் விரைவில் வரும் எனும் நம்பிக்கை மனதில் எழுகிறது.

இனி என்றும் துன்பமில்லை, சோகமில்லை.நாம் பெரும் இன்ப நிலையெய்தும் காலம் வெகு தூரமில்லை.

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை எங்கள்
வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக் குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக் குரல்

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

சிந்தித்தால் சிரிப்பு வரும்

நீதியும் குறித்து நாம் ஒவ்வொருவரும் பேசாத நாளில்லை. நாட்டிலும் உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் மோசடிகள் குறித்தும் பிற குற்றங்கள் குறித்தும் வாய் கிழியப் பேசும் நாம் நம்மளவில் உண்மையில் நேர்மையாக வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டோமேயானால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. பிறரிடம் தாராள மனப்பான்மையையும் உண்மையையும் நேர்மையையும் எதிர்பாக்கையில் நாம் அதே போன்ற நற்குணங்களுடன் விளங்க எவ்வித முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய கணிணியை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதுகுறித்துப் பெருமிதத்துடன் நமது நண்பர்களிடத்திலும் பிறரிடத்திலும் பேசும் நாம் மேலும் ஒர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அக்கணிணி இயங்கத் தேவையான மென்பொருளை வாங்கத் தயங்குகிறோம். அந்த ஐந்தாயிரம் ரூபாயை மிச்சப்படுத்த நமக்கு அந்தக் கணிணியை விற்பவர் தரும் திருட்டுத் தனமான மென்பொருளை நிறுவுகிறோம். இதன் காரணமாக கணிணியில் பல செயல்பாடுகள் முறையாக இயங்காமல் நாளடைவில் கணிணியில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு அந்தக் கோளாறுகளை சீர்படுத்த கணிணியை நமக்கு விற்றவரது சேவையையே பெரும்பாலும் அணுகுகிறோம். அவர் நமது நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம்மிடம் மேலும் அதிகத் தொகையைத் திரும்பத் திரும்பப் பெறுகிறார்.ஆரம்பத்திலேயே தரமான ஒரிஜினல் மென்பொருளை கணிணியில் நிறுவினால் கணிணி முறையாக என்றும் இயங்குவதோடு இது போன்ற கோளாறுகளால் வீண் செலவும் தவிர்க்கப் படுகிறது.

உழைப்பின் உயர்வு குறித்து மிகவும் சிறப்பாகப் பேசும் நாம் உழைத்து வாழ்கிறோமா? உழைக்காமல் வரும் இலவசங்களை நாடி ஓடுகிறோமா? இலவசங்களுக்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கிறோமா? எனும் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டோமானால் நம்மில் பலர் நம்மைக் குறித்தே வெட்கத்துடன் எண்ணி தலைகுனிய வேண்டிவரும். உண்மையும் நேர்மையும் உள்ளன்பும் கனிவும் நிரம்பிய உத்தம மனிதர் ஒருவர் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பின் அவரை யாரும் போற்றிப் புகழ்வதில்லை. பாவம், அவன் ஒரு பரதேசி, பிச்சைக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் அவரைப்பற்றி இழிவாகப் பேச நம்மில் பலர் என்றும் தயங்குவதில்லை.

நேர்மையாக உழைத்து பொதுமக்களுக்கு உண்மையான சேவைபுரியும் எண்ணத்துடன் ஒருவர் தேர்தலில் பெரும் பொருட்செலவு செய்யாமல் எளிமையாகப் போட்டியிட்டால் அவரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக யார் அதிகக் கூட்டம் சேர்த்துத் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்களோ அவர்களையே தேர்ந்தெடுக்கிறோம். அவரது தகுதிகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நமக்கு ஏதேனும் துன்பம் வருகையில் பிறரது உதவியைத் தவறாமல் நாடும் நாம் நம் கண் முன்னே பிறர் துன்பப்படுகையில் முன்வந்து உதவிபுரியத் தயங்குகிறோம். அவ்வாறு வேறு ஒருவருக்கு உதவுவதால் நம் பணிகள் தடைப்பட்டு நம் வாழ்வு பாதிக்கப்படுவதையே பெரிதும் எண்ணிக் கவலை கொள்கிறோம்.

உண்மையில் நாம் பிறரது நன்மையை எண்ணிப் பிறருக்காக ஏதேனும் ஒருவகையில் உழைத்தும் உதவியும் வாழ்வோமாகில் நமக்கு ஏதேனும் துன்பம் நேர்கையில் நாம் யாரையும் அணுகாமலேயே நமக்கு ஓடிவந்து உதவி புரியப் பலர் வருவர். இது இயற்கை நியதி. பிறருக்கு நாம் நன்மை செய்கையில் நமக்குப் பிறரும் நன்மையே செய்வர். பிறர்க்குத் தீங்கிழைப்பின் நமக்குப் பிறரிடமிருந்து பெரும்பாலும் தீமையே விளையும். மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இத்தகைய நல்லறிவே ஆகும்.

நம்மையும் சேர்த்து சமுதாயத்தில் பெரும்பாலோர் இந்த எளிய உண்மையை உணராது போலியாக வாழ்வதைப் பற்றி சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை வரும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும்

திரைப்படம்: செங்கமலத் தீவு
இயற்றியவர்: திருச்சி தியாகராஜன் Trichy Thyagarajan
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா மென்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

நாளை நமதே நாளை நமதே

மனிதரில் நான்கு வகையுண்டு. முதலாவது வகையைச் சேர்ந்தவர் தன்னையே தியாகம் செய்தாகிலும் பிறர் நலம் பேணுபவர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று புகழப்பெற்ற சீதக்காதி முதலிய வள்ளல்கள் இவ்வகையில் அடங்குவர். இரண்டாம் வகை தானும் நன்கு வாழ்ந்து பிறரும் நலமாய் வாழப் பாடுபடுபவர். நம்முடன் அன்றும் இன்றும் என்றும் சமுதாயத்தில் ஒன்று கூடி வாழ்ந்து வரும் பெரும்பான்மையினர் இத்தகைய மனிதர்களாகவே விளங்குகின்றனர். மூன்றாம் வகையினர் பிறரது துன்பம் துடைக்க எவ்வித முயற்சியும் செய்யாது தன்னுடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் வாழும் சுயநலவாதிகள். அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டாதவர். நான்காம் வகையினர் பிறரைக் கெடுத்து அதில் சுயலாபம் தேடுபவர். அடுத்தவர் அழிவிலேயே தன் வாழ்வு இருப்பதாகக் கருதும் பேதைகள். பிறரது துன்பத்திலே இன்பம் காணும் துக்ககரமான மனம் படைத்தவர்கள். ஐந்தாம் வகை தானும் அழிந்து பிறரையும் அழிப்பவர். குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம் என்பது போல் தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் அழிவுப் பாதையில் தள்ளுபவர். அறிவு முற்றிலும் மங்கிப் பைத்தியம் பிடித்த நிலையில் வாழ்வோர். தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் இதில் அடங்குவர். இவர்களால் இவர்களுக்காகிலும் பிறருக்காகிலும் என்றும் எவ்வித நன்மையும் விளைய வாய்ப்பில்லை.

சமுதாயத்தில் பெரும்பான்மையோர் சுயநலமின்றித் தன்னைப் போல் பிறரை எண்ணி தானும் நலமாக வாழ்ந்து பிறரையும் நல்வாழ்வு வாழவைக்க உதவுவோராக இருக்கையில் ஏன் நாட்டில் சமூகநீதி காக்கப்படாமல் ஏழைகள் ஏழைகளாகவே இருந்து பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் நிலை நாட்டில் நிலவுகிறது? என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பே. இதன் காரணம் நல்லவர்களான இவர்கள் ஒன்று கூடி ஒத்த கருத்துடன் பணிபுரியாமையால் தீமையைக் கண்டு ஏற்படும் அச்சத்தாலும் பல்வேறு சூழ்நிலைகளால் பிறரிடம் எழும் ஐயத்தாலும் இவர்களுள் ஒரு சாரார் செயலற்றுக் கிடக்கின்றனர். மீதமுள்ளவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க சிலரே அச்சம், ஐயம் ஏதும் இன்றி நன்மை விளையப் பாடுபடுகின்றனர். அத்துடன் முதல் வகையினரது முயற்சிக்கு ஒத்துழைத்து சமுதாய நலம் காக்கத் தொடர்ந்து உழைக்கின்றனர். அதேசமயம் சுயநலம் கொண்ட மூன்றாவது வகையினரும், பிறரைக் கெடுத்துத் தன் லாபத்தைப் பெருக்கும் நான்காம் வகையினரும் பல்வேறு வகைகளில் கூட்டுச் சேர்ந்து ஏனைய மக்களைச் சுரண்டி வாழ்வதில் எளிதில் வெற்றி காண்கின்றனர்.

இத்தகைய நிலைமை கண்டு முதல் இரண்டு வகைகளைச் சேர்ந்த சாமான்ய மக்களில் ஓரு சாரார் மனம் நொந்து சமுதாயத்திற்கு என்றும் கெடுதலே தொடர்ந்து விளையும் போலும். நீதி, நேர்மை, உண்மை, அஹிம்சை எனக் கூறப்படுவன யாவும் பொருளற்ற வெறும் வார்த்தைகள் போலும் என மதி மயங்கிச் சோர்ந்து போய் தீயவர்களின் அடக்குமுறைக்கு என்றும் அடிபணிந்தே வாழத் தலைபடுகின்றனர். இயற்கையின் ரகசியம் ஒன்றை நாம் யாரும் அறிந்துகொள்ள உண்மையில் முயலாது நம் அறிவை சரிவரப் பயன்படுத்தாமல் ஒரு இயந்திரம் போல் வாழ்வதே இத்தகைய மனமயக்கத்தை விளைவிக்கிறது. அந்த ரகசியமாவது, தீய குணம் படைத்த சுயநலவாதிகள் எவ்வளவு ஒற்றுமையுடன் செயல்பட்டுப் பிறரை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதில் வெற்றி கண்டபோதிலும் என்றாவது ஒரு நாள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலரும் பல சிறு சிறு குழுமங்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் பிணங்கிய நிலையில் பரஸ்பரம் நம்பிக்கையற்ற மனோநிலையில் முழுமனதான ஒத்துழைப்பின்றி செயல்புரியத் தலைபடுகின்றனர். அந்த சமயத்தில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து தங்களது குற்றங்கள் அனைத்தையும் தாங்களாகவே அனைவரும் அறியும் வண்ணம் பறைசாற்றி விடுகின்றனர்.

இதுவே சத்தியத்தின் மஹிமை. தன் ஆயுட்காலம் முழுவதும் உத்தமன் போல் நடித்து மக்களை ஏமாற்றி வந்த ஒரு கபட நாடக சூத்திரதாரியும் வேடம் கலைந்து தடுமாறும் நிலை காண்கிறோம். தன்னைப் பற்றிய உண்மை இவ்வாறு வெளியான பின்னர் அதற்கு மேல் இவர்கள் போன்ற தீயவர்களும் அவனது குற்றங்களில் பங்குபெற்று செயல்பட்ட மற்றவர்களும் வேஷம் கலைந்த பின்னர் மீண்டும் நல்லவர் வேஷம் போட எவ்வளவு முயன்றாலும் ம்டியாது. சாயம் வெளுத்தது வெளுத்தது தான். இவ்வாறு தீயவர்களுக்குள் ஒற்றுமை குன்றி அவர்கள் பலஹீனர்களாக இருக்கும் சமயத்தை முதல் இரண்டு வகையினரான நல்லோர் பெருமக்கள் நன்கு பயன்படுத்தி ஒரு பெரும் போராட்டத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்திட வெற்றி நிச்சயம். இது சரித்திரம் கண்ட உண்மை.

பாரதத் தாயின் புதல்வர்கள் நாம் எனும் ஒரே எண்ணத்தைக் கைக்கொண்டு அத்தாயின் செல்வங்களைத் தங்கள் சுயநலம் கருதிச் சூறையிட்டு வரும் சூது வாது நிரம்பிய சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து நம் தாய் மண்ணைக் காக்கப் போராடுவோம். எல்லா வளங்களும் நாட்டில் இருந்த போதிலும் அபரிமிதமான தானியங்கள் குவிந்து கிடந்த போதிலும் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சைக்கும் உரிய வழியின்ற அநாதைகள் போல் தவித்து அல்லலுறும் நம் சகோதர சகோதரிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் யாவும் இன்றும் என்றும் தொடர்ந்து கிடைக்கவும். தீயோரை அழித்து நல்லோர் என்றென்றும் தொடர்ந்து ஆளும் நிலை நாட்டில் ஏற்பட்டு நிலைத்திருக்கவும் ஒன்று பட்டுப் போராடுவோம். வெற்றி பெறுவோம். நாளை என்றும் நமதே!

நாளை நமதே நாளை நமதே

திரைப்படம்: நாளை நமதே
இயற்றியவர்: Muthulingam கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

அன்பு மலர்களே! நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

செவ்வாய், 15 நவம்பர், 2011

பாதுகையே துணையாகும் எந்நாளும்

பாரத தேசத்தின் பெருமைக்குக் காரணமாய் விளங்கும் மனித நெறிகள முறையாகக் கடைபிடித்து உத்தமனாய், சத்திய சந்தனாய், தந்தை சொல் காத்த தனயனாக, ஏகபத்தினி விரதனாக, தன்னை நம்புவோரைக் காப்பவனாக, உலகிலுள்ள அனைவரையும் சகோதர பாசத்துடன் அரவணைப்பவனாக விளங்கிய உன்னத புருஷன் ராமனின் கதையை விளக்குவது ராமாயணம். இந்தியாவின் பழம்பெரும் இதிகாச காவியமான இராமாயணத்தில் அதனை சமஸ்கிருத மொழியில் ஆதியில் எழுதிய வியாசர் இராமனைக் கடவுளுடைய அவதாரமாக விவரிக்கவில்லை. இக்காவியத்தைத் தமிழில் புனைந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனது அவதாரம் குறித்து மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அயோத்தி நகரை ஆண்டுவந்த இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த தசரத மன்னன் நீண்ட காலம் புத்திரப் பேறின்றி வாட குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி ரிஷ்யசிருங்க முனிவரைக் கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக அவனது முன்று மனைவியர் கௌசல்யா, கையேயி, சுமத்திரை ஆகியோர் கருவுற்று ராமன், பரதன் மற்றும் லக்ஷ்மண சத்ருக்கனர்களை முறையே பெற்றெடுத்து வளர்த்து வருகையில் உரிய காலம் வந்ததும் மன்னவன் தசரதன் தன் மூத்த ம்கனான ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடு செய்தான். இது கேட்ட அரண்மனைப் பணிப்பெண்ணான கூனி எனப்படும் மந்தரை கைகேயியின் மனதைக் கலைத்து, ஒரு முறை சம்பராசுரன் எனும் அரக்கனுடன் தசரதன் போர் செய்கையில் தசரதன் மயங்கி விழ, அவனது தேரை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்று அவனது உயிரைக் கைகேயி காத்ததனால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு ஏதேனும் இரு வரங்கள் தர விரும்புவதாகக் கூற, அவற்றைப் பின்னர் தேவைப்படுகையில் பெற்றுக்கொள்வதாக அவள் கூறிய சம்பவத்தை நினைவுபடுத்தினாள்.

இரு வரங்களுள் ஒன்றால் பரதன் நாடாளவும் மற்ற வரத்தால் ராமன் 14 ஆண்டுகள் வ்னவாசம் செய்யவும் மந்தரையின் துர்ப்போதனையின் படி கைகேயி மன்னனிடம் வரம் கேட்டாள். மன்னன் எவ்வலவோ மன்றாடிக் கெஞ்சி ராமனைக் காட்டுக்கனுப்பச் சொல்லாதே எனக்கெஞ்சியும் அவள் பிடிவாதமாக இருக்கவே மன்னன் என்னவோ செய்த்கொள், இனி என் முகத்தில் முழிக்காதே என் பிணத்தையும் நீயும உன் மகன் பரதனும் தீண்டக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு மூர்ச்சையாகிவிட்டான். இந்நிலையில் ராமனை வரவழைத்த கைகேயி மன்னனிடம் தான் பெற்ற வரங்கள் பற்றிக் கூறி அவற்றின் படி பரதன் நாடாள ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென அரசர் சொன்னார் என்றாள்.

"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேயாள நீ போய்த்
தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவ மேற்கொண்டு
பூழிவெங்கான நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
ஏழிரண்டாண்டின் வாவென்றியம்பினன் அரசன் என்றாள்"

இதனைக் கேட்ட ராமன் மன்னன் சொல்லவில்லையானால் என்ன நீங்கள் சொன்னால் நான் கேட்க மறுப்பேனா? பரதன் என் தம்பியல்லவா? அத்துடன் என்னை விடவும் நாடாள அவனே சிறந்தவன் அவன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமேயல்லவா? என்று பெருந்தன்மையுடன் கூறினான்.

"மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?"

என்று சொல்லிப் பின் சீதாவுடனும் லக்ஷ்மணனுடனும் வனவாசம் சென்றுவிட, இதைக் கேள்விப்பட்ட மன்னன் மனமுடைந்து மரணமடைந்த நிலையில் சத்ருக்கனனுடன் தன் தாயின் தந்தையான தாத்தா கேகய மன்னனின் நாட்டுக்குச் சென்றிருந்த பரதன் திரும்பி வந்து தந்தை இறந்ததைக் கேட்டு சொல்லொணாத் துயருற்றுப் பின்னர் நடந்தவற்றைக் கேட்டுத் தன் தாயின் மேல் கோபம் கொண்டு அவளைத் தூற்றிய பின்னர் மந்திரி பிரதானிகளுடன் வனம் சென்று ராமனைத் திரும்ப வருமாறு அழைத்தான். ராமன் தந்தையின் சொல்லைக் காத்தல் தனயனின் க்டமையாதலால் பரதன் நாடாள்வதும் ராமன் வனவாசம் செய்வதுமான தந்தையின் கட்டளைகளை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தவே, பரதன் நாடாண்டான் எனும் அவப்பெயர் தனக்கு உண்டாகாமல் இருக்க வேண்டுமெனில் தான் அயோத்தி நகருக்குள்ளே செல்லாமல் இராமனின் பாதுகையே நாட்டை ஆள வேண்டுமெனவும் 14 ஆண்டுகளில் இராமன் திரும்பாவிடில் தானும் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகவும் சூளுரைக்கிறான்.

இந்தக் காட்சிகள் சிவாஜி கணேசன் பரதனாகவும், என்.டி. ராமராவ் ராமனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினியாகவும் நடித்து 1958ஆம் ஆண்டு வெளிவந்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் மிகவும் அழகுறப் படமாக்கப் பட்டுள்ளன. இராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றைக் கொண்டு நாடாளும் பரதன் குறித்த ஒரு அருமையான பாடல் இன்றைய பாடலாக வருகிறது:

Video:

http://www.thamizhisai.com/video/tamil-cinema/sampoorna-ramayanam/paathugaiye-thunaiyaagum.php

Audio:

பாதுகையே துணையாகும் எந்நாளும்

திரைப்படம்: சம்பூர்ண ராமாயணம்
இயற்றியவர்: தேவொலபள்ளி க்ரிஷ்ன சாஸ்திரி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1958

பாதுகையே பாதுகையே
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே

பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

உனது தாமரைப் பதமே உயிர்த்துணையாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா
பதினான்கு ஆண்டும் உன்தன் பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய அருள்வாயே ராமா

தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
சர்க்குணாதிபா ராமா ஸ்ர்வரக்ஷகா ராமா
தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
தந்தை சொல்லைக் காக்கும் தனயனான ராமா
தவசி போலக் கானிலே வாசம் செய்யும் ராமா
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா

நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

கடவுளை நம்பாமல் பகுத்தறிவுப் பாதையில் தாமும் நடந்து உலகையும் வழிநடத்துவதாகச் சொல்லிக் கொண்ட ஆஷாடபூதிகள் அனைவரது பொய்முகங்களும் உண்மையெனும் தெய்வ சக்தியால் வெளியாகி விட்டன. தன் ஆயுள் முழுவதும் மக்களைப் பொய்யான அன்பு வார்த்தைகளாலும் இனப்பற்று, மொழிப்பற்று, ஏழை பணக்காரன் என்பன போன்ற வேற்றுமைகளைக் காட்டியும் ஏமாற்றி வந்தவரின் முகத்திரை கிழிந்து விட்டது. வெளியே பயமில்லாதது போல் காட்டிக்கொண்டு இன்னமும் தான் சத்தியசந்தன் என்று சாதித்தபோதிலும் உண்மை என்ன என்பதும், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுப்பதும் உலகில் உள்ள உண்மையான பகுத்தறிவாளர்கள் அனைவரும் அறியும் வண்ணம் தெளிவாகி விட்டது.

எத்தனை கோடிகள் பொன்னும் பொருளும் மண்ணும் மணிமுடியும் ஆடை ஆபரணங்களும் சேர்த்தாலும் அவை யாவும் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகிவிடக்கூடும் என்பதுவே விதி. அதனை மனிதன் தன் சிறுமதியால் என்றும் மாற்றிட இயலாது. மனிதராய்ப் பிறந்த நாம் உண்மையில் தேட வேண்டியது நீரால் நனையாத, காற்றால் கரையாத, நெருப்பால் எரியாத, காலத்தால் அழியாத அனைத்திற்கும் மேலாக நின்று அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் ரக்ஷிக்கும் அந்த ஆண்டவன் எனும் ஆதிசக்தியை மட்டுமே. ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் யாவையுமாகி விளங்கும் இறைசக்தியான அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

என்று திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் பெருமையை திருநாவுக்கரசர் விளக்குகிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இன்ப துன்பங்களுக்குள் சிக்கித் துயருராமல் பிறவியாகிய பெரும் கடலை நீந்திக் கடந்து என்றும் பிறவியில்லாத பெருநிலையை அடைய விரும்புவோர் செய்யத் தக்கது இறை வழிபாடு ஒன்றேயாகும். இறை வழிபாடு என்பது நாம் காணும் அனைவரிடத்திலும் அனைத்து உயிகள் மற்றும் ஜடப்பொருட்களிடத்திலும் இறைவன் உறைவதை அறிவதேயாகும். அத்தகைய மெய்ஞானம் அடையப் பெற்றவர் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கத் துணையாக விளங்கும் இறைவனின் திருவடிகளையே சென்று அடைவதுறுதி.

பக்தி மார்க்கத்தில் மனதைச் செலுத்தி அழியும் பொருட்களின் மேல் கொண்ட பற்றுக்களைக் களைந்து அழியாப் பொருளை அடைய வேண்டித் தவம் செய்வோரே அத்தகைய உயர் நிலையை அடையக்கூடும். அவ்வாறு மனதை ஆசை, கோபம்,குரோதம், லோபம், மதம், மாத்சர்யம் ஆகிய பாபங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்தும் மீட்டு இறைவனிடத்திலே ஐக்கியமாக்க வல்லது இசை. அதிலும் குறிப்பாக பக்திப் பாடல்கள். அவற்றுள்ளும் பஜனைப் பாடல்கள் பக்திப் பரவசத்தை எளிதில் உண்டு பண்ணக் கூடியவை. எளிய இனிய சொற்களால் புனையப் பட்டு எல்லோரும் ஒன்று கூடி இனிமையாய் மிக சுலபமாய் இசையோடு அனுபவித்துப் பாட ஏற்ற வன்னம் இத்தகைய பஜனைப் பாடல்கள் பல மொழிகளிலும் அமையப்பெற்றுள்ளன.

நம் ஊர்களில் மார்கழி மாதம் பிறந்ததும் தினந்தோறும் அதிகாலையில் பஜனைப் பாடல்களை பக்தர்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவெங்கும் நடந்து சென்று இசையுடன் பாடி நகரை வலம் வருவதும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் மரபு. இத்தகைய பஜனைப் பாடல்களையே பெரும்பாலும் பாடிப் பெரும்புகழ் பெற்ற மூதாட்டி பெங்களூர் ரமணியம்மாள் அவர்கள் ஆவார். அவரது பஜனைப் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பாடுவதற்கு இனிமையானவை மனதை மயங்க வைத்து இறைவனிடத்திலே நம் மனங்களை ஐக்கியமாக்க வல்ல அருள் நிரம்பிய பாடல்களை அவர் நமக்காகப் பாடி வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று இன்றைய பாடலாகிறது.

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன்
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள்
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர்
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன்
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள்
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வ்ருகின்றன. இவற்றுக்கு இடைப்பட்ட காலமே இவ்வுலக வாழ்வாக உள்ளது. இந்நியதி அனைத்துயிர்களுக்கும் பொதுவானது. வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வருவது இரவும் பகலும் மாறி மாறி வருவது போல் இயற்கை நியதியே. இன்பங்கள் நேர்கையில் மகிழ்ந்து கொண்டாடுவோர் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகையில் உலகமே துன்பமயமானதெனவும், உலகே மாயம், வாழ்வே மாயம் எனவும் கருதி உலக வாழ்வை வெறுப்பது அறியாமையே. பிறப்பும் இறப்பும் நிகழ்வது சிறிது காலமே. ஆனால் வாழும் காலம் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆகும் காலத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளது. எனவே மரணத்தையும் மறுபிறப்பையும் குறித்து எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாது வாழ்நாள் உள்ளளவும் வருவது வரட்டும் என்று இன்பம் துன்பம் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழப் பழகிக்கொள்வதே செய்யத் தக்கது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் இவ்வுண்மையை உணராது மதிமயங்கிய மாந்தர்கள் பலர் தமக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தவர்களைத் தேடித் தெளிவு பெற விழைகையில் தங்களைக் காட்டிலும் அறிவிற் குறைந்த வேடதாரிகளை அணுகி அவர்களை ஞானியர் எனவும் மஹா பக்திமான்கள் எனவும் எண்ணி ஏமாறுவது நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு கேலிக்கூத்தாகும். இத்தகைய ஞானியர் போல் வேடமிட்டு சாமான்ய மக்களை ஏமாற்றும் மனிதர்களுக்கு இவ்வுலகில் குறைவில்லை. பொது மக்கள் பலர் தாராளமாக வாரி வழங்கும் பொருளைக் கொண்டு இத்தகைய வேடதாரிகள் செல்வந்தர்களாக விளங்குவதுடன் பிறர்க்குபதேசம் தனக்கில்லை எனும் வகையில் உலகிலுள்ள யாவருக்கும் தருமோபதேசம் செய்துவிட்டுத் தாங்கள் அந்தரங்கத்தில் ஆடம்பரமாக சிற்றின்பத்தில் திளைத்து உலகையே ஏமாற்றுகின்றனர்.

வாழ்வில் தோன்றும் இன்ப துன்பங்களால் மனம் குழப்பமடைகியில் அக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற நாம் இவ்வாறு வேடமணிந்த ஞானியர் யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை. உண்மை ஞானியர் பலர் நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும் என்றும் உள்ளனர். அத்தகைய ஞானியரை அடையாளம் காண்பதும் மிகவும் எளிது. அதற்கு ஒரே வழி அனைவரிடமும் அன்புடன் பழகுவதே ஆகும். அவ்வாறு பழகுகையில் நம்மிலும் அதிகத் துன்பத்தில் வாழ்வோர் பலர் அத்துன்பங்களைப் புன்சிரிப்புடன் எதிர்கொண்டு மகிழ்ச்சியுடனும் உள்ள நிறைவுடனும் வாழ்வதை நாம் காணலாம். குறிப்பாக வயதில் முதிர்ந்த உறவினர்களும் நண்பர்களும் வாழ்க்கையை நன்குணர்ந்தவர்களாக விளங்குவது நம் அறிவுக்குப் புலப்படும்.

உலக வாழ்வை வெறுத்து ஒதுக்க உபதேசம் செய்யும் மார்க்கம் உண்மை ஞான மார்க்கமாகாது. வாழ்க்கையை முழுமனதுடன் அனுபவித்து உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என யாவருடனும் கலந்து பழகி இன்ப துன்பங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து வாழ வழிகாட்டும் மார்க்கமே உண்மை ஞான மார்க்கமாகும். ஞானி என்பவன் தவம் செய்பவனாக இருக்க வேண்டியதில்லை. நம்மைப் போல் உலக வாழ்வில் இன்பங்களை எல்லாம் அனுபவித்து வாழ்பவனாகவும் இருக்கக்கூடும்.

மத்த மதகரி முகிற்குலமென்ன நின்றிலகு வாயிலுடன் மதியகடுதோய்
மாடகூடச் சிகரமொய்த்த சந்திரகாந்த மணிமேடை யுச்சி மீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்துநகையார்களொடு
முத்து முத்தாய்க் குலவி மோகத்திருந்துமென் யோகத்தினிலை நின்று
கைத்தல நகைப்பட விரித்தபுலி சிங்கமொடு கரடிநுழை நூழை கொண்ட
கானமலையுச்சியிற் குகையோடிருந்துமென் கரதலாமலகமென்ன
சத்தமற மோனநிலை பெற்றவர்களுய்வர்காண் சனகாதி துணிபிதன்றோ
சர்வபரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே

என்று தாயுமானவர் காழ்வில் உய்ய வழி சொல்கிறார்.

இதன் பொருள் யாதெனில், ‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் நமக்கு மகிழ்ச்சியூட்ட வல்லது இசையே. நல்ல இசை எவ்விதத் துன்பங்களில் கிடந்து வாடுபவரையும் தம் துன்பங்களைச் சற்றே மறந்து அவ்விசைக்க்கேற்ப ஆடவைக்கலாகும்.

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

திரைப்படம்: கண்ணன் என் காதலன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

திங்கள், 14 நவம்பர், 2011

இறைவா உன் மாளிகையில்

ஒரு மன்னரும் அவரது அமைச்சரும் நகர சோதனை நிமித்தம் செல்கையில் சற்றுத் தொலைவில் இறந்தவர் ஒருவரின் சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டனர். மன்னர் அமைச்சரிடம் அங்கே சென்று விவரம் அறிந்துவரக் கூறினார். அமைச்சரும் அங்கு சென்று இறந்தவர் குறித்த விவரத்துடன் திரும்பினார். அவரிடம் மன்னர் கேட்டார், "இறந்தவர் எங்கே செல்கிறார்? சொர்க்கத்துக்கா நரகத்துக்கா?" என்று. அவர் சொர்க்கத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறினாராம். "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று மன்னர் கேட்டதற்கு அமைச்சர் கூறினாராம், "இறந்தவர் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் தன் உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் யாவருக்கும் பேருதவி புரிந்து வந்தார். அவர் இழப்பினால் யாவரும் மிகவும் கவலை கொண்டுள்ளனர். இனி யார்
தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பார் என மன வருத்தம் அடைந்துள்ளனர்." என்றார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/panam-padaiththavan/kan-pona-

pokkile.php

நம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாள் உள்ளளவும் மக்கள் நலமாக வாழ உண்மையாக உழைத்தவர். தன்னிடமுள்ள செல்வங்களனைத்தையும் பிறர் நலனுக்கென ஈந்தவர். அவர் சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவ மனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் அப்பொழுதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து மருத்துவ வசதிகளுடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிறுநீரக அறுவை
சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சதாசர்வகாலமும் எம்ஜிஆர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். தெருவெங்கும் தினம்தோறும் இதுகுறித்த பிரார்த்தனைப் பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. உலகிலேயே இன்றுவரை வேறு யாருக்காகவும் இத்தகைய ஒருமனதான பிரார்த்தனை நடந்ததில்லை எனக் கூறலாம். மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் தனது சிறுநீரகம் ஒன்றை அவருக்கு தானமாக அளித்ததாலும் எம்ஜிஆர் உடல் நலம் பெற்று மீண்டுவந்தார்.

இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மருத்துவமனியில் இருந்தவாறே போட்டியிற்று வெற்றியும் பெற்ற அவர் தாயகம் திரும்பியதும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில காலம் இருந்த பின்னர் காலமானார்.

உள்ளத்தை உருகச் செய்யும் அந்தப் பாடல் இதோ:

திரைப்படம்: ஓளி விளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில்

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணூலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

யாரும் விளையாடும் தோட்டம்

"கோபம் பாபம் சண்டாளம்" என்று கோபத்தின் கெடுதியைக் குறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சண்டாளம் என்றால் மாபாதகம் எனப் பொருள். சினத்தினால் தீமையைக் குறித்துத் திருவள்ளுவர் சினம் எனும் கொடிய குணமானது சினங்கொள்வோரைக் கொல்வது மட்டுமன்றி அவரது இனத்தையே அதாவது பரம்பரையையே அழிக்க வல்லது என்று குறிப்பிடுகிறார்,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமாப்புணையைச் சுடும்

எனும் குறள் வாயிலாக.

இவ்வுலக வாழ்வில் நாம் பிறருடன் இணைந்து பணியாற்றுகையிலும் பிறருடன் பல வகைகளில் தொடர்பு கொள்கையிலும், பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதங்கள் புரிகையிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சில சமயங்களில் பகைமை ஏற்படக் காரணமாவதுண்டு. அப்படி ஒரு நிலைமை உருவாவதைத் தடுக்க ஓரே வழி கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் சினத்தைக் கட்டுப் படுத்துவதே ஆகும். இதற்குப் பொறுமை அவசியம். பொறுமைக்கு உதாரணமாய் பூமியைக் குறிப்பிடுவதுண்டு, உயிர்கள் அனைத்தையும் தாங்குதலால்.

"பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்"

என்று பாரதமாதாவின் பொறுமை குறித்து மஹாகவி எடுத்துரைக்கிறார்.

நாமனைவரும் இவ்வுலகில் வாழ்வது சொற்ப காலமே என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அந்தச் சொற்ப காலத்திலும் ப்ல்வேறு சூழ்நிலைகளால் கட்டுண்டு நாம் நம்மையறியாமலேயே பல்வேறு வழிகளில் இட்டுச் செல்லப்படுவதை உணர்கிறோம். நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தும் நாம் விரும்பிய வண்ணம் செயல்கள் நடைபெறாதது குறித்து வருந்துதலும் பிறருடன் முரண்படுதலும் துன்பத்தையே தரும்.

எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், எத்துணைத் துயர் வந்துற்ற போதிலும், எவ்விதமான தர்ம சங்கடங்கள் ஏற்பட்ட போதிலும், எத்தகைய அவமானங்களைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அவற்றல் மனம் உடைந்து வருந்துதலும் பிறருடன் பிணங்குதலும் அறியாமை.

ஒருவர் நம்மை விடப் பொருளாதரத்திலோ, ஆரோக்யத்திலோ, அறிவிலோ, வேறு விதங்களிலோ தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரைத் தாழ்வாக மதிப்பிடுவதும் நம்மை விட மேம்பட்ட நிலையில் இருந்தால் அவரைக் கண்டு அசூயை கொள்வதும் நம் மன நிம்மதியைக் குலைத்து விடுவதுடன் சமுதாயத்தில் அவப் பெயரையும் உண்டாக்கிவிடும்.

மக்களில் ஒரு சாரார் நாடோடிகளாய்த் திரிவது நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவிடும் வழக்கமாகும். இத்தகைய மக்கள் தங்களுக்கென்று சொந்தமாய் எவ்வித சொத்துக்களையும் சேர்ப்பதில்லை. சில காலம் ஒரு ஊரில் இருந்த பின்னர் தங்கள் கூட்டத்தாருடன் வேறோர் ஊருக்குச் சென்று அங்கே சில காலம் வசிப்பது என இவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய மக்கள் ஏழைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெரும்பாலும்
மகிழ்ச்சுயுடனேயே வாழ்வதைக் காண்கிறோம்.

இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் நாடோடிகளே. நாமும் பிழைப்பைத் தேடிப் பல ஊர்களுக்குச் சென்று வாழ்கிறோம். நம் விதிப்பயன் முடிந்ததும் உடலை நீத்து எங்கோ செல்கிறோம். நம் கையில் இருக்கும் ஓரே அதிகாரம் இருக்கும் சூழ்நிலையில், அது இன்பமாகிலும் துன்பமாகிலும் நாம் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோமா இல்லையா என்பதே ஆகும். மகிழ்வுடன் வாழ ஒரே வழி பொறுமை. தம்மை மீறி வந்துற்ற துன்பங்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்வோர்க்கே இன்ப வாழ்வு நிலைப்பதுண்டு.

யாரும் விளையாடும் தோட்டம்

திரைப்படம்: நாடோடித் தென்றல்
இயற்றியவர்: இளையராஜா
இசை: இளையராஜா
பாடியோர்:சித்ரா, மனோ
ஆண்டு: 1992

வ்வ்லலலலலல
டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
தேடவும் பள்ளுப் பாடவும் பள்ளிக் கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லே
வம்பில்லா வாழ்க்கையென்றால் துன்பம் இல்லே

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டேராவப் பாத்துப் போடு ஓலத்தோடு
வேறூரு போயிச் சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

ஆவியாகிப் போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழே வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரும் ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமரைப் பூ தண்ணி போல
மாறாது எங்க வாழ்வு வானம் போல

யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

என்றும் பதினாறு வயது பதினாறு

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிறையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று சக்தி உபாசகரான மஹாகவி பாரதி காளி தேவியைக் குறித்துப் பாடினார். இப்பாடலில் உரைத்தது போலவே எல்லோரையும் போல் வயிறு வளர்ப்பதற்கென்றே பணிகள் பல செய்து ஜீவிக்காமல், உபயோகமற்ற கதைகளைப் பேசாமல் தான் உரைத்தன யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மொழிகளாக நிலைநிறுத்தி, பிறர் மனம் நோகும்படியான செயல்கள் எதனையும் செய்யாமல் சாதிக்கொடுமையைக் களையப் பாடுபட்டு

பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கு உண்மையான விடுதலையை விரும்பிப் பாடுபட்டு, உண்டுடுத்துறங்கி விழித்து வயோதிகமடைந்து நோய்வாய்ப்பட்டு மடியாமல் இளம் வயதிலேயே தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டுத் தன் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் மஹாகவி.

பாரதியார் பகவத் கீதைக்குத் தான் எழுதிய உரையில் "கீதை ஒரு மோக்ஷ சாஸ்திரம், அது ஒரு அமரத்துவ சாஸ்திரம். மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் சாத்தியமெனவும் அதற்குரிய மார்க்கத்தை கீதை காட்டுகிறது" என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய் இன்பங்களிலே ஆவலற்றவனாய் பகைத்தலும் விழைத்தலும் இன்றி ஒருவன் இருப்பானேயாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்ககத் தகுந்தவன்" என்ற பொருள்பட விளங்கும் கீதா ஸ்லோகம் ஒன்றை மேற்கண்ட தன் கருத்துக்கு மேற்கோளாகக் காட்டுகிறார் மஹாகவி.

மார்க்கண்டேயர் ஒரு மகரிஷி. இன்ப துன்பங்களைத் துறந்து இறைவனைச் சரணாகதியடைந்தவர். மேற்கண்ட கீதா ஸ்லோகத்தின் உபதேசப்படி வாழ்பவர். அன்றும், இன்றும், என்றும் 16 வயது இளைஞராகவே வாழும் நிலை அடைந்ததாகக் கருதப்படும் ஒரே மனிதர்.

மனிதப் பிறவியானது உலகவின்பத்தைத் துய்ப்பதற்கெனவே எடுக்கப்பட்டது என நம்பி மேற்கூறிய தத்துவங்கள் எவற்றையும் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கும் வரை இன்பமாய் வாழ வழி தேடுவதே வாழ்க்கையாகக் கொண்டு பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இன்ப வாழ்வு வாழ விரும்பி அதற்காகவே பாடுபடும் சாமான்ய மாந்தர்களும் என்றும் 16 வயதினராக இளமை நிலைக்கப் பெற்று வாழ்வதிலுள்ள சுகத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய இன்ப வாழ்வை அடையக் கனவு காண்பதும் இயற்கையே.

என்றும் பதினாறு வயது பதினாறு

திரைப்படம்: கன்னித் தாய்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

கன்னம் சிவந்தது எதனாலே? கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே? உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலெ? வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்ணம் மின்னுவதெதனாலே? இந்த வள்ளல் தந்த நினைவாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

விழிகள் பொங்குவதெதனாலே? வீரத்திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே? இந்த வீரத்திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

மனிதன் என்னதான் விவேகத்துடன் நடந்துகொண்டாலும் சில சமயங்களில் அவனையும் மீறிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அவன் மனம் உடைந்து போவதுண்டு. என்ன செய்வது என்று தொ¢யாமல் தவிப்பதுண்டு. தர்மபுத்திரர் எத்தனையோ விவேகத்துடனும் வைராக்யத்துடனும் இருந்தார். பரமாத்மாவும் அவருடன் இருந்தார். இருந்தும் அவர் எத்தனையோ சமயங்களில் மனம் தளர்ந்ததுண்டு. அச்சமயங்களில் பகவானிடம் அதிக பக்தி செய்ய வேண்டும். நமது உபாசனா மூர்த்தியை பூஜித்து அதன் மூலம் நாம் அதிக சக்தி பெற வேண்டும், கார் பேட்டா¢யை சார்ஜ் செய்வது போல் நம்மை சார்ஜ் செய்துகொண்டு அதன் மூலம் பலம் பெற்றுக் கஷ்டங்களை சமாளிக்கவோ அல்லது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவோ முற்பட வேண்டும்.

நவவித பக்தி

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு
செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே
அற்பணித்தல்

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

இவற்றுள் தாஸ்யம் என்பது மிகவும் விசேஷாமானது. இவ்வழியே தேவதாசியர் தம்மை இறைவனுக்கு தாசியாய் அர்ப்பணம் செய்து தம் வாழ்நாளில் இல்லற சுகங்களைத் துறந்து வாழ்ந்ததாகப் புராணங்களில் காண்கிறோம். அகில உலகையும் ரக்ஷித்துக் காப்பவளான லோகமாதாவான பராஸக்தியே ஹிமவான் மகளாகப் பிறந்து தவம் செய்து ஈசனையே மணாளனாக அடைந்ததும், அவளே பின்னர் மதுரை மீனாக்ஷியாக அவதாரம் செய்து அதே வழியில் தவம் செய்து ஈசனை அடைந்ததாகவும் சிவபுராணம் சொல்கிறது.

12 ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளும் இதே விதமான பக்தி மார்க்கத்தை மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில் கொண்ட நிலையில் காட்சி தரும் அரங்கநாதனை மணந்ததாக வரலாறு கூறுகிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்று திருஞான சம்பத்தப் பெருமான் இத்தகைய பக்தியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

இதே மார்க்கத்தில் இங்கே ஒரு இளமங்கை குமரக் கடவுள் மேல் காதல் கொண்டு அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கும் மனநிலையில் பாடி ஆடுவதாக ஒரு காட்சி பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 1960ஆம் ஆண்டு ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்த இப்படத்தில் இப்பாடலுக்கு நாட்டியம் ஆடுபவர் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுக்கு இணையான நடனத் திறமை கொண்ட புகழ்பெற்ற கமலா ஆவார்.

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

திரைப்படம்: பார்த்திபன் கனவு
இயற்றியவர்: விந்தன்
இசை: வேத்பால் வர்மா
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1960

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே மயிலே
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே மயிலே
ஒத்தி எடுத்திடவே உதடவரைத் தேடுதடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே மயிலே
அள்ளி அணைத்திடவே அவர் வரக் காணேனடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே