புதன், 13 ஜூலை, 2011

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

தெய்வம் மானுஷ ரூபேண: அதாவது தெய்வம் மனித வடிவில் விளங்குவது. தெய்வம் எனும் பகுத்தறிவுக்கு எட்டாத எல்லையில்லாத சக்தியை அனைவரும் வ்ழிபடுவது துன்பங்களிலிருந்து விடுபடவும் அத்தகைய துன்பங்களைத் தாங்கும் மனோவலிமையைப் பெறவுமேயாகும். மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம்மை நம்பியவர்களைக் குறைவின்றிக் காத்து அனைவரிடமும் கருணையுடனும் அன்புடனும் பழகினால் நம்மை எல்லோரும் என்றும் தெய்வமாகப் போற்றி வணங்குவதுறுதி.

ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி, மக்கள் மற்றும் தன்னை நம்பி வாழும் வயது முதிர்ந்த பெற்றோர், உற்றார் உறவினர் அனைவரது தேவைகளுக்கேற்ற பொருளை உழைத்து ஈட்டி அவர்களுக்குத் தன் வாழ்நாள் உள்ளவரை தக்க உதவிகளைச் செய்து வாழ்தல் எவ்வாறு இன்றியமையாத கடமையாகக் கருதப்படுகிறதோ அதே போல ஒரு நாட்டின் மக்கள் அனைவரையும் அவர்களது இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்து காப்பது நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கடமை.

இத்தகைய கடமைகளை முறையாகவும் உண்மையாகவும் செய்ய ஒருவர் முதற்கண் உண்மை ஒன்றையே பேசி நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்வது மிவகும் அவசியம். அவ்வாறு உண்மையையே வாழ்வில் அனைத்திலும் பெரிதெனக் கொண்டு வாழ்ந்து காட்டிய நம் தேசப்பிதா மஹாத்மா காந்தியை இன்று அமெரிக்காவின் ஜானாதிபதி முதல் உலகிலுள்ளோர் அனைவரும் போற்றி வணங்குவதைக் காண்கிறோம். நாம் வாழ்வில் பெரும்பொருள் ஈட்டி பெரிய செல்வந்தனாக விளங்குவதில் ஏற்படும் பெருமையை விடவும் வாழ்நாள் முழுதும் வறுமையில் வாடினாலும் பொய் சொல்லாது உண்மையே பேசி உத்தமனாக வாழ்வதால் ஏற்படும் பெருமை மிகவும் பெரியது.

உண்மையின் பாதையில் தொட்ர்ந்து செல்பவன் ஒரு நாளும் தோல்வியடைவதில்லை, ஏனெனில் உண்மை ஒருவனிடம் இருக்குமேயானால் அவனுக்கு இவ்வுலகமே துணையாக நிற்கும். சந்தர்ப்பவசத்தால் அவனை விரோதிகள் யாரும் சதி செய்ய முயன்றால் அத்தகைய சதியிலிருந்து அவனை அவனது உண்மையே மீட்க வல்லதாகும். எத்துணை பணமிருந்தாலும் எவ்வளவு அறிவிருந்தாலும் எத்துணை பேர் புகழ வாழ்ந்தாலும் ஒருவரிடம் உண்மையில்லாவிடில் அவர் இருக்கையிலும் இறக்கையிலும் அதன் பின்னரும் என்றென்றும் இகழப்படுவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும் உண்மையாகும்.

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" எனும் கவிஞனின் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

திரைப்படம்: நீலமலைத் திருடன்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா ஆஆஆ

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
செல்லடா

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா

செல்வந்தர்களின் வீடுகளின் நுழைவாயிலில் பொதுவாக வாயில் காப்பவர் ஒருவரோ ஒருவருக்கு மேற்பட்டவரோ இருப்பர். இவர்களது கடமை அவர்கள் காவலுக்கு நியமிக்கப் பட்ட வீடுகளிலிருந்து எவரும் எப்பொருளையும் களவாடிச் செல்லாமலும் சமூக விரோதிகள் யாரும் வீட்டுக்குள் நுழைந்து விடாமலும் காப்பதாகும். இத்தகைய காவல் பணியைச் செய்வதற்காகவே இவர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

இதே ரீதியில் நாட்டையும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளும் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் நாட்டையும், மாநிலத்தையும் இத்தகைய களவாணிகளிடமிருந்து காப்பதும் சமூக விரோதிகளின் செயல்பாட்டைத் தடுப்பதும் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்படுவதற்காகவே அவர்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிகள் தரப்பட்டு அவற்றுக்குரிய ஊதியமும் வழங்கப் படுகிறது.

பல சமயங்களில் வீட்டைக் காவல் காக்கும் காவலாளியே வேறு கள்வர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தாம் காவல் காக்கும் வீட்டையே கொள்ளையடிப்பது, அவ்வீட்டிலுள்ளோரது குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரியவருகிறது.

இன்று நமது நாட்டை ஆள்வோரே நாட்டின் செல்வங்களைக் கொள்ளையிட்டு, மக்களைப் பட்டினி போட்டுத் தாம் மட்டும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து சுகவாழ்வு வாழ்ந்துவரும் இழிநிலை பரவலாக உருவாகியுள்ளது. இதன் காரணம் நாட்டு மக்கள் நாட்டை ஆள்வோரைத் தேர்ந்தெடுப்பதில் போதிய அக்கரை காட்டாது கண்மூடித்தனமாக இருப்பதுவே ஆகும்.

இத்தகைய இழிநிலையைத் தவிர்க்க முதற்கண் மக்கள் யாவரும் நாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். தினசரி கடமைகளுள் ஒன்றாக செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இடம் பெறும் செய்திகளை அறிந்து கொள்வதை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டை ஆள்வோரின் உண்மையான நிலை தெரியவரும்.நல்லவர் போல் தெரிபவரெல்லாம் நல்லவரல்ல என்பதுவும் புரியும். நாட்டை ஆளும் அமைச்சர்கள் தம் வரையிலும் நல்லவராக இருப்பது மட்டும் போதாது. தம்முடனும் தமது அதிகாரத்தின் கீழும் பணிபுரியும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் தவறுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டு முறைகேடுகளைத் தவிர்ப்பது ஒவ்வொரு அமைச்சரின் முக்கியக் கடமையாகும்.

இக்கடமையைச் செய்யத் திறமில்லாத, மனமில்லாத ஒருவர் அமைச்சராக இருப்பதும் திருடனாக இருப்பதும் ஒன்றே. காவல் காப்பவன் தான் திருடாதிருப்பதை விட, வேறு யாரும் திருடாது பார்த்துக் கொள்வதே காவல் பணியில் அவன் ஈடுபடுத்தப்படுவதன் நோக்கம். இந்நோக்கம் நிறைவேறாவிடில் காவலாளி எதற்கு? அவனுக்கு சம்பளம் எதற்கு? தன் கடமையைச் செய்யாதவனுக்கு வெட்டி அதிகாரம் எதற்கு? ஆர்ப்பாட்டம் எதற்கு?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா

திரைப்படம்: குமரிப்பெண்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா
ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

ஆஹாஹஹா ஓஹோஹோஹோ
லாலாலாலா பம்பம்பம்பம்

காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ?
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
நாக்குக்கு ஆயிரம் மொழி சொந்தமோ?
நாலு காலுக்கொரு வால் சொந்தமோ

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

வருகிற உறவுக்கு மனை சொந்தமோ?
மயக்குற முகத்துக்கு எழில் சொந்தமோ?
கொடுக்கிற பணத்துக்கு இடம் சொந்தமோ?
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

குற்றம் புரிந்தவன்

நமது நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் தொன்று தொட்டு ஆண்களின் ஆதிக்கத்திலேயே சமுதாயம் நடந்து வந்துள்ளது சரித்திரத்தின் வாயிலாகத் தெரிகிறது. இதற்கு முக்கியக் காரணம் பெண்கள் தமது குடும்பத்திலுள்ளோரைப் பேணி, அவர்களுக்குத் தேவையான சமையல், துப்புறவு மற்றும் பிற பணிகளைச் செய்ய, ஆண்கள் மட்டுமே வெளியுலகில் சென்று பொருளீட்டுவதும் சமுதாயப் பணிகளைச் செய்வதும் இயல்பாக நடைபெற்று வந்துளதேயாகும். இத்தகைய மனித நேயம் குறைந்து பெண்களுக்கெதிரான அடக்கு முறைகள் மலிந்து விளங்கிய காலத்தில் மனிதகுலத்தில் பெண்ணுரிமையை வலியுறுத்தியவர்களுள் மஹாகவி பாரதியார் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

அதுவரை கதைகளிலும் காவியங்களிலும் வரும் சில பெண்கள் தம் கணவனையன்றி வேறு எவரையும் மனதில் கணமும் நினையாது கணவனே கண்க்ண்ட தெய்வம் எனப் போற்றி வாழ்ந்த கற்புக்கரசிகளாகவும் அப்பெண்களின் கணவன்மார்கள் தம் மனைவியரைத் துச்சமாக எண்ணி வேறு பெண்களையும் விலைமாதர்களையும் தேடிச் சென்று தமது சுகமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த சுயநலவாதிகளாகவும் சித்தரிக்கப் பட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அது மட்டுமன்றி ஒரு பெண்ணை ஒருவருக்கு மணம் முடிக்கையில் அந்தப் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டறியாமலே சந்தையில் மாடுகளை விற்பதைப் போன்ற முறையில் யாருக்கு வேண்டுமானாலும் திருமணம் செய்து கொடுக்கும் இழிசெயலையும் மனித சமூகத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையை மாற்றிடவென்றே மஹாகவி,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

என்று முழங்கினார்.

பழங்காலக் கதைகளாயினும் பெண்ணடிமை ஒழிந்து, தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்ந்துவரும் தற்காலத்தில் எழுதப் பட்ட சில கதைகளாயினும் பொதுவாக, முறையாக இல்லறத்தில் ஈடுபடாமல் மனைவியைப் புறந்தள்ளிவிட்டு விலைமாதர்களைத் தேடியலையும் ஆண்கள் தம் வாழ்வை இழந்த துயரச் சம்பவங்களே காட்டப்பட்டு வருவதும் நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய கதைகள் சமுதாயத்தில் உள்ள பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்து பெரும்பாலானோர் தவறு செய்யத் துணியாது கட்டுப்பாட்டுடன் வாழ வழிகோலுகின்றன. இத்தகைய கதைகளுள் பல திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படம் ரத்தக்கண்ணீர். இப்படத்தில் நடிகவேள் அதாவது நடிகர்களுள் ஒரு மன்னர் எனப் புகழ்பெற்ற எம்.ஆர். ராதா முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். தற்போது இடம்பெறும் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் மிகவும் முன்னணியில் விளங்கும் திருமதி ராதிகா அவர்கள் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது தவப்புதல்வி என்பதை அனேகமாக நாம் அனைவரும் அறிவோம். அறியாதவர்கள் அறிந்து கொள்வார்களாக.

குற்றம் புரிந்தவன்

திரைப்படம்: ரத்தக்கண்ணீர்
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை. ஜி. ராமநாதன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன், எம். ஆர். ராதா
ஆண்டு: 1954
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

ஆம், ஆம், வாழ்க்கையில் குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி ஏது?

அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது?

முடியாது, உண்மை, உண்மை என் ஆணந்தம், என் மகிழ்ச்சி, என் இன்பம் அத்தனையும் அற்றுப் போய்விட்டது.

அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது

ஒழிந்தது, ஒழிந்தது, என் ஆணவன், என் கர்வம், என் அகம்பாவம் அத்தனையும் அற்றுப் போய்விட்டது.

குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
சுகம் அடைவதேது - நல்ல
குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
சுகம் அடைவதேது?

வாஸ்தவம் குணத்தை இழந்தேன் கொண்டவளைத் துறந்தேன், கண்டவள் பின் சென்றேன், கட்டுடலையும் இழந்தேன் இன்று கண்ணையும் இழந்தேன். வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஏது?

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?