வியாழன், 27 மே, 2010

அன்றொரு நாள் இதே நிலவில்

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தேறுவதெப்போ நம்ம கவலே

என்று பட்டுக் கோட்டையார் பாடிய பாடலுக்கொப்ப நம் நாட்டின் பல இடங்களில் பாமர மக்களை ஏமாற்றி அவர்களது செல்வங்களைக் கொள்ளையிடுவதும் மேலும் பல வகைகளில் அவர்களை அடக்கியாண்டு தங்களது சுயநல நோக்கத்தை தந்திரமாக நிறைவேற்றிக் கொள்வதுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டம் மலிந்திருக்கிறது. தீர ஆராய்ந்து பார்க்கையில் நாடே அத்தகைய கொள்ளையர் வசம் இருப்பது புலப்படும்.

அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், நாங்கள் சத்திய சந்தர்கள் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் இவர்களும் அதே கொள்ளையை அவர்கள் செய்ததிலும் பன்மடங்கு அதிகமாகவே நிறைவேற்றி வருகின்றனர். இன்னும் எத்தனை காலம் தான் நாமெல்லோரும் தொடர்ந்து ஏமாறப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்த்து முடிவு செய்யும் தருணம் வந்து விட்டது. நாமும் உயிர் பிழைத்து நமது சந்ததியினரையும் இத்தகைய எத்தர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற நமக்கு எள்ளளவேனும் சிந்தனை உள்ளதா என்பதே கேள்கிக்குறியாக உள்ளது.

விதிவசத்தால் தன் காதலியை விட்டுப் பிரிந்த கதாநாயகன், அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றி அவர்களது கண்களைக் குருடாக்கி, பிச்சையெடுக்க வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சமூக விரோதிகளின் செயலால் கண் பார்வையை இழந்த வேறொரு பெண்ணைக் காப்பாற்ற முனைகையில் அவனும் அந்த சமூகவிரோதிகளின் வலையில் விழுந்து விடுகிறான். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து பிச்சையெடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதற்கிடையில் ஒரு நாள் அவ்விருவரும் தனியாக ஓய்வெடுக்கும் சமயம் அவள் தன் மனதில் அழமாய்ப் பதிந்திருந்த ஒரு இனிய பாடலைப் பாடுகிறாள்.

அப்பாடலைக் கேட்கும் கதாநாயகன் அது தனது காதலி தனக்காகப் பாடிய பாடலாக இருக்கக் கண்டு மிகவும் அதிசயித்து அப்பாடலுக்கு தனது ஆர்மோனியப் பெட்டியில் பின்னணி இசைக்கிறான். பின்னர் தன் காதலி இவ்வுலகை விட்டு மறைந்த செய்தியையும், தன்னுடன் பிச்சையெடுக்கும் பெண் தன் காதலியின் சகோதரி எனவும் அறிந்து கொள்கிறா. அதன் பின்னர் அவ்விருவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஆட்டிப் படைக்கும் சமூக விரோதிகளை தந்திரமாக ஏமாற்றி தப்பிப்பதுடன் அவர்களை சட்ட்த்தின் பிடியிலும் சிக்க வைக்கின்றனர்.

நாம் எப்பொழுது நம்மையெல்லாம் ஏய்த்துப்பிழைப்பவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போகிறோம்?

அன்றொரு நாள் இதே நிலவில்

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

மனிதர்கள் இளமைக் காலத்தில் எப்பொழுதும் இவ்வுலகில் தாம் அடையக்கூடிய இன்பங்களைப் பற்றியே பெரும்பாலும் எண்ணி ஒரு மயக்க நிலையில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக பருவமெய்திய பின்னர் ஆண்கள் பெண்களிடம் தாம் அடையக் கூடிய இன்பங்களையும் பெண்கள் ஆண்களிடம் பெறக்கூடிய இன்பங்களையுமே அதிகம் எண்ணுகின்றனர். தம் தாய் தந்தையரைப் பற்றியும் வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் உலகில் சந்திக்கின்ற துன்பங்களைப் பற்றியும் யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் பொதுவில் பெற்றோர்கள் அடையும் துன்பங்கள் மேலும் பெருகி அவர்கள் அல்லலுறும் நிலை ஏற்படுவதை நாம் பல சமயங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.

குறிப்பாக இளைஞர்களுள் சிலர் தம் மனைவியரிடம் கொண்ட மயக்கத்தாலும் வேறு சிலர் பிற பெண்களிடம் கொண்ட மோகத்தினாலும் மதிகெட்டுப் பெற்றோரை அலட்சியம் செய்து தமது இன்பம் ஒன்றையே பெரிதென எண்ணி வாழ்வதும் உலகில் நடைமுறையாக உள்ளது. இவ்வாறு பெண்ணாசையால் மனம் தடுமாறிய நிலையிலுள்ளோரில் ஒரு சாரார் தம் அறிவை முற்றிலும் இழக்குமுன்னரே தம் சுயநினைவைப் பெற்று தமது பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டிய க்டமையை உணர்ந்து செயல்படுகின்றனர். வேறு சிலர் அவ்வாறன்றி தொடர்ந்து அலட்சிய மனோபாவத்துடனேயே வாழ்ந்து அதன் காரணமாகப் பெற்றோரை இழக்கும் நிலையை அடைந்து வருந்துவதும் உண்டு.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்குப் பலவிதமான கதைகள், கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் இன்னும் பிற வகையிலும் பெற்றோரைக் காக்கும் கடமையை அவர்கள் உணரும் விதமாகக் கல்வி போதிக்கப் படுகிறது. அத்தகைய கல்வியைப் பயின்ற போதும் சிலர் அதனை உள்ளத்தில் கொள்ளாமல் கடமை மறந்து காலனிடம் பெற்றோரைப் பறிகொடுத்த பின் வருந்துவதும் உண்டு.

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

திரைப்படம்: குமாரராஜா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே