சனி, 8 மே, 2010

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

ஒரு பெண் தாயாகியதும் அவள் இவ்வுலகில் அனைத்திலும் அரிய உறவாகக் காண்பது தான் பெற்ற சேயையே. அப்பெண் ஏழையாக இருந்தாலும் தன் பிள்ளைக்கு வாழ்வின் வசதிகள் அனைத்தும் மிகவும் உயர்ந்தவையாகவே இருத்தல் வேண்டுமென விரும்புவாள். தன் வயிறு பசி பட்டினியால் வாடிக் கிடந்தாலும் தன் குழந்தைக்கு வயிறு வாடாமல் தக்க நேரத்தில் எவ்வாறாகிலும் உணவிடுவாள். தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுப்பதன்றோ தாய்மை. தன் சகோதரர்களிடம் ஒரு பெண் மிகவும் எதிர்பார்ப்பது தன் பிள்ளைக்குத் தன் சகோதர்கள் பொருளுதவி செய்தும் பரிசுகளை வழங்கியும் அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்த வேண்டும் என்பதுவே.

கல்யாணி எனும் பெண் விதிவசத்தால் இளம் வயதிலேயே கணவனை சாலை விபத்தில் பரிகொடுத்த நிலையில் கைக்குழந்தையுடன் மிகவும் துன்புற்று ஏழ்மை நிலையில் வாடுகையில், பொருளீட்ட வேண்டி வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் தன் அண்ணன்மார்கள் திரும்பி வருவர், தன் பிள்ளைக்குத் தக்க உதவிகள் செய்து அப்பிள்ளைக்குக் கல்வி பயிற்றுவிக்க ஆவன செய்வர் எனும் நம்பிக்கையுடன் தான் ஏழ்மையில் வாடிய போதும் தன் பிள்ளையாகிலும் நல்வாழ்வு வாழவேண்டும் எனும் ஆசை மனம் முழுதும் நிரம்பியவளாய் தன் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தாலாட்டாகப் பாடிப் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுத் தூங்க வைக்கும் மனமுருக்கும் காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: R. சுதர்சன்
பாடியவர்: T.S. பகவதி
ஆஅண்டு: 1952

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே - ஒரு
வஞ்சமில்லா முழு மதியே - இன்ப
வானில் உதித்த நல்லமுதே

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன்
மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை
யானையும் வாகனமாய் - மாமன்
தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்
தருவார் சீதனமாய்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
அள்ளி அணைத்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

1 கருத்து:

  1. மிக அருமையான பாடல்.. என் அன்னையின் ஞாபகமாக நாங்கள் பாடும் பாடல்...

    பதிலளிநீக்கு