திங்கள், 23 நவம்பர், 2009

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, காதலன், காதலி, குடும்பம், மனைவி, குழந்தைகள், உற்றார் உறவினர், சுற்றத்தார் என்று உலகில் நாம் அனைவரும் தொடர்ந்து சொந்த பந்தங்களில் கட்டுண்டு அதன் விளைவாகப் பல சோதனைகளையும், ஏமாற்றங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறோம்.
அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நாம் தவிக்கையில் நமக்கு ஆறுதல் கூறித் தேற்றி, நம்பிக்கையூட்டுவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஜோதிடர்கள், நிமித்தக் காரர்கள், கோடங்கிகள் அல்லது குடுகுடுப்பாண்டிகள், பூம் பூம் மாட்டுக்காரர்கள் முதலானோர்.

இவர்களுள் ஏமாற்றுபவர்கள், அதாவது தீய பலன்களைக் கூறிப் பரிகாரமாகச் சடங்குகள் செய்யவென்று பணம் பறிப்பவர்கள் பலர் இருப்பினும், அத்தகைய ஏமாற்றுக்காரர்களைத் தவிர்த்துப் பார்க்கையில், பொதுவில் இத்தகைய பணியைச் செய்பவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகளும், நல்ல காலம் வரும் எனும் நம்பிக்கையூட்டும் செயலும் மிகவும் பாராட்டத்தக்கவை.

ஆங்கிலேயர் ஆட்சி நமது நாட்டில் நடைபெற்ற காலத்தில் ஒரு கிராமத்தில் சிறு வயதிலேயே தாயை இழந்த கள்ளங்கபடறியாக் கன்னிப்பெண் கண்ணம்மா தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். ஜமீன்தாரர் ஆட்சி முறை நிலவிய அக்காலத்தில் அவ்வூர் ஜமீன்தாரரின் ஓரே மகன் ராஜா அவளது அழகிலும் அடக்கத்திலும் கவரப்பட்டு அவளிடம் காதல் கொளகிறான். தான் ஊர் ஜமீன்தாரரின் மகன் என அறிந்தால் அவள் தன் காதலை ஏற்கமாட்டாள் என்பதால் தான் ஜமீன்தாரரின் பண்ணையில் பணி செய்யும் ஒரு பண்ணையாள் எனப் பொய்யுரைத்து அவளது காதலைப் பெறுகிறான்.

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும்" எனும் கூற்றுக்கிணங்க இவர்களது காதல் விவகாரம் ஜமீன்தாரரின் காதுக்கு எட்டவே அவர் கடுங்கோபம் கொண்டு அவர்களது காதலுக்குத் தடை விதிக்கிறார். "உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை" எனும் மஹாகவியின் சொற்களுக்கேற்ப ஏமாற்றத்தால் ஊண் உறக்கம் பிடிக்காமல் மனம் பேதலித்த நிலையில் அவள் இருக்கையில் அவளது வீட்டுக்கு அலங்கரிக்கப்பட்ட தனது மாட்டுடன் வரும் ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் அவளது மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே படம் பிடித்தவன் போல் அவளுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பாடலாகப் பாடுகிறான்.

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

நெஞ்சம் மறப்பதில்லை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
டி.எம் சௌந்தரராஜன் காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்
ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?

ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?
அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?

கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக