ஞாயிறு, 31 ஜனவரி, 2016

வசந்த முல்லை போலே வந்து

மங்கையரை மலர்களுக்கொப்பிடுவதுண்டு, அவர்கள் மலர்களைப் போல மென்மையான உடலும் மனமும் கொண்டு மலர்களைப் போல வாழ்வில் மணம் பரவச் செய்யும் மேன்மையினால். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் ஒரு பெண் வந்து வாழ்க்கைத் துணையாக அமைந்த பின்னரே வாழ்வு மலர்கிறது, வாரிசுகள் பிறக்கின்றன. குடும்பம் அமைகின்றது, இல்லறம் செழிக்கின்றது. தன் மனதுக்கிசைந்த பெண்ணை விரும்பிக் காதலித்து மணமுடித்து உடன் சேர்ந்து வாழும் வாழ்வு அமையப்பெற்ற ஆண்கள் பிற ஆண்களைக் காட்டிலும் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை ஏனெனில் இருவர் மனமும் ஒருங்கிணைந்த நிலையில் தொடங்கித் தொடரும் வாழ்வில் தங்குதடைகள் எத்துணை வரினும் இருவரும் கூடி முயன்று அவற்றை வெல்லுவது மிக எளிது. 

கணவன் மனைவி உறவு முன்பின் அறிமுகமில்லாத ஆண் பெண் பாலரிடையே உருவாகுகையில் அத்தகைய மனம் ஒன்று பட்ட நிலை எய்துவது சற்றுக் கடினமே. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடுகள் உருவாவதைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழப் பழகுவதே பெரிய சவாலாக அமைகிறது. எவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழுந்த போதிலும் அவற்றைத் தீர்த்துக்கொண்டு ஒன்றாக வாழ்வதே குறிக்கோளாகக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவர் நலனைப் பெரிதென எண்ணி சுயநல உணர்வை அகற்றி வாழப்பழகுகையில் அங்கே இல்லற உறவு மிகவும் மேம்படுகிறது, வாழ்வில் வெற்றி காண வழி பிறக்கிறது. இருமனம் ஒன்றுபட்டு இணைந்து வாழும் முறைமையைக் கற்றுத்தேர்ந்த தம்பதியருக்குத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது எளிதாகவும் இனிதாகவும் அமைகிறது. 

கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு எழுந்து அதைப் பெரிது படுத்தி இருவரும் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாக விட்டால் அவர்களது சிறு பிரச்சினைகளையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகிவிடுகிறது. ஒற்று பட்டு வாழப் பழகாத தம்பதியினர் தம் பிள்ளைகளை முறையாக வளர்க்க முடியாமல் தவிப்பதுண்டு. பல சமயங்களில் குழந்தைகளின் வாழ்க்கை தடம் மாறி நெறி கெட்டுத் தவறான வழியில் குழந்தைகள் செல்ல ஏதுவாகிறது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் இவ்வுலகமே சொர்க்கமாகிறது இல்லையேல் நரகமாகிறது.

முற்காலத்தில் அரசகுமாரர்களும் அரசகுமாரிகளும் காதல் வயப்பட்டு சரித்திரம் படைத்ததுண்டு. அவர்களும் உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் இன்பம் போல வேறில்லை என்பதை உணர்ந்து காதலைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அத்தகைய அரச பரம்பரைகளைப் பின்னணியாகக் கொண்டு பல திரைப்படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அக்கதைகளில் காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்து இன்னிசையும் நடனமும் ஒன்று கலந்து வடிவமைக்கப்பெற்றதால் மீண்டும் மீண்டும் கண்டு களிக்க விருப்பம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் அமைந்தன. 

நம் கதாநாயகி, "இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்." என்று கேட்க அவளது காதலனான இளவரசன், "ஓ, பாட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டுப் பாடுகிறான்.


திரைப்படம்: சாரங்கதாரா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஆஆஆ
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சனி, 30 ஜனவரி, 2016

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது?

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ்வை அனுபவித்து இயற்கையோடியைந்து நன்கு வாழ்வின்றன ஆனால் மனிதன் மட்டும் எத்துணை நலன்கள் இருந்த போதும் திருப்தியடையாமல் இல்லாததை எண்ணி ஏங்கி இருக்கும் இன்பங்களை அனுபவிக்காமல் துன்புறுகிறான். தன்னிடம் இருக்கும் நலன்களை எண்ணிப் பார்த்து மகிழாமல் பிறரிடம் தன்னிடமில்லாத நலன்கள் இருக்கக் கண்டு பிறர் மேல் பொறாமை கொண்டு மனம் புழுங்குகிறான். 

ஏனைய உயிரினங்கள் ஐந்தறிவிற்கும் குறைந்தவை என்றும் மனிதனுக்கு ஆறறிவென்றும் நம் ஆன்றோர்கள் வகுத்த உண்மையை உணராமல் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறுவதுடன் பிற ஐந்தறிவு ஜீவிகளுக்கு இருக்கும் அளவும் அறிவுத் தெளிவு பெறாமல் அறியாமையில் மூழ்கிக் கிடந்து வாடுகிறான்.

இதன் காரணம் என்ன?

பிற உயிரினங்கள் தமக்கு இயல்பாகக் கிடைக்கும் உணவைத் தேடி உண்டு தன் உறவுகளோடும் பிற உயிரினங்களோடும் கலந்து பழகி மகிழ்கின்றன. இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவையும் தமது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அடுத்த வேளை உணவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உடலை மறைக்க உடையோ, வசிக்கப் பிரத்யேகமான விசேஷ இருப்பிடமோ வேண்டுவதில்லை. கிடைத்த உணவை அருந்திக் கிடைத்த இடத்தில் படுத்துறங்கிக் கவலையில்லாமல் வாழ்கின்றன. மனிதன் தனது தேவைக்கு மேல் பொன்னும் பொருளும், மாடி மனை வீடுகளும், நிலங்களும், வாகனங்களும், ஆடம்பர வசதிகளும் பெறுவதொன்றே பெரிய குறிக்கோளாகக் கொண்டு தன் அன்றாட வாழ்வில் பெறும் சிறு சிறு இன்பங்களைத் தொலைக்கிறான். 

வாழ்நாள் முழுதும் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பெரும்பாலும் மருத்துவச் செலவுகளுக்கும் வேண்டாத விஷயங்களுக்கும் வாரியிறைத்து விட்டுப் பெரும் துன்பமுற்று இறந்து போகிறான். தன்னுடைய வாழ்க்கை எத்துணை அற்பமானதாய்ப் போய்விட்டதே என மரணமடையும் தருவாயிலும் உணரத் தவறுகிறான். இத்தகைய அறியாமையில் மூழ்கி அல்லலுறும் வாழ்வு வாழ வேண்டுமா? அதனால் ஏதேனும் பலனுண்டா என எண்ணிப் பார்த்து மனிதன் பிற உயிர்களிடமிருந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்று அவற்றுடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ என்று பழகுகின்றானோ அன்றே துன்பம் நீங்கி இன்பம் பெற வழி பிறக்கும்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் 
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

என்று பாடி இவ்வுலக வாழ்வைத் தான் உயிரோடிருந்த 35 வருட சொற்ப காலத்திலேயே முழுமையாக அனுபவித்து சொர்க்கத்தை இங்கேயே கண்டு வறுமை தன்னை வாட்டிய போதிலும் வருந்தாமல் நம் நாட்டு மக்கள் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலை மாறப் பாடுபட்ட மஹாகவி பாரதியின் அறிவுத் திறனை நாமெல்லோரும் அடைய வேண்டாமா? இவ்வுலகில் இருக்கும் வரை நாமும் சுகமடைத்து பிறரையும் சுகமடையச் செய்து இவ்வுலகிலேயே சொர்க்கம் காண நாம்  முயற்சி செய்ய வேண்டாமா?

இளம் காதலர்கள் இருவர் கடலலைகள் துள்ளுவதிலும், நண்டு, வண்டு முதலான உயிரினங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதையும், குருவிகள் கூடு கட்டி இன்பமாய் வாழ்வதையும் கண்டு தாமும் இன்பமாய் வாழப் பழகுகின்றனர் இன்றைய பாடலின் வாயிலாக.


திரைப்படம்: தலை கொடுத்தான் தம்பி
இயற்றியவர்: 
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
ஆண்டு: 1959

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?

கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது
கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது

தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது?
தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது? அது
நில்லாத வேகத்திலே அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிகிட்டுக் குடும்பம் பண்ணுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?
கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?

கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன்
கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன் சிங்
கார மலர்த் தேன் நான்
கன்னி மலர் நாடியதும் வண்டு போலத்தான்

அஅஆ அஅஅஅஅஅ ஆ அஅஅஅஅஅ ஆஆஆ ஆஆ அஅஅஅஅஅஅஅ

பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும்பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது?
பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது? அது

வாழ்க்கை தன்னை உணர்ந்து கிட்டு மனசும் மனசும் கலந்து கிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

அஅஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ அஅஅ அஅஅஆ

வியாழன், 28 ஜனவரி, 2016

கண்ணீலே நீர் எதற்கு?

ஐம்புலன்களின் வழியே ஆசைகள் நம் மனதினுள்ளே புகுந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆசைவசப்பட்டவர்கள் தன் சுய உணர்வையே இழக்கும் நிலைக்கும் சில சமயங்களில் விதியினால் தள்ளப்படுவதுண்டு. விதி என்றால் என்ன? ஒரு கல்லை மேலே எரிந்தால் அது பூமியை நோக்கிக் கீழே விழுந்தே தீர வேண்டும். அது ஒரு விதி. அதே போல் ஆசைகள் துன்பத்தை விளைவிப்பது உறுதி. அதுவே விதி. அந்த விதியின் வலிமையை இளமையில் யாரும் உணர்வதில்லை. ஆசைவயப்பட்ட உள்ளம் அந்த ஆசை நிறைவேறுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு நம்மை செயல்பட வைக்கிறது. ஆசை நிறைவேறி விட்டால் ஆணவம் வந்து அறிவைத் திரையிட்டு மறைக்கிறது. ஆசை நிறைவேறாத நிலை வந்தால் கோபமும் துக்கமும் மேலோங்கி அறிவை 
மழுங்கடிக்கின்றன. அத்தகைய மோஹ மாயையில் மூழ்கி உழலும் மனம் எளிதில் தெளிவடைவதில்லை.

தெளிந்த சிந்தையே அமைதிக்கு வழி, அறிவுக்கு வழி, இன்பத்துக்கு வழி. அத்தகைய தெளிந்த சிந்தை வேண்டின் ஆசைகளைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம். அவசியமான, நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்தியடைவதே ஆசைகளை அடக்குவதன் அடையாளம். ஒருவரும் உணவின்றி உயிர் வாழ்தல் அரிது. அவ்வுணவும் வயிறு நிறையுமளவே உண்ண இயலும். எண்ணிறந்த செல்வத்தை நியாயாற்ற முறையில் பேராசையால் சேர்த்து வைத்தவரால் அதிகம் உண்ண இயலுமா? உண்டால் செரிக்குமா? 

செல்வம் சேர்க்கும் ஆசையைக் காட்டிலும் அதிக வலுவானது காதல் ஆசை. அதுவும் வாலிப வயதில் அது எல்லை மீறவும் கூடும். ஆசை அறிவை மழுங்கச் செய்து தன் மேல் காதல் கொள்வதாகக் கூறும் ஒருவரது உண்மை நிலையை உணர மறுக்கும் நிலையில் மனம் ஆசைவயத்தில் செயல்படுகிறது. தன்னை உண்மையாகக் காதலிப்பதாக உறுதியளித்தவர் மனதில் உண்மையில்லை எனும் தீர்மானத்துக்கு மனம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வருகையில் அங்கே உயிர் துடித்து உள்ளம் துவண்டு வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு ஏற்படுமளவு அறிவு முற்றிலும் மழுங்கி விடுகிறது. 

ஒரு செல்வந்தரின் மகன் தன் தந்தையிடம் பணத்தை வாங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறான். தான் பார்க்கும் பெண்கள் பலரையும் தொடர்ந்து சென்று அவர்களோடு பழகிப் பொழுதைக் கழிக்கிறான். இடையில் தன் நண்பனின் தங்கையைக் கண்டு அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறான். இதுகாறும் தான் சென்ற பாதை தவறு என உணர்ந்து தன் காதலியுடன் சேர்ந்து வாழக் கனவு காண்கிறான். ஆனால் அவனது தந்தை அவனது தவறான போக்கைக் 
கேள்விப்பட்டு அவன் திருந்தி வாழத் தன் சகோதரியின் மகளை அவனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி அதை அவன் மறுக்கவிடாமல் செய்வதற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் சகோதரியின் மகள் பெயரில்  எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். இடையில் பழைய துஷ்ட சகவாசத்தால் ஏற்பட்ட சில சகாக்கள் இவனைப் பெரும் குற்றச் செயலில் மாட்ட வைக்க முயன்று அவனிடன் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதனால் அவன் தனது அத்தை மகளிடமிருந்து அவர்களுக்குத் தரத் தேவையான பணத்தைப் பெற வேண்டி அவளை விரும்புவது போல் காட்டிக் கொள்கிறான்.

இந்நிலையில் அவனது காதலியின் அண்ணன் இவனது செயல்களில் சந்தேகம் கொண்டு தன் தங்கையிடம் தனது நண்பனின் மோசத்தைப் பற்றிச் சொல்ல அந்தப் பெண்ணின் மனம் கதறுகிறது. கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவளுடன் சேர்ந்து அவளது அண்ணனும் அழுகிறான். அவர்கள் இருவரது உள்ளங்களுள் குமுறிப் பெருக்கெடுக்கும் உணர்ச்சி வெள்ளத்தைக் கவிஞர் வார்த்தைகளால் வடிக்க இந்தத் துடிப்பு மிக்க பாடல் உருவானது.


திரைப்படம்: போலீஸ்காரன் மகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:  எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

இன்பமெனும் மொழியெதற்கு?
செல்வத்தில் மிதப்பவர்க்கு
துன்பமென்ற சொல்லெதற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

கையிலே வளைவெதற்கு?
காதலியை அணைப்பதற்கு
காலிலே நடையெதற்கு?
காதலித்து திரிவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பாசமென்ற சொல்லெதற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆசை கொண்ட வாழ்வெதற்கு?
அன்றாடம் சாவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பூவிலே தேனெதற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு
வண்டுக்கு சிறகெதற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

புதன், 27 ஜனவரி, 2016

பண்ணோடு பிறந்தது தாளம்

பெண்களை தெய்வங்களாகப் போற்றி வணங்கிப் பூசித்துப் பெருமை கொள்ளும் அறிவிற் சிறந்த மாந்தர் வாழும் நாடு நமது பாரத நாடு. அத்தகைய மாண்பின் மகிமையால் நம் நாடு எத்தனையோ அன்னிய ஆக்கிரமிப்புகளையும், பொருளாதார, கலாச்சார சீர்கேடுகளையும் சந்தித்த போதும் அத்தகைய தீமைகளின் பிடியிலிருந்து மீண்டெழுந்து தலை நிமிர்ந்து வீறுநடை போடும் சக்திகொண்டு விளங்குவதன் ரகசியம் நம் தேசத்துப் பெண்களின் ஒழுக்க நெறிகளும் இல்லற நிர்வாகத் திறனும் ஆகும். இதனை அறிவுடையோர் எவரும் தயங்காது ஒத்துக்கொள்வர். நாம் ஒவ்வொருவரும் பிள்ளைப்பிராயத்திலிருந்து வளர்ந்து ஆளாகி வாழ்வில் சிறந்து விளங்க நம் ஒவ்வொருவரின் தாயார் எத்தனை சீரிய பராமரிப்பை நல்கியுள்ளார் என்பதை எண்ணிப் பார்த்தால் பெண்ணின் பெருமை விளங்கும். 

தன் கணவன் ஈட்டித் தரும் பொருள் அளவில் சொற்பமேயாயினும் அதிலும் சிறிதளவேனும் மிச்சம் பிடித்து, செலவைக் கட்டுப்படுத்தித் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கும் பொறுப்பு நம் நாட்டுப் பெண்மணிகளிடம் நிலைபெற்று விளங்கும் தலையாய மேலாண்மைத் திறமாகும். இத்தகைய திறம் வாய்ந்த பெண்கள் உலகின் பிற நாடுகளில் குறைவே. நம் நாட்டின் பண்பாடு தொன்றுதொட்டு சிறந்து விளங்கிடக் காரணம் பெண்களுக்கு நாமனைவரும் தரும் உயர்ந்த மரியாதையே ஆகும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

என வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்துச் சென்ற இலக்கணப்படி நமது நாட்டின் பெண்கள் நடந்து வருவதாலேயே பெருமை பெறுகின்றனர்.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா வேற்படையும் 
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை யரசு.

எனப் புகழேந்திப் புலவர் தன் நளவெண்பா நாயகி தமயந்தியைப் புகழ்கிறார். தமயந்தியானவள் பெண்களுக்கு அமைய வேண்டிய அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணங்களும் சிறந்து விளங்கி ஒரு நாட்டின் ரத, கஜ, துரக பதாதிகள் என அறியப்பட்ட நான்கு படைகளுக்கொப்பாக விளங்கிட, அவளது ஐம்புலன்களும் அறிவிற் சிறந்து நிற்கும் அமைச்சர்களுக்கொப்பாகத் திகழ, அவள் நடக்கையில் ஜல் ஜல் என ஆர்ப்பரிக்கின்ற அவளது காற்சிலம்பே போர் முரசாக விளங்க, அவளது இரு கண்களும் வேலும் வாளூமாகப் போர் புரியும் பெண்மையாகிய அரசு அவளது முழுமதியையொத்த முகமாகிய வெண்கொற்றக் குடையின் கீழ் ஆளுகிறது என அழகிய தமிழ்மொழியில் விளக்குகிறார்.

இந்த நான்கு குணங்களுள் மிகவும் இன்றியமையாதது மூன்றாவது குணமான நாணம். நாணமே பெண்மையின் அழகுக்கு அணிகலனாகிறது, பெண்ணின் அடக்கத்தையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நாணமுள்ள பெண்களையே ஆடவர் விரும்பி மணக்க முன்வருகின்றனர் ஏனெனில் நாணம் எனும் குணம் நிறையப் பெற்ற பெண் பிற மூன்று குணங்களையும் அடைந்திருத்தல் உறுதி. நாணம் என்பது தம்மிலும் மூத்தோரிடத்தில் அவள் செலுத்தும் மரியாதை, பக்தி மற்றும் தன்னில் இளையோரிடம் காட்டும் அன்பும் கருணையும் ஆகிய அத்துணைப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட ஒப்புயர்வற்ற குணமாகும்.


திரைப்படம்: விடிவெள்ளி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: ஜிக்கி, பி.பி. ஸ்ரீனிவாஸ்

ம்ஹ்ம்ம் ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்ம்

பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
மண்ணோடு மலர்ந்தது மானம் குல
மகள் கொண்ட சீதனம் யாவும்

பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோம் என்றே உள்ளம் ஓடும் வார்த்தை
சொல்லாமலே இதழ் மூடும்

ம்ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ம்ம் ம்ஹ்ம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு
பழகாத கல்விக்குத் தானிந்தப் பள்ளி

காணாத கதை இங்கு காண்போம் அதைக்
கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இங்கு காண்போம்

அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்

திங்கள், 25 ஜனவரி, 2016

உன்னை நினைக்கையிலே

இவ்வுலக வாழ்விலேயே சொர்க்கம்,நரகம் இரண்டையும் நாம் அனுபவிக்கிறோம். யாரும் இறந்த பின்னர் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பின்னர் சொர்க்கம் போவதைப் பற்றி எண்ணி மயங்கவும் வேண்டாம், நரகம் போவதைப் பற்றி வருந்தவும் வேண்டாம். இறந்த பின் வாழ்வு உண்டு என்போரும் இல்லை என்போரும் தம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவ்வாறு சொல்கின்றரே அல்லாது அறிந்து சொல்வதில்லை. மறு பிறவியிலும், இறந்த பின் எய்தும் சொர்க்க நரகங்களிலும் நம்பிக்கை வைப்போரும் நம்ப மறுப்போறும் இரு சாராருமே அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று உளமார ஒத்துக் கொள்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர். 

யாரோ எவ்வாறோ இருக்கட்டும். அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தே எவரும் இவ்வுலகில் நடைபெரும் எல்லா சம்பவங்களிலிருந்தும் பெறும் அனுபவங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.  அவ்வனுபவங்களிலிருந்து கிடைக்கும் இன்பத்தை மனதார உணர்வோர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

வாழ்வில் எவ்வுயிர்க்கும் காதலைப் போன்ற இன்பம் பயக்கும் சொர்க்கம் வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். முதன் முதலில் ஒருவருக்குக் காதல் மலரும் பருவம் இளமை குலுங்கும் வாலிபப் பருவமாக இருப்பதாலேயே காதலின்பம் எல்லையில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. காதலில் முழ்கிய ஒரு வாலிபன் தனது காதலியைப் பற்றி எண்ணுகையிலே காணும் இன்பம் அவனது கற்பனை வளத்திற்கேற்றவாறு சுவை தருகிறது. காதலைப் பற்றிக் கதைகள், காவியங்கள் பல இருந்த போதும் திரைப்படங்களில் உயிரோட்டத்துடன் காதல் காட்சிகளைப் பார்த்து ரசிக்கையில் ஏற்படும் மெய்சிலிர்ப்புக்கு ஈடாகா என்பது அனேகர் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். 

அத்தகைய காதல் காட்சிக்குப் பாடல் இனிமையாக அமைந்து விட்டால் கேட்கவே ஆனந்த பரவசமாக இருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் கற்பனை வளத்தில் கவினுற உருவாகி, இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் கைவண்ணத்தில் இசையமைந்து தங்கக் குரலோன் டி.எம். சௌந்தரராஜனின் இன்பக் குரலில் பாடல் அமைந்துள்ளதென்றால் அதில் இனிமை பொங்கி வழியும் என்று சொல்லவும் வேண்டுமோ?


திரைப் படம்: கல்யாணிக்கு கல்யாணம் (1959)
இயற்றியவர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னை நினைக்கையிலே
உன்னை நினைக்கையிலே 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
பொன்னை உருக்கிய வார்ப்படமே! அன்பு 
பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே!

உன்னை நினைக்கையிலே

வட்டக் கருவிழி மங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆ
வட்டக் கருவிழி மங்கையே ஒளி 
கொட்டும் இரவுக்கு தங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக் 
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே கண்ணே! 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
உன்னை நினைக்கையிலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று நம் தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் கூறுகின்றனர். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சற்றே மாறுபாடு எழுமாயின் அங்கே காதலர்கள் இடையே ஊடல் ஏற்படுகிறது. கருத்து வேறுபாடு களையப்பட்டு அல்லது உடன்பாட்டுக்கு வந்து ஊடல் தீர்ந்தால் கூடல் ஏற்படுகிறது. அப்போது ஊடலால் ஏற்பட்ட சிறு துன்பமும் மறைந்து மீண்டும் வலுவான கருத்தொருமித்த இன்பம் பிறக்கிறது. 

காதலர்களாயினும் கணவன் மனைவியாயினும் இருவருக்கும் எப்போதும் ஒரே கருத்து எல்லா விஷயங்களிலும் நிலவுவதில்லை. வேறுபாடுகள் எப்பொழுதும் எழக்கூடும். அத்தகைய தருணங்களில் காதலர்களுள் ஒருவர் மற்றவரது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய மதிப்பளித்து ஏற்றுக்கொள்வது உண்மைக் காதல். அது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை மாறாது நிலைபெற்றிருக்க வல்லது. அவ்வாறன்றி ஒருவர் கருத்து வேறுபாடுகளை மற்றவர் ஏற்றுக்கொள்ள மறுக்கையில் அங்கே உடன்பாடு ஏற்படுவதில்லை. அதனால் பிரிவு ஏற்படுகிறது.

சிலப்பதிகார காவியத்தில் கோவலனும் மாதவியும் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டு உடன்பாட்டை எட்டாத சூழ்நிலையில் அவர்களிடையே நிரந்தப் பிரிவு ஏற்பட்டது. ஆயினும் அங்கே கோவலன் கண்ணகியுடன் சேர்ந்து வாழ வழி பிறந்தது. அது காவியம், கதையானதால் அதுகுறித்து சர்ச்சை செய்வது பலன் தராது. 

நிஜ வாழ்வில் காதல் கொண்ட இருவர் கருத்து வேறுபடுகையில் இருவருக்கும் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஊடல் கொண்டு பிரிந்த காதலர் ஒருவரையொருவர் எண்ணி ஒன்றுபட வழியென்று பிறக்கும் என்று ஏங்கி மயங்கி வாடுவதே உண்மைக் காதலர்களின் இயல்பு. 

ஊடலின் காரணமாய் உண்டான காதலியின் பிரிவினால் மனம் துயருற்று வருந்தி ஏங்கும் காதலன் ஒருவன் தன் காதலியை நினைத்து வாடுகிறான்.

ஊடலால் தன்னை விட்டுப் பிரிந்த காதலி தன்னை வந்து சேர வேண்டுமென உளமார வேண்டி அவளிடன் இரைஞ்சுகிறான் அக்காதலன்.  அவனது உணர்வை வார்த்தைகளால் கவிஞர் வடிக்க அதனைத் தேனொழுகும் தன் இனிய குரலில் பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி பாட அங்கே உண்மைக் காதல் உயிர் பெறுகிறது. 

சிறு பாலகனாக இருந்த காலத்தில் (1959) அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன வர்த்தக சேவை எனும் தமிழ் வானொலியில் ஒலிபரப்பக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தெள்ளமுதப் பாடல் உங்களுக்காக.


திரைப்படம்: அவள் யார்?
இயற்றியவர்:  வித்வான் வே. லட்சுமணன்
இசை:  ராஜேஸ்வர ராவ்
பாடியோர்:  Pandit Panikkrahi பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி
ஆண்டு: 1959

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?

வாடாத பூவும் மலராத போதே
வாடாத பூவும் மலராத போதே
பாடாது வண்டும் சூடாமலே
பாடாது வண்டும் சூடாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆனந்தமே தரும் வாழ்வில்
ஆனந்தமே தரும் வாழ்வில்
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
நீயாக வாராய் நாணாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே?

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஆனந்த நடமிடும் பாதன்

"நாம் ஒன்று நினக்க்க தெய்வம் ஒன்று நினைக்கிறது" என நாம் பல சந்தர்ப்பங்களில் நாம் எண்ணிய காரியம் நிறைவேறாது போனால் அலுத்துக் கொள்கிறோம். தெய்வம் இல்லை என மேடைகளில் உரத்த குரலில் முழக்கமிடுவோரும் தனிமையில் இத்தகைய சிந்தனையில் ஆழ்வதுண்டு. இத்தகைய சலிப்பு ஏற்படுவது அனவருக்கும் இயல்பான ஒன்றே. இதற்காக நாம் பெரிதாக வருத்தப்பட்டுப் பயனில்லை. பிறந்தவர் எவரும் இறவாமல் வாழ்வது இயலாது எனும் பொது விதி இருந்த போதிலும் மார்க்கண்டேயன் போல் இறவாமல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைபெற்று வாழும் யோகிகளும் உளர் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சமீபத்தில் சில நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் வழியில் தொலைவிலுள்ள ஒரு மரத்தடியில் சித்தர் ஒருவர் அமர்ந்திருக்கக் கண்டு தன் கைப்பேசியில் அவரைப் படம் பிடிக்கையில் திடீரென அச்சித்தர் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தில் பறந்து சென்றது ஒரு வியக்கத்தக்க சம்பவம். 


ராம் பஹதூர் பம்ஜன் எனும் 15 வயது சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக உணவோ நீரோ உட்கொள்ளாமல் நேபாளத்தில் ஒரு போதி மரத்தடியில் தவம் செய்யும் செய்தி அடுத்த அதிசயம் ஆகும். இச்சிறுவனை மக்கள் புத்தரின் மறு அவதாரம் என நம்புகின்றனர்.


ப்ரஹலாத் ஜானி எனும் 80 வயதுக்கு மேல் ஆன தாத்தா ஒருவர் தன் 12 வயதுக்குப் பின் உணவோ நீரோ அருந்தியதில்லை ஆனால் மருத்துவர் 10 நாட்களாக அவரை பரிசோதித்து அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர். 


ராம்பாவ் ஸ்வாமி என்ற பெயர் கொண்ட 63 வயதான மற்றொரு யோகி உணவும் நீரும் இன்றியே உயிர்வாழும் சக்தி பெற்றவர் நெருப்பில் படுத்துப் புரள்கிறார். தினமும் உலக நலன் வேண்டி அக்னி ஹோமம் செய்கையில் நெருப்புக்குள்ளேயே கையை விட்டு நெய்யில் உருட்டிய அன்னத்தை ஆகுதியாக இடுகிறார்.


அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எனும் திருவள்ளுவர் மொழி அறிவுறுத்துவதாவது தன்னுயிர் போல் மன்னுயிர் கருதி மற்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மையே செய்பவரே அந்தணர். ராமாயண காவியத்தில் ராமனுக்கு குருவாக அமைந்து திருமணம் நடத்தி வைத்த விஸ்வாமித்திரர் பிறப்பால் ஷத்திரியர். பின் மன்னராயிருக்கையில் வசிஷ்ட முனிவரின் சக்தியைக் கண்டு அவர் போல் தானும் பிரம்மரிஷியாக வேண்டும் எனத் தவம் செய்து உயர்வு பெற்று பிராம்மணரானார் என்பது பிரசித்தம். மேலும் தமிழைப் படைத்த அகத்தியர் அந்தணர். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் ஒரு அந்தணர். பதினெட்டு சித்தர்களும் அந்தணர்களே. பெரியாரின் உற்ற தோழர் ராஜாஜி ஒரு அந்தணரே. அவர் மஹாத்மா காந்தியைத் தன் சம்பந்தியாக ஏற்றுக் கொண்டார். மஹாகவி பாரதியார் ஒரு அந்தணரே.

இவ்வாறு உலகுக்கும் தமிழுக்கும் உற்ற தொண்டு செய்வோர் பலர் அந்தணராயிருக்கையில் ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக அந்தணர்களை எதிர்த்து துர்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  தீண்டாமை என்பது தீமையே அது எந்த சாதியினருக்கெதிராக இருப்பினும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு சாதி மத வேற்றுமை களைந்து பாரதத் தாயின் புதல்வர்கள் எனும் ஓரே கொள்கையில் நிற்பதே அனைவர்க்கும் நலம் தரும்.

நாம் பொருளாசை, பெண்ணாசை, பதவி ஆசை போன்ற அற்ப ஆசைகளைத் துறந்து தவம் மேற்கொண்டோமாயின் நாமும் மேற்கண்ட யோகியர் போல சக்திபெற்று இறவா வாழ்வு வாழ்தல் சாத்தியமே. 

அத்தகைய ஞான மார்க்கத்தில் செல்ல நம் எல்லோருக்கும் தில்லையில் நடனமாடும் சிதம்பர நாதன் அருள் புரிவானாக.


திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
ஆண்டு: 1942
ராகம்: கேதார கௌளளை, தாளம்: ஆதி

ஆனந்த நடமிடும் பாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 
கானம் தனைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன் 

தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 பக்தர்கள் முனிவர்கள் இமையோர்களும் புகழ் 
 பாடவும் குணசேர் சடைமதியாடவும் 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

சனி, 23 ஜனவரி, 2016

கருணை தெய்வமே கற்பகமே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 23, 2014

இவ்வுலகில் பூதவுடல் கொண்டு வந்து விழுந்த நாள் முதல் என்றென்றும் ஓர் நாளும் தவறிடாது இசையிலே மிதந்து என்தன் துயரெலாம் இசையென்னும் துணியினால் துடைத்தே வாழ்ந்து வருகிறேன். இசையில் நான் மேதையில்லை எனினும் பல இசைமேதைகள் வாய்ப்பாட்டும் வாத்தியங்கள் கொண்டும் வாசிக்கும் பாட்டெலாம் என் வாய்ச் சொற்கள் வழியினானும் மனதினுள்ளும் எப்போதும் வாசித்தே மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்க, குடந்தை மாநகரில் குடியிருந்தேன் சில காலம் (1980 முதல் 1985 வரை) என் அண்ணனுடன். அப்பொழுதொரு சமயம் அருகிலுள்ள திருவையாறு நகரில் தியாகபிரம்மோற்சவம் நடைபெறக் கேட்டு அங்கே சென்று ஒரு நாள் முழுதும் 
பல பிரபல இசை மேதைகள் ஒன்று சேர்ந்தும் தனித்தனியாகவும் பொழிந்த இசை மழையில் சுகமாய் நனைந்து திரும்பினேன்.

சில காலம் கழித்து அக்குடந்தை மாநகர் தன்னில் நற்செயல் புரிந்து சேவை செய்வதே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு வாழும் ஊர்ப் பெரியோர் ஒன்று சேர்ந்து தியாகராஜர் நினைவைப் போற்றும் விதமாகக் குடந்தையிலே ஓர் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அவ்விழாவில் டி.கே. பட்டம்மாள் அவர்களது சகோதரர் டி.கே. ஜெயராமன் மற்றும் மஹாராஜபுரம் சந்தானம் முதலான பல இசை மேதைகள் வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் தலைமையில் பங்குபெற்று இசை மழை பொழிந்தனர். இடையில் ஓர் அற்புதமான இசைக் கச்சேரியை அங்கு நான் கண்டும் கேட்டும் மனம் மிக மகிழ்ந்தேன். அது மாண்டொலின் ஸ்ரீநிவாசன் இசைமழை 
பொழிந்த கச்சேரி! என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத அளவு மகிழ்ச்சியை அடைந்த நாள் அன்று தான். 

மாண்டொலின் எனும் மேல் நாட்டு இசைக் கருவியில் நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க விஞ்ஞான ரீதியில் பன்னெடுங்காலமாக மேதைகள் பலர் கூடிப் பயிற்று வைத்த கர்நாடக சங்கீதத்தைக் கரைத்துக் குடித்த பத்துப் பன்னிரண்டு வயதே நிரம்பிய மேதையாம் ஸ்ரீநிவாசன் எனும் அச்சிறுவன் வாசித்த இசையைக் கேட்டு அங்கிருந்த மற்ற இசை மாமேதைகள் உட்பட மக்கள் கூட்டமும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் திளைத்து ஒவ்வொரு பாடல்முடிவிலும் இடையில் முக்கியக் கட்டங்களிலும் எழுப்பிய கரகோஷ ஒலி இன்னமும் என் காதுகளில் 
ரீங்காரமிடுகிறது.

அதன் பின்னர் 1985 முதல் 1995 வரை சென்னை மாம்பலம் மற்றும் அம்பத்தூரில் நான் என் மனைவியுடன் குடி புகுந்து வாழ்ந்து வந்தேன். 

1983 ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து பல்லாண்டுகள் குழந்தைப் பேறின்றியிருந்த நானும் என் மனைவியும் 

"நானொரு குழந்தை நீயொரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி 
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி"

என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி படத்திற்காகக் கவிஞர் வாலி இயற்றி டி,எம். சௌந்தரராஜன் பாடிய பாடலுக்கேற்ப அது குறித்துப் பெரும் கவலையேதும் கொள்ளாமல் வாழ்ந்து வரும் நாளில் என் மனைவி, பிள்ளைப் பேறு வேண்டிப் பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வரலாமென அழைத்ததால் சென்றேன். அவ்வாறு செல்கையில் ஓர் நாள் வலசரவாக்கத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் தன் மனிவியுடன் வந்த ஸ்ரீநிவாசனைக் கண்டோம். அழகிய மனைவி. திருமணமாகி சில தினங்களே ஆகியிருக்கும் எனப் புரிந்து கொண்டேன். 

என்னைக் கண்டதும் புன்முறுவல் பூத்து அடையாளம் கண்டுகொண்டான் ஸ்ரீநிவாசன். வாழ்க பல்லாண்டு என மனதார வாழ்த்திச் சென்றோம். சில நாட்கள் கழித்துக் காஞ்சிபுரம் சென்று காஞ்சிமாமுனிவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி பெற்ற பின்னர் எனக்கொரு மகன் பிறந்தான். அதன் பின்னர் காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களது 100வது ஆண்டு நிறைவன்று அவருக்குத் தங்கக் காசுகளால் கனகாபிஷேகம் செய்வதைத் தொலைக் காட்சியில் ஓர் நாள் கண்ட பின்னர் காலத்தின் கட்டாயத்தால் காஞ்சியில் குடிபுகுந்தேன். காஞ்சியில் இருக்கும் கோவில்களிலும் சங்கர மடத்திலும் ஆண்டாண்டு தோறும் ஸ்ரீநிவாசனின் மாண்டொலின் கச்சேரி தவறாது இடம் பெற்று வருவது வழக்கம். என் மகன் அவனது பரம ரசிகன். கச்சேரி எப்பொழுது நடந்தாலும் தவறாது சென்று முழுவதும் கேட்டுப் பின்னர் ஸ்ரீநிவாசன் அவர்களுடன் சில நிமிடங்கள் அளவளாவி விட்டே வீடு திரும்புவது என் மகனின் வழக்கம்.

என் மகனுக்கொப்பான அந்த மாமேதை ஸ்ரீநிவாசனின் மரணச் செய்தி கேட்டு மனம் மிகவும் நொந்தேன். நான் தமிழ் இலக்கணம் படித்திருந்தாலும் ஒரு கவிஞன் என்று சொல்லுமளவு பயிலவில்லை. இருப்பினும் என் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கவிதை வடிவிலே ஸ்ரீநிவாசன் நினைவுக்காக அர்ப்பணிக்கிறேன்.

குடந்தையில் வாழ்ந்தகாலை கோபுரத் தரிசனம் பல்
குறையிலாக் கலைகள் கோவில் பூசைகள் தேரோட்டங்கள்
திருவிழாக் கோலம் பூண்ட உலகினில் மகிழ்ந்த நாளில்
திருவையாறு சென்றே தியாகபிரம்மோற்சவம் கண்டேன்.

தியாகோற்சவம் முடிந்து சிலதினம் கழிந்த காலம் 
தியாகராஜர் நினைவில் நடந்ததோர் இசைவிழா அக்
குடந்தைமா நகரிலேயே கொண்டாட்ட மாகவன்றோ!
அவ்விழா தன்னிலேயோர் பாலகன் இசைத்தான் அந்த

மாண்டொலின் என்று சொல்லும் கருவியில் நம் சங்கீதம்
மனதிலே மகிழ்ச்சி பொங்க ரசித்திட்டேன் இசைவிழாவை
மாண்டொலின் ஸ்ரீநிவாசன் மனம்குடி புகுந்தான் பின்னர்,
நீண்டநாள் கழிந்தகாலை காஞ்சிமாநகரில் வாழ்ந்தேன்.

காஞ்சியின் கோவில் மற்றும் காஞ்சிமா முனிவர் வாழும்
கடவுளர் தொழுதென்றேத்தும் மடமதில் அவ்வப்போழ்து
மீண்டுமக் கருவிதன்னை மீட்டியே இசை பொழிந்தான்
மாண்டொலின் கருவி கண்ட மாமேதை ஸ்ரீநிவாசன்!

கலைமகள் ஈந்த மைந்தன் கண்மணி போன்ற பிள்ளை
கைகளில் மந்திரத்தை வைத்தது யார் என்றெண்ணி
மலைத்திட்ட காலமுண்டு முன்பொரு சமயந்தன்னில்
மலைப்புமே நீங்கி மைந்தன் இசையிலே மகிழும் நாளில்

திருமணம் முடிந்த பின்னர் இறவனின் அருளை வேண்டி
இருவரும் வந்த அந்த ஆலயம் தன்னில் என்றன்
மனவியும் நானும் வந்த சமயத்தில் என்னைப் பார்த்தே
மனமகிழ்ச் சிரிப்பு ஒன்றால் அறிந்திட்டான் என்னை மைந்தன்.

வாழ்கவே மனிவியோடும் பன்னெடுங்காலம் என்றே
வாழ்த்தினேன் அன்று பின்னர் ஒரு சில ஆண்டு காலம்
கடந்திற்றே கவலையேதும் இன்றியே வாழ்க்கை செல்ல
காலனின் கழுகுக் கண்கள் கடிதென வீழ்ந்ததாலோ

மைந்தனும் மனிவியோடு வாழ்ந்திட இயலாதென்னும்
மாபெரும் துன்பம் வந்தே மகனுமே துயரிலாழ்ந்தான்
இப்படிச் சிறிது காலம் ஏக்கமே மனதில் கொண்டே
இருந்திருந்தென்றும் வாடி என்ன செய்தானோ மைந்தன்?

திடுமென ஓர்நாள் அந்தச் செய்தியும் வந்ததே அத்
தீமையே தந்த செய்தி திடுக்கிட வைத்ததே என்
சிந்தையும் கலங்கிச் செய்கை மறந்திடும் நிலைவந்தே நான்
சிலையென ஆனேன் என்னுள் செய்வதறியாமையாலே.

"மாண்டொலின்" என்னும் சொல்லே மாண்டது இன்றே யென்று
மாபெரும் கலைஞன் சங்கர் மஹாதேவன் சொல்லக் கேட்டு
மனதிலே துயர வெள்ளம் மடைதிறந்தோடக் கண்டேன்;
மயக்கத்தில் மதியிழந்தேன் மற்றெஃதும் நாடா நின்றேன்.

இசையிலே மூழ்கி என்றும் உலகினை மறந்திருந்தேன் 
இம்சைகள் ஒன்றே சேர்க்கும் அரசியல் மறக்கவென்றே;
இசையில் நான் வந்ததாலே ஏற்பட்ட மாற்றமிஃதோ?
என் விதி இசையுமிங்கே மாண்டதே இனி என் செய்வேன்?

அம்மாமேதை ஸ்ரீநிவாசன் இசைத்த பாடலொன்றை இன்றைய பாடலாகத் தருகிறேன். கருணை தெய்வம் கற்பகவல்லி அம்மேதைக்கு முக்தியளித்து அருள வேண்டுகிறேன்.



ஆல்பம்: நேயர் விருப்பம்
பாடல்: கருணை தெய்வமே
இயற்றியவர்: மதுரை ஸ்ரீநிவாசன்
ராகம்: சிந்து பைரவி - 10 நாடகப்பிரியா ஜன்யம்
தாளம்: ஆதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 க2 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ நி2 ஸ்

பல்லவி:

கருணை தெய்வமே கற்பகமே!
கருணை தெய்வமே கற்பகமே!
காண வேண்டும் உன்தன் பொற்பதமே என்
கருணை தெய்வமே கற்பகமே!

அநுபல்லவி:

உறுதுணையாகவென் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வெறே யாரோ என் தாய்

சரணம்:

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்;
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்;
நானும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்;
நலமுடன் வாழ அருளல் வேண்டும்.

வியாழன், 21 ஜனவரி, 2016

என் நெஞ்சு உன்னையகலாது

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 17, 2014
மனிதர்களுடன் பழகுவதை விட மரம், செடி, கொடிகளுடனும் விலங்குகளுடனும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாகும். மனிதர்கள் பெரும்பாலும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பழகுவதால் அவர்களது சுயநலம் நமக்குத் தெரிகையில் மனம் துயரப்படுகிறது, ஆனால் மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகிய உயிர்கள் வாய் விட்டுப் பேசுவதில்லையானாலும் மௌன மொழியில் அவை பேசும் செய்திகளை நாம் பழகப் பழக அறிந்து கொள்ளலாம். அத்தகைய அறிவு நாம் ஒவ்வொருவரும் பெறத் தக்கதே. மரம், செடி, கொடிகள் மற்றும் விலங்குகளின் பாஷை நமக்குப் புலப்பட்டு நாம் அவர்களுடன் மனம் விட்டுப் பழகப் பழக சொர்க்கமே தெரியும் என்பதை இயற்கை விஞ்ஞானிகளும், மிருகங்கள் நலம் பேணும் ஆர்வலர்களும் அறிவர். 

மரங்கள் வெயிலில் வாடுவோர்க்கு நிழல் தரும். மழையில் நனைவோருக்கு ஒதுங்க இடமளிக்கும். மரங்கள் பகலில் காற்றிலிருக்கும் கரியமில வாயுவை (கார்பன் டையாக்சைடு) இலைகளில் வழியே உட்கிரகித்துப் பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியிடுவதால் காற்றை சுத்தம் செய்து ஆரோக்கியம் பெருக உதவுகின்றன. மேகங்களை ஈர்த்து மழையுண்டாகச் செய்வதுடன் பல்விதமான, காய்கள், கனிகள், மலர்கள் முதலிய அரிய பொருட்களை நமக்குத் தருகின்றன. புளிய மரம், மாமரம், பலா மரம், கொய்யா மரம், ஆப்பிள் மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், வாழை மரம் எனப் பலவகை மரங்கள் காய் கனிகள் தருகின்றன. வாத நாராயண மரம், வன்னி மரம், புன்னை மரம் முதலியவை அழகிய மலர்களைச் சொரிந்து இயற்கையை வளமாக்குகின்றன. தேக்கு, வெண் தேக்கு போன்ற மரங்கள் மேசை, நாற்காலிகள், கதவுகள் போன்ற பொருட்களைச் செய்ய உதவுகின்றன. பல வித மரங்கள் சிற்ப வேலைப்பாடுகள் செய்ய உதவுகின்றன. கருவேல மரம் போன்ற பல மரங்கள் விறகாக எரிக்க உதவுகின்றன. சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் கட்டுமானப் பணிகளுக்கு உதவுகின்றன.

மரங்களைப் போலவே செடி கொடிகளும் பல்வேறு வகையான கறி காய்கள், பழங்கள், மலர்கள் முதலியவற்றைத் தருவதுடன் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி மாசின்றிப் பாதுகாக்கின்றன.

மிருகங்கள் நம்முடம் எளிதில் பழகாவிட்டாலும் பழகிய பின்னர் அவை நம் மீது பொழியும் அன்பு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்குத் தூய்மையாகவும், இன்பம் தருவதாகவும் அமையும். மிருகங்கள் நிறைந்த வனப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையாகவே அன்பு நிறைந்தவர்களாக இருப்பர். அதிலும் குறிப்பாக மனிதர்களே இல்லாத வனப்பகுதியில் வாழும் மனிதர்கள் பெரும்பாலும் மிருகங்களுடன் பழகி வாழ்வதால் அவர்கள் மனதிலும் கள்ளம் கபடு இரா. உண்மை அன்பை அத்தகைய மனிதர்கள் நிச்சயம் தருவர்.

ஆதிகாலத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களுடன் ஒன்றாய் வாழ்ந்த நிலை மாறிக் காடுகளை அழித்து வீடுகள் கட்டி வாழத் தொடங்கிய நாள் முதல் அவர்களுள் போட்டி பொறாமைகளும், பொய் சூது சூழ்ச்சிகளும் பெருகிவிட்டன. மனிதனின் மனதில் கள்ளத்தனம் குடிபுகுந்தது. மற்றவரை ஏய்த்துப் பிழைக்க அவன் தெரிந்து கொண்டான். அதனால் நகரங்களில் வாழும் அனைவரது வாழ்க்கையும் நரகமானது. 

அத்தகைய நகரமொன்றில் வாழும் குடும்பத்திலிருந்து ஒரு இளம் பெண் வனத்தில் மாட்டிக் கொள்கிறாள். எதிர் பாராத விதமாக அவ்வனத்தில் தனியே வாழும் வாலிபன் ஒருவனின் துணை அவளுக்குக் கிடைக்கிறது. அவளை அவன் அன்புடன் பாதுகாக்கிறான். அவள் பேசும் மொழி அவனுக்குத் தெரியவில்லையாயினும் அவளது மனதின் மொழியை அவன் அறிந்து அவளிடம் அளவிடற்கரிய அன்பைச் செலுத்துகிறான். அவள் அவன் மேல் அன்பு கொண்டு தன் மொழியை அவனுக்குக் கற்பிக்கிறாள். அவனை நாளடைவில் மனதாரக் காதலிக்கிறாள். 

அவனுடன் வனமெங்கும் சுற்றித் திரிந்து மகிழ்கிறாள். யானை மேல் அவனுடன் ஒரு ராணிபோல் பவனி வருகிறாள். உள்ளமும் உள்ளமும் ஒன்றொடொன்று இணைந்த காதலின் இன்பம் எல்லையில்லாததல்லவா? 

அத்தகைய காதலை வெளிப் படுத்தும் பாடல் இதோ பி. சுசீலா அவர்களின் இனிய குரலில் ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட படத்தில்:



திரைப்படம்: நகரத்தில் ஜிம்போ
இயற்றியவர்: குயிலன்
இசை: சித்ரகுப்த்
பாடியவர்: பி. சுசீலா
 
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

அருவியில் ஆடி நாமே ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
உளந்தனில் என்றும் மீளா ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விழுந்தே நல்ல மணத்தைப் பரப்பும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
ஆரமுதை நீரனையே அள்ளிநிதம் பருகும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ ஆஅ