செவ்வாய், 20 ஏப்ரல், 2010

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

இறை பக்தி மார்க்கம் மானிடருக்கு வாழ்வின் இன்ப துன்பங்களால் ஏற்படும் மனக்கிளர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் காத்து அவர்களது மனங்களைப் பண்படுத்தவென்று அமைக்கப் பட்டதாகும். இம்மார்க்கத்தில் பல விதமான புராணங்களும் கதைகளும் சொல்லி அவற்றின் மூலம் நீதி நெறிகளை வலியுறுத்துவதும் துன்பங்களிருந்து விடுதலை பெறும் வழியைக் காட்டுவதும் நம் முன்னோர்கள் கண்ட வழிமுறைகள். இறைவன் என்றதும் ஆலயங்களில் காண்பவை போல் பலவிதமான வடிவங்களுடனும் பெயர்களுடனும் வெவ்வேறு தெய்வங்கள் நம் நினைவுக்கு வருவதுண்டு. இவற்றுள் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனும் ரீதியிலும் இறைத் தத்துவத்தை உணராத மாந்தர் பலர் விவாதித்து, தங்களுக்குள் மனக்கசப்பு உருவாக வழி வகுத்து அதனால் மகிழ்ச்சியை இழந்து உற்சாகம் குறைந்து வருந்துதல் அறியாமையே ஆகும்.

இதனையே "அரியும் சிவமும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு" என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் என்பது ஒவ்வொருவர் மனப்பாங்ககுக்கேற்ப மாறுபடுதல் இயல்பு. இக்காரணத்தினாலேயே உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மனிதர்களுள் தோன்றிய ஞானியர் தம் உணர்வினாலும் அனுபவத்தாலும் கண்டவிதமாக இறைத் தத்துவத்தை உலக மக்களுக்கு உபதேசித்தவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

"தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலை தான்", "பிடித்து வைத்தால் பிள்ளையார்" எனு்ம் பொன் மொழிகள் உணர்த்துவது இதனையே. ஒரு மதத்தினர் வழிபடும் இறைவன் அம்மதத்தவர்களை மட்டும் காப்பதாகக் கூறுவது மடமை. இறையருள் எல்லோர்க்கும் உரியதாகும். இறை என்று ஏதும் இல்லையென வாதிக்கும் மனிதர்களுக்கும் இயற்கையுடன் இயைந்து நமது புலன்களால் உணர முடியாத நிலையில் அண்ட சராசரம் எங்கும் வியாபித்திருக்கும் இறையருள் உரித்தாகும். ஆத்திகம் நாத்திகம் என்பது இறைவன் உண்டா இல்லையா எனும் ரீதியில் நியமிப்பதல்ல. எது செய்யத் தக்கது, செய்யத் தகாதது எது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் ஆத்திகரோ நாத்திகரோ ஆவார்.

இறைவனின் பெயரைச் சொல்லி, புராணக் கதைகளை உண்மை நிகழ்ச்சிகளாக நம்பவைத்து அவற்றின் மூலதம் தமது சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்பவனும் நாத்திகனே. இறைவன் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கிய போதும், உண்மையைச் சொல்லி உலகினருக்கு நன்மையைச் செய்பவன் ஆத்திகனே ஆவான்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/swami-ayyappan/thiruparkadalil.php

திரைப்படம்: ஸ்வாமி ஐயப்பன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: தேவராஜன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1975

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உன்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? - உன்
தெய்வ முனிவரைக் காப்பத்தற்கென்றே
வருவாயோ நீயே?

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே - கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அநந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

சதங்கு படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாரயாணன் என் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பாரிப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா

ஏறத்தாழ கி.பி. 1000 முதல் கி.பி. 1947 வரையிலான காலங்களில் நமது இந்தியா முகலாயர்கள் மற்றும் வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாலேயே மஹாகவி பாரதியார் தமது "சுதந்திரப் பயிர்" எனும் பாடலில்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று எழுதினார் போலும்.

முதலில் இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி முகம்மது பெரும்பாலும் சோமநாதர் ஆலயம் போன்ற இடங்களில் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னர் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த மொகலாய மன்னர் முகம்மது கோரி இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணத்துடன் பலவிதமான அரசியல் சூழ்ச்சிகளைச் செய்து தமது எண்ணத்தை நிறைவேற்றினார். அவர் செய்த மிகப் பெரிய சூழ்ச்சிகளுள் ஒன்று ஆஜ்மீர் அரசனான பிரித்விராஜ் சௌஹான் கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரனின் புதல்வி சம்யுக்தாவைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட பகையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ப்ரித்விராஜனின் மேல் படையெடுத்து முதலில் தோற்றாலும் பின்னர் பெரும்படையுடன் வந்து அவரை வென்று அவரது ராஜ்ஜியத்தினைக் கைப்பற்றியதாகும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியைக் கதையாக உருவாக்கி தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு மாபெரும் ஒரு விருந்தாக எம்.ஜி.ஆர். பிருத்விராஜனாகவும் எம்.என். நம்பியார் முகம்மது கோரியாகவும் பத்மினி சம்யுத்தையாகவும் நடிக்கப் படைத்தது சரஸ்வதி பிக்சர்ஸ் நிறுவனம்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/rani-samyukta/o-vennila.php

திரைப்படம்: ராணி சம்யுக்தா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1962

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா