சனி, 28 நவம்பர், 2009

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

நம் நாட்டுப் பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது மேனியை நன்கு மறைத்து, அதே சமயம் அலங்காரமாய் விளங்கும் அற்புதமான ஆடை அணிகலன்களும், அவர்களிடம் இயல்பாகவே வெளிப்படும் நாணமுமே ஆகும். நம் நாட்டுப் பெண் ஒருத்தி ஓர் ஆடவனிடம் காதல் கொண்டு பழகினாலும் தன் உள்ளத்தில் அவன் மேல் இருக்கும் ஆசையையும், தன் மேனி அழகையும் அவனுக்கும் கூடக் காட்ட மாட்டாள்.
இதற்கு மாறாக ஆடவர்கள் தம் மனதில் ஒரு பெண்ணின் மேல் காதல் ஏற்படுகையில் அதனை அப்பெண்ணிடம் தயங்காமல் எடுத்துச் சொல்லும் தைரியமும் அதே சமயம் அவளிடம் நெருங்கிப் பழகும் ஆசையும் மிகுந்தவர்களாக விளங்குவது இயற்கை.

தனது காதலி தான் அவள் மேல் கொண்ட ஆழமான காதலை அறிந்திருந்தும் தன்னுடன் நெருங்கிப் பழகாமலும் தன் மேல் அவளுக்குள்ள ஆசையை வெளிப்படுத்தாமலும், அவளது அழகைத் தான் ரசிக்க விடாமலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கக் கண்டு, அதனால் பரிதவிக்கும் தனது மனதின் நிலையை எடுத்துரைப்பது போல் அமைந்த அழகியதோர் பாடல்:

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி?

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன் - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்? - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி?

1 கருத்து:

  1. இந்தப் பாடல் என்ன ராகத்தில் அமைந்தது என்று அறிய விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு