வெள்ளி, 13 நவம்பர், 2009

சின்னப் பயலே சின்னப் பயலே

அன்பு நண்பர்களே,
ஒரு மனிதனுக்கு தைரியமே முதல் துணை. தைரியம் இல்லாத ஒருவன் தன் கடமைகளில் எவ்வித முடிவையும் எடுக்கத் திராணியின்றித் தவறு செய்து அல்லலுறுவான். தைரியம் இல்லையேல் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பது இயலாது.

ஆகவே எதனை இழந்தாலும் தைரியத்தை இழககலாகாது. வேறு எதனை இழந்தாலும் தைரியம் இருந்தால் இழந்த பொருளைத் திரும்ப அடைதல் சாத்தியமே, ஆனால் தைரியத்தை இழந்தால் எதனையும் மீட்பது சாத்தியமாகாது.

நாம் குழந்தைகளுக்கு முதலில் தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும், அவ்வாறு தன் தாயாரால் தைரியமென்னும் ஞானப்பால் ஊட்டப்பட்டு வளர்ந்த மராட்டிய மன்னன் சிவாஜியின் சரித்திரம் உலகப் பிரசித்தமானது.

தைரியம் நிறைந்திருந்ததாலேயே நம் முன்னோர்கள் பலரும் ஒன்று கூடி உயிரைத் துச்சமென மதித்துப் போராடி, வெள்ளையர்களை நம் நாட்டிலிருந்து விரட்டி, சுதந்திரம் எனும் பயிரைக் காக்க முடிந்தது.

தைரியத்தின் துணையுடனேயே மனிதன் சந்திரனில் காலடி வைக்க முடிந்தது. இன்னும் இவை போல் பல எடுத்துக்காட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டே போகலாம். முடிவே இல்லாத சாதனைகளின் பட்டியல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை நம் அனைவரின் உடைமையடா!

கேட்டு மகிழ: சின்னப் பயலே சின்னப் பயலே

படம்: அரசிளங்குமரி
பாடியவ்: சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா - நீ எண்ணிப் பாரடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக