வியாழன், 14 ஜூலை, 2011

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

காஞ்சி மாநகர் வரலாறு

ஏகாம்பரநாதர் கோயில் வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன்.
சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.

புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.

ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.

முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.

சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இவற்றுடன் இன்னும் பலப்பல சிறப்புகளைப் பெற்றதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரேஷு காஞ்சி என்று புகழப்பெற்ற காஞ்சிபுரத்தைப் பற்றி மேலும் அறிய:

http://www.ekambaranathartemple.org/

இன்றைய பாடல் காஞ்சி நகரைப் பற்றியதாக அமைகிறது.

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

திரைப்படம்: காஞ்சித் தலைவன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்
ஆண்டு: 1963

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோகை விரித்தே ஆடிடுவோம்
தோகை விரித்தே ஆடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
தீர நடையாளனோ யானைப்படையாளனோ
தீர நடையாளனோ யானைப்படையாளனோ - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ? - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ?

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு கண்ணே
கனியமுதே உன்னால் என்தன் உயிரிருக்கு

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

புதன், 13 ஜூலை, 2011

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

தெய்வம் மானுஷ ரூபேண: அதாவது தெய்வம் மனித வடிவில் விளங்குவது. தெய்வம் எனும் பகுத்தறிவுக்கு எட்டாத எல்லையில்லாத சக்தியை அனைவரும் வ்ழிபடுவது துன்பங்களிலிருந்து விடுபடவும் அத்தகைய துன்பங்களைத் தாங்கும் மனோவலிமையைப் பெறவுமேயாகும். மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம்மை நம்பியவர்களைக் குறைவின்றிக் காத்து அனைவரிடமும் கருணையுடனும் அன்புடனும் பழகினால் நம்மை எல்லோரும் என்றும் தெய்வமாகப் போற்றி வணங்குவதுறுதி.

ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி, மக்கள் மற்றும் தன்னை நம்பி வாழும் வயது முதிர்ந்த பெற்றோர், உற்றார் உறவினர் அனைவரது தேவைகளுக்கேற்ற பொருளை உழைத்து ஈட்டி அவர்களுக்குத் தன் வாழ்நாள் உள்ளவரை தக்க உதவிகளைச் செய்து வாழ்தல் எவ்வாறு இன்றியமையாத கடமையாகக் கருதப்படுகிறதோ அதே போல ஒரு நாட்டின் மக்கள் அனைவரையும் அவர்களது இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்து காப்பது நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கடமை.

இத்தகைய கடமைகளை முறையாகவும் உண்மையாகவும் செய்ய ஒருவர் முதற்கண் உண்மை ஒன்றையே பேசி நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்வது மிவகும் அவசியம். அவ்வாறு உண்மையையே வாழ்வில் அனைத்திலும் பெரிதெனக் கொண்டு வாழ்ந்து காட்டிய நம் தேசப்பிதா மஹாத்மா காந்தியை இன்று அமெரிக்காவின் ஜானாதிபதி முதல் உலகிலுள்ளோர் அனைவரும் போற்றி வணங்குவதைக் காண்கிறோம். நாம் வாழ்வில் பெரும்பொருள் ஈட்டி பெரிய செல்வந்தனாக விளங்குவதில் ஏற்படும் பெருமையை விடவும் வாழ்நாள் முழுதும் வறுமையில் வாடினாலும் பொய் சொல்லாது உண்மையே பேசி உத்தமனாக வாழ்வதால் ஏற்படும் பெருமை மிகவும் பெரியது.

உண்மையின் பாதையில் தொட்ர்ந்து செல்பவன் ஒரு நாளும் தோல்வியடைவதில்லை, ஏனெனில் உண்மை ஒருவனிடம் இருக்குமேயானால் அவனுக்கு இவ்வுலகமே துணையாக நிற்கும். சந்தர்ப்பவசத்தால் அவனை விரோதிகள் யாரும் சதி செய்ய முயன்றால் அத்தகைய சதியிலிருந்து அவனை அவனது உண்மையே மீட்க வல்லதாகும். எத்துணை பணமிருந்தாலும் எவ்வளவு அறிவிருந்தாலும் எத்துணை பேர் புகழ வாழ்ந்தாலும் ஒருவரிடம் உண்மையில்லாவிடில் அவர் இருக்கையிலும் இறக்கையிலும் அதன் பின்னரும் என்றென்றும் இகழப்படுவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும் உண்மையாகும்.

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" எனும் கவிஞனின் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

திரைப்படம்: நீலமலைத் திருடன்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா ஆஆஆ

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
செல்லடா

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா

செல்வந்தர்களின் வீடுகளின் நுழைவாயிலில் பொதுவாக வாயில் காப்பவர் ஒருவரோ ஒருவருக்கு மேற்பட்டவரோ இருப்பர். இவர்களது கடமை அவர்கள் காவலுக்கு நியமிக்கப் பட்ட வீடுகளிலிருந்து எவரும் எப்பொருளையும் களவாடிச் செல்லாமலும் சமூக விரோதிகள் யாரும் வீட்டுக்குள் நுழைந்து விடாமலும் காப்பதாகும். இத்தகைய காவல் பணியைச் செய்வதற்காகவே இவர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

இதே ரீதியில் நாட்டையும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளும் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் நாட்டையும், மாநிலத்தையும் இத்தகைய களவாணிகளிடமிருந்து காப்பதும் சமூக விரோதிகளின் செயல்பாட்டைத் தடுப்பதும் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்படுவதற்காகவே அவர்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிகள் தரப்பட்டு அவற்றுக்குரிய ஊதியமும் வழங்கப் படுகிறது.

பல சமயங்களில் வீட்டைக் காவல் காக்கும் காவலாளியே வேறு கள்வர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தாம் காவல் காக்கும் வீட்டையே கொள்ளையடிப்பது, அவ்வீட்டிலுள்ளோரது குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரியவருகிறது.

இன்று நமது நாட்டை ஆள்வோரே நாட்டின் செல்வங்களைக் கொள்ளையிட்டு, மக்களைப் பட்டினி போட்டுத் தாம் மட்டும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து சுகவாழ்வு வாழ்ந்துவரும் இழிநிலை பரவலாக உருவாகியுள்ளது. இதன் காரணம் நாட்டு மக்கள் நாட்டை ஆள்வோரைத் தேர்ந்தெடுப்பதில் போதிய அக்கரை காட்டாது கண்மூடித்தனமாக இருப்பதுவே ஆகும்.

இத்தகைய இழிநிலையைத் தவிர்க்க முதற்கண் மக்கள் யாவரும் நாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். தினசரி கடமைகளுள் ஒன்றாக செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இடம் பெறும் செய்திகளை அறிந்து கொள்வதை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டை ஆள்வோரின் உண்மையான நிலை தெரியவரும்.நல்லவர் போல் தெரிபவரெல்லாம் நல்லவரல்ல என்பதுவும் புரியும். நாட்டை ஆளும் அமைச்சர்கள் தம் வரையிலும் நல்லவராக இருப்பது மட்டும் போதாது. தம்முடனும் தமது அதிகாரத்தின் கீழும் பணிபுரியும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் தவறுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டு முறைகேடுகளைத் தவிர்ப்பது ஒவ்வொரு அமைச்சரின் முக்கியக் கடமையாகும்.

இக்கடமையைச் செய்யத் திறமில்லாத, மனமில்லாத ஒருவர் அமைச்சராக இருப்பதும் திருடனாக இருப்பதும் ஒன்றே. காவல் காப்பவன் தான் திருடாதிருப்பதை விட, வேறு யாரும் திருடாது பார்த்துக் கொள்வதே காவல் பணியில் அவன் ஈடுபடுத்தப்படுவதன் நோக்கம். இந்நோக்கம் நிறைவேறாவிடில் காவலாளி எதற்கு? அவனுக்கு சம்பளம் எதற்கு? தன் கடமையைச் செய்யாதவனுக்கு வெட்டி அதிகாரம் எதற்கு? ஆர்ப்பாட்டம் எதற்கு?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா

திரைப்படம்: குமரிப்பெண்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா
ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

ஆஹாஹஹா ஓஹோஹோஹோ
லாலாலாலா பம்பம்பம்பம்

காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ?
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
நாக்குக்கு ஆயிரம் மொழி சொந்தமோ?
நாலு காலுக்கொரு வால் சொந்தமோ

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

வருகிற உறவுக்கு மனை சொந்தமோ?
மயக்குற முகத்துக்கு எழில் சொந்தமோ?
கொடுக்கிற பணத்துக்கு இடம் சொந்தமோ?
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

குற்றம் புரிந்தவன்

நமது நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் தொன்று தொட்டு ஆண்களின் ஆதிக்கத்திலேயே சமுதாயம் நடந்து வந்துள்ளது சரித்திரத்தின் வாயிலாகத் தெரிகிறது. இதற்கு முக்கியக் காரணம் பெண்கள் தமது குடும்பத்திலுள்ளோரைப் பேணி, அவர்களுக்குத் தேவையான சமையல், துப்புறவு மற்றும் பிற பணிகளைச் செய்ய, ஆண்கள் மட்டுமே வெளியுலகில் சென்று பொருளீட்டுவதும் சமுதாயப் பணிகளைச் செய்வதும் இயல்பாக நடைபெற்று வந்துளதேயாகும். இத்தகைய மனித நேயம் குறைந்து பெண்களுக்கெதிரான அடக்கு முறைகள் மலிந்து விளங்கிய காலத்தில் மனிதகுலத்தில் பெண்ணுரிமையை வலியுறுத்தியவர்களுள் மஹாகவி பாரதியார் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

அதுவரை கதைகளிலும் காவியங்களிலும் வரும் சில பெண்கள் தம் கணவனையன்றி வேறு எவரையும் மனதில் கணமும் நினையாது கணவனே கண்க்ண்ட தெய்வம் எனப் போற்றி வாழ்ந்த கற்புக்கரசிகளாகவும் அப்பெண்களின் கணவன்மார்கள் தம் மனைவியரைத் துச்சமாக எண்ணி வேறு பெண்களையும் விலைமாதர்களையும் தேடிச் சென்று தமது சுகமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த சுயநலவாதிகளாகவும் சித்தரிக்கப் பட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அது மட்டுமன்றி ஒரு பெண்ணை ஒருவருக்கு மணம் முடிக்கையில் அந்தப் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டறியாமலே சந்தையில் மாடுகளை விற்பதைப் போன்ற முறையில் யாருக்கு வேண்டுமானாலும் திருமணம் செய்து கொடுக்கும் இழிசெயலையும் மனித சமூகத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையை மாற்றிடவென்றே மஹாகவி,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

என்று முழங்கினார்.

பழங்காலக் கதைகளாயினும் பெண்ணடிமை ஒழிந்து, தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்ந்துவரும் தற்காலத்தில் எழுதப் பட்ட சில கதைகளாயினும் பொதுவாக, முறையாக இல்லறத்தில் ஈடுபடாமல் மனைவியைப் புறந்தள்ளிவிட்டு விலைமாதர்களைத் தேடியலையும் ஆண்கள் தம் வாழ்வை இழந்த துயரச் சம்பவங்களே காட்டப்பட்டு வருவதும் நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய கதைகள் சமுதாயத்தில் உள்ள பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்து பெரும்பாலானோர் தவறு செய்யத் துணியாது கட்டுப்பாட்டுடன் வாழ வழிகோலுகின்றன. இத்தகைய கதைகளுள் பல திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படம் ரத்தக்கண்ணீர். இப்படத்தில் நடிகவேள் அதாவது நடிகர்களுள் ஒரு மன்னர் எனப் புகழ்பெற்ற எம்.ஆர். ராதா முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். தற்போது இடம்பெறும் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் மிகவும் முன்னணியில் விளங்கும் திருமதி ராதிகா அவர்கள் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது தவப்புதல்வி என்பதை அனேகமாக நாம் அனைவரும் அறிவோம். அறியாதவர்கள் அறிந்து கொள்வார்களாக.

குற்றம் புரிந்தவன்

திரைப்படம்: ரத்தக்கண்ணீர்
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை. ஜி. ராமநாதன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன், எம். ஆர். ராதா
ஆண்டு: 1954
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

ஆம், ஆம், வாழ்க்கையில் குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி ஏது?

அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது?

முடியாது, உண்மை, உண்மை என் ஆணந்தம், என் மகிழ்ச்சி, என் இன்பம் அத்தனையும் அற்றுப் போய்விட்டது.

அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது

ஒழிந்தது, ஒழிந்தது, என் ஆணவன், என் கர்வம், என் அகம்பாவம் அத்தனையும் அற்றுப் போய்விட்டது.

குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
சுகம் அடைவதேது - நல்ல
குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
சுகம் அடைவதேது?

வாஸ்தவம் குணத்தை இழந்தேன் கொண்டவளைத் துறந்தேன், கண்டவள் பின் சென்றேன், கட்டுடலையும் இழந்தேன் இன்று கண்ணையும் இழந்தேன். வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஏது?

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

செவ்வாய், 12 ஜூலை, 2011

இன்பம் எங்கும் இங்கே

தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

எனும் குறளில் வள்ளுவர், மனைவி எனும் உயரிய இடத்தைப் பெற்ற பெண்ணின் இலக்கணத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். மனைவியானவள் முதற்கண் தன்னைக் காத்துக்கொண்டு தனது கணவனைப் பேண வேண்டும். அதாவது தனது உடல் நலத்தையும் தன்மானத்தையும் சமுதாயத்தில் ஒரு இல்லத்தரசிக்குரிய மரியாதையையும் காத்துக்கொண்டு கணவனது தேவைகளறிந்து பணிவிடை செய்து அவனது உடல் நலம், தன்மானம் மற்றும் மரியாதையை நிலைநிறுத்த வேண்டும். அதன் பின்னர் தகுதிவாய்ந்த பெருமை கொள்ளத் தக்க சொற்களைப் பேசி தனது வாக்கைக் காப்பாற்றி எக்காலத்தும் தனது கடமையை சோர்வின்றிச் செய்ய வேண்டும் என்பதே இக்குறள் கூறும் நெறியாகும்.

மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். தன் வாழ்நாள் உள்ளளவும் தன்னுடைய கணவனுக்கு அவனது கடமைகள் அனைத்திலும் உறுதுணையாக விளங்குவதுடன் அவனுடை சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவனது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக அமைக்க வேண்டும். நமது பாரத சமுதாயத்தில் குடும்பப் பெண்களுள் பெரும்பாலோர் இத்தகைய உன்னதமான பணியை ஒழுங்காகச் செந்து வருவதாலேயே தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட நமது நாடு கலாச்சாரத்தில் உயர்ந்ததாகக் கருதிப் போற்றப் படுகிறது.

இத்தகைய பெண்ணைப் பெண்ணரசி என்று நம் முன்னோர்கள் புகழ்ந்தனர். பெண்மையை ஆளும் உன்னத குணம் வாய்ந்தவள் என இதற்குப் பொருள் கொள்ளலாம். இத்தகைய பெண்களை நாம் எங்கும் தேட வேண்டியதில்லை. நம்முடனே இன்று பழகும் மூத்த நண்பர்களிடையே நாம் இத்தகைய பெண்களைக் காண முடியும்.

மழலைகளின் அன்புக்குரிய தாத்தாவான சீனுத் தாத்தாவின் அன்புக்குரிய மனைவியான சரோஜா பாட்டி இன்று நம்மிடையே வாழும் பெண்ணரசிகளுள் ஒருவர். 80 வயதை நெருங்கும் சீனு தாத்தாவுடன் அவர் இன்றும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். திருமணமான புதிதில் கணவனிடம் அன்பு கொண்ட ஒரு மனைவி கணவனிடத்தே எத்துணை வாஞ்சையைப் பொழிவாரோ அதை விடவும் மேலான அன்பைத் தன் கணவரிடம் கொண்டுள்ள நிலை கீழ்க்கண்ட இணையப் பக்கத்திலும் அதனுடன் இணைந்துள்ள பிற பக்கங்களிலும் விளங்கும்.

http://mazhalaigal.com/entertainment/photo/photo-001/0716vs11s_snow.php

தாத்தாவும் பாட்டியும் சிறு குழந்தைகள் போல விளையாடுவது கண்டு துள்ளாத மனமும் துள்ளும்.

சரோஜா பாட்டிக்கு இன்று பிறந்த நாள். இந்த நன்னாளில் அவரை வாழ்த்தி வணங்கி அவரது நல்லாசிகளை வேண்டுகிறோம். அவரும் சீனு தாத்தாவும் வாழ்வது போலவே நாம் அனைவரும் நம் வாழ்நாள் முழுவதும் என்றும் ஆனந்தம் பொங்கும் நல்வாழ்வு வாழ வேண்டுமென இறைவனை வேண்டுவோம்.

சரோஜா பாட்டிக்கு இன்றைய பாடலைக் காணிக்கையாக்கி அவர் இருக்கும் இடத்தில் இன்பம் என்றும் ஆட்சி புரிய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

இன்பம் எங்கும் இங்கே

திரைப்படம்: பெண்ணரசி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன்

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது
வாழ்வின் துணை தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது
வாழ்வின் துணை தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

பொங்கி வரும் நிலவைக் கண்டு
அல்லி முகம் சிவக்குது
போதையூட்டும் தேனைச் சிந்தி
ஜாதிமல்லி சிரிக்குது
சிந்து பாடி வண்டு தேன் தேடும் காட்சி கண்டு
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுது
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுது

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

அன்பு மயமான இந்த உலகிலே ஓஓஓஓஓ
பலரறிய அரசன் அரசியாவோம் விரைவிலே
ஆ.ஆ.ஆ.ஆஆஆஆஆஆஆஆ

உலவும் தென்றலிலே உல்லாசம் காணுவோம்
நிலவும் வானும் போல குலவி மகிழுவோம்
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
என்னையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
என்னையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

மடி மீது தலை வைத்து

உறவின்றி உலக வாழ்வில்லை. ஒருவரும் தனக்கென மட்டும் வாழ இயலாது. இன்ப துன்பங்களையும் மற்ற பல பொருட்களையும் செயல்பாடுகளையும் பலரும் பகிர்ந்து அனுபவித்தலே வாழ்க்கையாகும். இவ்வுலகில் பிறந்த நாள் முதல் சில காலம் வரை பெற்றோரும் உற்றாரும் பெரும்பான்மையான உறவாக விளங்கினாலும் வளர்ந்து உலக வாழ்க்கையெனும் போராட்டத்தில் ஈடுபட்டுப் பாடுபடும் காலம் வருகையில் நண்பர்களும் சமூகத்தினருமே பெரும்பான்மையான உறவாக அமைகின்றனர்.

இதற்கிடையில் உரிய காலம் வருகையில் பலருக்கு இல்லற வாழ்வு பெற்றோரால் அமைத்துத் தரப்படுகிறது. ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே தம் மனதைக் கவர்ந்த ஒருவரோடு காதல் ஏற்பட்டு, அக்காதல் கனிந்து கல்யாணத்தில் நிறைவடையும் இனிய வாழ்வு அமைகிறது.

காதலில் அதிக இன்பம் தருவது காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றவர் விட்டுப் பிரியாமையை விரும்பும் நிலையே. இரு மனங்கள் ஒன்றாய் இணைந்த பின்னர் அங்கே புணர்ச்சி பழகுதல் அவசியமற்றதாகிறது. துணை தேடும் மனங்களுக்குத் தக்க வாழ்க்கைத் துணையைத் தேடித் தருவதே காதல். மற்றதெல்லாம் காதல் ஆகாது.

சின்னஞ்சிறு வயதில் உலக வாழ்வில் படும் துன்பங்களை மறக்க ஒருவருக்குத் தேவை தஞ்சமென அடைய ஒரு தாயின் மடி. வளர்ந்து பருவமடைந்த பின்னர் அத்தாயின் மடி பலருக்குக் கிடைப்பதில்லை. தாயின் மடி கிடைக்காவிடிலென்ன, கனவிலும் மறவாக் காதல் உறவு கொண்ட அன்பரின் மடியே அடைக்கலம் என்று அடைவது பேரின்பமல்லவா!

மடி மீது தலை வைத்து

திரைப்படம்: அன்னை இல்லம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா ஓஹோ ம்ம்ம்

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் அழகிலே காலம் நடக்கும் உறவிலே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மன்னவனே அழலாமா

இள வயதில் மனைவியை இழந்த ஆண்கள் சிலர் தமது குழந்தைகளின் நலனுக்காக மற்றொரு பெண்ணைத் திருமணம் புரிந்து கொள்வதுண்டு. வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் தம் மனைவியின் நினைவாகவே வாழ்ந்து தமது குழந்தைகளுக்குத் தாமே தாயும் தந்தையுமாக இருந்து அனைத்து விதங்களிலும் அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதும் உண்டு. தன் மனைவி இறந்த பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத ஆண்கள் தம் குழந்தைகளைக் காக்க அவர்களுக்குத் தாயாய் விளங்க வேறொரு பெண் அவசியமாக இருக்குமாயின் குழந்தைகளின் நலனுக்காக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் உண்டு. இத்தகைய முடிவுக்குக் குடும்பத்தில் இருக்கும் பிற உறவினர்களின் வற்புறுத்தலும் காரணமாக அமைவதுண்டு.

இவ்வாறு தம் விருப்பத்துக்கு மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு வேறொரு பெண்ணை மணந்த ஆண்களுள் சிலர் தம் மனைவியின் நினைவு மனதில் என்றும் இருக்கும் நிலையில் புதிதாய் மணந்த பெண்ணை மனைவியாக ஏற்று அப்பெண்ணுடன் மனமொப்பி வாழத் தயங்குவதுண்டு. இத்தகைய தயக்கத்தினால் அந்தப் பெண் மனம் வருந்துவதும் உண்டு. தன் குழந்தைகளுக்குத் தாயாகவும் தனக்கு இரண்டாம் தாரமாகவும் வந்து வாய்த்த அப்பெண்ணிற்கும் வாழ்வில் ஆசாபாசங்கள் உண்டு என்பதை உணர்ந்து கொண்டு அக்கணவன் அவளை உரிய அன்புடன் நடத்தி அவளிடம் இணங்கி வாழ்வது அப்பெண்ணுக்கும் அக்கணவனுக்கும் மட்டுமன்றி அவர்களது குழந்தைகளுக்கும் நல்வாழ்வை அளிக்கும்.

புதிதாய் மணந்த பெண்ணுடன் சகஜமாய் வாழத் தயங்கித் தன் மனைவியின் நினைவால் தொடர்ந்து வாடும் சில ஆண்களுக்கு குடும்பத்திலுள்ள மூத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தக்க அறிவுரை கூறித் திருத்துவதுண்டு. ஆனால் இத்தகைய ஆண் ஒருவனுக்கு இறந்து போன அவனது மனைவியே அவனது மனதுக்குள் வந்து தன்னையே நினைத்து வருந்துவதை நிறுத்திவிட்டு, தனக்குப் பின் அவனுக்கு மனைவியாய் வாழவந்த பெண்ணை முறையாக மதித்து வாழும்படி அறிவுரை கூறுவதாக அமைந்ததொரு அரிய பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

மன்னவனே அழலாமா

ஆ..ஆஆஆ. ஆஆஆஆஆ
ஆ..ஆஆஆ. ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை
கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா?
கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா?
மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

உன்மயக்கம் தீர்க்கவந்த பெண்மயிலைப் புரியாதா?
உன்மயக்கம் தீர்க்கவந்த பெண்மயிலைப் புரியாதா?
தன்மயக்கம் தீராமல் தவிக்கின்றாய் தெரியாதா?
தன்மயக்கம் தீராமல் தவிக்கின்றாய் தெரியாதா?
என்னுடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க