திங்கள், 16 ஜனவரி, 2012

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

ஒரு நாடு முழுவதும் நலமாக இருந்தால் மட்டுமே அதன் குடிமக்கள் ஒவ்வொருவரும் நலமாக வாழ முடியும். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடினால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாவர். ஒரு நாட்டில் செல்வம் பெருகி மக்கள் நலமாய் வாழ வழிவகுக்க வேண்டியது அரசாங்கத்தின் இன்றியமையாத கடமை. ஜனநாயக நாடான நமது இந்தியாவில் அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சரையும் தேர்ந்தெடுப்பது நாட்டு மக்களே என்பதால் அவர்கள் தகுதியுள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது அவசியம். அத்துடன் அவ்வாறு தம்மால் தேர்ந்தெடுக்கப் படக் கோரி வாக்குக் கேட்டு ஒவ்வொரு வேட்பாளரும் மக்களை அணுகுகையில் மக்கள் தம் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை அவ்வேட்பாளர் தீர்க்கப் பாடுபடுவார் எனும் உத்தரவாதத்தை அவரிடமிருந்து பெற வேண்டும்.

இதற்கு முதலில் ஒவ்வொரு தொகுதி மக்களும் தம் தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் மிகத் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்பிரச்சினைகள் குறித்த விவரங்களை வேட்பாளரும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமே. இதுகாலம் வரை இத்தகைய தெளிவு இரு தரப்பிலும் இருந்ததில்லை என்பதால் தேர்தல் முடிந்த பின்னர் பதவிக்கு வரும் வேட்பாளர்கள் முறையாக சேவை செய்யாமல் மக்களை ஏமாற்றித் தம் சுயநலம் பேணுவதே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் பெரும்பாலும் ஊழலே மலிந்து மக்கள் அரசாங்கத்தாலேயே கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளனர் எனும் கசப்பான உண்மை இந்திய தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வாயிலாக வெட்ட வெளிச்சமானதாலும் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் மூலமும் ஊடகங்களின் ஊக்கமிக்க செயல்பாட்டினாலும் ஊழல் செய்தவர் யார் யார் என்பதை மக்கள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அரசாங்கத்தில் முக்கியப் பதவிகள் வகிப்பவர்களின் ஊழலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையில் வாடி உள்ளம் குமுறும் நிலை சற்றும் மாறாமல் நீடித்திருக்க, குற்றம் புரிந்த பலரும் குற்றம் வெளிவந்த பின்னர் வெகு காலமாகிய பின்னரும் அதற்குரிய தண்டனை பெறுவதோ மக்களிடமிருந்து களவாடப் பட்ட பெரும் தொகை திரும்பவும் மக்கள் நலனுக்காக செலவிடப் படுவதோ இவற்றுள் எதுவும் நிறைவேறாமல் குற்றவாளிகள் தொடர்ந்து பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும், குற்றவாளிகளுள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிலர் மீது நடைபெறும் வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதும் மக்களின் பொறுமையைப் பெரிதும் சோதிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கும் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதுகாலம் வரை இல்லாதிருந்த ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனும் உன்னத நோக்குடன் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ஒன்று கூடி சென்னையில் மக்களை தினம் பாதிக்கும் பல்வேறு குறைபாடுகளை முறையாகக் கணக்கிட்டு மக்கள் யாவரும் அறியும் வண்ணம் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சாலைகளின் தரம் மற்றும் குறைபாடுகள், பொதுக்கழிப்பிடங்களின் நிலை, ஏழை மக்களின் வாழ்க்கை நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேவையான இடங்களில் வீடியோ பதிவு செய்தும், தேவையான விவரங்களைத் திரட்டியும் http://www.transparentchennai.com/ எனும் இணையதளத்தை அமைத்து அதில் பதிவு செய்து அதன் மூலம் அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களது செயல்பாட்டை மதிப்பிடவும் என மக்களுக்கு உதவும் மாபெரும் தொண்டில் இறங்கியுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் முன்னோடிகளாக உருவெடுத்துள்ள இவ்விளைஞர்களின் பணி பாராட்டத்தக்கது மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்களிலும் உள்ள யாவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். காந்தியவாதி அன்னா தலைமையில் மக்கள் பெருந்திரளாக ஊழலுக்கு எதிரே போராடும் சூழலுடன் இத்தகைய குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி பெற எடுக்கப்படும் இயக்கங்களும் நாடெங்கிலும் பல்கிப் பெருகி ஊழல் புரிய எண்ணுவோர் அஞ்சி நடுங்கித் திருந்தும் கட்டாய நிலை விரைவில் ஏற்பட வழி கிடைத்துள்ளது.

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எனும் பொன்மொழிக்கிணங்க இந்த ஆரோக்யமான சூழலைப் பயன்படுத்தி மக்கள் யாவரும் ஒன்று கூடிப் போராடினால் நாட்டில் அநீதிகள் குறைந்து நீதி நிலைபெற வழி பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைந்த இப்படை வெல்வதுறுதி.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இயற்றியவர்: புலவர் வேதா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1973

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்

நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக