வெள்ளி, 22 ஜூலை, 2011

ராஜா என்பார் மந்திரி என்பார்

உலகில் ஒவ்வொரு ஜீவராசியும் வாழ உறவுகள் மிகவும் இன்றியமையாதவையாகும். தனக்கென உறவுகள் யாரும் இல்லாத ஒரு மனிதரோ மற்ற உயிரினங்களோ வாழ்வில் விருப்பமின்றி விரக்தியுற்று வாழ்வதை விட சாவதே மேல் என எண்ணும் மனோநிலைக்குத் தள்ளப்படுதல் இயற்கை. ஒருவர் தனக்கு மிகவும் பிர்ய்மான ஒரு உறவினரை விதிவசத்தால் இழக்கையிலும் இத்தகைய விரக்தி மனப்பான்மை உருவாகக்கூடும், ஆனால் அந்த சமயத்தில் தன்னை விட்டுப் பிரிந்த உறவினரைத் தவிர ஏனைய உறவுகளில் பற்று வைத்திருப்பின் இத்தகைய விரக்தி நிலை மாறி வாழ்வில் மீண்டும் ஈடுபாடு ஏற்படலாகும்.

இவ்வுண்மையை விளக்கும் ஒரு ஆங்கிலக் கவிதை உள்ளது. அது ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதியது. அக்கவிதை போர்க்களத்தில் உயிரிழந்த ஒரு வீரனின் உடல் அவனது வீட்டில் கொண்டு வைக்கப்படுகையில் அவனது மனைவி உறும் துயரையும் துயரிலிருந்து அவள் மீள்வது குறித்த சம்பவத்தையும் விவரிப்பதாக அமைந்துள்ளது.

கணவனின் உயிரற்ற உடலை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். அவள் அதனைக் கண்டு மயங்கவில்லை புலம்பவுமில்லை, மாறாக துக்கத்தால் செயலிழந்த நிலையில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள். அத்தருணத்தில் அங்கே அவளது உதவிக்காக உடனிருந்த பெண்கள் அவள் அழ வேண்டும், இல்லாவிடில் அவள் அதிர்ச்சியிலே இறந்து விடுவாள் எனக்கூறி அவளுக்கு அழுகையை வரவழைக்கும் முயற்சியாக அவளது கணவனைப் புகழ்ந்து பேசினர். அவனது அருமை பெருமைகளை நினைவுகூர்ந்தனர். அவன் அனைவராலும் விரும்பப்பட்டவன் என்றும் நம்பிக்கைக்குரியவன் என்றும் போற்றினர். இருப்பினும் அவள் பேசவில்லை அசையவுமில்லை. அப்போது வேறொரு பெண் தன் இடத்திலிருந்து எழுந்து வந்து அவனது முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினாள். ஆனாலும் அவள் அசையவில்லை அழவுமில்லை. அப்போது தொண்ணூறு வயதான மூதாட்டி ஒருத்தி எழுந்து வந்து அப்பெண்ணின் குழந்தையை எடுத்து அவளது முழங்காலின் மீது வைக்கவும் கோடைக் காலத்தில் வரும் புய்லுக்கொப்பாக அவளது கண்களில் கண்ணீர் பெருகியது, "ஓ என் செல்வமே உனக்காகவே நான் வாழ்கிறேனடா!" என்று அக்குழந்தையை அணைத்தபடி கதறியழுது தன் துயரத்தை வெளிக்கொணர்ந்தாள்.

அந்த ஆங்கிலக் கவிதை வரிகளாவன:

Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.

Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.

Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee.'

Alfred Lord Tennyson

உறவுகளின் மீது பற்றுள்ள வரையிலேயே ஒருவனுக்கு உலக வாழ்க்கை பிடிக்கும். உறவுகளை அவன் வெறுக்கும் நிலை ஏற்படுகையில் உலக வாழ்வினை அவன் வெறுப்பான். இதுவே இயற்கை நியதி. உலகில் வாழ்வதற்கு நம் அனைவருக்கும் முதற்கண் உறவுகள் அவசியம். உறவுகளே நம் வாழ்நாள் உள்ளவரையிலும் நமக்குத் துணை. செல்வமும் செருக்கும் உறவுகள் தரும் சுகத்தைத் தர மாட்டா. உலகில் ஒருவருக்கு அவரது குடும்பத்தார் மட்டுமே உறவாவதில்லை உலகிலுள்ள மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிர்கள் யாவுமே உறவுகளாகக் கொண்டு வாழ்வோர் பிற யாரையு்ம்விட அதிக மன மகிழ்ச்சியுடன் பேரானந்த வாழ்வு பெறுவதுறுதி. பல சமயங்களில் உடன் பிறந்தோரே ஒருவருக்கு ஜன்மப் பகையாக விளங்குவதும் உண்டு.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தையிரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி

என்று இத்தகைய அன்பில்லாத மனிதர்களைப் பற்றி மஹாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

ஆகவே அனைவரும் நமக்கு உறவு எனக் கொண்டு நாம் வாழ்வோமாகில் அனைவரும் நம்மை உறவென எண்ணி நம்மிடம் மிக்க அன்பைப் பொழிந்து நமக்கு என்றும் துணையாக விளங்குவர். அப்பொழுது வாழ்வில் எத்தகைய துன்பங்கள் நமக்கு வரினும் அவற்றையெல்லாம் தீர்த்து வைக்க நாம் தேடிக்கொண்ட உறவுகள் கை கொடுக்கும்.

ராஜா என்பார் மந்திரி என்பார்

திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரம் இல்லை நெஞ்சுக்கும் இரக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானம் உண்டு மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு எனக்கென்று என்ன உண்டு?
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு
ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்?

தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று இடம் விட்டு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ? கலக்கமும் ஏனோ?
உலகில் உனக்கும் சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு
ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக