செவ்வாய், 30 நவம்பர், 2010

ஓடி ஓடி உழைக்கணும்

தெளிவில்லா சிந்தையும், தேரா அறிவும், கொள்கைப் பிடிப்பற்ற குழப்பமான செயல்பாடுகளும் நிறைந்து விளங்குபவர்கள் நம் இந்திய மக்களில் பெரும்பாலோர். இவர்கள் தங்கள் குடும்பதாரில் எவரேனும் நேர்மையாகவும் தனி மனித ஒழுக்க நெறிமுறை தவறாமலும் வாழாவிடில் அவரைக் குடும்பத்திலிருந்தே ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை முறையாகக் கடைபிடித்த போதிலும் நம் நாட்டினை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்கும் மனிதர்களிடம் அத்தகைய நேர்மையும் தனிமனித ஒழுக்கமும் நிறைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்தறிவதில் போதிய அக்கரை செலுத்துவதில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் நேர்மையும் கடமையுணர்ச்சியும், தனிமனித ஒழுக்கமும் கொண்டு விளங்குபவர் எவரும் இல்லாவிடில் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கலாகாது. இதுவே அறிவுள்ள மனிதன் செய்யத்தக்கது. நம் நாட்டில் மக்களை வழிநடத்தும் பொறுப்பிலுள்ள பல பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்ககள் மக்களை இத்தகைய அறிவுபூர்வமான வழியில் செலுத்த முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக இவர்கள் இருப்பவரில் யார் குறைவான தீமை செய்யக்கூடியவர் எனத்தேடிப் பிடித்து அவருக்கு வாக்களிக்குமாறு பொது மக்களை வேண்டுகின்றனர். இது சாவதற்கு தூக்குக்கயிறு, கத்தியால் குத்திக்கொள்தல், விஷம் அருந்துதல், உயரத்திலிருந்து விழுதல், தீக்குளித்தல் முதலான வழிகளுள் எது அதிகத் துன்பம் தராததென்று தேடித் தேர்வதற்கொப்பாகும்.

உண்மையே பேசி, ஊருக்கும் நாட்டுக்கும் நன்மையே செய்து, உழைத்து வாழ்பவனே உயர்ந்த மனிதன். அவ்வாறு உழைத்து வாழத் தலைப்படும் உழைப்பாளிகளுக்கு உரிய ஊதியமும் நல்வாழ்வும் கிடைக்க உரிய வழிமுறைகளை மேற்கொள்வோரே தகுந்த ஆட்சியாளர் ஆவர். அவ்வாறன்றி, மருத்துவக் கல்வியையும் மருத்துவமனைகளையும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு தனியாருக்கு தாரைவார்த்து விட்டு நாளுக்கு நாள் மருத்துவச் சிகிச்சைக்கு செலவு செய்யவேண்டிய தொகை ஆயிரங்கள், லட்சங்கள் என உயரும் நிலையை உருவாக்கி விட்டு, ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் வசதிகளை அரசு இலவசமாகச் செய்து தருகிறது என்று சப்பைக் கட்டு கட்டுவதென்பது. சமையலறையிலிருக்கும் சர்க்கரை அனைத்தையும் திருடி விற்று விட்டு, சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கச் சொல்வதற்கொப்பாகும்.

நம் நாட்டு மக்கள் என்று தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறிவுபூர்வமாக செயல்படப் போகின்றனரோ அன்று தான் நம் நாடும் உலகமும் தற்போது சென்று கொண்டிருக்கும் பேரழிவுப் பாதையிலிருந்து விலகி முன்னேற்றம் காணலாகும்.

ஓடி ஓடி உழைக்கணும்

திரைப்படம்: நல்ல நேரம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1972

1234 அப் அப்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஓஹோஓஓ

வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
வயத்துக்காக மனுசன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான்
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப் போடு.

ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக