திங்கள், 24 மே, 2010

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

ஆண்டவன் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த செல்வங்களையும் வாழ்வின் பிற இன்பங்களையும் முறையாக அனுபவிக்க ஏற்றவாறு நம் நமது மனப்பான்மையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி நம்மிடம் இருப்பதை விட மற்றவரிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, பொறாமையினால் இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் இன்பங்களை விட்டு, செயற்கையானதொரு துன்பப் பாதையிலே நம்மை நாமே இட்டுச் சென்று துயருறுவதைப் போல் மடமை வேறில்லை. இருப்பினும் மனிதர்களுள் பலர் இத்தகைய குணக்கேடர்களாக இருப்பது கண்கூடு. பிறரது
துன்பத்திலே இன்பம் காணும் இத்தகையோரை ஆங்கில மொழியில் sadists என்று குறிப்பிடுவது வழக்கம்.

நமது கதாநாயகன் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அப்பெண்ணும் அவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இன்பமாய் வாழப் பொறாத பொறாமை குணமுள்ள செல்வந்தனான ஒருவன் தன் செல்வத்தின் பலம் கொண்டு இவர்களது காதலை நிறைவேறாமல் செய்து, அப்பெண்ணை அவளது விருப்பத்துக்கு மாறாகத் தானே மணந்து கொள்ளும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் பின் தங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடும் நாளில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நமது கதாநாயகனையும் வரவழைக்கிறான். அத்துடன் நில்லாமல் கதாநாயகனை விழாவில் பாடவும் சொல்கிறான்.

தன் காதலியை மனைவியாக அடைய முடியாத வருத்தத்துடன் அவள் தன் விருப்பத்துக்கு மாறாக வேறொருவனுக்கு மாலையிட்டு அதை விடவும் அதிகத் துயரில் ஆழ்ந்ததை எண்ணி, தன் உள்ளக் குமுறலைப் பாடலாக வெளிப்படுத்துகிறான்.

இப்பாடலைக் கேட்டுக்கொண்டே கதாநாயகி யாரும் எதிர்பாராத விதத்தில் வெடிக்கும் பட்டாசுகளிடையே சென்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டு அதே நிலையில் விருந்து நடக்கும் மேல்மாடியிலிருந்து கீழே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மனம் மிகவும் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பைத்தியம் பிடித்துப் பல காலம் துன்புறுகிறான்.

இத்தகையதொரு வித்தியாசமான காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படமான எங்கிருந்தோ வந்தாள் எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1970

ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக