செவ்வாய், 25 மே, 2010

மண்ணில் இந்தக் காதலின்றி

நமஸ்தே வாயோ: த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி;
த்வமேவ பிரத்யக்ஷம் வதிஷ்யாமி

என்று காற்றுத்தேவனைத் துதி செய்கிறார் மஹாகவி பாரதியார். நாம் புலன்களால் உணரக்கூடிய கடவுள் காற்றேயாகும். காற்றிலுள்ள ஆக்சிஜன் என அறியப்படும் பிராணவாயு இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் பிராணவாயு நாம் உண்ணும் உணவை உடலெங்கிலுமுள்ள பல கோடி செல்களில் எரியவைத்து சக்தியை உண்டாக்கி நம்மை இயங்க வைக்கிறது. காற்று இன்றி மழையில்லை, நீரில்லை, நெருப்பில்லை. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் ஒன்றாய் இணைவதாலேயே நீர் உண்டாகின்றது. நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அது பிராணவாயுவாகவும், ஹைட்ரஜனாகவும் பிரிகிறது. இரண்டையும் சேர்த்து எரித்தால் மீண்டும் நீர் உண்டாகின்றது.

உலகைச் சுற்றி ஒரு போர்வையாக விளங்கும் ஓசோன் எனும் அடர் பிராணவாயு சூரியனின் புற ஊதாக் கதிர்களினின்றும் அளவிடற்கரிய வெப்பத் தாக்குதலினின்றும் பூமியைக் காக்கிறது. வீடுகள், உணவு விடுதிகள், ஆலைகள் முதலிய இடங்களிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைச் சுத்தம் செய்து அவற்றால் விளையும் சேதத்தைத் தடுக்க பிராணவாயு உதவுகிறது. இதனாலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீருடன் காற்றைக் கலந்து சுத்திகரிப்பு செய்கின்றனர்.

தவ முனிவர்கள் அளவிடற்கரிய ஆற்றலைப் பெற்று விளங்கியதன் காரணம் அவர்கள் தவத்துடன் பிராணாயாமம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் கட்டுப்படுத்தி அதிகப்படியான பிராணவாயுவை சுவாசித்து வாழ்ந்ததே ஆகும். பிராணாயாமம் செய்யத் தெரியாதவர்களும் பெரும்பாலும் சுவாசிக்கையில் ஆழ்ந்து சுவாசித்துப் பழகினால் உடலிலும் உள்ளத்திலும் சக்தி பெருகி நோயற்ற வாழ்வு வாழ ஏதுவாகும்.

பாடகர்களுக்கு இத்தகைய ஆழ்ந்த சுவாசப் பயிற்சி அவர்கள் பாடுகையிலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் இயற்கையாகவே நீண்ட ஆயுளைப் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய பாடகர்களுள் மூச்சினை அதிக நேரம் அடக்கிப் பாடி அதில் சாதனை புரிந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். அவர் பாடிய இப்பாடலை வேறு யாராலும் அதே லயத்துடன் பாட இயலாதென்பது பிரசித்தம்.

மண்ணில் இந்தக் காதலின்றி

திரைப்படம்: கேளடி கண்மணி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1990

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி?
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக