திங்கள், 1 பிப்ரவரி, 2016

எத்தனை கோடி பணமிருந்தாலும்

ஆயுள் முழுவதும் பொருளீட்டுவதிலேயே பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் நாம் அவ்வாறு பாடுபட்டு ஈட்டிய பொருளை வாழ்க்கை சிறக்கப் பயன்படுத்துகிறோமா என எண்ணிப் பார்த்தோமெனில் அனேகமாக நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்கு மேல் இல்லையெனும் எண்ணத்தையே பெறுவார்கள். இதன் காரணம் பொருள் சேர்க்க செலவிடும் நேரத்தில் அப்பொருளை எவ்வாறு செலவிடுவது என்று திட்டமிடவும்  அவ்வாறு திட்டமிடும் செலவுகள் முறையானவை தானா, நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கத் தக்கவையா என ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவோர் எவ்வளவு குறைந்த பொருளை ஈட்டினாலும் அதனால் மகிழ்ச்சியடைவர். மாறாக ஈட்டும் பொருளை மதுவருந்துதல் போன்ற தவறான பழக்கத்தினால் வீணடித்து சிற்றின்ப நாட்டத்தில் வாழ்வைக் கழிப்போர் விரைவில் பெருந்துன்பமுற்று மகிழ்ச்சியை இழப்பர். 

மதுவிலக்கு நம் தமிழ்நாட்டில் 1971 வரை அமுலிலிருந்த போதிலும் கள்ளச் சாராய வியாபாரம் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருந்தது. இருப்பினும் மது அருந்துவோர் வெகு சிலரே இருந்தனர். எவரேனும் மது அருந்தி விட்டுத் தெருவில் நடந்தால் போலீஸ்காரர் அவரை ஊதச் சொல்லி சாராய வாடை வந்தால் கைது செய்வதுண்டு. இருப்பினும் மதுவின் கெடுதலை எடுத்துச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் விதமாகப் பல திரைப்படக் கதைகள் அக்காலத்தில் அமைந்திருந்தன.  மதுவிலக்கு அமுலிலிருந்த போதும் மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டி சாராயத்தின் கொடுமைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதத்தில் அரசு செயல்பட்டு வந்தது. 

1972ஆம் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்பட்டு கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் பெட்டிக்கடைகளுக்கீடாக மது விற்பனையில் மும்முரம் காட்டித் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்கள் உழைத்து ஈட்டும் பணத்தில் பெரும் பகுதியை மதுவருந்துவதற்காகவே செலவு செய்ய வைக்கும் நிலை அன்று முதல் இன்றுவரை நீடிக்கிறது. மதுவின் கெடுதியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் பணியில் அரசு சிறிதளவும் அக்கரை காட்டாமல் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.

மதுவை ஆரம்ப காலத்தில் அற்ப சந்தோஷத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் நாளடைவில் மதுவிற்கடிமையாகி மது அருந்தாமல் சிறிது நேரமும் இருக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, தன் வருவாய் மட்டுமின்றித் தன் குடும்பத்தாரின் பொருட்களையும் விற்று மதுவைக் குடிக்குமளவுக்கு அறிவு மழுங்கித் தன்னிலை குலைந்து நடைபிணமாக மிக இழிவான வாழ்க்கை நடத்துகின்றனர். இத்தகைய மது அடிமைகள் பெரும்பாலோர் மதுவிற்காகத் தம் ஓட்டுரிமையையும் அடமானம் வைக்கின்றனர். அதனாலேயே மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் உரிமையை சமூக விரோதிகள் அடைந்து மக்கள் விலைவாசி ஏற்றத்தாலும் சமூக சீர்கேடுகளாலும் பெரும் அவதியுறும் நிலை நிலவுகிறது. 

இவ்வாறு மதுவுக்கு அடிமையான தொழிலாளிகள் பலர் தங்களது குழந்தைகளை முறையாக வளர்த்த இயலாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலோரது குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர வழியின்றிக் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்து தம் குடும்பங்களைக் காக்கும் கடமையை இளம் வயதிலேயே சுமக்க வேண்டிய நிலை வருகிறது. தாய்மார்களும் தம் கணவன்மார்கள் குடிகாரர்களாக சீரழிந்து கிடக்கும் நிலையில் பல வீடுகளில் குற்றேவல் புரிந்து தம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தப் பாழாய்ப் போன மதுவை அருந்தி மயங்கிக் கிடக்கும் நிலையிலிருந்து மக்கள் என்று மீள்கின்றனரோ அன்றே அரசு நல்லரசாக இருக்க வாய்ப்பு வரும். அதுவரை சங்கடங்கள் மேலும் தொடருமேயன்றி விடிவு காலம் விரைவில் வாராது.


திரைப்படம்: அன்பு எங்கே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1958

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே இந்த
உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
சின்னையா நீ சொல்லையா
சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமுமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும் தினம்
துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும் 
நிம்மதி வேண்டும் வீட்டிலே 
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

வசந்த முல்லை போலே வந்து

மங்கையரை மலர்களுக்கொப்பிடுவதுண்டு, அவர்கள் மலர்களைப் போல மென்மையான உடலும் மனமும் கொண்டு மலர்களைப் போல வாழ்வில் மணம் பரவச் செய்யும் மேன்மையினால். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் ஒரு பெண் வந்து வாழ்க்கைத் துணையாக அமைந்த பின்னரே வாழ்வு மலர்கிறது, வாரிசுகள் பிறக்கின்றன. குடும்பம் அமைகின்றது, இல்லறம் செழிக்கின்றது. தன் மனதுக்கிசைந்த பெண்ணை விரும்பிக் காதலித்து மணமுடித்து உடன் சேர்ந்து வாழும் வாழ்வு அமையப்பெற்ற ஆண்கள் பிற ஆண்களைக் காட்டிலும் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை ஏனெனில் இருவர் மனமும் ஒருங்கிணைந்த நிலையில் தொடங்கித் தொடரும் வாழ்வில் தங்குதடைகள் எத்துணை வரினும் இருவரும் கூடி முயன்று அவற்றை வெல்லுவது மிக எளிது. 

கணவன் மனைவி உறவு முன்பின் அறிமுகமில்லாத ஆண் பெண் பாலரிடையே உருவாகுகையில் அத்தகைய மனம் ஒன்று பட்ட நிலை எய்துவது சற்றுக் கடினமே. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடுகள் உருவாவதைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழப் பழகுவதே பெரிய சவாலாக அமைகிறது. எவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழுந்த போதிலும் அவற்றைத் தீர்த்துக்கொண்டு ஒன்றாக வாழ்வதே குறிக்கோளாகக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவர் நலனைப் பெரிதென எண்ணி சுயநல உணர்வை அகற்றி வாழப்பழகுகையில் அங்கே இல்லற உறவு மிகவும் மேம்படுகிறது, வாழ்வில் வெற்றி காண வழி பிறக்கிறது. இருமனம் ஒன்றுபட்டு இணைந்து வாழும் முறைமையைக் கற்றுத்தேர்ந்த தம்பதியருக்குத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது எளிதாகவும் இனிதாகவும் அமைகிறது. 

கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு எழுந்து அதைப் பெரிது படுத்தி இருவரும் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாக விட்டால் அவர்களது சிறு பிரச்சினைகளையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகிவிடுகிறது. ஒற்று பட்டு வாழப் பழகாத தம்பதியினர் தம் பிள்ளைகளை முறையாக வளர்க்க முடியாமல் தவிப்பதுண்டு. பல சமயங்களில் குழந்தைகளின் வாழ்க்கை தடம் மாறி நெறி கெட்டுத் தவறான வழியில் குழந்தைகள் செல்ல ஏதுவாகிறது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் இவ்வுலகமே சொர்க்கமாகிறது இல்லையேல் நரகமாகிறது.

முற்காலத்தில் அரசகுமாரர்களும் அரசகுமாரிகளும் காதல் வயப்பட்டு சரித்திரம் படைத்ததுண்டு. அவர்களும் உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் இன்பம் போல வேறில்லை என்பதை உணர்ந்து காதலைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அத்தகைய அரச பரம்பரைகளைப் பின்னணியாகக் கொண்டு பல திரைப்படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அக்கதைகளில் காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்து இன்னிசையும் நடனமும் ஒன்று கலந்து வடிவமைக்கப்பெற்றதால் மீண்டும் மீண்டும் கண்டு களிக்க விருப்பம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் அமைந்தன. 

நம் கதாநாயகி, "இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்." என்று கேட்க அவளது காதலனான இளவரசன், "ஓ, பாட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டுப் பாடுகிறான்.


திரைப்படம்: சாரங்கதாரா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஆஆஆ
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சனி, 30 ஜனவரி, 2016

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது?

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ்வை அனுபவித்து இயற்கையோடியைந்து நன்கு வாழ்வின்றன ஆனால் மனிதன் மட்டும் எத்துணை நலன்கள் இருந்த போதும் திருப்தியடையாமல் இல்லாததை எண்ணி ஏங்கி இருக்கும் இன்பங்களை அனுபவிக்காமல் துன்புறுகிறான். தன்னிடம் இருக்கும் நலன்களை எண்ணிப் பார்த்து மகிழாமல் பிறரிடம் தன்னிடமில்லாத நலன்கள் இருக்கக் கண்டு பிறர் மேல் பொறாமை கொண்டு மனம் புழுங்குகிறான். 

ஏனைய உயிரினங்கள் ஐந்தறிவிற்கும் குறைந்தவை என்றும் மனிதனுக்கு ஆறறிவென்றும் நம் ஆன்றோர்கள் வகுத்த உண்மையை உணராமல் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறுவதுடன் பிற ஐந்தறிவு ஜீவிகளுக்கு இருக்கும் அளவும் அறிவுத் தெளிவு பெறாமல் அறியாமையில் மூழ்கிக் கிடந்து வாடுகிறான்.

இதன் காரணம் என்ன?

பிற உயிரினங்கள் தமக்கு இயல்பாகக் கிடைக்கும் உணவைத் தேடி உண்டு தன் உறவுகளோடும் பிற உயிரினங்களோடும் கலந்து பழகி மகிழ்கின்றன. இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவையும் தமது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அடுத்த வேளை உணவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உடலை மறைக்க உடையோ, வசிக்கப் பிரத்யேகமான விசேஷ இருப்பிடமோ வேண்டுவதில்லை. கிடைத்த உணவை அருந்திக் கிடைத்த இடத்தில் படுத்துறங்கிக் கவலையில்லாமல் வாழ்கின்றன. மனிதன் தனது தேவைக்கு மேல் பொன்னும் பொருளும், மாடி மனை வீடுகளும், நிலங்களும், வாகனங்களும், ஆடம்பர வசதிகளும் பெறுவதொன்றே பெரிய குறிக்கோளாகக் கொண்டு தன் அன்றாட வாழ்வில் பெறும் சிறு சிறு இன்பங்களைத் தொலைக்கிறான். 

வாழ்நாள் முழுதும் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பெரும்பாலும் மருத்துவச் செலவுகளுக்கும் வேண்டாத விஷயங்களுக்கும் வாரியிறைத்து விட்டுப் பெரும் துன்பமுற்று இறந்து போகிறான். தன்னுடைய வாழ்க்கை எத்துணை அற்பமானதாய்ப் போய்விட்டதே என மரணமடையும் தருவாயிலும் உணரத் தவறுகிறான். இத்தகைய அறியாமையில் மூழ்கி அல்லலுறும் வாழ்வு வாழ வேண்டுமா? அதனால் ஏதேனும் பலனுண்டா என எண்ணிப் பார்த்து மனிதன் பிற உயிர்களிடமிருந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்று அவற்றுடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ என்று பழகுகின்றானோ அன்றே துன்பம் நீங்கி இன்பம் பெற வழி பிறக்கும்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் 
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

என்று பாடி இவ்வுலக வாழ்வைத் தான் உயிரோடிருந்த 35 வருட சொற்ப காலத்திலேயே முழுமையாக அனுபவித்து சொர்க்கத்தை இங்கேயே கண்டு வறுமை தன்னை வாட்டிய போதிலும் வருந்தாமல் நம் நாட்டு மக்கள் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலை மாறப் பாடுபட்ட மஹாகவி பாரதியின் அறிவுத் திறனை நாமெல்லோரும் அடைய வேண்டாமா? இவ்வுலகில் இருக்கும் வரை நாமும் சுகமடைத்து பிறரையும் சுகமடையச் செய்து இவ்வுலகிலேயே சொர்க்கம் காண நாம்  முயற்சி செய்ய வேண்டாமா?

இளம் காதலர்கள் இருவர் கடலலைகள் துள்ளுவதிலும், நண்டு, வண்டு முதலான உயிரினங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதையும், குருவிகள் கூடு கட்டி இன்பமாய் வாழ்வதையும் கண்டு தாமும் இன்பமாய் வாழப் பழகுகின்றனர் இன்றைய பாடலின் வாயிலாக.


திரைப்படம்: தலை கொடுத்தான் தம்பி
இயற்றியவர்: 
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
ஆண்டு: 1959

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?

கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது
கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது

தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது?
தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது? அது
நில்லாத வேகத்திலே அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிகிட்டுக் குடும்பம் பண்ணுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?
கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?

கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன்
கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன் சிங்
கார மலர்த் தேன் நான்
கன்னி மலர் நாடியதும் வண்டு போலத்தான்

அஅஆ அஅஅஅஅஅ ஆ அஅஅஅஅஅ ஆஆஆ ஆஆ அஅஅஅஅஅஅஅ

பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும்பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது?
பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது? அது

வாழ்க்கை தன்னை உணர்ந்து கிட்டு மனசும் மனசும் கலந்து கிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

அஅஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ அஅஅ அஅஅஆ

வியாழன், 28 ஜனவரி, 2016

கண்ணீலே நீர் எதற்கு?

ஐம்புலன்களின் வழியே ஆசைகள் நம் மனதினுள்ளே புகுந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆசைவசப்பட்டவர்கள் தன் சுய உணர்வையே இழக்கும் நிலைக்கும் சில சமயங்களில் விதியினால் தள்ளப்படுவதுண்டு. விதி என்றால் என்ன? ஒரு கல்லை மேலே எரிந்தால் அது பூமியை நோக்கிக் கீழே விழுந்தே தீர வேண்டும். அது ஒரு விதி. அதே போல் ஆசைகள் துன்பத்தை விளைவிப்பது உறுதி. அதுவே விதி. அந்த விதியின் வலிமையை இளமையில் யாரும் உணர்வதில்லை. ஆசைவயப்பட்ட உள்ளம் அந்த ஆசை நிறைவேறுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு நம்மை செயல்பட வைக்கிறது. ஆசை நிறைவேறி விட்டால் ஆணவம் வந்து அறிவைத் திரையிட்டு மறைக்கிறது. ஆசை நிறைவேறாத நிலை வந்தால் கோபமும் துக்கமும் மேலோங்கி அறிவை 
மழுங்கடிக்கின்றன. அத்தகைய மோஹ மாயையில் மூழ்கி உழலும் மனம் எளிதில் தெளிவடைவதில்லை.

தெளிந்த சிந்தையே அமைதிக்கு வழி, அறிவுக்கு வழி, இன்பத்துக்கு வழி. அத்தகைய தெளிந்த சிந்தை வேண்டின் ஆசைகளைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம். அவசியமான, நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்தியடைவதே ஆசைகளை அடக்குவதன் அடையாளம். ஒருவரும் உணவின்றி உயிர் வாழ்தல் அரிது. அவ்வுணவும் வயிறு நிறையுமளவே உண்ண இயலும். எண்ணிறந்த செல்வத்தை நியாயாற்ற முறையில் பேராசையால் சேர்த்து வைத்தவரால் அதிகம் உண்ண இயலுமா? உண்டால் செரிக்குமா? 

செல்வம் சேர்க்கும் ஆசையைக் காட்டிலும் அதிக வலுவானது காதல் ஆசை. அதுவும் வாலிப வயதில் அது எல்லை மீறவும் கூடும். ஆசை அறிவை மழுங்கச் செய்து தன் மேல் காதல் கொள்வதாகக் கூறும் ஒருவரது உண்மை நிலையை உணர மறுக்கும் நிலையில் மனம் ஆசைவயத்தில் செயல்படுகிறது. தன்னை உண்மையாகக் காதலிப்பதாக உறுதியளித்தவர் மனதில் உண்மையில்லை எனும் தீர்மானத்துக்கு மனம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வருகையில் அங்கே உயிர் துடித்து உள்ளம் துவண்டு வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு ஏற்படுமளவு அறிவு முற்றிலும் மழுங்கி விடுகிறது. 

ஒரு செல்வந்தரின் மகன் தன் தந்தையிடம் பணத்தை வாங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறான். தான் பார்க்கும் பெண்கள் பலரையும் தொடர்ந்து சென்று அவர்களோடு பழகிப் பொழுதைக் கழிக்கிறான். இடையில் தன் நண்பனின் தங்கையைக் கண்டு அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறான். இதுகாறும் தான் சென்ற பாதை தவறு என உணர்ந்து தன் காதலியுடன் சேர்ந்து வாழக் கனவு காண்கிறான். ஆனால் அவனது தந்தை அவனது தவறான போக்கைக் 
கேள்விப்பட்டு அவன் திருந்தி வாழத் தன் சகோதரியின் மகளை அவனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி அதை அவன் மறுக்கவிடாமல் செய்வதற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் சகோதரியின் மகள் பெயரில்  எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். இடையில் பழைய துஷ்ட சகவாசத்தால் ஏற்பட்ட சில சகாக்கள் இவனைப் பெரும் குற்றச் செயலில் மாட்ட வைக்க முயன்று அவனிடன் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதனால் அவன் தனது அத்தை மகளிடமிருந்து அவர்களுக்குத் தரத் தேவையான பணத்தைப் பெற வேண்டி அவளை விரும்புவது போல் காட்டிக் கொள்கிறான்.

இந்நிலையில் அவனது காதலியின் அண்ணன் இவனது செயல்களில் சந்தேகம் கொண்டு தன் தங்கையிடம் தனது நண்பனின் மோசத்தைப் பற்றிச் சொல்ல அந்தப் பெண்ணின் மனம் கதறுகிறது. கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவளுடன் சேர்ந்து அவளது அண்ணனும் அழுகிறான். அவர்கள் இருவரது உள்ளங்களுள் குமுறிப் பெருக்கெடுக்கும் உணர்ச்சி வெள்ளத்தைக் கவிஞர் வார்த்தைகளால் வடிக்க இந்தத் துடிப்பு மிக்க பாடல் உருவானது.


திரைப்படம்: போலீஸ்காரன் மகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:  எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

இன்பமெனும் மொழியெதற்கு?
செல்வத்தில் மிதப்பவர்க்கு
துன்பமென்ற சொல்லெதற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

கையிலே வளைவெதற்கு?
காதலியை அணைப்பதற்கு
காலிலே நடையெதற்கு?
காதலித்து திரிவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பாசமென்ற சொல்லெதற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆசை கொண்ட வாழ்வெதற்கு?
அன்றாடம் சாவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பூவிலே தேனெதற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு
வண்டுக்கு சிறகெதற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

புதன், 27 ஜனவரி, 2016

பண்ணோடு பிறந்தது தாளம்

பெண்களை தெய்வங்களாகப் போற்றி வணங்கிப் பூசித்துப் பெருமை கொள்ளும் அறிவிற் சிறந்த மாந்தர் வாழும் நாடு நமது பாரத நாடு. அத்தகைய மாண்பின் மகிமையால் நம் நாடு எத்தனையோ அன்னிய ஆக்கிரமிப்புகளையும், பொருளாதார, கலாச்சார சீர்கேடுகளையும் சந்தித்த போதும் அத்தகைய தீமைகளின் பிடியிலிருந்து மீண்டெழுந்து தலை நிமிர்ந்து வீறுநடை போடும் சக்திகொண்டு விளங்குவதன் ரகசியம் நம் தேசத்துப் பெண்களின் ஒழுக்க நெறிகளும் இல்லற நிர்வாகத் திறனும் ஆகும். இதனை அறிவுடையோர் எவரும் தயங்காது ஒத்துக்கொள்வர். நாம் ஒவ்வொருவரும் பிள்ளைப்பிராயத்திலிருந்து வளர்ந்து ஆளாகி வாழ்வில் சிறந்து விளங்க நம் ஒவ்வொருவரின் தாயார் எத்தனை சீரிய பராமரிப்பை நல்கியுள்ளார் என்பதை எண்ணிப் பார்த்தால் பெண்ணின் பெருமை விளங்கும். 

தன் கணவன் ஈட்டித் தரும் பொருள் அளவில் சொற்பமேயாயினும் அதிலும் சிறிதளவேனும் மிச்சம் பிடித்து, செலவைக் கட்டுப்படுத்தித் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கும் பொறுப்பு நம் நாட்டுப் பெண்மணிகளிடம் நிலைபெற்று விளங்கும் தலையாய மேலாண்மைத் திறமாகும். இத்தகைய திறம் வாய்ந்த பெண்கள் உலகின் பிற நாடுகளில் குறைவே. நம் நாட்டின் பண்பாடு தொன்றுதொட்டு சிறந்து விளங்கிடக் காரணம் பெண்களுக்கு நாமனைவரும் தரும் உயர்ந்த மரியாதையே ஆகும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

என வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்துச் சென்ற இலக்கணப்படி நமது நாட்டின் பெண்கள் நடந்து வருவதாலேயே பெருமை பெறுகின்றனர்.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா வேற்படையும் 
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை யரசு.

எனப் புகழேந்திப் புலவர் தன் நளவெண்பா நாயகி தமயந்தியைப் புகழ்கிறார். தமயந்தியானவள் பெண்களுக்கு அமைய வேண்டிய அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணங்களும் சிறந்து விளங்கி ஒரு நாட்டின் ரத, கஜ, துரக பதாதிகள் என அறியப்பட்ட நான்கு படைகளுக்கொப்பாக விளங்கிட, அவளது ஐம்புலன்களும் அறிவிற் சிறந்து நிற்கும் அமைச்சர்களுக்கொப்பாகத் திகழ, அவள் நடக்கையில் ஜல் ஜல் என ஆர்ப்பரிக்கின்ற அவளது காற்சிலம்பே போர் முரசாக விளங்க, அவளது இரு கண்களும் வேலும் வாளூமாகப் போர் புரியும் பெண்மையாகிய அரசு அவளது முழுமதியையொத்த முகமாகிய வெண்கொற்றக் குடையின் கீழ் ஆளுகிறது என அழகிய தமிழ்மொழியில் விளக்குகிறார்.

இந்த நான்கு குணங்களுள் மிகவும் இன்றியமையாதது மூன்றாவது குணமான நாணம். நாணமே பெண்மையின் அழகுக்கு அணிகலனாகிறது, பெண்ணின் அடக்கத்தையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நாணமுள்ள பெண்களையே ஆடவர் விரும்பி மணக்க முன்வருகின்றனர் ஏனெனில் நாணம் எனும் குணம் நிறையப் பெற்ற பெண் பிற மூன்று குணங்களையும் அடைந்திருத்தல் உறுதி. நாணம் என்பது தம்மிலும் மூத்தோரிடத்தில் அவள் செலுத்தும் மரியாதை, பக்தி மற்றும் தன்னில் இளையோரிடம் காட்டும் அன்பும் கருணையும் ஆகிய அத்துணைப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட ஒப்புயர்வற்ற குணமாகும்.


திரைப்படம்: விடிவெள்ளி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: ஜிக்கி, பி.பி. ஸ்ரீனிவாஸ்

ம்ஹ்ம்ம் ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்ம்

பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
மண்ணோடு மலர்ந்தது மானம் குல
மகள் கொண்ட சீதனம் யாவும்

பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோம் என்றே உள்ளம் ஓடும் வார்த்தை
சொல்லாமலே இதழ் மூடும்

ம்ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ம்ம் ம்ஹ்ம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு
பழகாத கல்விக்குத் தானிந்தப் பள்ளி

காணாத கதை இங்கு காண்போம் அதைக்
கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இங்கு காண்போம்

அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்

திங்கள், 25 ஜனவரி, 2016

உன்னை நினைக்கையிலே

இவ்வுலக வாழ்விலேயே சொர்க்கம்,நரகம் இரண்டையும் நாம் அனுபவிக்கிறோம். யாரும் இறந்த பின்னர் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பின்னர் சொர்க்கம் போவதைப் பற்றி எண்ணி மயங்கவும் வேண்டாம், நரகம் போவதைப் பற்றி வருந்தவும் வேண்டாம். இறந்த பின் வாழ்வு உண்டு என்போரும் இல்லை என்போரும் தம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவ்வாறு சொல்கின்றரே அல்லாது அறிந்து சொல்வதில்லை. மறு பிறவியிலும், இறந்த பின் எய்தும் சொர்க்க நரகங்களிலும் நம்பிக்கை வைப்போரும் நம்ப மறுப்போறும் இரு சாராருமே அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று உளமார ஒத்துக் கொள்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர். 

யாரோ எவ்வாறோ இருக்கட்டும். அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தே எவரும் இவ்வுலகில் நடைபெரும் எல்லா சம்பவங்களிலிருந்தும் பெறும் அனுபவங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.  அவ்வனுபவங்களிலிருந்து கிடைக்கும் இன்பத்தை மனதார உணர்வோர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

வாழ்வில் எவ்வுயிர்க்கும் காதலைப் போன்ற இன்பம் பயக்கும் சொர்க்கம் வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். முதன் முதலில் ஒருவருக்குக் காதல் மலரும் பருவம் இளமை குலுங்கும் வாலிபப் பருவமாக இருப்பதாலேயே காதலின்பம் எல்லையில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. காதலில் முழ்கிய ஒரு வாலிபன் தனது காதலியைப் பற்றி எண்ணுகையிலே காணும் இன்பம் அவனது கற்பனை வளத்திற்கேற்றவாறு சுவை தருகிறது. காதலைப் பற்றிக் கதைகள், காவியங்கள் பல இருந்த போதும் திரைப்படங்களில் உயிரோட்டத்துடன் காதல் காட்சிகளைப் பார்த்து ரசிக்கையில் ஏற்படும் மெய்சிலிர்ப்புக்கு ஈடாகா என்பது அனேகர் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். 

அத்தகைய காதல் காட்சிக்குப் பாடல் இனிமையாக அமைந்து விட்டால் கேட்கவே ஆனந்த பரவசமாக இருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் கற்பனை வளத்தில் கவினுற உருவாகி, இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் கைவண்ணத்தில் இசையமைந்து தங்கக் குரலோன் டி.எம். சௌந்தரராஜனின் இன்பக் குரலில் பாடல் அமைந்துள்ளதென்றால் அதில் இனிமை பொங்கி வழியும் என்று சொல்லவும் வேண்டுமோ?


திரைப் படம்: கல்யாணிக்கு கல்யாணம் (1959)
இயற்றியவர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னை நினைக்கையிலே
உன்னை நினைக்கையிலே 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
பொன்னை உருக்கிய வார்ப்படமே! அன்பு 
பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே!

உன்னை நினைக்கையிலே

வட்டக் கருவிழி மங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆ
வட்டக் கருவிழி மங்கையே ஒளி 
கொட்டும் இரவுக்கு தங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக் 
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே கண்ணே! 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
உன்னை நினைக்கையிலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று நம் தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் கூறுகின்றனர். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சற்றே மாறுபாடு எழுமாயின் அங்கே காதலர்கள் இடையே ஊடல் ஏற்படுகிறது. கருத்து வேறுபாடு களையப்பட்டு அல்லது உடன்பாட்டுக்கு வந்து ஊடல் தீர்ந்தால் கூடல் ஏற்படுகிறது. அப்போது ஊடலால் ஏற்பட்ட சிறு துன்பமும் மறைந்து மீண்டும் வலுவான கருத்தொருமித்த இன்பம் பிறக்கிறது. 

காதலர்களாயினும் கணவன் மனைவியாயினும் இருவருக்கும் எப்போதும் ஒரே கருத்து எல்லா விஷயங்களிலும் நிலவுவதில்லை. வேறுபாடுகள் எப்பொழுதும் எழக்கூடும். அத்தகைய தருணங்களில் காதலர்களுள் ஒருவர் மற்றவரது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய மதிப்பளித்து ஏற்றுக்கொள்வது உண்மைக் காதல். அது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை மாறாது நிலைபெற்றிருக்க வல்லது. அவ்வாறன்றி ஒருவர் கருத்து வேறுபாடுகளை மற்றவர் ஏற்றுக்கொள்ள மறுக்கையில் அங்கே உடன்பாடு ஏற்படுவதில்லை. அதனால் பிரிவு ஏற்படுகிறது.

சிலப்பதிகார காவியத்தில் கோவலனும் மாதவியும் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டு உடன்பாட்டை எட்டாத சூழ்நிலையில் அவர்களிடையே நிரந்தப் பிரிவு ஏற்பட்டது. ஆயினும் அங்கே கோவலன் கண்ணகியுடன் சேர்ந்து வாழ வழி பிறந்தது. அது காவியம், கதையானதால் அதுகுறித்து சர்ச்சை செய்வது பலன் தராது. 

நிஜ வாழ்வில் காதல் கொண்ட இருவர் கருத்து வேறுபடுகையில் இருவருக்கும் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஊடல் கொண்டு பிரிந்த காதலர் ஒருவரையொருவர் எண்ணி ஒன்றுபட வழியென்று பிறக்கும் என்று ஏங்கி மயங்கி வாடுவதே உண்மைக் காதலர்களின் இயல்பு. 

ஊடலின் காரணமாய் உண்டான காதலியின் பிரிவினால் மனம் துயருற்று வருந்தி ஏங்கும் காதலன் ஒருவன் தன் காதலியை நினைத்து வாடுகிறான்.

ஊடலால் தன்னை விட்டுப் பிரிந்த காதலி தன்னை வந்து சேர வேண்டுமென உளமார வேண்டி அவளிடன் இரைஞ்சுகிறான் அக்காதலன்.  அவனது உணர்வை வார்த்தைகளால் கவிஞர் வடிக்க அதனைத் தேனொழுகும் தன் இனிய குரலில் பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி பாட அங்கே உண்மைக் காதல் உயிர் பெறுகிறது. 

சிறு பாலகனாக இருந்த காலத்தில் (1959) அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன வர்த்தக சேவை எனும் தமிழ் வானொலியில் ஒலிபரப்பக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தெள்ளமுதப் பாடல் உங்களுக்காக.


திரைப்படம்: அவள் யார்?
இயற்றியவர்:  வித்வான் வே. லட்சுமணன்
இசை:  ராஜேஸ்வர ராவ்
பாடியோர்:  Pandit Panikkrahi பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி
ஆண்டு: 1959

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?

வாடாத பூவும் மலராத போதே
வாடாத பூவும் மலராத போதே
பாடாது வண்டும் சூடாமலே
பாடாது வண்டும் சூடாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆனந்தமே தரும் வாழ்வில்
ஆனந்தமே தரும் வாழ்வில்
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
நீயாக வாராய் நாணாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே?