சனி, 4 ஜூலை, 2015

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு

கவிஞர்களுக்கு வாக்குப் பலிதமுண்டு என்பது ஆன்றோர்கள் கண்டுணர்ந்த உண்மை. நம்புவதும் நம்பாதிருப்பதும் அவரவர் விருப்பம் ஏனெனில் பொய்க்கு ஆயிரம் சாட்சிகள் வருவர். உண்மைக்கு சாட்சி சொல்ல யாரும் இன்று வருவதில்லை. அத்துணை மதிப்பு உண்மைக்கு மஹாத்மா காந்தி பிறந்த நாட்டில்!

காளமேகப் புலவர் என்றால் தமிழறிஞர்கள் யாவரும் அறிவர். திருமலைராயன் பட்டினம் எனும் நாட்டை அவர் சரமகவி அல்லது வசைகவி பாடி மண்மாரிப் பொழிந்து அழியச் செய்தார் என்பது காளமேகப் புலவர் வரலாற்றில் காணும் குறிப்பு.

செய்யாத செய்த திருமலைராயன்வரையில் 
அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற் 
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் 
மண்மாரி யாலழிய வாட்டு

என்பதே அச்சரமகவி.

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக் கூத்தன் 
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காள மேகம் 
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொ ணாதே." 

- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜீவனையும் காக்கவல்ல பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளமைக்கு வரலாற்றுச் சான்றுகள் உள. இத்தகைய நாவன்மை சங்ககாலப் புலவர்களை மட்டுமின்றி தற்காலப் புலவர்களிடத்தும் உண்டு என்பதை நம்மில் பலர் அல்லது சிலர் அறிந்திருக்கக் கூடும். குறிப்பிட்டுச் சொல்லுவது தற்காலத்தில் கடினம் ஏனெனில் இயந்திரகதியில் உலகம் இயங்குகையில் யாருக்கும் நிற்கவோ, நினைக்கவோ நினைத்ததை விரிவாக எடுத்துச் சொல்லவோ போதிய நேரம் கிட்டுவதில்லை. அது மட்டுமின்றி அவ்வாறு யரேனும் எழுதிவைத்தாலும் அதைப் படிப்போர் வெகுசிலரே. மனிதர்கள் பணம் சம்பாதிப்பதிலும் அடுத்த வேளைப் பசிக்கு உணவு தேடுவதிலுமே பெரும்பான்மையான நேரத்தை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம்.

புரட்சி நடிகராயிருந்து புரட்சித் தலைவராக உயர்ந்த மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். என்று தமிழக மக்களால் மட்டுமின்றி உலகிலுள்ளோரில் பெரும்பாலோரால் அறியப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் திவிர சிகிச்சை பெற்றுவந்தார். செய்திகேட்டுத் தமிழக மக்கள் அனைவரும் மாளாத் துயரில் ஆழ்ந்தனர். தங்களது பிரியமான தலைவன் நலம் பெற்று எழுந்து வரவேண்டும் என்று அனைவரும் ஒருமனத்துடன் சாதி, மத பேதம் ஏதுமின்றிப் பிரார்த்தனை செய்தனர். அவர்களது ஒருமித்த குரலாக ஒரு பாட்டு தொடர்ந்து ஒலித்தது. அனைத்து 
ஆட்டோரிக்க்ஷாக்களிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து இசைக்கப்பட்டது அப்பாட்டு. அதனை எழுதியவர் கவிஞர் வாலி. பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு. 

கவிஞர் வாலியின் பாடல்கள் பொதுவில் கருத்தாழம் மிக்கவை. அதிலும் இப்பாடல் கேட்போர் உள்ளத்தை உருக வைக்கும் வல்லமை கொண்ட வரிகளும் பொருளும் நிறைநததாகும். தமிழக மக்களின் குரல் அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்குக் கேட்டது. அவர் தாமதமின்றி உடனடியாக ஏற்பாடு செய்த சகல வசதிகளும் பொருந்திய மருத்துவமனையாகவே மாற்றியமைக்கப்பட்ட ஆகாய விமானமொன்றில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவின் ப்ரூக்லின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எம்.ஜி.ஆர். அவர்களது அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டு நாடு திரும்பினார் எம்.ஜி.ஆர். மருத்துவமனையிலிருந்து கொண்டே தேர்தலையும் சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றார்.


MGR Vallalin Varalaru- Promo 4min

MGR Hospital video

இந்தப் பாடல் திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்காக எழுதப் பட்டுப் படமாக்கப் பட்டதோ அதே சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிஜ வாழ்விலும் பாடப்பட்டது. திரைப்படத்தில் கதாநாயகனின் உயிரை மீட்ட அதே பாட்டு எம்.ஜி.ஆர். அவர்களின் உயிரையும் மீட்டது.

தமிழக மக்களின் இதயக்கனியான எம்.ஜி.ஆர். அவர்களது உயிரை எமனிடமிருந்து மீட்டு வந்த அந்த உயிர்ப் பாடல்இன்றைய பாடலாக ஒலிக்கிறது.



திரைப்படம்: ஒளிவிளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!
இறைவா நீ ஆணையிடு! ஆணையிடு!
இறைவா! இறைவா! இறைவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக