வியாழன், 21 ஜனவரி, 2016

என் நெஞ்சு உன்னையகலாது

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 17, 2014
மனிதர்களுடன் பழகுவதை விட மரம், செடி, கொடிகளுடனும் விலங்குகளுடனும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாகும். மனிதர்கள் பெரும்பாலும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பழகுவதால் அவர்களது சுயநலம் நமக்குத் தெரிகையில் மனம் துயரப்படுகிறது, ஆனால் மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகிய உயிர்கள் வாய் விட்டுப் பேசுவதில்லையானாலும் மௌன மொழியில் அவை பேசும் செய்திகளை நாம் பழகப் பழக அறிந்து கொள்ளலாம். அத்தகைய அறிவு நாம் ஒவ்வொருவரும் பெறத் தக்கதே. மரம், செடி, கொடிகள் மற்றும் விலங்குகளின் பாஷை நமக்குப் புலப்பட்டு நாம் அவர்களுடன் மனம் விட்டுப் பழகப் பழக சொர்க்கமே தெரியும் என்பதை இயற்கை விஞ்ஞானிகளும், மிருகங்கள் நலம் பேணும் ஆர்வலர்களும் அறிவர். 

மரங்கள் வெயிலில் வாடுவோர்க்கு நிழல் தரும். மழையில் நனைவோருக்கு ஒதுங்க இடமளிக்கும். மரங்கள் பகலில் காற்றிலிருக்கும் கரியமில வாயுவை (கார்பன் டையாக்சைடு) இலைகளில் வழியே உட்கிரகித்துப் பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியிடுவதால் காற்றை சுத்தம் செய்து ஆரோக்கியம் பெருக உதவுகின்றன. மேகங்களை ஈர்த்து மழையுண்டாகச் செய்வதுடன் பல்விதமான, காய்கள், கனிகள், மலர்கள் முதலிய அரிய பொருட்களை நமக்குத் தருகின்றன. புளிய மரம், மாமரம், பலா மரம், கொய்யா மரம், ஆப்பிள் மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், வாழை மரம் எனப் பலவகை மரங்கள் காய் கனிகள் தருகின்றன. வாத நாராயண மரம், வன்னி மரம், புன்னை மரம் முதலியவை அழகிய மலர்களைச் சொரிந்து இயற்கையை வளமாக்குகின்றன. தேக்கு, வெண் தேக்கு போன்ற மரங்கள் மேசை, நாற்காலிகள், கதவுகள் போன்ற பொருட்களைச் செய்ய உதவுகின்றன. பல வித மரங்கள் சிற்ப வேலைப்பாடுகள் செய்ய உதவுகின்றன. கருவேல மரம் போன்ற பல மரங்கள் விறகாக எரிக்க உதவுகின்றன. சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் கட்டுமானப் பணிகளுக்கு உதவுகின்றன.

மரங்களைப் போலவே செடி கொடிகளும் பல்வேறு வகையான கறி காய்கள், பழங்கள், மலர்கள் முதலியவற்றைத் தருவதுடன் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி மாசின்றிப் பாதுகாக்கின்றன.

மிருகங்கள் நம்முடம் எளிதில் பழகாவிட்டாலும் பழகிய பின்னர் அவை நம் மீது பொழியும் அன்பு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்குத் தூய்மையாகவும், இன்பம் தருவதாகவும் அமையும். மிருகங்கள் நிறைந்த வனப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையாகவே அன்பு நிறைந்தவர்களாக இருப்பர். அதிலும் குறிப்பாக மனிதர்களே இல்லாத வனப்பகுதியில் வாழும் மனிதர்கள் பெரும்பாலும் மிருகங்களுடன் பழகி வாழ்வதால் அவர்கள் மனதிலும் கள்ளம் கபடு இரா. உண்மை அன்பை அத்தகைய மனிதர்கள் நிச்சயம் தருவர்.

ஆதிகாலத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களுடன் ஒன்றாய் வாழ்ந்த நிலை மாறிக் காடுகளை அழித்து வீடுகள் கட்டி வாழத் தொடங்கிய நாள் முதல் அவர்களுள் போட்டி பொறாமைகளும், பொய் சூது சூழ்ச்சிகளும் பெருகிவிட்டன. மனிதனின் மனதில் கள்ளத்தனம் குடிபுகுந்தது. மற்றவரை ஏய்த்துப் பிழைக்க அவன் தெரிந்து கொண்டான். அதனால் நகரங்களில் வாழும் அனைவரது வாழ்க்கையும் நரகமானது. 

அத்தகைய நகரமொன்றில் வாழும் குடும்பத்திலிருந்து ஒரு இளம் பெண் வனத்தில் மாட்டிக் கொள்கிறாள். எதிர் பாராத விதமாக அவ்வனத்தில் தனியே வாழும் வாலிபன் ஒருவனின் துணை அவளுக்குக் கிடைக்கிறது. அவளை அவன் அன்புடன் பாதுகாக்கிறான். அவள் பேசும் மொழி அவனுக்குத் தெரியவில்லையாயினும் அவளது மனதின் மொழியை அவன் அறிந்து அவளிடம் அளவிடற்கரிய அன்பைச் செலுத்துகிறான். அவள் அவன் மேல் அன்பு கொண்டு தன் மொழியை அவனுக்குக் கற்பிக்கிறாள். அவனை நாளடைவில் மனதாரக் காதலிக்கிறாள். 

அவனுடன் வனமெங்கும் சுற்றித் திரிந்து மகிழ்கிறாள். யானை மேல் அவனுடன் ஒரு ராணிபோல் பவனி வருகிறாள். உள்ளமும் உள்ளமும் ஒன்றொடொன்று இணைந்த காதலின் இன்பம் எல்லையில்லாததல்லவா? 

அத்தகைய காதலை வெளிப் படுத்தும் பாடல் இதோ பி. சுசீலா அவர்களின் இனிய குரலில் ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட படத்தில்:



திரைப்படம்: நகரத்தில் ஜிம்போ
இயற்றியவர்: குயிலன்
இசை: சித்ரகுப்த்
பாடியவர்: பி. சுசீலா
 
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

அருவியில் ஆடி நாமே ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
உளந்தனில் என்றும் மீளா ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விழுந்தே நல்ல மணத்தைப் பரப்பும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
ஆரமுதை நீரனையே அள்ளிநிதம் பருகும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ ஆஅ

செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 13, 2014
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தன் பலஹீனத்தை முழுதும் உணர்ந்திருந்தான். தான் வாழும் காலம் மிகவும் குறுகியதே என்றும் தான் ஒரு நாளல்லது ஒரு நாள் இவ்வுலகை விட்டுச் செல்வது நிச்சயம் என்றும் தெளிவாக அறிந்திருந்தான். அத்துடன் உலகில் பிறப்பெடுத்த ஜீவராசிகள் படும் அவஸ்தைகளைக் கண்கூடாகக் கண்டான். அதே போன்ற அவஸ்தைகளைத் தானும் தன் சுற்றத்தாரும் படுவதையும் கண்டான். அத்தகைய துன்பங்களைத் தாங்கத் தேவையான மனோவலிமையை அடைய மனிதன் வழிதேடினான்.

அத்தகைய தேடலினால் தோன்றியதே இறை வழிபாடாகும். தன்னையும் பிற உயிர்களையும் படைத்த ஏதோ ஒருசக்தி அனைவரையும் காத்தும் அழித்தும் அருள்புரிவதை மனிதன் உணர்ந்ததாலேயே அச்சக்தியை தெய்வமெனக் கொண்டு பூஜித்தான். அத்தகைய பூஜையில் தன் மனம் அமைதியடைவதையும் துன்பங்களைத் தாங்கும் வலிமை தன் மனதிற்கு அப்பூஜையின் பலனாகக் கிடைப்பதையும் அவன் உணர்ந்தான். அத்தகைய தெய்வ பக்தியைத் தன் சந்ததியினருக்கும் ஊட்டி அவர்களும் தெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்வதை வலியுறுத்தினான். 

நாமும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய பாதையில் சென்று தெய்வ வழிபாட்டை வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகக் கருதி ஆலயங்களிலும், இல்லங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் இறை வழிபாட்டுக்குப் பிரதான இடமளித்து என்றும் எங்கும் அமைதி நிலவி நன்மை விளையப் பிரார்த்தனை செய்கிறோம்.

பண்டைக் காலத்திலிருந்தே புலவர்கள் கவிதைகளையும் காவியங்களையும் இயற்றுகையில் முதற்கண் இறைவன் அருளை வேண்டிச் சில வரிகள் புனைந்த பின்னரே ஏனைய பகுதிகளைப் புனைந்து வருவது மரபாயிற்று. எனது நினைவுக்கெட்டிய வரை இதுவரை நானறிந்த புலவர்கள் யாவரும் இறைவனைத் தம் தலைவனாகவும், குருவாகவும் வழிபட்டு இறையருள் தமக்கு எளிதாகக் கிட்டும் என்று நம்பினர். இறைவன் கேட்ட வரங்களைத் தருபவனாகவே சித்தரித்திருக்கின்றனர். இறைவன் தன் அருளை அடியார்களுக்கு எவ்விதப் பிரதியுபகாரமும் எதிர்பாராமலேயே அருள்கிறான். 

மனிதன் தன் பிரியத்தினால் இறைவனுக்குத் தேங்காய், பழங்கள், பக்ஷணங்கள் என விமரிசையாக ஒரு படையல் செய்து நிவேதனம் செய்கின்றான். அவ்வாறு நிவேதனம் செய்த பண்டங்களைத் தன் சுற்றத்தாரும் பிற மாந்தர்களும் அருந்தக் கொடுத்து ஆண்டவனுக்குக் கொடுத்ததாகவே பாவித்து மகிழ்ச்சியடைகிறான். இதன் ரகசியமாவதுஒருவன் எல்லையில்லாத ஆனந்தத்தை அடைவது பிறருக்கு ஏதேனும் உதவி செய்வதிலும், ஏதோ சில பொருட்களைக் கொடுப்பதிலும் என்பதுவே ஆகும்.

இருப்பினும் உழைத்து வாழும் முறையை நிலைத்து நிற்கச் செய்யவும் உலகம் சோம்பலின்றி இயங்கவும் மனிதன் ஆதிகாலத்தில் பண்ட மாற்று முறையிலும் பின்னர் நாகரிகம் வளர்ந்த பின்னர் பணம் கொடுத்தும் தனக்கு எந்த ஒருதருணத்திலும் தேவைப் படும் பொருளையும் பிறரிடமிருந்து வாங்கிக்கொள்ளும் வியாபாரத்தை அமைத்தான். 

புலவர்கள் பலர் இறைவனைத் தன் தந்தையாகவும், தாயாகவும், பிள்ளையாகவும் மற்றும் பல உறவினர்களாகவுமே எண்ணி அதன்படியே தன் கவிதைகளை உருவாக்கி வந்துள்ளனர்.

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, 
அன்புடைய மாமனும் மாமியும் நீ, 
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ, 
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, 
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப்பொன் நீ, இம்மணி நீ, இம்முத்தும் நீ, 
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன்நீயே!

என்று அப்பர் பாடியுள்ளார். இப்பாடலை தவறாமல் தினம்தோறும் காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் என் தந்தை பூஜை செய்கையில் பாடக் கேட்டுள்ளேன்.

தற்காலப் புலவர் ஒருவர், அற்புதமான பல பாடல்களை அன்று முதல் நேற்று வரை எண்ணிறந்த தமிழ்த் திரைப் படங்களுக்கு எழுதியவர், ஒரு பாடலில் இறைவனை ஒரு வியாபாரியாக வர்ணித்து மனிதர்கள் தமக்கு வேண்டிய பொருளை விற்பனை செய்ததாகக் கற்பித்து எழுதியுள்ளார். இறைவன் எதையும் இலவசமாகத் தருவதில்லை. அவரவற்கேற்ற விலைக்கே தருவதாக உண்மை நிலையை உணர்த்தி மனிதனின் குணாதியத்தை அருமையாக அப்பாடலில் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.



திரைப்படம்: டெல்லி மாப்பிள்ளை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் வேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து 
அன்பை வாங்கிட எவருமில்லை

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து 
அன்பை வாங்கிட எவருமில்லை ஹஹஹஹஹ
அன்பை வாங்கிட எவருமில்லை!

திங்கள், 18 ஜனவரி, 2016

வாழ்வது என்றும் உண்மையே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 12, 2014
வெற்றி என்பது யாது என்பதை நம்மில் பெரும்பாலோர் அறியோம். அதனாலேயே பல சமயங்களில் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் தவிக்கிறோம். நாம் கற்ற கல்வி பெரும்பாலும் பொருளீட்ட வழி வகுக்கும் கல்வியாகவே இருப்பதால் ஏற்பட்ட குறைபாடு இது. வாழ்க்கை என்பது என்ன என்று நாம் அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. இத்தகைய அறியாமையே நம் மனதில் உறுதியற்ற நிலையை உருவாக்கி சந்தேகக் கண் கொண்டே அனைத்தையும் பார்க்கும் மனோபாவம் வளர்கின்றது. மனிதனின் மனதில் வளரும் பாப சிந்தனைகளுள் மிகக் கொடியது சந்தேகம் ஆகும். சந்தேகத்தினால் உறவுகள் முறிகின்றன. நண்பர்கள் பிரிகின்றனர். கணவன் மனைவியிடையே தாம்பத்யம் சுவையாக இல்லாமல் வேண்டா வெறுப்பாகவே வாழும் நிலை ஏற்படுகிறது. பெற்ற பிள்ளைகளைப் பெற்றோர் நம்புவதில்லை. அதனாலேயே தாம் சேர்த்து வைத்த பொருளில் பெரும் பகுதியை ஏமாற்றிப் பிழைக்கும் நிதி நிறுவனங்கள் போன்ற இடங்களில் மூலதனம் செய்து ஏமாறுகின்றனர். பிள்ளைகள் எங்கே தங்களை வயதான காலத்தில் உரிய மருத்துவ உதவிகள் தராது கொன்று விடுவார்களோ என அஞ்சி வீட்டை விட்டு அநாதைகளாய்த் தெருவில் வசிக்கும் பெற்றோர்களைப் பற்றி செய்தித் தாள்களில் வாசித்திருக்கிறேன்.

நாட்டை ஆள நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் நேர்மையானவர்களா, சொன்ன சொல் தவறாதவர்களா, மக்கள் நலனை முக்கியமானதாகக் கருதுபவர்களா என்று ஆராயத் தவறுகிறோம். ஏனெனில் நம் மனதில் உண்மை இல்லாததால் பிறரைப் பற்றிய உண்மையை அறிய நம்மால் இயல்வதில்லை. பொய் சொல்லி மக்களை ஏமாற்றிப் பதவியைக் கைப்பற்றும் மனிதர்கள் விரைவில் உண்மை வெளியாகி மக்களால் மதிக்கப்படாத இழிநிலையை அடைவதை நாம் தினமும் கண்ணால் காண்கிறோம், காதால் கேட்கிறோம். இருப்பினும் தொடர்ந்து அத்தகைய பொய்யர்களையே தொடர்ந்து ஆட்சியில் அமர்த்துகிறோம். அவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைப் பார்த்து மகிழ்கிறோம். நம் வீட்டில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்துப் போய் அப்பணத்தில் நாம் வசிக்கும் தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்ய ஒரு திருடன் துணிவானாகில் அக்கடையில் நாம் வியாபாரம் செய்வோமா? 

ஆனால் நாட்டைக் கொள்ளையடித்து சுருட்டிய பணத்தில் தொலைக்காட்சிகள் நடத்துவதை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை? நம் வீட்டில் பணமிருந்தால் போதும், நம் வீட்டிலுள்ளோர் நலமாக இருந்தால் போதும், நாடு எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன எனும் குறுகிய மனப்போக்கே இதற்குக் காரணம்.

உலக சரித்திரத்தையும் ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்தையும், பல தலைவர்கள் சரித்திரத்தையும் படிக்கையில் நாம்ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது பொய் நிலைக்காது. என்றாவது ஒரு நாள் பொய்யர்களின் சுயரூபம் வெளிப்பட்டே தீரும். ஆனால் உண்மை என்றும் நிலைக்கும். என்றும் உண்மை ஒன்றே பேசும் உத்தம குணமுள்ள தலைவர்களை மக்கள் தெய்வங்களாகப் போற்றித் தம் மனதில் நிலைநிறுத்தித் தொழுகின்றனர். ஊழல் செய்யும் மனிதர்களும் அத்தகைய தலைவர்களைத் தவறாது போற்றி வணங்கி, அவர்களது சிலைகளை அமைத்து அச்சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்து நற்பெயர் தேடி அதன் மூலம் மக்களை ஏய்க்க முயல்கின்றனர். 

ஆனால் இத்தகைய வேஷம் ஒரு நாள் வெளிப்படும். உண்மை ஒரு நாள் வெளியாகும். அன்றே இந்த உலகம் சுபிட்சமடையும். அது வரையில் துன்பங்களே பெருகும். இன்பம் எட்டாக் கனியாகவே இருக்கும்.

உண்மையான வெற்றியாவது பிறரது மனதில் இடம் பிடிப்பதேயாகும். அதற்கு ஓரே வழி உண்மை! உண்மையே பேசும் ஒருவனை அவனது நண்பர்கள் மிகவும் நேசிப்பது உறுதி. உண்மை ஒருவனிடம் இருக்குமெனில் அவனது பிற எத்தகைய குறைபாடுகளும் நீங்கிவிடும். உண்மை என்றும் வெற்றி பெறும். அரிச்சந்திரன் கதையும் மஹாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறும் இதற்கு உதாரணங்கள் ஆகும். உண்மை பேசும் குணமுள்ள உறுதியான மனம் படைத்த யாரும் எக்காலத்தும் எக்காரணம் கொண்டும் பொய்யுரைக்க மாட்டார் என்பதை உண்மை பேசும் குணமுள்ளோர் உணர்வார். உண்மையே பெரிதென மதிப்பவர் உயிரே போனாலும் உண்மையைக் கைவிடார். பொய் பேசித் திரிவோர் ஒரு நாளும் உண்மையை உணரார். உண்மை பேசி, நன்மையையே செய்யும் ஒருவர் விதிவசத்தால் பெருந்துன்பமுற நேரிடுகையில் அவருக்கு தெய்வாதீனமாக, உற்றார், உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி முன் பின் 
தெரியாதவர்களிடமிருந்தும் உதவிகள் தானாக வந்து சேரும். 

நிரந்தரமான புகழுக்குரிய வெற்றி பெற வேண்டுமெனில் உண்மை பேசுவதும், உண்மையாய் நடப்பதும் அவசியம். வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே! தாழ்வது முடிவில் தீமையே! இது சத்தியம்! உண்மைக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கலாகாது. நாம் உண்மையாளராக இருப்பின் நல்லோர் யாரும் நம்மால் பாதிப்படைய மாட்டார்கள். மாறாக அனைவரும் நன்மையையே அடைவார்கள். அதனால் நம் மீது பிறர் வைக்கும் அன்பு நாளுக்கு நாள் உயரும். நாம் இறந்த 
பின்னரும் நம்மை அன்புடன் நினைவு கூர்ந்து நம் வாழ்க்கை முறையைப் பின்பற்றி யாவர்க்கும் நன்மை உண்டாகப் பாடுபடுவார்கள். 

எல்லோரும் இன்புற்றிருக்க ஒரே வழி உண்மையே!




திரைப்படம்: ராஜா மலையசிம்மன்
இயற்றியவர்: அ. மருதகாசி
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்
ஆண்டு: 1959

ஆஹஹாஹா ஆஹஹாஹா ஆஹஹஹா ஆஹாஹாஹா ஓஹொஹோஹோஹோ

வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!
வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே!

வெற்றியின் பாதை தெரியுதடா! வீணர்கள் கோட்டை சரியுதடா!
வெற்றியின் பாதை தெரியுதடா! வீணர்கள் கோட்டை சரியுதடா!
எட்டுத் திசையும் கொண்டாடவே எகிரிப் பாய்ந்தே முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே!

தீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது
தீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது
பாதையே நீயும் கூடாது பார்த்திடலாமோ முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்பது உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!

முன்னேறடா முன்னேறடா! 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

தினம் ஒரு பாடல் - 10 செப்டம்பர் 2014
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தின் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். அதுவே கேரள மாநிலத்தின் பண்டிகையாக விளங்குகிறது. கேரள அரசு இப்பண்டிகைக்காக 4 நாட்கள் விடுமுறை அளிக்கிறது. இந்த ஓணம் பண்டிகை மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டு அவர் அவ்வாறே ஒப்புக்கொள்ள, இரண்டு அடிகளால் பூமியையும் பிற உலகங்கள் அனைத்தையும் அளந்து பின் மூன்றாம் அடிக்கு இடம் கேட்கவே, மாபலி தன் தலை மீது வைக்கச் சொல்ல அதன் படியே மாபலியின் தலைமேல் தன் பாதத்தை வைத்து அவனைப் பாதாளலோகத்துக்கு அனுப்பிய விசேஷமான 
நாளைக் குறிக்கிறது.

மாபலி மன்னன் மக்களுக்கு என்றும் நன்மையே செய்து புகழ் பெற்றவன், மூவுலகையும் வென்றவன். அவனது பலம் பெருகுவதைக் கண்டஞ்சிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹாவிஷ்ணு வாமன அவதாரமெடுத்து அவனை அடக்கியதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஓணம் பண்டிகையின் போது மாபலி பாதாள லோகத்திலிருந்து பூமிக்கு வந்து தன் நாட்டு மக்கள் நலமாக உள்ளனரா என்று பார்ப்பது வழக்கம் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஆண்டு தோறும் ஓணம் வந்து விட்டால் கேரள மாநிலமே திருமணக் கோலம் பூண்டது போல் விளங்கும். கேரள மக்கள் வீடுகளில் பலவிதமான பக்ஷணங்கள் செய்து விமரிசையாக விருந்தினர்களுடன் சேர்ந்து கலந்து அருந்தி மகிழ்வது வழக்கம்.

நேந்திரங்காய் சிப்ஸ், பப்படம் ஆகியவற்றுடன் தோரன், மெழுக்குப்புரட்டி, காலன், ஓலன், அவியல், சாம்பார், நெய்யிட்ட பருப்பு, எரிச்சேரி, ரசம், இனிப்பும் புளிப்பும் மிகுந்த ஊறுகாய்கள், இருவகையான மோர், துருவிய தேங்காயிலிருந்து செய்யப் பட்ட சட்னிப் பொடி, வாழைப்பழப் பாயசம் என வகை வகையாகத் தயாரித்து எல்லோரும் இஷ்டம் போல வெட்டுவார்கள். அது மட்டுமா? பல விதமான கேளிக்கைகளும், படகுப் போட்டிகளும், அலங்கரிக்கப் பட்ட யானைகளுடன் நடைபெறும் விசேஷமான பூஜைகளும் சேர்ந்து மாநிலமே அமர்க்களப் படும். திருவந்திரா, கும்மட்டிக் களி, புலிக்களி, தும்பி துள்ளம் முதலான பாரம்பரிய நடனங்களும் கேளிக்கைகளின் ஒரு 
பகுதியாக மாநிலம் முழுதும் இடம் பெறும்.

ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப் படுகிறது. பண்டிகை திருவோண நட்சத்திரம் நிலவும் பத்தாம் நாளன்று நிறைவடைகிறது. எனக்கு ஒரு இளைய சகோதரி இருந்தாள், உமா என்று பெயர். அவள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவள். நான் சிறு வயது முதல் தினமும் ஏதேனும் பாடல்களைப் பாடிக்கொண்டும் எனது புல்லாங்குழலில் இசைத்துக் கொண்டும் இருக்கையில் அவள் என்னுடன் சேர்ந்து பாடுவாள். அவள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டாள். அன்று முதல் என் பாடலுக்கு எதிரொலியாயிருந்த 
அவளின் துணையை இழந்து வாடுகிறேன்! உறவின் உயர்வு இத்தகைய பிரிவுத்துயரினால் நன்கு விளங்குகிறது.

இங்கே நம் நாயகனும் நாயகியும் ஒருவரோடொருவர் அன்பு கொண்டு இருவரும் இதயம் மாறிப்புக்கு எய்திக் காதல் வயப்பட்டுப் பாடுகின்றனர் தாங்களிருவரும் ஒன்று சேர்ந்திருந்தால் அது திருவோணம் பண்டிகையாகும் என்று. இப்பாடலை எழுதி, இசையமைத்துப் படமாக்கிய விதமும் அற்புதமாகவே அமைந்துள்ளது. எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத அந்த இனிய பாடலைக் கேட்போமா?




திரைப்படம்: மைக்கேல் மதன காமராஜன்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியோர்: கமலஹாசன், எஸ். ஜானகி
ஆண்டு: 1990

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ 
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்னேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 

ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ 
ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ 
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ

ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணம்
மோகன ராகம் நின் தேகம், கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ?
நீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் வந்து சேரும் நன்னேரம்

சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்தால் திருவோணம் ஓஹோ ஒஹோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம் 

சப்பர மஞ்சத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்ஙள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாரம்,
உலரி வரையில் நம்முட யோகம்  

ஆ ஆ ஆஆஆ  ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்னேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 

சனி, 16 ஜனவரி, 2016

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா

மனித உரிமை பற்றி வாழ்கிழியப் பேசும் மனிதர்களாலேயே மனித உரிமை மீறப்படுவதும், நீதியும் நேர்மையும் நிலைத்திடப் பாடுபடுவோமென மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வருவோராலேயே நீதிமன்றங்கள் முடக்கப் பட்டு, சாமான்யர்களுக்கு நீதி மறுக்கப் படுவதும், விலைவாசியைக் குறைப்போம் என்று மக்களுக்குப் பொய்யான வாக்களித்து மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களாலேயே விலைவாசி உயர்த்தப் படுவதும், இன்னும் இவை போன்ற எண்ணரும் பாபச் செயல்கள் உலகெங்கும் மலிந்து கிடக்கும் மிகவும் சோதனையான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
 
கலைவாணர் அந்தக் காலத்தில் பாடிய பாடலை மாற்றி,
 
மனுஷனை மனுஷன் மதிச்சு நடந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் நிதமும்
மாடாய் உழைப்பவன் ஓடாய்த் தேய்வது இந்தக் காலம்
உழைச்சவன் வாழ்வில் உயர்வை அடைந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் உழைப்பவன்
பிழைப்பைக் கெடுத்துத் தெருவில் நிறுத்துவது இந்தக் காலம்
 
நீதி நேர்மை நியாயம் இருந்தது அந்தக் காலம் அது அந்தக்காலம்
சாதியின் பெயரால் நீதியை வளைப்பது இந்தக் காலம்
நேர்வழி நடந்தது அந்தக் காலம் நேரெதிரானது இந்தக் காலம்
சீர் பெற வாழ்ந்தது அந்தக் காலம் சீ யென்று தாழ்ந்தது இந்தக் காலம்
 
என்றே பாடத் தோன்றுகிறது.
 
பல காலங்களாகப் புலவர் பெருமக்கள் பலரும் மனித சமுதாயத்தில் நிகழும் குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தவென்று எழுதிய பாடல்கள் யாவும் பெரும்பாலும் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களாலேயே தங்களை உத்தமர்கள் எனப் பறைசாற்றிக் கொண்டு திரியவே பயன்பட்டு வருவது மிகவும் வேதனை தருகிறது.
 
இத்தகைய குறைபாடுகள் தாற்காலிகமானவையே, புலவர்கள் எழுதி வைத்த கருத்துக்கள் என்றும் உயிருடன் விளங்கி, குறித்த காலத்தில் கேட்க வேண்டிய செவிகளுக்குக் கேட்டு, நற்பயன் விளைவது உறுதி என நம்புவோம்.
 

படம்: தாய்க்குப் பின் தாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1956
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
தத ச்ச்ச் தஹாய்
 
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
தகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
தஹாய் ஹா ச்ச்ச் என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த
 
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
தஹாய் ஹா ச்ச் த
 
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே ஒண்ணப்
புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
ஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ.
 
ஆகிரா

வெள்ளி, 15 ஜனவரி, 2016

அருள்வாயே நீ அருள்வாயே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 3, 2014
வாழ்க்கை வாழ்ந்தேயாக வேண்டும். வேறு வழி கிடையாது. பிறப்பில் தொடங்கிய எவ்வுயிரும் இறப்பினையடையவே வேண்டும் என்பது விதி. அதை மாற்றுமளவு சக்திவாய்ந்த மதி அந்த இறைவனுக்கும் கிடையாது. அந்த இறைவனே இந்த விதிக்குக் கட்டுப்பட்டு தேவைப்படுகையில் பிறப்பெடுக்க வேண்டும். ஒவ்வொரு பிறப்பிலும் மரணத்தையும் அடைந்தே தீர வேண்டும். இதன்படியே கடவுளர்கள் பல அவதாரங்கள் எடுப்பதாகப் புராண இதிகாசக் கதைகளில் எழுதப்பட்டிருக்கிறது. 

வாழ்ந்தேயாக வேண்டுமென்பது விதியானாலும் எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இவ்விருப்பத்தைத் தன் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. ஆயினும் அவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வழி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மையுண்டு. மலை மேல் ஏறி மலை உச்சியில் வாழ விரும்புவோர் அவ்வளவு உயரமாயுள்ள இடத்தில் நிலவும் குளிரையும், காற்றுக் குறைபாட்டையும் போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும்.

அவ்வாறே நல்ல காரியங்களை மட்டுமே செய்து பிறர் யாவருடனும் அன்போடு பழகி மகிழ்ந்து இன்புற விரும்புவோர் தமது ஆணவத்தையும், சுயநல எண்ணங்களையும் மாற்றிக் கொள்வது அவசியம். பிற உயிர்களோடு கலந்து மகிழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையல்ல. எவனொருவனும் தனக்காக மட்டுமே வாழ முடியாது. தன் சுயநலத்தைத் தியாகம் செய்து பிறர் நலத்தைப் பேணும் பெருமனதுள்ளோர் தலைவர்களாகவும் வழிகாட்டியாகவும் பிறரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு என்றும் போற்றப் பட்டு இறைத் தன்மையை எய்துகின்றனர். ஏமாற்று வழிகளில் தலைவர்களாகிப் பிறரை சுரண்டி வாழும் பாபாத்மாக்கள் தாம் பாப வழியில் ஈட்டிய பொருள் எதனையும் அனுபவிக்கு முன்னரே இவ்வுலவை விட்டு இழிவுடன் சாகின்றனர் என்பதை நாம் அனைவரும் அன்றாடம் பார்க்கிறோம். ஆயினும் நமக்கும் அத்தகைய நிலைஒரு நாள் நிச்சயம் வரும் என உணர்ந்து பிறர் நலம் போற்றி வாழ்ந்து புண்ணியம் தேடத் தவறுகிறோம்.

பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் அப்பிறவியின் பலனான முக்தியை எய்த வேண்டும். இல்லாவிடில் பிறந்த பிறவி பாழாகிப் போய்ப் பின்னர் குற்றறிவுப் பிறவிகளை அடைய நேரிடும். இதை யாரும் நம்ப வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. நம்பினோன் மோக்ஷமடைவான்; ஐயமுற்றோன் அழிவான்! அதில் எவ்வித ஐயமுமில்லை. முத்தி என்பது எல்லா வித துக்கங்களும், ஆசைகளும், பயங்களும், ஐயங்களும் அகன்ற ஓர் பேரின்ப நிலை. அதை இவ்வுடம்பினுடனேயே நாம் ஒவ்வொருவரும் அடைதல் சாத்தியமே! மனமிருந்தால் மார்க்கமுண்டு. முயற்சி செய்யுங்கள், முக்தி பெறுவீர்கள். இது உறுதி!

முக்தி பெறும் முயற்சியில் முதல் படி மனக் கட்டுப்பாடு. அதற்கு தெய்வபக்தி தேவை. பக்தியென்றால் இடையறாத பக்தி. ஒரு கணமும் மறவாது இறையருளை நாடும் நிலையை மனத்திலிருத்தி ஆணவமகற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனாலேயே நம் முன்னோர்கள் சிறு குழந்தைகளுக்கு முதலில் இறை வழிபாட்டை சொல்லித் தந்தனர். நாமும் அவ்வாறே நம் குழந்தைகளுக்கு தெய்வ பக்தியைப் புகட்ட வேண்டுவதுடன் அவர்கள் நம்மைப் பின்பற்றி வாழுமளவுக்கு என்றும் நாம் பக்திமான்களாக விளங்க வேண்டும். அதுவே நமது முக்திக்கும் நமது சந்ததியினரின் முக்திக்கும் வழி!



திரைப்படம்: சாது மிரண்டால்
இயற்றியவர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா
இசை: மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: எம். பாலமுரளிகிருஷ்ணா
ஆண்டு: 1966

ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் 
ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் 
அன்பின் திருவே அழகின் உறவே!
எல்லோரும் மகிழ்ந்திடவே
உன் கருணை வேண்டும்
உன்தன் எல்லையிலே
உலகமெலாம் வாழ்ந்திட வேண்டும்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!

கோடையின் நிழலே குளிர்த்தென்றலே!
ஓடையின் புனலே ஒளியின் கனலே!

தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
பாயும் புலியையும் பரிவோடு காக்கவும்
பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும்

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

அம்பலத்தரசே அருமருந்தே!
ஆனந்தத் தேனே அருள் விருந்தே!

நீதிப் பாதையில் நேராகப் போகவும்
நேற்றுப் பாவங்கள் தூளாகப் போகவும்
சோதிக் கடலில் எந்நாளும் நீந்தவும்
சோதனை நதியில் வீழாமல் காக்கவும்

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!

சனி, 9 ஜனவரி, 2016

சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்

தினம் ஒரு பாடல் ஆகஸ்ட் 26, 2014
நமது பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகியோர்ஒருவரோடொருவர் உறவு கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். விஷ்ணுவின் உந்தித் தாமரையில் உதித்தவர் பிரம்மா. விஷ்ணு சிவனார் மனைவியான பராசக்தியின் சகோதரர். பிரம்மாவுக்கு சரஸ்வதி, விஷ்ணுவுக்கு மஹாலக்ஷ்மி என மனைவியர் அமைந்துள்ளனர். சிவனுக்கு விநாயகர், முருகன் என இரு பிள்ளைகள். 

இவ்வாறாக தெய்வங்களும் குடும்பங்களாக விளங்கி இல்லறத்தில் ஈடுபடுவதாக ஐதிகம். இத்தெய்வங்களுக்கு முறைப்படி கடமைகளும் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அதன் படி ஆக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் எனவும், கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு மஹாலக்ஷ்மி, வீரத்துக்குப் பராசக்தியெனவும் கொள்ளப்படுகிறது.

அதே போல வாயு, வருணண், அக்னி, அஷ்டதிக்கஜங்கள் மற்றும் ஏனைய தேவர்கள், சிவனின் பூதகணங்கள் அனைவருக்கும் உரிய கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேவர்களின் தலைவன் தேவேந்திரன். அவனது சபையில் நடனமாடும் தேவமாதர்கள் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகா முதலானவர்கள். 

இவ்வாறாக தேவர்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாய அமைப்புடனேயே விளங்குவதாகக் கொள்ளப்படுகிறது. தேவர்களுடைய எதிரிகள் ராவணன், கும்பகர்ணன், சூரன், ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் போன்ற அசுரர்கள். தேவர்களுக்கு குரு வியாழ பகவான் 
எனப்படும் பிரகஸ்பதி. அதே போல் அசுரர்களுக்கு குரு சுக்கிரன் அல்லது வெள்ளி என அறியப்படும் சுக்கிராச்சாரியார் ஆவார்.

இவ்வாறு தெய்வங்களையும் தேவர்களையும் குடும்ப, சமுதாய உறுப்பினர்களாக வைத்து வழிபடுவதன் நோக்கம் "இல்லறமல்லது நல்லறமன்று" எனும் தர்மத்தை  உலகத்தவர் உணர வேண்டும் என்பதே. இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், சிவபுராணம் முதலிய காவியங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் தர்மத்தை மனிதர்களுக்கு உபதேசிக்கவே முற்காலத்தில் உலக நலன் கருதித் தவம் செய்த மாமுனிவர்கள் பாடுபட்டனர். 

மனித குலம் தர்ம மார்க்கத்தில் செல்லும் வரை உலகம் நல்ல நிலையில் இருக்கும். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்குகையில் உலகம் அழியும். இதுவே நியதி. விஞ்ஞானரீதியிலும் இதுவே உண்மை. 

கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் எவ்விதத்தில் அன்பு பாராட்ட வேண்டும் எனவும், பிள்ளைகள் தாய் தந்தையரிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனவும், வாழ்வில் மனிதர்கள் செய்யத் தக்கவை எவை, செய்யத்தகாதவை எவை என யாவரும் 
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் நிகழும் பலவித சம்பவங்களின் மூலம் எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான கதையே சம்சாரம். இக்கதை தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் திரைப்படமாக உருவாகியது 1951 
காலங்களில். 

கதையின் தலைப்புப் பாடல் கதையின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குவதாகவே அமைந்துள்ளது. இனிய குரலில் ஏ.எம். ராஜா பாடும் அப்பாடலைக் கேட்டு மகிழ்வோம் இன்றைய தினம் ஒருபாடலில்.

திரைப்படம்: சம்சாரம்
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சங்கர சாஸ்திரி
பாடியவர்: ஏ.எம். ராஜா



சம்சாரம் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
ஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏ
கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
இணை பிரியாது இளம் பாலகர் விளையாடும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
பெரியோரைப் பணிய வேண்டும் சிறியோரைக் காக்க வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
தாரமோடு கணவன் அதைத் தாங்கி வாழ வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் 
சம்சாரம் சம்சாரம் சம்சாரம்