சனி, 20 செப்டம்பர், 2014

கலங்காதிரு மனமே

தினம் ஒரு பாடல், ஜூன் 27, 2014

நான் கவிஞனில்லை; எனினும் ஒரு நல்ல ரசிகன். கண்ணனுக்கும் ரசிகன் அவன் தாசனுக்கும் ரசிகன் சிறு வயது முதலே எனக்குத் துணை பாடல்களே. 'தனிமையிலே இனிமை காண்பவனே யோகி' என்றான் கண்ணன் 

தன் கீதையில். 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' என்று கேள்வி கேட்டான் கண்ணதாசன். 

என்னால் முடியும் எனப் பதிலுரைக்கிறேன் கண்ணதாசனுக்கு. தனிமையில் இருந்து கொண்டு மனம் எனும் மாயக் கணிணியின் நினைவுப் பதிவுகளிருந்து கண்ணதாசன் எனும் காவியத்தின் வரிகளை அசைபோட்டால் தனிமையில் இனிமை தானே வரும் அன்று. 

இன்று மனக் கணிணியுடன் நிஜக் கணிணியும் துணையிருக்கையில் அவன் பாடல்களையும் ஏனைய தமிழ்க் கவிஞர் பெருமக்களின் பாடல்களையும் இணையதளம் வாயிலாகவும் கணிணியின் நினைவுப் பெட்டகத்தில் பதிவு செய்து கொண்டும் கேட்டு மகிழும் வாய்ப்பு பன் மடங்காய்ப் பெருகி நிலைபெற்றிருக்கையில் தனிமையில் ஏன் இனிமை காண முடியாது? 

இன்றும் நான் இனிமை காண்கிறேன் தனிமையில், இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திக்கொண்டு!

'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் 
வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின் 
ஊன் பற்றி நின்ற உயர் திரு மந்திரம் 
தான் பற்றப் பற்றத் தலைப் படும் தானே' 

எனும் திருமந்திரப் பாடலில் காணும் அறிவுரைப்படி யான் பெற்ற இசையென்னும் இன்ப வெள்ளத்தை இந்த வையகம் முழுமையும் பெற வைக்கும் பேரவாவினால் தமிழை சிறிதும் கற்றறியாத நான் எழுதிவரும் 'தினம் ஒரு பாடல்' தொடர் கடிதங்களுடன் நான் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடலின் வரிகளுடன் பாடலின் ஒலி ஒளிப் பதிவுகளுக்கான இணைப்புகளையும் இணையத் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து மகிழும் ஆனந்தம் இசை கேட்கும் ஆனந்தத்தையும் விட மிகப் பெரிது என்பதை உணர்கிறேன்.

இதில் பேரானந்தம் தரும் அனுபவங்கள் என்னவெனில் என் போன்றே இப்பாடல்களைக் கேட்டு மகிழும் பல தமிழ் அன்பர்கள் தம் மனதாரத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதுவே. 

ஒரு முறை கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்ணதாசன் பாடல்களுடன் நான் எழுதுவது குறித்து எனக்குப் பாராட்டுத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் செய்திருந்தார். வசிஷ்டர் வாயால் 'பிரம்ம ரிஷி' எனும் பெரும் பெயர் பெற்ற மாமுனிவன் விஸ்வாமித்திரனும் அடைந்திராத மகிழ்ச்சியை நான் அன்று அடைந்தேன். 

நேற்று எனக்கு 'காவிரி மைந்தன்' எனும் கண்ணதாசனின் சீடர் ஒருவர் 'தினம் ஒரு பாடல்' மிக அருமையாக உள்ளதாகத் தெரிவித்து என்னுடன் தொடர்பு கொண்டார். 

கவிஞர் கண்ணதாசனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது இணையதளம் தமிழ் நதி  

அதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் குறித்த ஒரு சிறு மடலைக் கண்டேன். கண்ணதாசனைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும் நான் அறிந்தது சொற்பமே. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றையறிய இணையத் தமிழ் ஊடகங்கள் மிகவும் உதவிபுரிகின்றன.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.

அம்முதல் பாடலாவது:


திரைப்படம்: கன்னியின் காதலி
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: கே.வி. ஜானகி

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே - உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
ஒரு தினமே 
கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே
கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது?
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது? உனக்கு 
ஆகாததேது? 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள்
ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள்
அருஜ்ஜுனன் வலைதனில் 
அருஜ்ஜுனன் வலைதனில் வீழ்ந்தனள் சரியாய் 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும்
பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும்
பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும்
பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் 

அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள்
அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே - உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
ஒரு தினமே 

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அன்னையின் அருளே வா வா வா!

தினம் ஒரு பாடல்: ஜூலை 2, 2014

"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் 
வானின் றமையா தொழுக்கு"

உலகில் உயிர்கள் வாழ நீர் அடிப்படைத் தேவையாகும். உயிர்கள் வாழ்வதாலேயே பூமியை உலகம் என்கிறோம். உயிர்கள் அழிந்து பட்டால் அதுவும் ஏதேனும் ஒரு வெற்றுக் கிரகமாக ஆகிவிடும். அத்தகைய அபாயத்தையே நோக்கி மனிதகுலம் அறிந்தே முன்னேறுகிறது. இங்கே கற்றவரும் கல்வியறிவில்லாத மூடர்களும் ஓரே மன நிலையில் செயல்படுகின்றனர். காரணம் சுயநலம். 

எப்பாடு பட்டாகிலும் ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும். கேளிக்கைகள் பல வேண்டும். மாலை நேரமானால் மனம் மயங்கிக் களியாட்டம் போட மது வேண்டும். தான் மட்டும் நிறையத் தங்க நகைகள் அணிய வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். காரில் பயணிக்க வேண்டும். ஆகாய விமானத்தில் உலகம் முழுதும் சுற்ற வேண்டும். மூன்று வேளைக்கு நான்கு வேளை வயிறாற வகை வகையாய் உண்ண வேண்டும். விதவிதமாக உயர் ரக ஆடைகள் அணிந்து மகிழ வேண்டும். மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருக்க வேண்டும். பிறர் தம் முன்னர் கை கட்டி வாய் பொத்தி நின்று மரியாதை செலுத்த வேண்டும். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ வேண்டும். உலகிலேயே முதல் செல்வந்தனாகத் திகழ வேண்டும் என்பன போன்ற நப்பாசையின் காரணமாக மனிதன் பித்தம் பிடித்தவனைப் போல் செயல்பட்டு இந்த பூமியின் இயற்கை வளங்களை வாரியிறைத்து விற்றுப் பணம் எனும் வெற்றுக் காகிதத்தை பதிலுக்குப் பெற்று அடுக்கும் விபரீத விளையாட்டில் இறங்கி விட்டான்.

ஆதி காலம் முதல் இந்தக் கணம் வரையிலும் நிகழ்ந்த மானிட சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்தோமெனில் நாம் நம் அறியாமையை நன்கு உணரலாம். எத்துணை கோடி பணமிருந்தாலும் அதில் கோடியில் ஒருபங்கினையும் நாம் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னரே உயிர் துறந்து காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மறைந்து போகிறோம். மீதமிருக்கும் அற்பப் பணம் நம் மக்களையும் அவர்கள் பெறும் சந்ததியினரையும் தீய வழியில் தள்ளுகிறது. அதனால் நம் சந்ததியினர் பாவங்கள் பல செய்து, அதனால் பகை மூண்டு மாண்டு போகின்றனர். நம் சந்ததியே பூண்டோடு அழிந்து போகின்றது. இதற்குச் சான்று சரித்திர ஏடுகளில் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணிறந்த மன்னர்களும், செல்வந்தர்களும் தொன்று தொட்டு இந்த உலகின் பல நாடுகளில் வாழ்ந்ததற்கான சான்றுகளை நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம். 

அத்தகையோரின் வாரிசுகள் எத்துணை பேர் இன்று நம்மிடையே உயிரோடு வாழ்கின்றனர் என்று நாம் எண்ணிப் பார்த்தோமானால் மிகவும் சொற்பமானோரின் வாரிசுகளே உளர் என்பதை நாம் அறியலாகும். அத்துடன் அந்த வாரிசுகள் மிகவும் சாதாரண மனிதர்களாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகவும் ஏழைகளாகவும் அடையாளமே தெரிந்து கொள்ள முடியாத நிலையில் திகழ்பவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். 

நான் ஒரு சுயநலவாதியாக வாழ்ந்து மடிந்தால் அதன் பிறகு என்னைப்பற்றி என் மனைவி மக்களுமே எண்ணிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். இவ்வுலகம் உய்யவும் உலக மக்கள் துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழவும் நான் எதுவுமே செய்யாது மடிந்தேனாகில் இவ்வுலகம் என்னைப் பற்றி ஒரு நாளும் எண்ணாது. ஆனால் பயனுள்ள ஏதேனும் ஒரு செயலை நான் செய்து அதனால் இவ்வுலகமும் வருங்கால சந்ததியினரும் பயனடைவார்களே ஆயின் நான் இறந்த பின்னரும் என் பெயர் பல காலம் விளங்கும். அத்தகைய பயனுள்ள வாழ்க்கை வாழப் பண பலமோ சிறப்பான சமூக அந்தஸ்தோ தேவை என்பதில்லை. சாதாரண மனிதன் ஒவ்வொருவரும் இவ்வுலக 
நலன் கருதி அதற்காக சிறிதளவேனும் சேவை செய்ய இயலும். விளை நிலங்களையும் மலைவளங்களையும் பல பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் தங்கள் சுயநலத்துக்காக அழித்து அவற்றில் விளையும் மரங்களையும் பயிர்களையும் அழித்து அவ்விடங்களில் தொழிற்சாலைகளுக்காகவும் இருப்பிடங்களுக்காகவும் கல், மணல், சிமென்டு, இரும்பு என இவ்வாறான பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டுவதையும், இரும்பு, அலுமினியம், நிலக்கரி, சந்தன மரங்கள் போன்ற அரிய மரங்கள் முதலியவற்றுக்காக வன வளங்களை அழிப்பதையும் நிறுத்தப் போராடுவது. நம்மாலியன்ற அளவு மரங்களை நட்டு வளர்ப்பதுவும். காய் கறிகள் முதலானவற்றை நம் வீடுகளிலும் இதர இடங்களிலும் வளர்த்தலும் நாமெல்லோரும் பல குழுமங்களாக சேர்ந்து செய்யலாம். 

உயிர் வாழ் இன்றியமையாத தண்ணீரைத் தொடர்ந்து தருவதாலேயே நதிகளை மக்கள் தாயாக வழிபடுகின்றனர். தமிழர்களின் நதிகளுள் தலையாயது காவிரி நதி. ஆடி மாதம் மழை பெய்ய, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில் பல விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அவற்றுள் காவிரியைப் போற்றி வணக்கும் விழாவே "ஆடிப் பெருக்கு".


திரைப்படம்: ஆடிப் பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1962

அன்னையின் அருளே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 
ஆடிப் பெருக்கே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 

பொன்னிப் புனலே வா வா வா! 
பொங்கும் பாலே வா வா வா! 

அன்னையின் அருளே வா வா வா! 

குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா! 

திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருமால் தனக்கே மாலையாகி 
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே! 

அன்னையின் அருளே வா வா வா! 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
முத்துத் தாண்டவர் பாடலிலே 
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வளநாடாக்கும் தாயே நீ 
வாழிய வாழிய பல்லாண்டு! 

வியாழன், 18 செப்டம்பர், 2014

நிலவோடு வான்முகில் விளையாடுதே

தினம் ஒரு பாடல்: ஜூன் 23, 2014

இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ஓருயிர் அனுபவிக்கும் சுகங்கள், துயர்கள் அனைத்தும் பிற உயிர்களுடன் சேர்ந்தே அனுபவிப்பது சாத்தியமாகும். புலன்களுக்கப்பால் அப்புலன்களை இயக்கக்கூடிய மனம் சார்ந்த இன்ப துன்பங்களையும் பிற உயிர்களுடன் கலந்து கூடியே அனுபவிக்கலாகும். தனக்காக மட்டும் எவரும் வாழ்தல் சாத்தியமன்று. அனைவரும் வெறுத்தொதுக்கத்தக்க குற்றவாளிகளுக்கும் பிரியமானவர்கள் உலகத்தில் 
இருந்தே தீருவர். இது உலக நியதி.

இந்நியதிப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலும் நிலைபெறுகிறது.ஒருவரது துணையை மற்றவர் மனம் நாடுகின்றது. தன் துணைவர் அருகில் இல்லாத நேரங்களில் மனம் மிகவும் அல்லல் படுகின்றது, படுத்துகின்றது. இயற்கையில் இவ்வுலகின் ஒப்பற்ற அழகுக்கு சிகரம் வைத்தாற் போன்று விளங்கும் வெண்ணிலாவுடன் விண்ணிற் பரவிப் பரந்து, பிரிந்தொன்று சேர்ந்து பல விதமாய்த் தோற்றமளிக்கும் மேகம் விளையாடுகின்ற விளையாட்டு கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிதாகத் தோன்றுகின்றது. நிலாவை சில காலம் மறைத்தும், சில காலம் வெளியே காண்பித்தும் என அம்மேகம் விளையாடும் கண்ணாமூச்சி ஒருவரைத் தன் காதல் துணையின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதில் வியப்பேதுமில்லையன்றோ?


திரைப்படம்: ராஜ ராஜன்
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி. கோமளா

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
 புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

 மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா?
மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா? 

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
 இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம் - ஓ 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

போனால் போகட்டும் போடா

தினம் ஒரு பாடல் - ஜூன் 11, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் என்பது அடங்கியிருத்தல். ஐம்புலன்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்தித் தன்னை அடக்கி வாழ்தல், தன் தாய் தந்தையருக்கு அடங்கி அவருக்குப் பணிவிடைகள் செய்து பணிந்து வாழ்தல், வித்தையைக் கற்றுத் தரும் குருவுக்கு மரியாதை செய்து அவர் சொற்படி நடந்து அவர் மாணவன் எனும் பெயர் விளங்க வாழ்தல், தம்மிலும் வலிமையுள்ளோருடன் பலம் தெரியாமல் மோதலில் இறங்காமல் அடங்கியிருத்தல். தம் நண்பரோடும், உற்றார், உறவினர் மற்றும் சமுதாயத்துடன் அடங்கியிருத்தல் என்று பல விதமாகப் பொருள் தரும் என்றாலும் அவற்றுள் கடைபிடிக்கத் தக்கவை எவை, தகாதவை எவையென அறிவினால் அறிந்து அதன்படி நடத்தலே சிறந்தது. 

நம் கண்முன்னர் வேறொருவருக்கு எவரேனும் தீங்கிழைத்தால் அதனைக் கண்டும் காணாமல் போவதால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதும் தர்மத்தின் மீதும் பயமில்லாமல் மென்மேலும் பெரிய குற்றங்களைத் துணிந்து செய்து சமுதாயத்துக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கின்றனர். அத்தகைய குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க உதவுவதும் பாதிக்கப்படுவோருக்குத் துணை நிற்பதும் நம் ஒவ்வொருவரது கடமைகளாகும். அதனை மஹாகவி பாரதி தன் பாப்பாப் பாடலில்,

பாதகம் செய்பவரைக் கண்டால் சற்றும்
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!

என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது போல் நம் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டியது மோட்சம் எனும் உயர்ந்த நிலையேயல்லாது பெரும் செல்வமும் சுகபோகமும் அல்ல. இவ்வுலகில் நாம் தேடியுழைத்து ஈட்டும் பொருட்கள் யாவும் அழியும் தன்மை உடையன. நாமும் அழியும் தன்மையுடையவர்களே. எனவே பொன்னும், பொருளும், பெண்ணும் பிற சுகமும் தேடுவதை விடுத்து ஞானம் பெற முயல்வதே மானிடப் பிறவியெடுத்ததன் முதற்கடமை. அல்ல, எனக்கு ஞானம் வேண்டாம், இவ்வுலக சுகமே முக்கியம் என்போர் மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படுவதுறுதி.

அடக்கத்துடன் வாழ்ந்து வரும் ஞானியர் பலர் நம்மிடையே இருக்கையிலும் அவர்களை நாம் அடையாளம் காண முடியாமல் அஞ்ஞான இருள் மறைக்கிறது. ஞானியரை அடையாளம் காண நமக்கும் ஞானம் சிறிது வேண்டும். அத்தகைய ஞான மார்க்கத்தை விடுத்து ஒருவர் அடங்கிப் போகிறார் என்பதால் அவர் அறிவில் குறைந்தவர் என எண்ணி அவரை ஒடுக்கி நம் சக்தியை வெளிப்படுத்த எண்ணுவது மடமையிலும் மடமையே.

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டாம் மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.

ஞானம் என்பதும் முக்தியென்பதும் மனிதப் பிறவியில் ஒருவர் எய்தக்கூடிய பெரும் பேறுகள் ஆகும். அந்தப் பேறுகளைப் பெற உலக நன்மைக்காக உழைத்து வாழ வேண்டும். லட்சியத்தைக் கைவிடாமல் எந்த நஷ்டம் வந்தாலும் அதனால் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து பிறருக்காக சேவை செய்து வாழ வேண்டும். அப்படி சமுதாய நன்மைக்காகவே வாழும் ஒரு மருத்துவர் தன்னுடன் பணி செய்யும் செவிலியைத் திருமணம் செய்து கொள்கிறார். இடையில் மனைவிக்கு உடல்நலம் குன்றி அவள் படுத்த படுக்கையாகிறாள். அதனால் மருத்துவர் தன்னை நம்பியிருக்கும் பிற நோயாளிகளைக் கவனியாமல் தன் மனைவி மேல் மட்டுமே கவனம் செலுத்தவும் 
அவர் மனைவி தான் உடனிருக்கும் வரை தன் கணவன் தன் கடமையை சரிவர் நிறைவேற்ற மாட்டார் என்று எண்ணி அவரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். போகுமுன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுப் போகிறாள். அக்கடிதத்தைப் படித்த மருத்துவர் சோகத்துடன் பாடுவதாக அமைந்த ஒரு தத்துவப்பாடல் இதோ:



திரைப்படம்: பாலும் பழமும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எம்.எஸ். விஸ்வநாதன்

ஓஹொஹோ ஓஹோ ஹோ ஹொஹொஹோஓஓஓ

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஓஹோஹோ ஹோஓஓஓ 
ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓ 
ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகமாடும் கலைஞனடா.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓஓஹோஓ

புதன், 9 ஜூலை, 2014

கடவுளும் நானும் ஒரு ஜாதி

தினம் ஒரு பாடல், ஜூன் 8, 2014

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.'' 

என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத் தீர்ப்பிலிருந்து தெரிவதென்னவெனில் மனிதப் பிறப்பெய்துமுன் நாம் ஒவ்வொருவரும் மனிதரிலும் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த பல பிறப்புக்களை எடுத்துள்ளோம் என்பதே. அத்தகைய மனிதப் பிறவி பெறுதற்கரிது ஏனெனில் அறிவை வளர்த்துக்கொண்டு, பற்றுக்களைக் களைந்து பரம மெய்ஞ்ஞானம் பெற்றுப் பிறவிப் பிணி நீக்கிப் பேரின்ப வாழ்வு வாழ ஒரு வாய்ப்பை அளிப்பது மனிதப் பிறவி. 

இப்பிறவியில் மனத்தை அசுத்தப்படுத்தும் காமம், குரோதம், கோபம், லோபம் மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு தீய குணங்களை ஞானத் தீயால் பொசுக்கித் தவத்தால் அழிப்பவர் யாரோ அவரே மனிதப் பிறவியை அடுத்து வரக்கூடிய பேய், கணங்கள், வல்லசுரர் எனும் பாபம் நிறைந்த சபிக்கப்பட்ட பிறப்புகளை எய்தாமல் நேரடியாக முனிவராகவும் தேவராகவும் ஆக வல்லவர் ஆவார்.

தேவர் எனப்படும் கடவுளுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. அத்தகைய இறைத் தன்மையையும் அதற்கேற்ற வல்லமையையும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவராலும் அடைய முடியும் என்று சுவாமி விவேகானந்தர் தம் ராஜ யோகா உரையில் உறுதியாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் தவம் செய்யும் வழிகள், தவம் செய்வோர் அடையத்தக்க பல்வேறு அமானுஷ்ய சக்திகள் ஆகியன பற்றியும் விவரமாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவதும், எங்கோ வேறு ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வை 
ஞானக் கண்ணால் காண்பதும், எங்கோ வெகுதொலைவில் இருக்கும் ஒருவரிடம் மனத்தால் தொடர்பு கொண்டு பேசுவதும் அத்தகைய சக்திகளுள் சிலவாகும் என்கிறார் விவேகானந்தர்.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை 
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ 
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் 
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ

திருவாசகத்தின் எனும் வரிகளால் தாயும் தந்தையுமற்ற அநாதை என்று இறைவனை இகழ்வது போலப் புகழ்கிறார் மாணிக்க வாசகர். அதன் உள்ளர்த்தமாவது தாய், தந்தை, உற்றார் உறவினர் என்பவர்கள் யாவரும் நமக்கு உண்மையான சொந்தங்களல்ல, இடையில் தோன்றி மறையும் பந்தங்களே என்பதாகும். இவ்வுண்மை உணர்ந்தோரே ஞானியராகத் தகுந்தவர் ஆவர். நம்மால் இல்லறம் நடத்துகையில் முனிவர்கள் போல் தவம் செய்தல் சாத்தியமன்றெனினும். கர்மயோகம் செய்வதன் மூலம் இல்லறத்திலேயே ஞானம் எய்துதல் இயலும் என்பதை உலகுக்கு உணர்த்திய முனிவர் சனகர் ஆவார். 

ஞானமடைவதற்கு முதலில் எதற்கும் துக்கப்படும் இயல்பைக் கைவிட வேண்டும். எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைதல் வேண்டும். புல்லினும் அற்பமான கவலையை விடுத்து தான் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பேரானந்த நிலையில் லயித்திருக்க எவன் ஒருவன் பழகிக்கொள்கிறானோ அவனே ஞானியாவான்.

நம் கதாநாயகன் அத்தகைய ஒரு ஞானியாவான். படிப்பறிவற்ற அநாதையாயிருக்கையிலும் கவலையின்றிக் கை வண்டியிழுத்துக் கடவுள் தன்மையுடன் வாழ்பவன்.



திரைப்படம்: தாயில்லாப் பிள்ளை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்

ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா
ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

கடவுளைப் பெத்த அம்மா யாருன்னு
கடவுளுக்கே இன்னுந் தெரியாது 
கடவுளைப் பெத்த அம்மா யாருன்னு
கடவுளுக்கே இன்னுந் தெரியாது இந்தக்
கட்டையப் பெத்தவ யாரோ எவரோ
எனக்கும் இன்னும் புரியாது
கட்டையப் பெத்தவ யாரோ எவரோ
எனக்கும் இன்னும் புரியாது
புரியாது புரியாது புரியாது

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி 

அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
கடவுள் அழுவது இல்லீங்க
அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
கடவுள் அழுவது இல்லீங்க என்ன
அடிச்சுப் பாருங்க ஒதைச்சுப் பாருங்க
நானும் அழவே மாட்டேங்க
அடிச்சுப் பாருங்க ஒதைச்சுப் பாருங்க
நானும் அழவே மாட்டேங்க
அழ மாட்டேங்க அழ மாட்டேங்க அழ மாட்டேங்க!

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

கடவுள் படித்த பள்ளிக்கூடத்த 
தேடுறேன் தேடுறேன் பல நாளா
கடவுள் படித்த பள்ளிக்கூடத்த 
தேடுறேன் தேடுறேன் பல நாளா அதக் 
காண முடியல்லே அதனால் நானும்
படிப்ப விட்டுட்டேன் சிலநாளா
காண முடியல்லே அதனால் நானும்
படிப்ப விட்டுட்டேன் சிலநாளா
சில நாளா சில நாளா சில நாளா

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா
ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா

செவ்வாய், 8 ஜூலை, 2014

இதய வானிலே உதயமானதே

ஜுன் 06, 2014

நிறைவேறக் கடினமான, அல்லது தாமதமாகும் ஆசைகள் நம் மனதில் இருக்கையில் அந்த ஆசை நிறைவேறும் நாளை எண்ணி எண்ணி ஏங்குவதும், நிறைவேறி விட்டாதவே கற்பனை செய்து கனவு கண்டு மகிழ்வதும் மனித இயல்பு. மஹாகவி பாரதியார் நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டாரானாலும் தன் கண் முன்னே சுதந்திரம் வந்து விட்டதாகக் கற்பனை செய்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று பாடினார். இது தேசபக்தியினால் வரும் கனவு. இத்தகைய உயர்ந்த கனவுகள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரான மிகவும் அறிவு முதிர்ந்த ஞானியருக்கே தோன்றும். 

நம்மைப் போன்ற இல்லற வாழ்வில் சுகம் தேடும் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும் கனவுகள் பெரும்பாலும் இவ்வுலக வாழ்வில் எய்த விரும்பும் சுகபோகங்களைப் பற்றியதாகவே இருக்கும். அதிலும் குறிப்பாகத் திருமண வயதில் இருக்கும் வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் அக்கனவு அநேகமாகக் காதல் கனவாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய கனவுகளும் கற்பனைகளும் மனதில் தோன்றுகையில் ஒருவரது இதய வானில் அது வரை காணாத ஒரு புதிய உலகமே உதயமாகும். அப்புதிய உலகத்திலே அவர் தன் காதல் துணையுடன் கற்பனையில் அனுபவிக்கும் சுகமே பேரின்ப நிலையை அளிப்பதாக அமைவதுண்டு.

இங்கே ஒரு சிற்பி தன் மனதைக் கொள்ளை கொண்ட அன்புக் காதலியை எண்ணிக் கனவு கண்டு தன் இதய வானில் கோட்டை கட்டித் தன் காதல் வாழ்வில் அனுபவிக்கக் கூடிய இன்பங்களை மனதிலே கண்டு இன்புற்று இனிமையாகப் பாடுகிறான். அவனது குரலுடன் அவனது காதலியின் குரலும் சேர்ந்து ஒலிக்க அங்கே ஒரு புதிய உலகமே உருவாகிறது.



திரைப்படம்: கற்புக்கரசி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

இதய வானிலே உதயமானதே
இதய வானிலே உதயமானதே - நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே - நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இன்பநிலை...
இன்பநிலை என்னவென்று கண்டு கொண்டேனே - நான்
கண்டு கொண்டேனே - மெய்
அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே - மெய்
அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே
ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே

நன்மையெல்லாம்........
நன்மையெல்லாம் நாடி வந்து சேரக் கண்டேனே - நான்
சேரக் கண்டேனே 
நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே
நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே

எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே
இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே - அது
என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே - அது
என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே

எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

திங்கள், 7 ஜூலை, 2014

யாரடி வந்தார் என்னடி சொன்னார்?

பெண்கள் அலங்காரப் பிரியர்கள். தங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதிலும் பெண்கள் சமர்த்தர்கள். அதிலும் குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் உடையலங்காரமும். சடையலங்காரமும், நகையலங்காரமும் உலகப் பிரசித்தி பெற்றவை.


கவிஞர் கண்ணதாசன் பெண்கள் அழகுறத் திகழ எவ்வாறு இருக்க வேண்டும் என்று பின் வருமாறு கூறுகிறார்:


"அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்."

ஆறடிக் கூந்தல் பெண்கள் யாரேனும் வளர்த்திப் பராமரித்துள்ளனரா? தற்காலத்தில் பராமரிக்கின்றனரா? என்ற கேள்வி நம்முள் பலத்த சந்தேகத்துடன் எழுகிறது.


இந்த ஆறடி கூந்தலைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அமர்க்களமாய் அள்ளித் தெளித்திருக்கிறார் தமக்கே உரிய தெள்ளு தமிழில்.



திரைப்படம்: வானம்பாடி
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1963

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?

ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
பாரடி வந்து பக்கத்திலே - காதல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி போடி வராமல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி போடி வராமல்
ஏனடி நின்றாய் வெட்கத்திலே?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?

நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஓஓஓஓஓஓ
என்னடி என்னடி சொல்லடியோ ஓஓஓஓஓ
நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ
முன்னடி பின்னடி போடடியோ - இங்கு
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
என் பெயர் கேட்டுச் சொல்லடியோ!

யாரடி வந்தார்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 

ஏனடி இந்த உல்லாசம்?