வியாழன், 19 ஜனவரி, 2012

சின்னச் சின்ன வெத்தலையாம்


வாழ்க்கை வாழ்வதற்கே எனும் எளிய உண்மையை அறியாத மாந்தர் தேடத் தகாததைத் தேடி தேடத்தக்கதை மறந்து எந்நாளும் கவலையில் உழன்று வாழ்க்கையில் திருப்த்தியின்றி வருந்தி மடிகின்றனர். இதை விடவும் மடமை வேறில்லை. இந்த உலகம் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் எனும் பரந்த மனப்பான்மை கொண்டு வாழ்வோருக்கு உலக வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் இன்பமயமானதாகவே இருக்கும். அல்லாது இயற்கை வளங்களைக் கூறு போட்டு, எனது உனது என்று பிரித்து ஒருவரும் முழுமையான பயனடையாமல் செய்து எந்நாளும் பிறருடன் கருத்து வேறுபாடு வளர்த்துத் துன்புறுவோர்க்கு இவ்வாழ்வு முற்றிலும் நரகமே ஆகும்.

 "குரங்கு தானும் கெட்டு வனத்தையும் அழித்தது போல்" என்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளை விட்டு அழிவுப் பாதையில் செல்வோரைக் குறிப்பிடுவதுண்டு. இதற்குக் காரணம் குரங்குகளின் செயல்பாட்டை ஆராய்ந்து பார்க்கத் தெளிவாக விளங்கும். சில குரங்குகள் பழங்களும் காய்களும் நிறைந்த ஒரு மரத்தின் மீது ஏறுகையில் அம்மரத்திலிருக்கும் பழங்களைத் தின்ற பின்னர் உடனே வேறு இடத்துக்குச் செல்லாமல் அந்த மரத்தில் இருக்கும் காய்களையும் பூக்களையுமே பறித்து வீணாக்கி விடுவதைக் காணலாம். அதன் பின்னர் அம்மரம் மீண்டும் பூத்துக் காய்த்துக் கனிகள் தர விடாமல் அவ்வப்பொழுது மீண்டும் வந்து அம்மரத்தில் இருக்கும் காய்களையும் பூக்களையும் அக்குரங்குகள் அழித்து விடும். இதனாலேயே உணவு கிடக்காமல் அவை ஊரெல்லாம் அலையும், மக்கள் வாழும் வீடுகளுக்குள் சென்று கிடைத்ததைத் திருடித் தின்னும்.

குரங்குகளைப் போலவே மனிதர்களில் பலரது செயல்பாடுகளும் விளங்குகின்றன. அத்தகைய மனிதர்கள் துன்பமே அடைகின்றனர். மனிதத் தன்மையுடன் தன்னைப் போலவே பிறரையும் சமமாக பாவித்து அனைவரும் ஒன்றுபட்டு, இருப்பதைப் பகிர்ந்து வாழும் வாழ்க்கையே இன்பமளிக்க வல்லது. 

உணவு உண்கையில் அரை வயிறளவே உண்ண வேண்டும், அத்துடன் தாகம் தணியுமளவு தண்ணீர் குடித்த பின் இன்னும் சிறிதளவு உண்ணலாம் போலிருக்கையிலேயே உணவை முடித்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ட உணவு அப்பொழுது தான் நன்கு செறித்து நம் உடலுக்கு வலுவூட்டி உள்ளத்துக்கு உற்சாகமூட்டும். நம் உணவில் அளவிற்கு அதிகமான உப்பு, புளி, காரம், இனிப்பு முதலிய சுவைகளைச் சேர்க்காமல் உணவு நல்ல சுவையுடையதாக சமைத்து உண்ணுதல் நலம் பயக்கும். மாமிசம் மற்றும் நெய் முதலிய கொழுப்புச் சத்து மிகுந்த உணவு மனிதர்களுக்கேற்றதல்ல. இவற்றிலிருக்கும் கொழுப்பு நேரடியாக ரத்தத்தில் கலந்து நம் ரத்த நாளங்களில் மெல்லியதாய்ப் படிந்து ரத்தநாளங்களின் குறுக்களவைக் குறைத்து விடுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இது இருதயத்தை பலவீனமாக்கி இருதய நோயை உண்டாக்கி விடும். 

ஒவ்வொரு வேளையும் நாம் உண்ணும் உணவு முழுமையாக செரிக்க வேண்டியது மிகவும் அவசியம். உணவு ஜீரணமாகாமல் இருப்பின் அது வாயுத் தொல்லை, மலச்சிக்கல் முதலிய உபாதைகளை ஏற்படுத்தி அத்தகைய உபாதைகள் ஆயுள் முழுதும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் உண்ணும் உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக, நார்ப்பொருள் மிகுந்ததாகவும் இருத்தல் அவசியம். அப்பொழுது தான் இத்தகைய உபாதைகள் உண்டாகாமல் தவிர்க்கலாகும். காய்கறிகளிலும் கீரை வகைகளிலும் நார்ப்பொருள் மிகுதியாக உள்ளதால் அவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உண்ட உணவு செரிமானமாக உதவும் ஒரு இனிய பொருள் தாம்பூலம். வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு இவை மூன்றையும் தக்க அளவில் ஒன்று சேர்க்கக் கிடைக்கும் தாம்பூலம் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். எனவே தான் இது திருமணம் மற்றும் ஆலய வழிபாடுகளிலும் பல்வேறு விருந்துகளிலும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. வெற்றிலை ஜீரண சக்தியைத் தருகிறது. பாக்கு ஓய்வைத் தந்து உடல் உபாதைகளிலிருந்து நிவாரணமளிக்கிறது. சுண்ணாம்பு நம் உடலுக்குத் தேவையான கால்ஷியம் சத்தினைத் தருகிறது. இவற்றுள் வெற்றிலை முதன்மையானது. வெற்றிலை வாழ்க்கையில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இன்றைய பாடல் எடுத்துரைக்கிறது.


பாடியவர்: அனிதா குப்புசாமி
இயற்றியவர்: கவிஞர் செந்தமிழ் மாறன்
இசை: கண்மணி ராஜா

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

முக்கடலும் சூழ்ந்திருக்கும் முத்து முத்து பாரதம் போல்
முக்கோண வடிவம் கொண்ட மூக்கு செவந்த வெத்தலையாம்
மேற்புறத்தில் தென்னந்தோப்பு கீழ்ப்புறத்தில் வாழத்தோப்பு
வாழத் தோப்பு மத்தியிலே வளர்ந்து வந்த வெத்தலையாம்
கொழுந்தி தந்தா மச்சானுக்குக் கொழுந்து வெத்தலையாம்
கொழுந்தி தந்த கொழுந்து வெத்தலை வாய்க்குப் பத்தலையாம்
கொழுந்தி தந்தா மச்சானுக்குக் கொழுந்து வெத்தலையாம்
கொழுந்தி தந்த கொழுந்து வெத்தலை வாய்க்குப் பத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

போத்தனூருப் பொண்ணுங்கல்லாம் போட்டு வரும் வெத்தலையாம்
அத்தனூருப் பொண்ணுங்கல்லாம் அடக்கி வைக்கும் வெத்தலையாம்
பச்சப் பந்தல் துடிக்குமே பரிசம் போடும் வெத்தலையாம்
எச்சிலுக்கும் வாசம் தரும் பச்சப் பச்ச வெத்தலையாம்
பல்லுப் போன பாட்டன் வாயைப் படுத்தும் வெத்தலையாம் இது
பட்டி தொட்டியிலும் பட்டணத்திலுமே பழகும் வெத்தலையாம்
பல்லுப் போன பாட்டன் வாயைப் படுத்தும் வெத்தலையாம் இது
பட்டி தொட்டியிலும் பட்டணத்திலுமே பழகும் வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

எங்களூரு சந்தையிலே ஏலம் போற வெத்தலையாம்
பெங்களூரு சந்தையிலே பேரம் பேசும் வெத்தலையாம்
வாய்க்கார மனுஷங்களை வாயடக்கும் வெத்தலையாம்
நோய் நொடிகள் தீர்க்க வல்ல நோக்கமுள்ள வெத்தலையாம்
சம்மந்திமாருங்க மாத்திக்கொள்ளும் தாம்பூல வெத்தலையாம் இது
கம்மாளப் பட்டி காட்டிலே வெட்டின கல்யாண வெத்தலையாம்
சம்மந்திமாருங்க மாத்திக்கொள்ளும் தாம்பூல வெத்தலையாம் இது
கம்மாளப் பட்டி காட்டிலே வெட்டின கல்யாண வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

சேலத்து மானுக்கு தான் சீரு வந்த வெத்தலையாம்
சீரு வந்த வெத்தலையும் சீமைக்கெல்லாம் பத்தலையாம்
தொட்டாலும் கைமணக்கும் துட்டுக்கொரு வெத்தலையாம்
தின்னாலும் வாய் மணக்கும் சீரங்கத்து வெத்தலையாம்
கமகமங்குது கண்ணை மயக்குது காவேரி வெத்தலையாம் அட
குமுகுமுங்குது என்னை மயக்குது குமரி வெத்தலையாம்
கமகமங்குது கண்ணை மயக்குது காவேரி வெத்தலையாம் அட
குமுகுமுங்குது என்னை மயக்குது குமரி வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

வண்ண வண்ண சேலைக்காரி வந்து இலை வெட்டையிலே
மண்ணு பட்டா தோசமுன்னு மடியில் வெச்ச வெத்தலையாம்
ஊரோரம் சின்னக்குளம் ஊத்துலேயும் தண்ணி வரும்
மோதி வரும் தண்ணியிலே ஒசந்து வந்த வெத்தலையாம்
கணவனுக்கு மனைவி தரும் மடிச்ச வெத்தலையாம் இது
மணவிழாவிலும் மத்த விழாவிலும் மணக்கும் வெத்தலையாம்
கணவனுக்கு மனைவி தரும் மடிச்ச வெத்தலையாம் இது
மணவிழாவிலும் மத்த விழாவிலும் மணக்கும் வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

ஆத்தோரம் கொடிக்காலு அந்தப்புறம் நந்தவனம்
நந்தவனக் கிளி போடும் நான் கொடுத்த வெத்தலையே
வெறும் வாயை மெல்லாதே வெத்தலையத் தள்ளாதே
கருவாய செவக்க வைக்கும் காசுக்கார வெத்தலையாம்
கண்ணுலே பட்டாக் கருகுமின்னு காஞ்சிப் பட்டெடுத்து இது
பூவாட்டமாப் போத்தி வைக்குற பொன்னான வெத்தலையாம்
கண்ணுலே பட்டாக் கருகுமின்னு காஞ்சிப் பட்டெடுத்து இது
பூவாட்டமாப் போத்தி வைக்குற பொன்னான வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


நம் நாட்டுல் மட்டுமின்றி உலகெங்கிலும் தொழில் துறையிலும், பொருளாதாரத்திலும், சமுதாய நல்லுறவு மற்றும் ஒருமைப்பாட்டிலும் இதுவரையில் இல்லாததொரு மந்தமான சூழ்நிலை உருவாகியுள்ளது. லண்டன் மாநகரில் சமீபத்தில் பொதுமக்களில் ஒரு சாரார் பல வர்த்தக நிறுவனங்களிலும் கொள்ளையடிப்பதும் பல கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைப்பதும் பொது சொத்துக்களை சூறையாடுவதும் என உலகமே பெரும் அதிர்ச்சியுறும் விதமான வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடின. எகிப்து நாட்டு மக்கள் யாவரும் தெருக்களில் கூடி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து கீழே இறக்கிய நாடு கடத்திய பின்னர் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கும் எதிராகத் தொடர்ந்து போராடுகின்றனர். அதே சமயம் லிபியா நாட்டில் மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக பன்னாட்டுப் படையினரின் துணையுடன் போராடி கர்னல் கடாஃபியைக் கொன்ற பின்னரும் இன்னும் நாட்டில் ஒழுங்கு நிலை திரும்பாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் பலர் ஒன்றுதிரண்டு அமெரிக்காவின் பங்குச் சந்தையாக விளங்கிவரும் வால் தெருவை ஆக்கிரமிக்கும் இயக்கத்தைத் தொடங்கிப் போராடுகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு மூல காரணம் சமுதாயத்தில் பெரும்பாலானோரின் உழைப்பின் பலனை ஒரு சிலர் சுரண்டி வாழ்வதும் உழைக்கும் வர்க்கம் வறுமையில் வாடுவதும், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு அளவு கடந்து வளர்ந்து வருவதும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதும் விலைவாசி விஷம்போல் உயருவதும் ஆகும். தற்போது மக்களில் பெரும்பாலோர் முதலாளித்துவத்துக்கெதிராக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் போராடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் ஒரு மாபெரும் கிளர்ச்சி உருவாகி வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசியல்வாதிகள் பலர் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் பெரும் ஊழல்கள் பல புரிந்து நாட்டைக் கொள்ளையடிப்பதும் செய்தி நிறுவனங்களின் வாயிலாக வெளிவந்ததை அடுத்து மக்கள் மத்திய அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து வரும் சூழ்நிலையே ஆகும். நம் நாட்டிலுள்ள விவசாயிகள் தாம் மிகவும் பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பதுக்கல், இடைத் தரகர்கள் போதிய குளிர்பதன அறைகள் இல்லாமை, போக்குவரத்து வசதிகள் இல்லாமை, அரசு வங்கிகளில் கடனுதவி கிடைக்காமை, கந்து வட்டிக் கடன் முதலியவற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில். இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயலாமல் சில்லரை வணிகத்தில் அந்நியா நாடுகள் நேரடியாக முதலீடு செய்ய வழிவகுக்கும் சட்டம் ஒன்றை திடுதிப்பென்று அறிவிக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே நாட்டிலுள்ள பல தொழில் துறைகளையும் அந்நிய நிறுவனங்களுக்கு விற்று விட்டது போதாதென்று சில்லரை வணிகத்தையும் விற்றுவிடத் துடிக்கும் பொறுப்பற்ற அரசாங்கம் நம் நாட்டில் இருப்பதாலேயே மக்கள் கொதிப்படைந்துள்ளனர். 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நாட்டின் சுதந்திரத்தை மிகவும் குறுகிய காலத்தில் இன்று நாட்டின் தலைவர்களாக விளங்குபவர்களே அந்நியர்களுக்கு விற்று வருகின்றனர். உழைக்கும் மக்கள் 80 சதவீதத்தினர் தாம் அல்லும் பகலும் உழைத்து ஈட்டிய பணம் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் உதவாத நிலையில் இலவச அரிசிக்காகவும் இதர பொருளாதார உதவிகளைப் பெறுவதற்காகவும் ஆலாய்ப் பறக்கும் கேவலமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கியுள்ளனர் நம் நாட்டின் பெரும் தலைவர்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் இதர வசதிகள் யாவையும் அளிப்பது விவசாயம் உட்பட்ட பல்வேறு துறைகளிலும் உழைக்கும் தொழிலாளர்களே ஆவர். அத்தகைய தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கங்களின் கடமையாகும். பொது மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகள் அனைத்தும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கச் செய்வது்ம், அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இலவசமாக கல்வி வசதி அளிப்பதும் அரசாங்கங்கள் செய்து வந்த நிலையை மாற்றி மருத்துவமும் கல்வியும் தனியாருக்கு விற்கப் பட்டு அரசுகள் சாராயக் கடைகளை நடத்துவதும், அன்றாடம் நடக்கும் நகைக் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, லஞ்ச ஊழல்கள் முதலிய சீர்கேடுகளைக் களைய முயலாமல் விளம்பர அரசியல் நடத்துவதும் மக்கள் யாவரும் மிகவும் வேதனையடையக் காரணிகளாகியுள்ளன. 

உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடைபாதையிலே இறக்கம் காட்டத்தான் நாதியில்லே எனும் நிலை மாறி உழைப்பாளிகளுக்கு உரிய மதிப்பளித்து சமூகநீதி காக்கும் அரசுகள் அமைந்தால் மட்டுமே நம் நாடு தற்போது ஏற்பட்டுள்ள சீர்கேடுகளிலிருந்து மீண்டு வளம் பெறலாகும்.

நம் யாவருக்கும் அன்னமிட்ட கைகளான உழைப்பாளிகளின் கரங்களை வலுப்படுத்த அன்னா ஹசாரேயின் அறப்போராட்டத்துக்குத் துணை நின்று நாட்டில் முறையான சட்டங்கள் இயற்றப்பட்டு சமூக நீதி காக்கப்படத் தொடர்ந்து போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.


திரைப்படம்: அன்னமிட்ட கை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக 
நிலைநிறுத்தி உடல் வருத்தி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி 
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை